Wednesday 9 December 2015

தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்..........!.


பைபிளும், குரானும் குறிப்பிடும் ஏடன் தோட்டமெனும் சொர்க்கத்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர், இனவாத, மதவாத சிந்தனைகள் துளியும் தலைகாட்டாத காலத்தில், உலகிலேயே உன்னத நாகரீகத்தைக் கட்டிய இனமாக வாழ்ந்திருந்தார்கள். ஒரு வேளை, அவர்கள் தமிழர்களாக வாழ்ந்திருக்க மாட்டார்கள். தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், மலையாளிகளுக்கும் மற்றும் பல திராவிட இனங்களுக்கும் பொதுவான "தாய் இனமாக", அது இருந்திருக்கும். அவர்கள் பேசிய மொழி கூட வேறாக இருந்திருக்கலாம்."கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்து மூத்த தமிழ்க் குடி" என்று பெருமை பேசித் திரியும் தமிழினம், தன்னோடு கூடி வாழ்ந்த சகோதர மூத்த குடிகளை மறந்து போனது அவப்பேறு. தமிழர்கள் மனதில் சர்வதேசிய சிந்தனைகள் மறைந்து, அந்த இடத்தில் சுயநலப் போக்குகள் தலை காட்ட ஆரம்பித்தன. தமிழினத்தின் வீழ்ச்சி அன்றே ஆரம்பமாகி விட்டது. 

இந்திய உப கண்டத்தை சூழவுள்ள கடற்பரப்பில், கடந்த பத்தாண்டுகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகள், பல மறைந்த நாகரீகங்களை வெளிப் படுத்தியுள்ளன. குச(ஜ)ராத் கரைக்கு அருகிலும், தமிழகத்திற்கு அருகாமையிலும், கடலில் மூழ்கிய நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அதே போன்று, இலங்கையின் தென் கிழக்கு கடலடியிலும் மறைந்திருந்த நகரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னர், உலக வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. மனித குலத்தின் தோற்றம் பற்றிய முந்திய ஆய்வுகளை மறுத்துரைக்கும், புதிய நிரூபணங்கள் கிடைத்துள்ளன. சங்க கால தமிழ் இலக்கியங்களில், கடல் கொண்ட குமரி கண்டம் பற்றிய தகவல் வருகின்றது. அந்த தகவலை மெய்ப்பிக்கும் அளவிற்கு, நவீன கண்டுபிடிப்புகள் உள்ளன. ஆயினும், இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. மறைந்த நாகரீகமான குமரி கண்டத்தில் வாழ்ந்த மக்கள் அனைவரும் தமிழர்களா?

குமரி கண்டத்தின் பரப்பளவு, இன்றைய இந்திய உப கண்டத்தை விடப் பெரியது. வடக்கே, குமரி முனையையும், இலங்கைத் தீவையும் இணைத்திருந்தது. மேற்கே மடகசு(ஸ்)காருடன், கிழக்கே அவுசுத்திரேலியாவுடன் தொடுத்திருந்தது. இந்த மிகப் பெரிய கண்டத்தில், "தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள்" என்பது சாத்தியமல்ல. முன் தோன்றிய மூத்த குடிகளான "ஆப்பிரிக்க" இனங்களில் ஒன்றாக தமிழினம் இருந்திருக்கும். இன்றைக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான உடற்கூற்று ஒப்பீடுகளும், கலாச்சார ஒப்பீடுகளும் இதனை நிரூபிக்கின்றன. அதே நேரம், ஆப்பிரிக்க இனங்கள் மட்டுமல்லாது, மத்திய அமெரிக்காவை சேர்ந்த மாயர்கள், எகிப்தியர்கள், கிரேக்கர்கள், அரேபியர்கள், மேலும் பல மேற்காசியப் பழங்குடி இனங்களும் குமரி கண்டத்தில் இருந்தே பிரிந்து சென்றிருப்பார்கள். அதற்கு என்ன ஆதாரம்? கடல் பெருக்கால் அழிந்த கண்டம் பற்றிய தகவல் பண்டைய தமிழ் இலக்கியங்களில் எழுதப் பட்டுள்ளது. தமிழர்கள் தமது மொழியில் அதனை குமரி கண்டம் என்று பெயரிட்டு அழைத்தார்கள். ஒரு வேளை, தமிழர்களின் நாடு இன்றைய குமரி முனைக்கு அருகில் இருந்திருக்கலாம்.

சிங்கள செவி வழி கர்ண பரம்பரைக் கதைகளும் கடலில் மூழ்கிய கண்டம் பற்றி நினைவு கூறுகின்றன. சிங்களவர்கள் அதனை "இரிசியாவா" என்ற பெயரில் அழைக்கின்றனர். கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ "அட்லாண்டிசு(ஸ்)" என்றொரு மறைந்த கண்டம் பற்றி எழுதியுள்ளார். இதே போன்று, எகிப்தியர்கள், மாயா இந்தியர்கள், பைபிள் கதையில் வரும் நோவாவின் மக்கள், என்று பல்லின மக்கள், இழந்த கண்டத்தை வெவ்வேறு பெயர்களில் நினைவுகூருகின்றனர். அதாவது, ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற மொழிகளைப் பேசும் மக்கள், தமது பூர்வீகம் பற்றி ஒரே மாதிரியான கதையை கொண்டுள்ளனர். சுருக்கமாக சொன்னால், தமிழில் குமரி கண்டம் என்று அழைக்கப்படும், இழந்த சொர்க்கத்தில் பல்வேறு சகோதர இனங்கள் வாழ்ந்துள்ளன. "முன் தோன்றிய மூத்த குடி, தமிழர்கள் மட்டுமே" என்ற கற்பிதம், ஐரோப்பியரின் பிரித்தாளும் சூழ்ச்சியாகவே தெரிகின்றது. நாகரீகமடைந்த பண்டைய சகோதர இனங்களை பிரித்து வைத்திருப்பதால் தான், இன்றைக்கும் ஐரோப்பிய மையவாத வரலாற்றுப் புரட்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தமிழர்களும், சகோதர மூத்தகுடி இனங்களும் தமது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை ஐரோப்பியரிடம் பறிகொடுத்து விட்டனர். நாகரீகமடைந்த புராதன இனங்களின் அறிவியலை அபகரித்த ஐரோப்பியர்கள், அதைக் கொண்டே உலகம் முழுவதும் அடிமைப் படுத்தினார்கள்.

குமரி கண்டத்தின் ஒரு பகுதியான இலங்கைத் தீவு, ஆதிகால மனிதர்கள் வாழ்ந்த மிகவும் பழமையான நிலப்பகுதி ஆகும். உலகின் முதலாவது மனிதனான "ஆதாம்", தென்னிலங்கையில் உள்ள சிவனொளிபாத மலையில் (ஆதாமின் மலை) தோன்றியதாக ஒரு செவி வழிக் கதை நிலவுகின்றது. (ஆதாம், சிவனொளிபாதமலை என்பன பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயர்கள்.) முதல் மனிதனான "ஆதாம்", மலையில் இருந்து இறங்கி வந்தவிடத்தில், பூத கணங்களும், யானைகளும் இளைப்பாறிய இடத்தைக் கண்டதாகவும், அதுவே கதிர்காமம் என்றும் அந்தக் கதையில் சொல்லப் படுகின்றது. உண்மையில், "முதல் மனிதன், சிவனொளிபாத மலை, கதிர்காமம்" என்பனவற்றின் மூலக் கதை, பழங்குடி இனமான வேடுவர்க்கு உரியது. "கல் தோன்றா, மண் தோன்றாக் காலத்தில்" இருந்தே, சமுதாய அமைப்பையும், கலாச்சாரத்தையும் மாற்றிக் கொள்ளாத மூத்தகுடியான வேடுவர்கள், இலங்கையின் பூர்வீக மக்கள் ஆவர். பல ஆயிரம் வருடங்களுக்கு பின்னர் தான், சிங்களவர், தமிழர் என்ற மொழி அடிப்படையிலான பிரிவினை தோன்றியது. சிங்களவர், தமிழர் இரண்டுமே "இன அடையாளத்தை" குறிக்கும் சொற்கள் அல்ல. வேடுவர்கள் மட்டுமல்லாது, இயக்கர், நாகர் போன்ற பழங்குடி இனங்களும், இரண்டு மொழிச் சமூகங்களிலும் கலந்துள்ளன.

அண்மைய அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் பிரகாரம், குமரி கண்டத்தின் ஒரு பகுதியான இலங்கைத் தீவு, தற்போதுள்ளதை விட ஏழு மடங்கு அதிகமான பரப்பளவைக் கொண்டிருந்தது. இராவணனின் அரச வம்சம், அந்த நிலப்பரப்பை ஆயிரக் கணக்கான வருடங்களாக ஆண்டு வந்துள்ளது. இராவணன் ராட்சத இனத்தை சேர்ந்தவன். அநேகமாக, அது ஒரு கருப்பினமாக இருக்கலாம். இலங்கையில் இராவணனை தொடர்பு படுத்தும் இடங்கள் பொதுவாக இராமாயண அடிப்படையிலேயே ஊகிக்கப் பட்டன. இலங்கை மீது படையெடுத்து வந்து ஆக்கிரமித்த இராமனின் ஆரியப் படைகள், இலங்கையின் நகரங்களை எரியூட்டி அழித்து விட்டன. அப்போதே இலங்காபுரியின் தொன்மையான நாகரீகம் அழிந்து போயிருக்கும். இராமாயணம் வென்றவர்களின் பார்வையிலேயே எழுதப் பட்டிருப்பதால், பல உண்மைகள் மறைக்கப் பட்டன. இன்று எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விடயம் என்னவெனில், பல முக்கியமான கண்டுபிடிப்புகள் இரகசியமாக வைக்கப் பட்டுள்ளன. அதாவது, தமிழரோ, சிங்களவரோ அறிந்திராத தகவல்கள், சில ஆங்கிலேய ஆய்வாளர்களுக்கு தெரிந்துள்ளது. ஆப்பிரிக்க மக்களை அறியாமை இருளில் வைத்திருந்ததைப் போன்று தான், ஆங்கிலேயர்கள் எம்மையும் நடத்தி வந்துள்ளனர்.

ஆர்தர் சி. கிளார்க் என்றொரு பிரித்தானிய எழுத்தாளர், இலங்கையில் வாழ்ந்தார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர். அவர் எழுதிய நாவல்கள் பல வருங்காலத்தை பற்றிய கற்பனைகளை கொண்டிருந்தாலும், அவற்றின் கரு இலங்கையில் இருந்து கிடைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இலங்கையில் குடியேறி, இறக்கும் வரையில் இலங்கைப் பிரசையாகவே வாழ்ந்திருப்பாரா? ஆர்தர் சி கிளார்க், ஒரு சாதாரண எழுத்தாளரா, அல்லது பிரித்தானிய உளவாளியா? அவர் ஆழ்கடல் சுழியோடுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். திருகோணமலைக்கு அருகில், கடலின் அடியில் மறைந்திருந்த பண்டைய நகரத்தின் இடிபாடுகளை கண்டுபிடித்திருந்தார். அதைவிட பல தகவல்களை அறிந்து வைத்துக் கொண்டு பகிரங்கப் படுத்தாமல் இருந்திருக்கலாம். அவரைப் போலவே காலனிய இலங்கையில் வாழ்ந்த ஆங்கிலேய ஆய்வாளர் ஒருவர், "இராவணணின் ஆகாய விமானம்" பற்றிய தகவல்களை சேகரித்து வைத்திருந்தார். இராவணன் புஷ்பக விமானத்தில் வந்து சீதையை கவர்ந்து சென்றதாக இராமாயணம் கூறுகின்றது. விமானம் பற்றிய மேலதிக விபரங்களை அங்கே, தேடினாலும் கிடைக்காது. அதனாலேயே, "அது ஒரு கற்பனை" என்று இன்றைக்கும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், உண்மையிலேயே இராவணின் இராச்சியத்தில், ஆகாய விமானங்களின் பயன்பாடு இருந்துள்ளது. இராவணனின் நாடு, விமானம் தயாரிக்கும் அளவிற்கு தொழில்நுட்ப அறிவு படைத்த நாகரீகமடைந்த சமுதாயமாக இருந்தது. பொறாமை கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள், அந்த உன்னத நாகரீகத்தை அழிப்பதற்காகவே போர் தொடுத்திருப்பார்கள். இராவணன் காலத்தில் கட்டப்பட்ட விமானம் பறவையைப் போன்ற வடிவில் அமைக்கப் பட்டிருந்தது. சிறிய ரக கடல் விமானம் அளவிலானது. நமது காலத்து கடல் விமானம் போன்று நீரிலும் செல்லும், ஆகாயத்திலும் பறக்கும் வல்லமை கொண்டது. இரண்டு, மூன்று விமானிகள் ஓட்டும் விமானங்கள். யுத்தத்திலும் பயன்படுத்தக் கூடியதாக அமைக்கப் பட்டிருந்தன. விமானத்தை பறப்பதற்கான எரிபொருளாக பாதரசம் (மெர்குரி) பயன்படுத்தப் பட்டுள்ளது.

பண்டைத் தமிழகத்திற்கும், சீனாவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான உறவு. சித்தர்கள் அறிமுகப் படுத்திய பாதரசம். இவை பற்றி எல்லாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். போகர் சித்தர் கதிர்காமம் சென்றதையும், ஆகாய விமானம் தயாரிக்கும் செய்முறையை, சீனாவில் உள்ள சீடர்களிடம் கொடுத்த விபரத்தையும் எழுதியிருந்தேன். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேய ஆய்வாளர்கள் இலங்கையில் சேகரித்த தகவல்கள் அதனை உறுதி செய்கின்றன. விமானம் தயாரிக்கும் முறை, விமானிகளுக்கான உணவு, பறத்தல் நெறி முறைகள் போன்ற பல விபரங்கள் அவர்கள் கைகளுக்கு கிடைத்துள்ளது. தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்கள் போன்ற பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்த இனங்கள், பிற்காலத்தில் அவற்றை மறந்து விட்டன. அதற்கு காரணம், ஆட்சியாளர்கள் தமது பிராந்திய நலன் கருதி மட்டுமே ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் இனவுணர்வு கொண்டவர்களாக இல்லாவிட்டாலும், மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மத நம்பிக்கை, பகுத்தறிவை ஒடுக்கியது. நமது காலத்தில் இந்த குறுகிய சுயநலம் பேணும் சிந்தனை, இனவுணர்வு என்ற வடிவம் பெற்றுள்ளது. 

மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்புகளை செய்த தமிழரும், சீனரும்,பிற நாகரீகமடைந்த சமூகங்களுடனான தொடர்பு அறுந்ததையிட்டு கவலை கொள்ளவில்லை. அதைத் தேடித் பார்க்கும் ஆர்வமும் இருக்கவில்லை. தமிழர்கள் சர்வதேசிய கொள்கையை கைவிட்டதால், எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்துள்ளனர், என்பதையிட்டு இன்றைக்கும் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. விமானம் செய்யும் தொழில்நுட்ப அறிவு, போகர் மூலம் கிடைத்திருந்தாலும், சீனர்களும் அதில் அக்கறை காட்டவில்லை. ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு பின்னர், சீனா வரை பரவிய இஸ்லாமிய சாம்ராசசியத்தில் அந்த தொழில்நுட்பக் குறிப்புகள் படிக்கப் பட்டிருக்கலாம். ஏனெனில், நவீன கால விமானம் பற்றிய சிந்தனை, மத்திய கால துருக்கியில் இருந்து தான் ஐரோப்பா சென்றது. இசுத்(ஸ்)தான்புல் நகர மத்தியில் உள்ள ஒரு கோபுரத்தில் இருந்து, சிறகு கட்டிப் பறக்கும் பரிசோதனை செய்யப் பட்டது. அந்த முயற்சியில் அவர்களுக்கு தோல்வி கிட்டியது. இசுலாமிய துருக்கியுடன் தொடர்பு வைத்திருந்த வெனிசு(ஸ்) (இத்தாலி) நாட்டு வர்த்தகர்களுக்கு, இந்த விபரங்கள் எல்லாம் ஏற்கனவே தெரிந்திருந்தன. 

இலங்கையில், இன்றைக்கு உள்ள கொந்தளிப்பான இன முரண்பாட்டு அரசியலை காணும் ஒருவருக்கு, அந்த நாட்டின் தொன்மையான நாகரீகம் கண்ணுக்குத் தெரியப் போவதில்லை. இன முரண்பாட்டை உருவாக்கி விட்ட ஆங்கிலேயர்களின் நோக்கமும் அதுவாகத் தானிருக்கும். சிங்களவனும், தமிழனும், நீயா, நானா என்று ஆக்ரோசத்துடன் மோதிக் கொண்டிருந்த தருணத்தை பயன்படுத்தி; ஆங்கிலேயர்கள் பல அறிவியல் செல்வங்களை திருடிக் கொண்டு ஓடி விட்டார்கள். இன்று வரையில் வெளியிடப் படாத பல இரகசிய ஆவணங்கள், லண்டனில் மத்திய ஆவணக் காப்பகத்திலும், பிரித்தானிய அருங்காட்சியகத்திலும் உறங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை மீட்பதற்கான முயற்சிகளை யாரும் எடுக்கவில்லை. (அந்த ஆவணங்களை வெளியார் பார்வையிடக் கூட அனுமதியில்லை.) ஆங்கிலேயர்கள் எமது அறிவியலை அடிப்படையாகக் கொண்டு தயாரித்த பொருட்களை, எமக்கே விற்று காசாக்குகிறார்கள். நாம் எவற்றை எல்லாம் அந்நியரிடம் பறிகொடுத்துள்ளோம் என்பதை அறியாதவர்களாக, பழம்பெருமை பேசுவதில் காலத்தைக் கழிக்கின்றோம்.

இன்று கூட புலமைப் பரிசில் என்ற போர்வையில் வளர்முக நாடுகள் அனைத்தும் மூன்றாவது மண்டல நாடுகளின் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியைக் கொடுத்துவிட்டு அவரவர் நாடுகளில் தங்களின் துறையில் கருத்திட்டத்தின் ஆய்வினை மேற்கொள்ளுவித்து அவற்றை தமதாக்கிக்கொண்டு அவற்றை வைத்து பலவையான தயாரிப்புக்களை தயாரித்து மூன்றாவது மண்டல நாடுகளுக்கே விற்பனை செய்வதோடு, அந்தத் தயாரிப்புக்களுக்கான காப்புரிமையையும் தங்களின் சொந்தமாக்கிக் கொள்வதால் அப்படியான ஆய்வினை மேற்கொண்ட மாணவனால் அந்தத்துறையில் முன்னேற்றமோ தங்களின் பகுதி மக்களுக்கு உதவமுடிவதில்லை. தன்னுடைய உழைப்பிற்கான எந்தவொரு பலனையும் அனுபவிக்க முடியாதென்பதே நிதர்சனமான உண்மை. இப்படியான தவறு தொடருமானால் எந்தவொரு மூன்றாவது மண்டல எந்தவொரு இனத்தாலும் எந்தவொரு சாதனையை மேற்கொள்ள முடியாதென்பதே கசப்பான உண்மையாகும்.

நன்றிகள்.


Sunday 25 October 2015

தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.!.

தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.! மலையாளிகள் கொண்டாடும் அரிசி.!
சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.



வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, ''வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு...'' என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.
நன்றிகள்.

Thursday 13 August 2015

பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !
நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், சம்பருதாயங்கள் இல்லாமல் நடத்தினர்.



என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைபார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. 

இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் பதிப்புரிமை (copyright) வாங்கி விடும். பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். 

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர். இதை சில நாடுகளும்தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா?

மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில்வருத்தம் அளிக்கும் விசயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவுஇடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன. 

பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா? முறையான பராமரிப்புஅற்ற காரனங்களுக்ககவே அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை. சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று? 

இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்.
நன்றிகள்.

Saturday 18 July 2015

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி !


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.



பயிற்சியும் செய்முறையும்

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர 
வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை
செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற
கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்.

                                                                                                                                              நன்றிகள்.

Wednesday 15 July 2015

கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு!.

கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!


இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன! பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு!

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து அரசு நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ பேரரசிற்கு மட்டும் தான் இருக்கிறது.

"கனம்"

இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

"கன்னி"

தமிழில் "கன்னி" என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, "பொறி" என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கன்னி" என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார்.

"ஜதளம்" அல்லது "தளம்"

கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.

"மண்டலம்"

கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.

"அணி"

பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.

"அதிபதி" 

இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

கைப்பற்றிய பகுதிகள்

இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, யா(ஜா)வா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

"நாவாய்" பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது.
                                                                                                                                            நன்றிகள்.

Thursday 28 May 2015

பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக.............!.

சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும் ..! 

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும். 


"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான்!

நன்றிகள்.

Saturday 23 May 2015

விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்...........!

குதிர்', 'தொம்பை', 'பத்தாயம்', 'குலுமை'...

இதெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா? ஒரு காலத்தில் நம் விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்! தந்திரக்கார வியாபார உலகம், நம்மிடம் இருந்து பறித்தெடுத்த எத்தனையோ நல்ல விசயங்களில் இவையும் அடக்கம்! நம்முடைய பணத்துக்கு மட்டுமல்ல... சூழலுக்கும் வேட்டு வைக்காத இதுபோன்ற பொருட்களெல்லாம் நம்மைவிட்டு அகன்றதோடு, அவற்றின் பெயர்கள்கூட புழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன!

இந்தச் சூழலில்... பாரம்பர்யத்தை மறக்காமல், இப்படிப்பட்ட சேமிப்புக் கலன்களை ஆங்காங்கே ஓரிருவர் பராமரித்துப் பயன்படுத்திக் கொண்டும் இருப்பது ஆறுதலான விசயம். அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நீலாவதி.

''ஒரு காலத்துல வீட்டுக்கு வீடு குதிர், அடுக்குப் பானையெல்லாம் கட்டாயம் இருக்கும். அடுக்குப் பானையிலதான், உப்பு, புளி, மிளகாய் போட்டு வெச்சுருப்போம். அது விதைகளைக்கூட சேமிச்சு வைக்கலாம். உப்பைப் போட்டு முட்டைகளை வெச்சா... கெட்டுப் போகாது. அப்படியே குளுகுளுனு இருக்கும். இப்பவெல்லாம் துருப்பிடிக்காத எஃகு பொருட்கள் வந்த பின்னாடி, அடுக்குப் பானையெல்லாம் போயே போச்சு.



அறுவடை பண்ணிட்டு வரும் நெல், தானியங்களைக் கொட்டி வைக்கிறதுக்கு குதிர் இருக்கும். ஒவ்வொண்ணும் பத்து, பன்ணெண்டு அடி உயரம் வரைகூட இருக்கும். வரகு வைக்கோல்ல களிமண்ணைச் சேர்த்து, ஊறவெச்சு குதிர் செய்வாங்க. அதுமேல சாணிப்பால் போட்டு மெழுகிடுவாங்க. அதுக்குள்ள தானியங்களைக் கொட்டி வெச்சா... வருசக் கணக்கா கிடக்கும். கூடவே வேப்பிலை, நொச்சியிலை இதையெயெல்லாம் போட்டு வெச்சுட்டோம்னா... பூச்சி, பொட்டு அண்டாது. அப்படித்தான் இந்த குதிர பராமரிச்சு பயன்படுத்திக்கிட்டிருக்கேன் பல வருசமா!

வீட்டுத் தேவைக்குதான் குதிர். பெரிய அளவுல அம்பது, அறுபது மூட்டைனு சேமிக்கணும்னா... பத்தாயம் கட்டி வெச்சுருப்பாங்க. மாம்பலகை மாதிரியான பலகைங்கள வெச்சு தயார் பண்ணியிருப்பாங்க. ஒவ்வொரு விவசாயி வீட்டுலயும் ஒண்ணு, ரெண்டு பத்தாயம் கண்டிப்பா இருக்கும். அறுவடை முடிஞ்சதும் அதுல நெல்லைக் கொட்டி வெப்பாங்க. வருசக் கணக்குல கிடக்கும். தேவைப்பட்டப்ப எடுத்துப் பயன்படுத்துவாங்க. இப்ப இதெல்லாம் கண்ணுல சிக்குறதேயில்லை'' என்று ஆதங்கப்பட்டார். 

திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு சே(ஜெ)யராமன், இப்போதும்கூட பாரம்பர்ய முறைப்படி விதைகளைச் சேமித்து வருபவர்களில் ஒருவர்.


''அறுவடை செய்யுறப்பவே விதைக்காகனு கொஞ்சம் கதிரை முத்த விடுவோம். அதை அறுத்து வெயில்ல காயவெச்சு, வைக்கோலுக்குள்ள சுத்தி, அதுக்குமேல சாணியைப் போட்டு மெழுகி பத்திரப்படுத்தி வெப்போம். இதுக்கு பேரு கோட்டை. அமாவாசை, இல்லனா... சிவராத்திரி அன்னிக்கு விதைநெல்லைக் காய வெச்சு, மறுநாள்தான் இப்படி கோட்டை கட்டுறது பழக்கம். இப்படிச் செய்யுறதால நெல்லோட முளைப்புத் திறன் அதிகமாகும். ஒரு வருசம் வரைக்கும் விதைநெல்லுக்கு வீரியம் குறையாது. இதுவே... 

பெரிய அளவுல விதைநெல் சேமிக்கணும்னா... அதுக்கு சேர் கட்டி வைக்கிறதுனு இன்னொரு முறையும் இருந்துச்சு. வீரிய விதை, அது, இதுனு வந்த பிறகு, காசு கொடுத்து சிறுகட்டு சிறுகட்டாக (packet) வாங்க ஆரம்பிச்சாங்க. கோட்டையைக் கோட்டை விட்டுட்டாங்க'' என்று உதட்டைப் பிதுக்கினார்.

பாரம்பர்ய வேளாண்மை முறைகள், சேமிப்பு முறைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம் பல்கலைக்கழக வேளாண்மைப் புல இணைப் பேராசிரியர் சுந்தரமாரி. அவரிடம் பழங்கால சேமிப்பு முறைகள் பற்றிக் கேட்டபோது, ரொம்பவே சுவாரசியமாகிவிட்டார்.

''விதைக்காக சேமிக்கற தானியங்கள மணல் இல்லனா... சாம்பல் கலந்து வெக்கலாம். துவரையை செம்மண்ணோடு கலந்து வைப்பாங்க. பெரும்பாலும் அடுக்குப் பானையை அடுப்புக்கு மேலதான் தொங்க விட்டிருப்பாங்க. அடுப்புல வர்ற புகையே, பூச்சிவிரட்டியா பயன்படும். தரையில வட்டமாவோ, சதுரமாவோ குழியெடுத்து அதுல தானியங்களைக் கொட்டி, சாக்கு போட்டு, கல்லால் மூடி வெச்சு சேமிக்கிற பழக்கமும் இருந்திருக்கு.

இப்படி ஒண்ணொண்ணுக்கும், ஓரோரு யுக்தியைக் கண்டுபிடிச்சு பயன்படுத்தியிருக்காங்க நம்ம முன்னோருங்க. ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு மாதிரியான சேமிப்புக் கலன்களையும் பயன்படுத்தியிருக்காங்க. ஆனா, அதுமாதிரியான சேமிப்புக் கலன்களையெல்லாம் வடிவமைக்கிறதுக்கு கூட இன்னிக்கு ஆளேயில்ல.

பெரும்பாலான விசயங்கள் கையை விட்டுப் போயிடுச்சு. மிச்ச சொச்சமிருக்கற விசயங்களும் போயிக்கிட்டே இருக்கு. இப்ப ஓரளவு விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கறதால... பழைய முறைகளையெல்லாம் கடைபிடிங்கனு விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லிக்கிட்டிருக்கோம்'' என்றவர்,

''பார்ப்போம்... காலம்தானே எல்லாத்தையும் தீர்மானிக்கணும்!'' என்று எதிர்பார்ப்போடு முடித்தார்.
நன்றிகள்.

Monday 11 May 2015

இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு.......!.

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?
துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?


சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.

அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது.

பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித அதிர்வினைக் கொடுக்குமாம்.


யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்.
நன்றிகள்.

Wednesday 29 April 2015

பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என..........!.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?


அதன் விளக்கம் பின்வருமாறு:-

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர்.
நன்றிகள்.

Saturday 25 April 2015

தமிழன் கண்டுபிடிப்பான திருகை...........

நம்ம தலைமுறை தொலைத்த தமிழன் கண்டுபிடிப்பான திருகையின் அனுபவம் உண்டா உங்களுக்கு.!

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.

கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.

சமாச்சாரம் இது...இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.


மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்.
நன்றிகள்.