Thursday 28 May 2015

பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக.............!.

சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும் ..! 

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும். 


"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான்!

நன்றிகள்.

Saturday 23 May 2015

விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்...........!

குதிர்', 'தொம்பை', 'பத்தாயம்', 'குலுமை'...

இதெல்லாம் என்னவென்று யோசிக்கிறீர்களா? ஒரு காலத்தில் நம் விவசாயிகள் அதிகமாக பயன்படுத்திய சேமிப்புக் கலன்கள்தான்! தந்திரக்கார வியாபார உலகம், நம்மிடம் இருந்து பறித்தெடுத்த எத்தனையோ நல்ல விசயங்களில் இவையும் அடக்கம்! நம்முடைய பணத்துக்கு மட்டுமல்ல... சூழலுக்கும் வேட்டு வைக்காத இதுபோன்ற பொருட்களெல்லாம் நம்மைவிட்டு அகன்றதோடு, அவற்றின் பெயர்கள்கூட புழக்கத்தில் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன!

இந்தச் சூழலில்... பாரம்பர்யத்தை மறக்காமல், இப்படிப்பட்ட சேமிப்புக் கலன்களை ஆங்காங்கே ஓரிருவர் பராமரித்துப் பயன்படுத்திக் கொண்டும் இருப்பது ஆறுதலான விசயம். அவர்களில் ஒருவர்... தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நீலாவதி.

''ஒரு காலத்துல வீட்டுக்கு வீடு குதிர், அடுக்குப் பானையெல்லாம் கட்டாயம் இருக்கும். அடுக்குப் பானையிலதான், உப்பு, புளி, மிளகாய் போட்டு வெச்சுருப்போம். அது விதைகளைக்கூட சேமிச்சு வைக்கலாம். உப்பைப் போட்டு முட்டைகளை வெச்சா... கெட்டுப் போகாது. அப்படியே குளுகுளுனு இருக்கும். இப்பவெல்லாம் துருப்பிடிக்காத எஃகு பொருட்கள் வந்த பின்னாடி, அடுக்குப் பானையெல்லாம் போயே போச்சு.



அறுவடை பண்ணிட்டு வரும் நெல், தானியங்களைக் கொட்டி வைக்கிறதுக்கு குதிர் இருக்கும். ஒவ்வொண்ணும் பத்து, பன்ணெண்டு அடி உயரம் வரைகூட இருக்கும். வரகு வைக்கோல்ல களிமண்ணைச் சேர்த்து, ஊறவெச்சு குதிர் செய்வாங்க. அதுமேல சாணிப்பால் போட்டு மெழுகிடுவாங்க. அதுக்குள்ள தானியங்களைக் கொட்டி வெச்சா... வருசக் கணக்கா கிடக்கும். கூடவே வேப்பிலை, நொச்சியிலை இதையெயெல்லாம் போட்டு வெச்சுட்டோம்னா... பூச்சி, பொட்டு அண்டாது. அப்படித்தான் இந்த குதிர பராமரிச்சு பயன்படுத்திக்கிட்டிருக்கேன் பல வருசமா!

வீட்டுத் தேவைக்குதான் குதிர். பெரிய அளவுல அம்பது, அறுபது மூட்டைனு சேமிக்கணும்னா... பத்தாயம் கட்டி வெச்சுருப்பாங்க. மாம்பலகை மாதிரியான பலகைங்கள வெச்சு தயார் பண்ணியிருப்பாங்க. ஒவ்வொரு விவசாயி வீட்டுலயும் ஒண்ணு, ரெண்டு பத்தாயம் கண்டிப்பா இருக்கும். அறுவடை முடிஞ்சதும் அதுல நெல்லைக் கொட்டி வெப்பாங்க. வருசக் கணக்குல கிடக்கும். தேவைப்பட்டப்ப எடுத்துப் பயன்படுத்துவாங்க. இப்ப இதெல்லாம் கண்ணுல சிக்குறதேயில்லை'' என்று ஆதங்கப்பட்டார். 

திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு சே(ஜெ)யராமன், இப்போதும்கூட பாரம்பர்ய முறைப்படி விதைகளைச் சேமித்து வருபவர்களில் ஒருவர்.


''அறுவடை செய்யுறப்பவே விதைக்காகனு கொஞ்சம் கதிரை முத்த விடுவோம். அதை அறுத்து வெயில்ல காயவெச்சு, வைக்கோலுக்குள்ள சுத்தி, அதுக்குமேல சாணியைப் போட்டு மெழுகி பத்திரப்படுத்தி வெப்போம். இதுக்கு பேரு கோட்டை. அமாவாசை, இல்லனா... சிவராத்திரி அன்னிக்கு விதைநெல்லைக் காய வெச்சு, மறுநாள்தான் இப்படி கோட்டை கட்டுறது பழக்கம். இப்படிச் செய்யுறதால நெல்லோட முளைப்புத் திறன் அதிகமாகும். ஒரு வருசம் வரைக்கும் விதைநெல்லுக்கு வீரியம் குறையாது. இதுவே... 

பெரிய அளவுல விதைநெல் சேமிக்கணும்னா... அதுக்கு சேர் கட்டி வைக்கிறதுனு இன்னொரு முறையும் இருந்துச்சு. வீரிய விதை, அது, இதுனு வந்த பிறகு, காசு கொடுத்து சிறுகட்டு சிறுகட்டாக (packet) வாங்க ஆரம்பிச்சாங்க. கோட்டையைக் கோட்டை விட்டுட்டாங்க'' என்று உதட்டைப் பிதுக்கினார்.

பாரம்பர்ய வேளாண்மை முறைகள், சேமிப்பு முறைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம் பல்கலைக்கழக வேளாண்மைப் புல இணைப் பேராசிரியர் சுந்தரமாரி. அவரிடம் பழங்கால சேமிப்பு முறைகள் பற்றிக் கேட்டபோது, ரொம்பவே சுவாரசியமாகிவிட்டார்.

''விதைக்காக சேமிக்கற தானியங்கள மணல் இல்லனா... சாம்பல் கலந்து வெக்கலாம். துவரையை செம்மண்ணோடு கலந்து வைப்பாங்க. பெரும்பாலும் அடுக்குப் பானையை அடுப்புக்கு மேலதான் தொங்க விட்டிருப்பாங்க. அடுப்புல வர்ற புகையே, பூச்சிவிரட்டியா பயன்படும். தரையில வட்டமாவோ, சதுரமாவோ குழியெடுத்து அதுல தானியங்களைக் கொட்டி, சாக்கு போட்டு, கல்லால் மூடி வெச்சு சேமிக்கிற பழக்கமும் இருந்திருக்கு.

இப்படி ஒண்ணொண்ணுக்கும், ஓரோரு யுக்தியைக் கண்டுபிடிச்சு பயன்படுத்தியிருக்காங்க நம்ம முன்னோருங்க. ஒவ்வொரு பகுதியிலயும் ஒவ்வொரு மாதிரியான சேமிப்புக் கலன்களையும் பயன்படுத்தியிருக்காங்க. ஆனா, அதுமாதிரியான சேமிப்புக் கலன்களையெல்லாம் வடிவமைக்கிறதுக்கு கூட இன்னிக்கு ஆளேயில்ல.

பெரும்பாலான விசயங்கள் கையை விட்டுப் போயிடுச்சு. மிச்ச சொச்சமிருக்கற விசயங்களும் போயிக்கிட்டே இருக்கு. இப்ப ஓரளவு விழிப்பு உணர்வு ஏற்பட்டிருக்கறதால... பழைய முறைகளையெல்லாம் கடைபிடிங்கனு விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்லிக்கிட்டிருக்கோம்'' என்றவர்,

''பார்ப்போம்... காலம்தானே எல்லாத்தையும் தீர்மானிக்கணும்!'' என்று எதிர்பார்ப்போடு முடித்தார்.
நன்றிகள்.

Monday 11 May 2015

இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு.......!.

துக்க வீடுகளில் ஏன் பறை அடிக்கப்படுகிறது?
துக்க வீடுகளில் பறை அடிப்பதன் அவசியம் என்ன?


சுமார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் (பொதுவாக உலகில்) மருத்துவர்களும், மருத்துவ வசதிகளும் மிகக் குறைவு தான். பேச்சு மூச்சில்லாமல் ஒருவர் சும்மா கிடந்தால் அவர் இறந்து விட்டார் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சிரமமான காரியமாய் இருந்தது. இப்பிரச்சனையை போக்க சிலர் கண்டுபிடித்தது தான் பறை.

அப்படினா அதுக்கு மருத்துவ குணங்கள் இருக்கானெல்லாம் நீங்க கேட்கக் கூடாது.

பறையோசை என சொல்லப்படும், பறையிலிருந்து வரும் ஓசைக்கு அசைவு கொடுக்காத மனிதர்களே கிடையாதாம். அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்டவுடன் நாடி, நரம்புகள் அனைத்தும் துள்ளி குதித்துக் கொண்டு ஒரு வித அதிர்வினைக் கொடுக்குமாம்.


யார் ஒருவர் பறை சத்தத்திற்க்கும் ஆடாமல் அசையாமல் பிணம் போல் இருக்கிறாரோ, அவர் உயிர் இறந்து விட்டார் என்ற முடிவிற்கு வந்தார்களாம் நம் முன்னோர்கள். இரு குச்சிகளைக் கொண்டு அடித்து எழுப்பபடும் ஓசைக்கு அப்பேர்பட்ட சக்தி இருக்கிறதாம்.
நன்றிகள்.