Thursday 31 January 2013

மொழியைப் பேசுவதற்கு இலக்கண...........!

ஒரு மொழியைப் பேசுவதற்கு இலக்கண அறிவு வேண்டுமா?


இலக்கணம் படித்துவிட்டுத்தான் மொழியைப் பேச வேண்டும் என்பதில்லை. மொழி பேசக்கூடிய இடத்தில் வாழ்ந்தாலே, வளர்ந்தாலே போதும். மொழி என்பது ஓசைகளின் கூட்டம்தான். பல்வேறு ஓசைகளைக் காதால் கேட்கும்போது, அவற்றை நினைவில் வைத்து, மீண்டும் அதே ஓசைகளை எழுப்பும்போது, அது மற்றவர்களுக்குப் புரிந்துவிட்டால் அது மொழி!

எந்த ஒரு மொழியும் ஓசைகளில் ஒழுங்குதான்; ஓசைகளின் அமைப்புத்தான். ஓசைகள் பிறக்கும், ஓசைகள் ஒலிக்கும், ஓசைகள் சேரும் நுட்பங்களை எடுத்துச் சொல்வதுதான் இலக்கணம்!

நுட்பங்களைத் தெரிந்துகொண்டு என்ன செய்வது?

நுட்பங்கள் தெரிந்தால் சரியாக எழுதலாம். நுட்பங்களை அறியாமலா உலகத்தார் இயங்குகின்றனர்.? சரியான நுட்பங்களை பொருத்தமான இடங்களில் உபயோகித்தாலே மொழி நுட்பங்களாகும்!

இரவு பகலும் பாடுபட்டேன் என்று மக்கள் பேசுகின்றார்கள். இதில் 'உம்’ என்னும் சாரியை உள்ளது. இது மறைந்து இரவுபகல் என்று வந்தால் அது தொகை. மொழியைக் கற்றவர்கள் இவற்றைக் கவனிக்கின்றார்கள்; மற்றவர்கள் கவனிப்பதில்லை. 

தமிழில் எத்தனை ஓசைகள் இருக்கின்றன?

இப்போது நீங்கள் கேள்வியைச் சரியாகக் கேட்கின்றீர்கள். தமிழில் முப்பது (30) முதன்மை ஓசைகள் இருக்கின்றன. இந்த ஓசையைத்தான் எழுத்து என்றனர். எழுத்து என்றால் ஓசை என்பது பொருள், ''அகர முதல எழுத்து எல்லாம்'' என்றால், ஓசைகள் எல்லாம் அகரமாகிய ஒலியை முதலாகப் பெற்றிருக்கின்றன என்று பொருள். அதாவது உலக மொழிகளில் ஓசைகளுக்கு எல்லாம் அகரம் முதல் ஒலியாக உள்ளது (வடமொழி, இந்தி, ஆங்கிலம் மற்ற பிற மொழிகளுக்கும்)

வேறு ஓசைகள் உண்டா?

உண்டு. மூன்று (3) சார்பு ஓசைகள் உள்ளன. அந்த ஓசைகள் மற்றவற்றைச் சார்ந்தே எழும்.

மொத்தமாக முப்பத்து மூன்று (33) ஓசைகள் என்று குறிப்பிட்டுவிட்டீர்கள். அவை என்னென்ன?

உயிர் எழுத்து (ஓசை) 12, மெய்யெழுத்து 18, சார்பு எழுத்து 3. ஓசை ஓசை என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்துவதற்குக் காரணம், ஒரு மொழியில் ஓசைகள்தாம் முக்கியமேதவிர வடிவங்கள் அல்ல என்பதை நிறுவிடத்தான். 'அ' என்னும் ஓசைதான் முக்கியம்; அதன் வடிவம் அன்று. வடிவங்கள் காலத்திற்குக் காலம் மாறுபட்டுள்ளன; ஓசைகள் மாறுபடுவதில்லை! திருவள்ளுவரை அழைத்து 'ஏரின் உழார்’ என்னும் குறளைப் படிக்கச் சொன்னால், அவருக்குப் புரியாது; அவர் காலத்தில் ஏயன்னாவிற்கு இந்த வடிவம் இல்லை.

இனி, எழுத்து என்பதை ஓசை என்று அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டா. எழுத்து என்றே எழுதுவோம். உயிர் எழுத்துப் பன்னிரண்டை இரண்டாகப் பிரிக்கலாம். அவை குற்றெழுத்து, நெட்டெழுத்து ஆகியவையாம்.

அ, இ, உ, எ, ஒ ஆகியன குற்றெழுத்துக்கள்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெட்டெழுத்துக்கள். ஆக பன்னிரண்டு (5+7=12).

மெய்யெழுத்துக்கள் 18 ஆகும். இவற்றை வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்றாகப் பிரிக்கலாம்.

க், ச், ட், த், ப், ற் வல்லெழுத்து;

ங், ஞ், ண், ந், ம், ன் மெல்லெழுத்து;

ய், ர், ல், வ், ழ், ள் இடையெழுத்து.

கசடதபற வல்லினமாம் என்று குறிப்பிடுகின்றார்களே என்று கேட்கத் தோன்றும்.

க்+அ = க ; இது போல அகரச் சாரியையைச் சேர்த்துச் சொல்வதற்கு வசதி கருதி அப்படி அழைப்பதுண்டு.

ஆக மொத்தம் மெய்யெழுத்துகள் பதினெட்டு (6+6+6=18).

இதுவரை தமிழ் மொழியின் மேல் உள்ள முப்பது முதன்மை ஓசைகளைப்பற்றி அறிந்து கொண்டோம்.
நன்றிகள்.

Wednesday 30 January 2013

ஓசைகளிற்கு அளவு உண்டா............?


ஓசைகளைக் குறில், நெடில் என்று குறிப்பிடுகின்றீர்களே, அதற்கு ஏதாவது அளவு உண்டா?
ஓசைகள் ஒலிக்கப்படும் கால அளவைக்கொண்டு அளவு கணிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு 'மாத்திரை’ என்று பெயர்.

கண்களை ஒருமுறை இமைப்பதற்கு ஆகும் நேரம் அல்லது கை விரல்களை நொடிப்பதற்கு ஆகும் நேரம் ஒரு மாத்திரை என்பர்.

குறில் ஓசைக்கு (அ, இ, உ, எ, ஒ ) 1 மாத்திரை; நெடில் ஓசைக்கு (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ ) 2 மாத்திரை; மெய் ஓசைக்கு 1/2 மாத்திரை;

இங்கே ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும். 'க' என்னும் உயிர்மெய் எழுத்தில் 'க்'+'அ' என்னும் எழுத்துக்கள் உள்ளன. மேற்கண்ட கணக்கின்படி 'க்' கிற்கு 1/2 , 'அ' விற்கு 1 என்று கொண்டு, 'க' வுக்கு 1 1/2 மத்திரை என்று சொல்லலாமா? கூடாது!

மூன்று துணை ஓசைகள் என்று குறிப்பிட்டீர்களே, அவை யாவை?

துணை ஓசைகளைச் 'சார்பு எழுத்து' என்று இலக்கண நூலார் அழைப்பர். அவை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்பன.

இவற்றுள் ஆய்தம் புரிகிறது; குற்றியலுகரம், குற்றியலிகரம் புரியவில்லையே!

குற்றியலுகரம் என்பதற்கு பொருள் குறுகிய உகரம் என்பதாகும். அதாவது உகரத்துக்கு (உ) ஒரு மாத்திரை; அது 1/2 மாத்திரையாகக் குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம்.

இதை எப்படி கண்டுபிடிப்பது?

கண்டுபிடிப்பது ஒன்றும் கடினம் இல்லை. அணுவையே பிளக்கலாம் என்று கண்டுபிடித்த நமக்கு இது ஒன்றும் கடினமில்லை!

வல்லெழுத்தின் மீது (க், ச், ட், த், ப், ற்) உகரம் ஏறி ( குசுடுதுபுறு), அந்த எழுத்தை இறுதியாகக்கொண்டு ஒரு சொல் முடியுமானால், அதில் வரும் உகரம் ( நாகு, மாசு, நாடு, காது, மார்பு, ஆறு) குற்றியலுகரம் ஆகும்.

ஆனால், தனிக் குறிலை அடுத்து கு சு டு து பு று என்றும் ஆறு எழுத்துக்கள் வருமானால் ( நகு, பசு, மடு,புது, தபு, வறு) அவை குற்றியலுகரம் ஆகா.

மேலும் இந்த உகரம் மெல்லெழுத்து ( ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ) இடையெழுத்து (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) ஆகியவற்றின் மீதி ஏறி வந்தாலும் குற்றியலுகரம் ஆகாது ( அணு - (ண்+உ), ஈமு (ம்+உ), திரு(ர்+உ), குரு(ர்+உ), கதவு(வ்+உ), கனவு(வ்+உ), நிலவு(வ்+உ), முழு( ழ்+உ), ஏழு( ழ்+உ), தள்ளு(ள்+உ) ).

இனி, குற்றியலிகரம் பற்றி பார்ப்போம்.

இரண்டு சொற்களில் ஒரு சொல்லின் கடைசி எழுத்து குற்றியலுகரமாகவும், அடுத்த சொல்லின் முதல் எழுத்து யகரமாகவும் ( ய, யா )இருந்தால், அவை இரண்டும் சேர்ந்து ஒலிக்கும்போது அந்த குற்றியலுகரம் 'இ'கரமாக மாறிவிடும். அந்த எழுத்து 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் 'இ'கரம் குற்றியலிகரம் ஆகும்.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

நாடு + யாது = நாடியாது. 'நாடு'என்னும் சொல்லில் வரும் 'டு' என்பது குற்றியலுகரம். இதனை அடுத்து வரும் 'யாது' என்னும் சொல் 'ய'கரத்தில் தொடங்குவதால், 'டு' என்ற குற்றியலுகரம், 'டி' என மாறிவிடுகிறது. ( 'டி' = ட்+ இ ) என 1/2 மாத்திரையில் ஒலிக்கும் இந்த 'டி' குற்றியலிகரம் ஆகும்.

மேலும் சில உதாரணங்கள் : பாடு + யாது = பாடியாது, கொக்கு + யாது = கொக்கியாது.

தற்போது குற்றியலிகரச் சொற்களை மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை.

நீங்கள் குற்றியலிகரச் சொற்களுக்கு உதாரணம் முயற்சி செய்து பாருங்கள்.

சார்பு எழுத்தில் 'ஆய்த'திற்கான உதாரணங்கள் : எஃகு, அஃது, இஃது.

'எஃகு' என்னும் சொல்லில் 'கு' 1/2 மாத்திரை அளவே ஒலிக்கும். 
நன்றிகள்.

Monday 28 January 2013

உணர்வுடைய உண்மைத் தமிழா தமிழ்பேசு..!



அச்சன் படைத்த அருந்தமிழ்த்தேன்
அள்ளி அருந்த முடியாமல்
எச்சம் விரும்பும் இழிந்தவராய்
இன்னும் தமிழா! நீயிருந்தால்
மெச்சிடு வாரோ நம்மினத்தை?
மேன்மைத் தமிழ்த்தாய் நிலைப்பாளா?
உச்சித் திலக உணர்வடைய
உண்மைத் தமிழா தமிழ்பேசு!

உலகைக் கொஞ்சம் விழித்துப்பார்
உன்தாய்க் கிளை மொழியெல்லாம்
பலகலை பயிலும் நாளிந்தாள் பண்டே
உடையாள் தமிழ்ப்பெண்ணாள்
அலகிடச் செய்தாள் ஆயிமித்தாய்
ஆரியம் ஆங்கிலத் தார்தேய்த்தார்
இலகிட இந்நாள் இந்நிந்நாள்
எழுவாய் தமிழா தமிழ்பேசு!

பெருமைத் தமிழெனப் பேசாதே
பின்னதைக் குப்பையில் வீசாதே
அருமை இலக்கிய அறநூல்கள்
அழிந்திட நீதுணைப் போகாதே!
வறுமை வேலை இவையெண்ணி
வாய்ப்பிடும் பிறமொழி படித்திடுக!
எருமை எம்மினம் இல்லையென
எண்ணிடத் தமிழா தமிழ்பேசு!

கொச்சக் கவிப்பா போலிங்கே
கொச்சைப் படுத்தும் ஊடகங்கள்
நச்சைக் கலக்கும் நாளிதழ்கள்
நமக்கேன் என்பதை உணர்ந்திடுக
கச்சை அணியாக் காரிகைபோல்
கண்ணிய மிழக்கும் தமிழ்வேண்டாம்
துச்சம் தமிழ்ப்பகை என்றிடுக
துணிந்தே தாய்த்தமிழ் பேசிடுக!

செல்லிடப் பேசி என்றொருசொல்
செய்தளித் தாரொரு தமிழ்க்கவிஞர்
நல்லிடந் தேடும் தமிழுணர்வு
நமக்கிருந் தாலது இனவுணர்வு
வெல்லத் தமிழில் பிறமொழியை
விரும்பிச் சேர்த்தேன் எழுதுகிறாய்?
இல்லை என்பார் தமிழ்மானம்
இருந்தால் தமிழா தமிழ்பேசு!

அவரவர் தாய்மொழி வளர்க்கின்றார்
அடிமை நீதமிழ் கெடுக்கின்றாய்
சுவரை இடித்ததில் ஓவியமா?
சூதறி யாத்தமிழ்க் கேவலமா?
தவறைச் சுட்டினால் எதிர்க்காதே
தமிழ்வய லில்களை வளர்க்காதே
உவர்நீர் குடித்திட நினைக்காதே
உண்மைத் தமிழா தமிழ்பேசு!

தாய்ப்பால் ஊட்டிக் காத்தவளை
தரணியில் முதன்முதல் பூத்தவளை
வாய்ப்பால் தமிழென வாய்த்தவளை
வண்ணம் சிந்தெனக் காய்த்தவளை
சேய்ப்போல் அறநூல் சேர்த்தவளை
செம்மொழி எனும்புகழ் பார்த்தவளை
ஏய்ப்பா ருடன்நீ சேராமல்
இதழ்ச்சுவை சேரத் தமிழ்பேசு!

அறிவியல் ஆயிரங் கைகளுடன்
ஆல்போல் தழைத்திடும் வையமிது
கருவிகள் கலைகளைக் கண்டறிவாய்
கனித்தமிழ் வாழ்ந்திட தொண்டுசெய்வாய்
திருவருள் கொடுத்தத் தேன்தமிழில்
தேடிடு கிடைக்கும் புதுச்சொற்கள்
மறுவற முகவரி நீகாட்ட
தமிழா தமிழில் பேசிடுக!
நன்றிகள்.

வணக்கம் தமிழ் உறவுகளே................!



பலர் தொழில் நுட்பம் சார்ந்த அதாவது கணினி கைபேசி இணையத்தின் தமிழ் மென் பொருள் சார்ந்த அறிவு இல்லாது இருக்கிறார்கள் .

அன்பான தமிழ் உறவுகளே! தமிழுக்கு அழகே தமிழ் எழுத்துகள்தான். தமிழைத் தமிழில் எழுதுங்கள், ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.

தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதி தமிழைக் கொலை செய்ய வேண்டாம். நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக புரியவில்லை. ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.?

இன்று தமிழில் எழுத நிறைய மென்பொருட்கள் உள்ளன.. தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும், தமிழில் எழுத முடியாத தமிழர்களால் தமிழ் அழிந்துவிடும் என்றே அஞ்சுகிறோம்.

தமிழனால் தமிழில் எழுதவோ பேசவோ முடியவில்லை என்றால் எவன் தமிழை எழுதுவான், பேசுவான்? தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதித் தமிழைத் தயவுசெய்து கொலை செய்ய வேண்டாம்.

தமிழில் எழுத மென்பொருட்கள்

கைபேசி இணையத்தில் தமிழ் எழுத்துகளை பார்வையிட
OPERA MINI >http://www.opera.com/mobile/ and
http://gallery.mobile9.com/topic/?ty=sw&tp=opera
FOLLOW THIS INSTRUCTIONS TO SEE TAMIL FONTS IN ANY MOBILE

1) DOWNLOAD OPERA MINI IN YOUR MOBILE
2) TYPE “about:config” WITHOUT QUOTATION IN WEB ADDRESS TAB.
3) POWER SETTINGS PAGE WILL OPEN
4) YOU WILL FIND AN OPTION WHICH SAYS “USE BITMAP TO SEE COMPLEX FONTS” IN THAT PAGE
5) GIVE YES IN THAT OPTION AND SAVE THE SETTINGS
6) RESTART OPERA MINI.

NOKIA வகை கை பேசிகளுக்கு இணையத்தில் எழுத தமிழ் எழுதி இல்லை.
குறுஞ்செய்தி (SMS) தமிழில் எழுதே மென்பொருள் : http://gallery. mobile9. com /f/ 1945829/

ANDROID வகை கைபேசிகளில் தமிழ் பார்வையிட உதவும் உலாவிகள்
sett browser:: http://code.google.com/p/sett-browser/அல்லது http://gallery.mobile9.com/topic/?tp=sett+browser

peacock browser::https://play.google.com/store/apps/details?id=com. besafesoft. peacock browser &hl=en

ANDROID வகை கைபேசிகளில் தமிழ் எழுத மென் பொருள்
tamilvisai::https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS50YW1pbC52aXNhaSJd அல்லது http://www.appbrain.com/app/thamizha-tamil-visai/com.tamil.visai

கணினியில் எழுத பல மென் பொருள் இருக்கிறது
Google Transliteration ::http://www.google.com/transliterate/Tamil

Google Input Tools for Windows::http://www.google.com/inputtools/windows/index.html

தமிழ்99 விசைப்பலகை::http://tamil99.org/tamil99-software/

இவற்றில் உங்களிற்கு ஏற்ற மென்பொருட்களைப் பாவித்து தமிழின் வளர்ச்சிப்
பாதையில் அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணையுங்கள்.
நன்றிகள். 

Saturday 26 January 2013

தமிழ் அழகு..............!!




பழக எளிமை அழகு
கவியில் புலமை அழகு
என்றும் புதுமை அழகு

நாளும் பழமை அழகு
சொல்லில் செழுமை அழகு
கருத்தில் வலிமை அழகு

கவிக்கு இளமை அழகு
பண்பில் முதுமை அழகு
எந்தன் தமிழே எங்கள் தமிழே.!

நீ நாளும் நாளும் அழகோ அழகு..!!
நன்றிகள்.

முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ..............!


தமிழ் மொழி இயற்றமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர்.

அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

1.எழுத்து
2. சொல்
3. பொருள்
4. யாப்பு
5. அணி

அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

எழுத்து

முதலெழுத்து

"எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" - தொல்காப்பியம்
உயிரும் உடம்புமாம் முப்பது முதலே - நன்னூல்

அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்

*உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

*மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்

* ஆய்த எழுத்து : ஆய்த எழுத்து ஒன்று ஃ

உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இருண்டு வகைப்படும். மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும்.

சார்பெழுத்துகள்

உயிர்மெய் ஆய்தம் உயிரள பொற்றள
ப ஃகிய இஉ ஐஔ மஃகான்
தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும்
-நன்னூல்-

1. உயிர்மெய் எழுத்து
2. ஆய்த எழுத்து
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஔகாரக் குறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தக்குறுக்கம்

எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன

இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216) மற்றும் ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும்.

உயிர் எழுத்துக்கள் 12
மெய் எழுத்துக்கள் 18
உயிர்மெய் எழுத்துக்கள் 216
ஆய்த எழுத்து 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 247

எழுத்து குறித்த இலக்கணச் செய்தி

எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழி நெடிலடி போன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும் அடிகளுமாகும்.

வஞ்சியுரிச்சீர்

*நேர் இறுதி ஐந்து எழுத்து
*நிரை இறுதி ஆறு எழுத்து
*சிறுமை மூன்று எழுத்து
*பெருமை ஆறு எழுத்து
* 4 முதல் 6 எழுத்து வரை - குறளடி
* 7 முதல் 9 எழுத்து வரை - சிந்தடி
*10 முதல் 14 எழுத்து வரை - நேரடி
*15 முதல் 17 எழுத்து வரை - நெடிலடி
* 18 முதல் 20 எழுத்து வரை - கழி நெடிலடி

மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது.

ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7 முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20 எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார்.

சொல்

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.

எ.கா: வீடு, கண், போ,

சொல்லின் வகைகள்

1.பெயர்ச்சொல்
2.வினைச்சொல்
3.இடைச்சொல்
4.உரிச்சொல்

பொருள்

பொருள் இரண்டு வகைப்படும். அவை,
1. அகப்பொருள்
2. புறப்பொருள்

நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும்.ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.

யாப்பு

யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.

யாப்பின் உறுப்புகள்

1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை

உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துக்களும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துக்களின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். 

நேரசை மற்றும் நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும்.

ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.

யாப்பின் அடிப்படையில் பா வகைகள்

1. வெண்பா
2. ஆசிரியப்பா
3. கலிப்பா
4. வஞ்சிப்பா

அணி

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில,

1. தன்மையணி
2. உவமையணி
3. உருவக அணி
4. பின்வருநிலையணி
5. தற்குறிப்பேற்ற அணி
6. வஞ்சப் புகழ்ச்சியணி
7. வேற்றுமை அணி
8. இல்பொருள் உவமையணி
9. எடுத்துக்காட்டு உவமையணி
10. இரட்டுறமொழிதலணி
நன்றிகள்.

Friday 25 January 2013

தமிழர் கணிதத் திறனுக்கு..........!


தமிழர் கணிதத் திறனுக்கு ஒரு சான்று !


தமிழில் கணிதம் என்று ஒன்று இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆங்கில கல்வியும், ஆரியமும் நம்மை பார்த்து இன்று ஏளனமாக சிரிக்கிறது . 

ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்றதோடு நுணுக்கமாக நேர்கோட்டில் வீதிகளையும், வீடுகளையும், கோவில்களையும், சிற்பங்களையும் கட்டி அமைத்தனர்.

அவை எல்லாம் நுண் கணிதம் இல்லாமல் சாத்தியமாகாது. யானைப் படையை ஏற்றிக் கொண்டு கடல் வழியே கடாரம் வரை சென்றது சோழர் படை . அக்கப்பல்கள் எண் கணிதம் இல்லாமல் வடிமைக்கப்படுமா ? 

எண்ணியல்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற நிலையில் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு இந்தப் படமே சான்று . 

பண்டைய தமிழர்கள் பத்தின் பெருக்கம் அனைத்திற்கும் ஒவ்வொரு பெயர் வைத்தனர். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீட்டை உருவாக்கினர்.

நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலக்கம், கோடி என விரியும் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பெயர் வைத்து வழங்கிய தமிழர்கள் எந்த அளவிற்கு தமிழ் கணித முறையில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழை அறிந்தவர் கணிதத்தையும் அறிந்தவரே ஆவார். மீட்டெடுப்போம் தமிழர் கணித முறைகளை. நம் குழந்தைகளுக்கு தமிழ்க் கணித முறையை சொல்லிக் கொடுப்போம். 
நன்றிகள்.

Thursday 24 January 2013

‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’...............!

சமையலில் முக்கியமாக இனிப்புப் வகைகள், போன்றவற்றிற்கு வாசனை, சுவை அளிக்க கூடிய ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ‘‘வாசனைப் பொருட்களின் ராணி’’(Queen of the spices) என்று சிறப்புப் பெயர், செல்லப் பெயர் கொண்ட ஏலக்காய், இந்தியாவில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


ஏலக்காய் விதையில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, பொசுபரசு, பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை அடங்கியுள்ளன.

ஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், கீ(ஹீ)யமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.

* சிறிது ஏலப்பொடியை, வெற்றிலையுடன் மென்று தின்றால், அசீரணம் அகலும். பசி ருசி உண்டாகும்.

* ஏலப்பொடியுடன், மிளகுப்பொடி சேர்த்து, சிறிது துளசிச்சாறில் சேர்த்துக் குடித்தால், கடும் கபம் இளகி வெளிப்பட்டு, நலம் உண்டாகும். பக்க விளைவு இல்லாத இயற்கை மருந்து இது.

* ஏலக்காய் தூள், தேயிலைத் தூள் இரண்டையும் சேர்த்து தேநீர் தயாரித்து அத்துடன் தேன் சேர்த்து, தினம் இருவேளை பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

* தேனுடன், ஏலக்காய்தூள் கலந்து, சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். நரம்புகள் நன்கு இயங்கும். வலிமை அடையும்.

* ஏலக்காயுடன், கறிவேப்பிலை வைத்து மைய்யாக அரைத்து எருமைத் தயிரில் சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

* ஏலக்காய் விதைகளை வாயிலிட்டு அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கிவர, வாய்நாற்றம் மாறும்.

* நான்கு மிளகு, சிறிது ஏலக்காய், சுக்கு இவைகளுடன் பால் தெளித்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலை வலிதானே போகும்.

* ஏலக்காய், மிளகு, சுக்கு, திப்பிலி, தனியா இந்த ஐந்தையும் சேர்த்து கசாயம் செய்து பருகிவர குற்றிருமல் குணமாகும்.

* வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து சிறிது ஏலக்காய்ச் சேர்த்து மென்று தின்றால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

* சிறிது ஏலக்காயுடன் வேப்பிலை மஞ்சள் வைத்து அரைத்து பித்த வெடிப்பு மீது பூசிவர, விரைவில் வெடிப்பு குணமாகும்.

* ஏலக்காயுடன், அதிமதுரம், மிளகு போட்டு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி பருகினால், வாந்தி, குமட்டல் உடனே நிற்கும்.

* அன்னாசிப்பழச்சாறுடன், ஏலக்காய்தூள் சேர்த்து பருகிவர, மூத்திரக் கோளாறுகள் குணமாகும். நீர்கடுப்பு நீங்கும். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்களுக்கு, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

* சுக்கு, ஏலக்காய், கிராம்பு இவைகளுடன் சிறிது நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளின் மீது பூசி வர, மூட்டுவலி குணமாகும். ஆரம்பநிலை வாதம் நீங்கும்.

* ஏலப்பொடி, சீரகப்பொடி, மல்லிப்பொடி இவைகளுடன், சிறிது கருப்பட்டி பொடித்திட்டு கலந்து, ஒரு நெல்லிக்காய் அளவு வீதம் காலை மாலை தின்றுவர, பித்த கிறுகிறுப்பு மாறும்.

* திராட்சைச்சாறுடன், ஏலக்காய்த்தூள் கலந்து சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி நீங்கும். நரம்புகள் வலுப்பெறும்.

* ஏலக்காய்தூள், சுக்குப்பொடி, மிளகுப்பொடி இவைகளை தேனில் கலந்து சாப்பிட்டுவர, தசைபிடிப்புகள் நீங்கும்.

* செவ்வாழைப்பழத்துடன், சிறிது ஏலக்காய்தூள் சேர்த்துச் சாப்பிட்டால் மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.

* வெல்லத்தைப் பொடித்து நீரில் கலந்து, அத்துடன், எலுமிச்சைச்சாறு, ஏலக்காய் தூள் சேர்த்து பானம் தயாரித்து பருகினால் கோடைத்தாகம் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும். சோர்வு மாறி புத்துணர்ச்சி ஏற்படு

* ஏலக்காயின் முக்கியமான பயன் என்னவென்றால். சூரிய வெப்பத்தால், உடலில் வெப்பம் அதிகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் பக்கவாதம் வராது. அதிலும் வெளியே செல்லும் போது ஏலக்காயை வாயில் போட்டு மென்று சென்றால், வெப்ப அலைகள் உடலை தாக்காமல் பார்த்துக் கொள்ளும்.

* ஆயுர்வேத கொள்கையின் படி, ஏலக்காய் உடலில் உள்ள மூன்று தோசங்களான வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்தது. இவை உடலில் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்து, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகவே இதனை உண்டால் நன்கு ஆரோக்கியமாக வாழலாம். மேலும் அதனை உண்பதால், நல்ல குரல் வளத்தையும் பெறலாம்.

* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.

* தடிமனால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் தேநீர்’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.

* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.

* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரைக் கிண்ணம் தண்ணீரில் போட்டு, கசாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை கிண்ணம் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கசாயத்தைக் குடித்தாலே போதும்.

* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை தேக்கரண்டி எடுத்து, அரை கிண்ணம் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

* பாலுணர்வு தூண்டும் பொருளாகவும் உள்ளது.
நன்றிகள்.

Wednesday 23 January 2013

மருதா‌ணி இலையை வெறு‌ம்......!


மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும்.

வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும். இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள்

மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். இதன் இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். மருதாணி செடியின் பட்டையை ஊற வைத்த நீரை அரை அவுன்சு(ஸ்) காலை, மாலை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

மருதாணி இலையை நன்றாக அரைத்து தலைவலிக்கு நெற்றியிலும், பொட்டுகளிலும் பற்றுப் போட்டுக்கொண்டால் தலைவலி உடனே நீங்கும்.
மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.

மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக வெப்பத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.


மருதாணி பூக்களையும், இளந்தளிர்களையும் பறித்து சாறு பிழிந்து அரைத் தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தொழுநோய், மேக நோய் இரண்டும் மேலும் பரவாமல் தடுக்கும். இதை நீண்ட நாள்கள் பயன்படுத்தி வந்தால் உடல் பழைய நிலையை அடைவதோடு தோல் செழிப்பாகவும் ஆகும்.

மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். ஆனா‌ல் இ‌ந்த பய‌ன்க‌ள் எ‌ல்லா‌ம் த‌ற்போது கடைக‌ளி‌ல் ‌கிடை‌க்கு‌ம் மருதா‌ணி குழாய்களில்  கிடை‌க்க வா‌ய்‌ப்பே இ‌ல்லை.

சில பெ‌ண்களு‌க்கு ஏ‌ற்படு‌ம் பெரு‌ம்பாடு, வெ‌ள்ளை‌ப்பாடு ஆ‌கியவை குணமாக, மருதா‌ணி இலையை அரை‌த்தநெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பசு‌ம்பா‌லி‌ல் கல‌ந்து இருவேளை ‌வீத‌ம் 3 நா‌‌ட்க‌ள் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் ‌கிடை‌‌க்கு‌ம். ஆனா‌ல், இ‌தனை உ‌ண்ணு‌ம் போது உண‌வி‌ல் பு‌ளியை ‌சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.

கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதுயம் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், தலை “குளிர்ச்சியாக ’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் பளபளக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாகி விடும்.
நன்றிகள்.

Tuesday 22 January 2013

பனையும் சிறப்பும்..............!


பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும்.

இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு.

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.

தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

பனங்கற்கண்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்திவர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.

பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும்.

பதநீர் மகிமை..

பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி, வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.

சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டுடுவாங்க. இதனால் மரத்திலிருந்து பானையை இறக்கும்போதே பதநீர் தயார்.

இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன் என்று சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

இந்த பனைமர கள்ளைவிட, தென்னைமர கள் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர கள்ளை மிஞ்சமுடியாது.

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சாற்றுக்கு பதர்நீர் என்று பெயர். மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.


பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.

பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும்.

பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆறும்.

பயன் தரும் பாகங்கள் . . .

நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால் (கள்) , முற்றிய மரம் முதலியன.

வளரியல்பு. . .

பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும்.

நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப் பயன்கள். . .


பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும்.

வைகறை விடியல் இந்தப் பாலை (கள்ளை)  100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும், சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.

நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.

பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.


பனையின் பயன்கள்

பனை ஓல

குருத்து ஓலையில் இருந்தே அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப்படுகிறன்.

கைவினைப்பொருட்களான: பூக்கள், பூச்சாடிகள், போன்றவை நாளாந்த பாவனைப்பொருட்களான: பெட்டி, சுளகு, பாய், கடகம், திருகணை, நித்துபெட்டி, இடியப்ப தட்டு என பல பொருட்கள் செய்ய உதவுகிறது.

முற்றிய ஓலை மாட்டுக்கு உணவாக பயன்படுத்த படுவதுடன், வீடு வெய, வெலிகள் அடைக்கவும் பயன்படுகிறது.


பனையோலை வேய்த இருப்பிடம் ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம்.

இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தோட்டச் செய்கையின் போது தேவையற்ற களைகளைக் கட்டுப் படுத்துவதற்கும், பசளையாகவும்  பனையோலையை தோட்டக்  காணியின் மீது பரவி ஓரிரு வாரம் விட்டபின்னர் பனையோலையின் கீழ் சூரிய ஒளி கிடையாது களைகள் வாடும்  போது அப்பனை ஓலைகளையே வெட்டித் தாட்டு பசளையாக்கி விடுவதனால் ஒரே வேலையில் இரு பயன்கள் கிடைக்கும்.


பனம் நார்


பனம் ஓலை, இலையில் இருக்கும் நீண்ட தண்டு, இளம் மட்டையிலிருந்து  பிரித்தெடுக்கும் நாரினால் தயாராகும் விண் பட்டங்களில் ஒலியை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தப் படுகிறது.



மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார் நீண்ட நாள் பாவனைக்குரிய தூரிகைகள் (Brush), துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும், நார்க்கடகம்  தயாரிக்கவும்  பயன்படுத்தப்படுகிறது.

பனை மரம்

பனந்துலா, கட்டுமான பணிகளுக்கு குறிப்பாக வீட்டு கூரைகளுக்கு சிலாகை, தீரந்தி, வளை, என்பவை தயாரிக்க பயன்படுத்த படுகிறது.


கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில்தூரிகை செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

பனம் பழம்

பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழ கூழ் (Fruit pulp) பழபாகு (ஜாம்), பனாட்டு, குளிர் பானம் என்பன செய்ய பயன்படுத்த படுகிறது. அதை விட சுவையான சிற்றுண்டியான பனங்காய் பணியாரம் இலங்கையில் தமிழர்கள் மத்தியில் பிரபலம்.

பனம் பழம் கொண்டு உடுப்பு தோய்த்தவர்கள் பலர். அதை விட பனம் பழம் தீயில் வாட்டி சாப்பிடுபவர்களும் உண்டு.

பனங்களி கசப்புக் கலந்த இனிப்புத் தன்மை கொண்டது. இதை நேரடியாக உண்பது மட்டுமன்றி, இக்களியைப் பதப்படுத்திப் பல வகையான உணவுப் பொருள்களையும் செய்வது உண்டு. இக்களியைப் பிழிந்து, பாய்களிற் பரவி, வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படுவது பனாட்டு எனப்படுகின்றது. இது நீண்ட காலம் வைத்து உண்ணத்தக்கது. இப் பனாட்டிலிருந்து பாணிப் பனாட்டு என்னும் ஒருவகைப் உணவுப் பண்டமும் தயாரிக்கலாம்.

பனாட்டு, பாணிப்பனாட்டு என்பன சோற்றுடன் உண்ண மிகுந்த சுவையாக இருக்கும்.

பனங்கிழங்கை அவிக்காது எடுக்கப்படும் ஒடியலில் இருந்து ஒடியல் மா எடுப்பார்கள். ஒடியல் மாவில் இருந்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ் ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவை இலங்கையில் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலாமான உணவுகள்.

மகப்பேற்று நிகழ்ந்த தாய்மாரிற்கு குழந்தைகளிற்கு பாலுட்டும்போது குழந்தைக்கான பாலின் அளவு குறைந்தால் ஒடியல் புட்டினை தாயாரிற்கு உணவுகளுடன் கொடுக்கும்போது தாய்ப்பால் சுரக்கும் அளவில் வித்தியாசத்தைக் காணக்கூடியதாக இருக்கும்.

பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல், இதனைத் தேங்காய்ச் சொட்டுடன் சாப்பிடலாம். புளுக்கொடியல் மா சிற்றுண்டியாக பயன் படுத்தப்படுகிறது.

பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை தூண்டும். புடைப்பு (புஷ்டி) தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், நிலக்கரி மற்றும் சி(ஸி)லிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும். இதற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல், பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது உண்டு.

தவிர பனங்கற்கண்டு, உடல் வெப்பம் (உஷ்ணம்), காங்கை, நீர் சுருக்கு, காய்ச்சல் (ஜுர) வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோசு(ஸ்) மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல தருகிறது.

கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. குடல் சம்பந்தமான ஒருவகை காய்ச்சல், காய்ச்சல் (சுரம்) (Typhoid), நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது.

இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், தடிமன் (ஜலதோசம்), காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக வெப்பம், பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்துகிறது.

நன்றிகள்.

Sunday 20 January 2013

வியப்பாகவும், வேடிக்கையாகவும்.......!

கேட்க வியப்பாகவும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்கும் செய்தி. காற்று மின்சக்தி அதிகம் கிடைக்க அதிகக் காற்று வேண்டும். அதிகக். காற்று பெற அதிக உயரமுள்ள காற்றாலைக் கம்பங்களை உபயோகிப்பது தெரிந்த செய்தி.. ஆனால் பட்டங்களின் மூலம் மின்சக்தி தயாரிப்பது  தான் அந்த செய்தி.  


பட்டங்களை  உயரே பறக்க விட்டு அவற்றுடன் தண்டவாளத்தில் ஓடும் படி வாகனங்களை இணைத்து விடுகிறார்கள். வாகனம் ஓடும்போது அதன் இயக்க சக்தியை  மின் சக்தியாக ஒரு மின் ஆற்றலை விளைவிக்கும் பொறி (Generator) மாற்றுகிறது.

யேர்மனியைச்  சேர்ந்த ஒரு தொழில் நிறுவனமும் பிரான்கோ(ஹோ)பர்  கல்வி நிறுவன ஆராய்சியாளர்களும் இந்தப் பட்டம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்கள். பட்டம் காற்றால் இயக்கப்படும் இயந்திரங்களை (Turbine)  விட வெகு வெகு உயரத்தில் பறப்பதால் காற்று சக்தியை பயன் படுத்துவதில் காற்றாலையை விட 8  மடங்கு அதிக மின்சக்தியை உருவாக்குகிறது.

300 சதுர மீட்டர் பரப்புள்ள   8 பட்டங்கள்  20    காற்றால் இயக்கப்படும் இயந்திரங்கள் அளவு 1 பத்து இலட்சம் மின் ஆற்றல் விசை அலகு சக்தி (Megawatt) மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும்.   டன் கணக்கில் எடையுள்ள காற்றாலைக் கம்பங்களை விட குறைவான பரப்பில் குறைந்த செலவில் பட்டங்கள் மின் சக்தி தயாரிக்கின்றன.

20 சதுர மீட்டர் பட்டம்  1 பெருமளவு (Ton) எடையுள்ள வாகனத்தை இழுக்கும்.   ஒவ்வொரு வடக்கயிறு (Cable) உள்ள ஒரு கிடை மட்ட மற்றும் செங்குத்தான உணர்வி வடக்கயிறு விநியோகிப்பானில் உள்ள சக்தி உணர்வியும்  பட்டத்தின் கச்சிதமான நகர்வை உறுதி செய்கின்றன

24 பட்டங்கள்  120   கிகா வாட் (Gigawatt) ஒரு வருடத்தில் மின் உற்பத்தி செய்ய முடியும்.   30   காற்றால் இயக்கப்படும் இயந்திரங்கள் ஒவ்வொன்றும்  தலா 4 கிகா வாட் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்வதற்கு இணையானது இது.. இதனால் 24   பட்டங்கள்  30 காற்றால் இயக்கப்படும் இயந்திரங்களுக்குப் பதிலாக பயன் படுத்த முடியும். இது  வீடுகளுக்கு ஒரு வருடம் மின்சக்தி தரும்

பட்டங்களை தூரத்திலுள்ள தானியங்கி (Remote) மூலமும் இயக்க முடியும் கட்டுப்  படுத்த முடியும்.
நன்றிகள்.

வேம்பு என்பது வேப்ப...!

வேம்பு என்பது வேப்ப மரம் தான். இதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாகிசுத்தானும் தான்.

பின் உலகம் முழுதும் பரவிற்று. காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும். இது சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது.


நல்ல வளமான களிமண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். இது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம்.  பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும் , அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள்.

வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத்தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம். 

இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் 

வேம்பு கோழையகற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல், வாதம், மஞ்சள் காமாலை, காச்சல், சுவையின்மை, பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது.

வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.

வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும்.

வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.

வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும்.

உந்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுக்க நரம்பு இசிவு, கரப்பான், கிரந்து, சிரங்கு, சுரம், சன்னிகளில் வரும் இசிவு, கண்ட மாலை கீழ் வாதம் தீரும்.

5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.

3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும்.

50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.

வேப்பெண்ணையில் தலை முழுகி வரச் சன்னி, பிடரி இசிவு, வாத நோய்கள் தீரும்.

வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.

வேப்ப மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து இந்தப் பூவைக் கொண்டு ரசம் வைப்பார்கள். இந்த வேப்பம் பூ ரசம் பித்த சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வேப்பம்பழ சர்பத் கொடுத்து வர சொறி, சிரங்கு போன்றவை குணமாகும். கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும் ஆற்றல் கொண்டதாகும்.

வேப்பம்கொட்டையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுத்து அரைத்துப் புரையோடிய புண்கள் மீது பூசி வரக் குணம் கிடைக்கும். தொழுநோய் (குஷ்ட )நோயாளிகளின் புண்களையும் குணப்படுத்தும்.

நரம்புகளாலுண்டாகும் இழப்பு, சீதளம் இவைகளைப் போக்க உந்தாமணி இலையை வேப்பெண்ணெயில் வதக்கிச் சூட்டுடன் ஒத்தடம் கொடுத்து வேப்பெண்ணெயை வலி மற்றும் ரணங்களுக்குத் தடவி வரக் குணம் கிடைக்கும்.

வேப்பம்பட்டை நாவல்மரப்பட்டை வகைக்கு 150 கிராம் எடுத்து இதனுடன் 50 கிராம் மிளகு 50 கிராம் சீமைக்காசிக்கட்டி இவற்றை நன்றாக உலர்த்தி இடித்து வைத்துக் கொண்டு ஒரு குவளை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தூளைப்போட்டுக் காய்ச்சி எடுத்த கசாயத்தைத் தினம் இரு வேளை கொடுத்து வந்தால் நாட்பட்ட பேதி, கிராணி, சீதபேதி இவை குணமாகும்.

வேப்பம்பட்டை 5 பலம், காசறை (கஸ்தூரி) மஞ்சள், பூண்டு, மிளகு, சீரகம் இவை வகைக்கு 50 கிராம் எடுத்து இவற்றை இடித்துத் தூளாக்கி, ஒரே மாட்டின் பசும்பால் ஒரு படி நல்லெண்ணெய் ஒன்றரைப்படி எடுத்து இவையனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து காச்ச வேண்டும்.

உரிய பதம் வந்ததும் இறக்கி ஆறியவுடன் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் மண்டையிடி பீனிசம், வாதரோகங்கள், பாரிச வாயு, சீதளரோகம் சம்பந்தமுடையவர்கள், தோல் சம்பந்தப்பட்ட நோயுடையவர்கள் விரைவில் குணம் பெறுவார்கள்.

வேப்பிலைக் கசாயம் கிருமிகளைக் கொன்று காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். தினமும், காலை வேளையில் பத்து வேப்பிலைக் கொழுந்து எடுத்து ஐந்து மிளகுடன் சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால்  மலேரியாக் காய்ச்சல் குணமாகும். நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வர மாத்திரை எதுவும் இன்றிக் குணமாகும்.

வேப்பங்காய் இரத்த மூலத்தையும், குடற் பூச்சிகளையும் சிறுநீரகத் தொல்லைகளையும் போக்கும்.

எல்லாப் பிணிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது வேம்பு வேப்பிலை உருண்டையைத் தேய்த்துக் குளித்தால் புண்கள் குணமாகும்.
வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல் துலக்கி வந்தால் வாய் துர் நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.

நூறு ஆண்டு வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, வேர்ப்பட்டை, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து உலர்த்து பொடி சூரணம் 2-5 கிராம் அளவு தேனில் காலை சாப்பிட்டு வந்தால் உடல் வலியும் வனப்பும் பெறும். காயகல்பமாகும். உடலில் எந்த நோயும் போகும். நீரிழிவு, சர்கரை குட்டம் முதலான எல்லா வகைத் தோல் நோயும் குணமாகும். புகையிலை, புளி, போகம் நீக்கினால் நூறாண்டு வாழலாம்.

காய சித்தியாகும் கடி யசிலேச்(ஷ்)ம்மாறும்
தூயவிந்து நாதமிவை சுத்தியுமாம் – தூயவருக்கு
எத்திக்கும் கிட்டும் இலையருந்தில் வாயெல்லாம்
தித்தக்கும் வேம்பதற்கு தேர்.
                                                            அகத்தியர்.

குட்டநோய் பதினெட்டும் தீர்வதற்கு………

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
ஏனமுதற் ச(ஜ)லமிக்க கொழுந்தைக் கிள்ளி
இன்பமுடன் தின்று வாயிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டுப் போகும்ப்பா அறிந்து கொள்ளே
கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
குட்டமென்ற பதினெட்டு வகையுந் தீரும்.

கார்த்திகை மாதம் விடுகின்ற கொழுந்தை இருபத்தேழு நாள் சாப்பிட பாம்பு விடம் நீங்கும். பாம்பு கடித்தாலும் விடம் ஏறாது. ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் பதினெட்டு வகையான குட்டமும் குணமாகும். நூற்றாண்டு வேம்பின் பூ, தளிர், பட்டை, வேர், காய் உலர்த்திய சூரணத்தை ஆறு மாதம் சாப்பிட்டு வந்தால் நிச்சையம் குட்டம் முதலான தோல் நோய் அனைத்தும் குணமாகும். புளி நீக்கி பத்தியம் இருத்தல் வேண்டும்.

வேப்பிலை, எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்த மயக்கம், குடிவேறி குணமாகும்.

வேப்பிலை+ மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூச பித்த வெடிப்பு கால் பாத எரிச்சல் குணமாகும். நகச்சுத்திக்கு பற்றிட குணமாகும்.

வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த குன்மம் தீரும்.

காயை உலர்த்திய பொடி வெந்நீரில் கொடுக்க மலேரியாக் காச்சல், மண்டையிடி குணமாகும். 
நன்றிகள்.

Saturday 19 January 2013

தங்கள் அழகை கொஞ்சமாக இழந்து..........!


எந்த ஒரு செயலை  ஆரம்பித்தாலும், மங்களகரமாக ஆரம்பிக்க வேண்டும் என நம் பெரியோர்கள் கூறுவார்கள்.  அதாவது நம் தமிழர்களுக்கு மஞ்சள் என்பது இன்றியமையாதது.  உள்ளத் தூய்மைக்கும், உடல் தூய்மைக்கும் மற்றும் மங்களச் சிறப்புகளுக்கும் நன்கு பயன்பட்டு வரும் அரும்பொருள் மஞ்சள்.

புதிய ஆண்டு வியாபாரம் போன்றவை ஆரம்பிக்கும் பொழுதும் மஞ்சளைத் தான் பிரதானமாக அனைத்து பொருட்களிலும் இட்டு இறைவனை வணங்குகின்றோம். சமையலுக்கும் மஞ்சள்தூளை பயன்படுத்துகின்றோம். பெண்கள் மஞ்சளை அரைத்துப் பூசி நீராடுகின்றனர்.


மக்களின் மங்களச் சின்னமாகத் திகழும் மஞ்சள் உடலின் ஆரோக்கியத்தைச் சுட்டிக்காட்டவும், பலவித பிணிகளை குணமாக்கும் அற்புதமான மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. பெண்கள் மஞ்சளைப் பூசுவதனால் பித்தம், வாதம், வாந்தி தோச(ஷ)ங்கள் அனைத்தும் நீங்குகிறது என்று மருத்துவ சாத்திரம் கூறுகிறது.

அதுமட்டுமின்றி மஞ்சளினால் முகத்தில் மினுமினுப்பு உண்டாகும். மற்றும் முகத்தில் தோன்றும் பருக்கள், தேமல்கள் போன்ற சரும வியாதிகளைப் போக்குவது மட்டுமின்றி தூக்கத்திலும் இனிய சுகம் காணலாம்.

தற்போதைய விஞ்ஞான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் டெக்சாசு(ஸ்) என்னும் பல்கலைக்கழகத்தின் எம்.டி.ஆண்டர்சண் புற்று நோய் மையம் நடத்திய ஆய்வில் மஞ்சளுக்கு தோல் புற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் உண்டு என்று கண்டுபிடிக்கப்ப்பட்டுள்ளது.

தோல் புற்று நோய்க்கு காரணமான “மெலனோமா” என்ற கலங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றல் மஞ்சளுக்குண்டு என்றும், புற்று நோய்க்கு காரணமான கலங்கள் (Cells) வளர்ச்சி பெறாமல் தானாகவே அழிந்துவிடக் கூடிய சூழ்நிலையை மஞ்சள் ஏற்படுத்துகிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்ட அரிய உண்மையாகும்.


பல நூறு ரூபாய்கள் கொடுத்து அழகுசாதனப் பொருட்களை வாங்கி அவதிப்படுவதற்குப் பதில், நம் வீட்டுச் சமையலறையில் இருக்கும் மஞ்சளைப் பயன்படுத்தி அழகாகும் வழிகளைப் பார்ப்போமா..

1. காயாத மஞ்சள் கிழங்கை, அதன் இலையுடன் சேர்த்து அரைத்து பாசிப்பயறு மாவுடன் கலந்து தினமும் உடலில் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கம் வராது.

2. கழுத்து, கணுக்கால், முட்டி... போன்ற இடங்களில் கருப்பாக இருக்கிறதா? காயாத மஞ்சள் கிழங்கை அரைத்து, தயிருடன் கலந்து கருப்பாக இருக்கும் இடங்களில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளிக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்துவர, கருமை  காணாமல் போய்விடும்.

3.  முகப்பரு பிரச்னையா? காயாத மஞ்சள் கிழங்குடன் வேப்பிலையை அரைத்துப் பூசி, 15 நிமிடங்கள் ஊற விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் பரு சீழ் பிடிக்காது. வலி குறைவதோடு, விரைவிலேயே மறைந்துவிடும். முக்கியமாக, பரு உதிர்ந்த பிறகு வடு உண்டாகாது.

4.  முழு பாசிப்பயறு 100 கிராம்,  காசறை (கஸ்தூரி) மஞ்சள், கசகசா - தலா 10 கிராம், உலர்ந்த ரோயா(ஜா) மொட்டு, பூலாங்கிழங்கு - தலா 5 கிராம், எலுமிச்சை இலை, துளசி இலை, வேப்பிலை - மூன்றும் சேர்ந்து 2 கிராம் - இவற்றை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதில் சிறிதளவு எடுத்துத் தயிரில் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவுங்கள். மாசற்ற பொன்முகத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள்தான்!

5. மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், தடிமன், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும்.

6. மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.


7. மஞ்சளின் இருக்கும் குர்குமின் என்னும் உட்பொருள் மூளைக்கு அமிலத்தன்மை பரவாமல் தடுக்கிறது இது ஞாபக சக்தியை அதிகரிக்கும் அத்துடன் வயோதிபர்கள் மத்தியில் வரும் மூளை அழுகல் என்னும் நோயையும் தடுக்கிறது.

நல்ல பயன் பெறுவதற்கு குறைந்தது வாரத்தில் மூன்று நாட்களாவது உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

8. தமிழ் மருத்துவர்கள் மஞ்சளில் இருந்து பெறும் எண்ணெயை சிறந்த கிருமிக் கொல்லியாகப் பாவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துப்படி பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், புண் சுகமாகும்.

பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் ஏற்படும் வயிற்று வலி, மாதவிடாய்ச் சிக்கலுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.

9. பெண்களின் பூப்பு காலத்தில் அவர்களின் உடலில் பலவேறு மாற்றங்கள் நிகழுகிறது பெண்களின் உடலமைப்பு வெளிப்புறமாக இருப்பதனால் அவர்களுக்கு பலவேறு நோய் தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளமையை அறிந்த பழந்தமிழர்கள் அவ்வாறு எந்த தீங்கும் வரகூடாது என எண்ணியே பண்பாட்டு முறையை ஆழப் புகுத்தினார்கள்.

எனவே இந்த நாளில் பெண்களுக்கு மஞ்சள் நீராட்டுவிழா எடுத்தார்கள் . இதனால் தோல் சம்பந்த மான பிணிகளும் மற்றும் பல்வேறு தொற்றுகளும் வராது தடுத்தனர் .

10.   பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிப்பதால்தான் அவர்களது முகத்தில் மீசை, தாடி வளர்வதில்லை’ என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு. இதனால் ஆண்கள் முகத்தில் மஞ்சள் பூசப் பயப்படுவார்கள்.

ஆனால், மஞ்சளுக்கும் முடி உதிரலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை. பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது என்பது உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் (Hormone) வகைகளில் ஒன்றினால் ஏற்படுவது.


குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் என்ற தாவர தங்கத்தை தற்போதைய நாகரீக பெண்கள் தவிர்த்துவிட்டு, அழகு சாதன நிலையங்களில் கிடைக்கும் விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி தங்கள் அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர்.

அவர்கள் பயன்படுத்தும் அந்த அழகு சாதனங்களில் கூட மஞ்சள் கலந்துள்ளது என்பதே உண்மை. மேலும் இயற்கையான மஞ்சளை பூசுவதால் உண்டாகும் முக அழகு எவ்வளவு ஆயிரங்களை செலவழித்தாலும், அவர்களுக்கு கிடைக்காது என்ற உண்மை எப்போது புரியும் என்று தெரியவில்லை.
நன்றிகள்.

Friday 18 January 2013

ஊதா நிறமுடைய கரட்..............!


நாம் பார்க்கும் செம்மஞ்சள்(Orange) நிறமுடைய கரட்டின் சொந்த இயற்கை நிறம்செம்மஞ்சள் கிடையாது. 17ம் நூற்றாண்டில் டச்சு காரர்கள் தமது சொந்த நாட்டு தேசிய நிறமான செம்மஞ்சள் நிறத்திற்கு மாற்ற முற்பட்டதே செம்மஞ்சள் நிற காரட்டுக்கு காரணமாயிற்று. 
நன்றிகள்.

Thursday 17 January 2013

இரத்தத்தை உற்பத்தி செய்யும்............!


இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை!


வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது. 
நன்றிகள்.

Wednesday 16 January 2013

கடலுக்கு அடியில் 8,500 அடி


கடலுக்கு அடியில் 8,500 அடி ஆழத்தில் மர்ம உயிரினம்! கியூபா நாட்டுக்கு அருகாமையில் பக(ஹ)மாசு(ஸ்) ஏனும் நாடு உள்ளது. சிறியதும் பெரியதுமாக சுமார் 3,000 தீவுகளை உள்ளடக்கிய நாடே பகமாசு ஆகும். அத்தீவுகளின் கடலில் சில விஞ்ஞானிகள் ஆராட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நிழற்படக் கருவி பொருத்தப்பட்ட இயந்திரம் ஒன்றை கடலுக்கு அடியில் செலுத்தி ஆராட்சிகளை மேற்கொண்டனர்.

கடலுக்கு அடியில் என்றதும் சுமார் 300 அல்லது 400 மீட்டர் என்று நினைக்கவேண்டாம். கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 8,500 அடி ஆழ்ப்பத்தில் இப்பரிசோதனைகள் நடைபெற்றது. திடீரென ஒரு நாள் கடலுக்கு அடியில் இருந்த இயந்திரத்தில் இருந்து காட்சிகள் கிடைக்கப்பெறவில்லை.

இதனை அடுத்து இந்த இயந்திரத்தை வெளியே எடுத்துப் பார்த்தால் விஞ்ஞானிகள் அதிர்ந்து போனார்கள். காரணம் நிழற்படக் கருவியின்    கம்பிகள் (Wire) கடிக்கப்பட்டு துண்டாடப்பட்டிருந்தன. அக்கடலில் அவ்வளவு ஆளத்தில் சுறா மீன்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. அப்படி என்றால் எந்தவகையான மீன்கள் இவற்றைக் கடிக்கும் தன்மை கொண்டவை என்று அவர்கள் குழம்பிப்போனார்கள்.

இறுதியில் இயந்திரத்தைச் சரிசெய்து திரும்பவும் அதே இடத்தில் இறக்கினார்கள். ஆனால் இம் முறை, அந்த மர்ம உயிரினம்  மாட்டிக்கொண்டது. காரணம் அது மீண்டும் இந்த இயந்திரத்தை கடிக்க வந்தபோது, அதன் உருவம் நிழற்படக் கருவியில் பதிவாகியது. அது மட்டுமல்லாது சுமார் ஒன்றரை அடி நீளமான இந்தப் புதுவகையான உயிரினத்தையும் அவர்கள் சாமர்த்தியமாகப் பிடித்துவிட்டார்கள்.

அதன் கால்களும் மற்றும் வாய்ப் பகுதிகளிலும் காணப்படும் கூரிய நகங்கள், வாள்போன்றவை என விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர். 7 கால்களைக் கொண்ட இந்தஉயிரினம் இதுவரை பூமியில் கண்டுபிடிக்கப்படாத ஒரு இனம் ஆகும். பாத்திநோமசு(ஸ்) ஜயன்டியசு(ஸ்) என்று அழைக்கப்படும் இனத்தில் இதனை இணைத்துள்ளார்கள்.

விஞ்ஞானிகள். கடலுக்கு அடியில் சுமார் 8,500 அடி ஆழத்தில் வாழும் இந்த உயிரினம், தனது குடியிருப்புக்கு அருகாமையில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை உணர்ந்து அதனை தாக்கியுள்ளது. இதுவசிக்கும் பிரதேசத்தில் எப்போதும் வெளிச்சம் இருப்பதே இல்லை. காலம் முழுவதும் இருட்டில் வாழும் இனங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
நன்றிகள்.

Tuesday 15 January 2013

நோயை உமிழ்நீர் சொல்லும்........!


உங்கள் நோயை உமிழ்நீர் சொல்லும்! உமிழ்நீர் மூலம் மரபணு நோய்களைக் கண்டறியும் பரிசோதனை சென்னையில் செய்யப்படுகிறது அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்து வைத்துவிட்டுப் போவது பரம்பரைச் சொத்து மட்டுமல்ல; அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒருவிதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது.

நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல் சொல்கிறது. உங்கள் தாத்தா நாதசு(ஸ்)வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ச(ஸ)போன் வாசிப்பவராக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இவை மட்டுமின்றி, அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்கிறார்கள் என்பதுதான் வேதனை. அவர்கள் விட்டுச் செல்லும் சொத்து மட்டும் வேண்டும், நோய்கள் வேண்டாம் என்றால் எப்படி?

கவலைப்படாதீர்கள், இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவும் அறிவியல் ஒருவழியை கண்டுபிடித்துத் தந்திருக்கிறது. செர்சி(ஜி) மிகாலோவிச் ப்ரின் என்று பெயர் சொன்னால் உடனே தெரியாது.

ஆனால், ‘கூகுள்’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்று சொன்னால் தெரியுமில்லையா?

இந்த செர்சியின் மனைவி ஓர் உயிரியல் தொழில்நுட்பப் பட்டதாரி. கணனி  விற்பன்னரும், உயிரியல் தொழில்நுட்பம் தெரிந்தவரும் இணைந்தால் என்னாகும்?

ஆராய்ச்சிதான். மனித மரபணுக்கள் தொடர்பாக நிறைய துறை சார்ந்த பேராசிரியர்களிடம் நாட்கணக்கில் பேசிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். 

அதாவது நமது மூதாதையர்களிடமிருந்து நமது மரபணுக்களில் கடத்தப்படும் செய்திகள், கணனிகளில் சேமிக்கப்படும் தரவு தளம் (Database) மாதிரி அவற்றை வாசித்துப் புரிந்து கொண்டால், மென்பொருளை திருத்துவது மாதிரி நமக்குத் தேவையான சில திருத்தங்களை செய்துகொள்ளலாம்.

இதெல்லாம் தேவையற்ற வேலை. எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளாத வாழ்க்கையே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்றெல்லாம் நிறைய பேர் செர்சியை விமர்சித்தார்கள். செர்சி மெனக்கெட்டு இவ்வளவு ஆராய்ச்சிகளுக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ள ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது.

அவரது தாயாரை பார்கின்சன் நோய் தாக்கியிருந்தது. இது பரம்பரையாக தாக்கக்கூடிய நோய் என்று அவர் நினைத்தார். இதிலிருந்து தன்னை எப்படி எதிர்காலத்தில் காத்துக்கொள்வது என்கிற தேடலில் மூழ்கியதன் விளைவே இதெல்லாம் (பிற்பாடு அந்த நோய் பரம்பரையாக கடத்தப்படுவதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தது வேறு கதை).

இப்படியாகத்தான் 23andMe என்கிற மரபணு பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிற ஒரு நிறுவனத்தை தம்பதி சமேதரரா தொடங்கினார்கள். 23 என்கிற எண் நம்முடைய குரோமோசோம் சோடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 2007ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மரபுரீதியாக நமக்கு என்ன நோய்கள் வரும் என்பதை அறிந்துகொள்ள ஓர் எளிமையான முறையைக் கண்டறிந்தது.

அதாவது நம் எச்சிலைத் துப்பினால் போதும், அதில் இருக்கும் மரபணுக்களை ஆராய்ந்து, அவர்கள் வாசித்துக்கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு நமக்கு வரக்கூடிய மரபார்ந்த நோய்களை அறிவார்கள். இவற்றைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ எப்படி என்று மருத்துவர்கள் மூலமாக ஆலோசனை சொல்வார்கள்.

2008ம் ஆண்டு இந்தச் சோதனை முறையை வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக, ‘டைம்’ பத்திரிகை அறிவித்தது. அமெரிக்கர்கள் பலரும் கடந்த ஐந்தாண்டுகளில் இச்சோதனையை மேற்கொண்டு, எதிர்காலத்தில் தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நோய்களின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா..? அவர்களுக்கு மட்டும்தான் பரம்பரை நோய்கள் வருமா..?

இந்த நவீன சோதனைமுறை அவர்களுக்கு மட்டும்தானா என்று அவசரமாக மனம் குமுறாதீர்கள். நமக்கும் இந்த வசதி வந்துவிட்டது. அதிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரபணு நோய்களை முன்கூட்டியே கண்டறியும் பரிசோதனையை செய்யும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது.

எக்சு(ஸ்)கோட் வாழ்க்கை அறிவியல் (Ekskot Life Sciences) என்கிற நிறுவனம் இந்தக் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள மட்டுமே பெரும் முதலீட்டில் களமிறங்கியிருக்கிறது. அதற்காக சோதனைக்கு நம்முடைய சொத்தையே எழுதி வாங்கிவிடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

சோதனைக் கட்டணம் ரொம்பவும் அதிகமல்ல, அதே நேரம் ரொம்பவும் குறைவுமல்ல. இச்சோதனையை மேற்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன? www.xcode.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று, உங்கள் மரபணுக்களை சேகரிக்க வேண்டியஉபகரனத்தைக் கோரலாம்.

இரண்டு நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். எச்சிலை சிறியகுழாயினுள் துப்பிவிட்டு, அவர்கள் குறிப்பிடுவதைப்போல தயார் செய்துவிட்டு போன் செய்தால் போதும், பொதி (Courier)மூலமாக அவர்களே வீட்டுக்கு வந்து பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

மருத்துவமனைக்கோ, பரிசோதனைக்கூடத்துக்கோ அலைய வேண்டியதில்லை. மொத்தமே அவ்வளவுதான். உங்களுடைய அறிக்கையை  நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள்ளாக உங்கள் வீட்டுக்கே அனுப்பிவிடுவார்கள்.

சர்க்கரை நோய், கொழுப்பு, இதயநோய், வாதம் தொடர்பான நோய்களுக்கான சோதனை முறைகள்தான் இப்போதைக்கு இருக்கின்றன. எதிர்காலத்தில் மரபுரீதியாக வரக்கூடிய மற்ற நோய்களைக் கண்டறிவதற்கான வசதியும் இங்கே கிடைக்கும்.

உங்களுக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடுமென்று சொல்லுவதோடு, அவற்றைத் தவிர்க்கவோ கட்டுப்படுத்தவோ என்னென்ன மாதிரியான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம் என்று மருத்துவ ஆலோசனையும் தருகிறார்கள்.

இப்போது இருக்கும் சோதனை முறைக்கு அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்வரைதான் செலவாகும். அப்புறமென்ன? என்னென்ன நோய் வருமோ என்று அஞ்சி நடுங்காமல், ஒரு சோதனையை எடுத்துவிட்டு வருமுன் காக்கத் தயாராகுங்கள். 
நன்றிகள்.