Wednesday 31 July 2013

பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால்.............!

கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்.


பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.

ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை.

வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.

முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.

அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.

இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் கருப்பை மேற்புறத்திறப்பு (caesarean)மூலமாகத்தான் பிரசவமாகும்.

மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது.

அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம்.

ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.

சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.

மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.

தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. கருப்பை மேற்புறத்திறப்புதான் (caesarean) எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.
நன்றிகள்.

Tuesday 30 July 2013

இராவணனும் அந்த ஏழு வெந்நீர் கிணறும்..............!

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பல வெந்நீரூற்றுக்கள் இருந்தாலும் கன்னியா  வெந்நீரூற்றுக்கள் சமய நம்பிக்கையிலும், விஞ்ஞான ரீதியிலும் பல சிறப்புகளைப் பெற்று தனித்துவமாக மிளிர்கின்றது. முக்கியாக கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகளிலும் ஏழு வித்தியாசமான வெப்பநிலைகளில் தண்ணீர் இருப்பதுதான் அதிசயம்.

கிணறுகளில் நீரை அள்ளி உடம்பில் ஊற்றுவதால் அந்த வெப்பநிலை வித்தியாசத்தை துல்லியமாக உணரமுடியாது. பத்து விரல்களில் ஒவ்வொரு விரலாக ஏழு விரல்களை உபயோகித்து அந்த அபூர்வ அனுபவத்தை உணர வேண்டும். அதிலும் பெரிய அதிசயம் ஏழுமே குளிப்பதற்கு ஏற்ற மிதமான வெப்பநிலை கொண்ட ஊற்றுக்கள்.


திருகோணமலை சம்பந்தப்பட்ட ஐதீக, புராணக் கதைகள் பெரும்பாலும் இராவணன் சம்பந்தப் பட்டவை. கன்னியா வெந்நீரூற்றும் இராவணனோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகத்தான் நம்பப்படுகின்றது. கோணநாயகரிடம் பெற்ற லிங்கத்தை கையிலேந்திக் கொண்டு செல்லும்போது, விசுணு மூர்த்தி அந்தண வடிவம் எடுத்து இராவணனைச் சந்தித்து தாயார் உயிர்நீத்த செய்தியைத் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் இராவணன் துக்கக் கடலில் மூழ்கினான்.  அந்தணன் அவரைத் தேற்றியபின், இறுதிக் கிரிகைகளைச் செய்யுமாறு நினைவுறுத்தி, இப்புண்ணிய தலத்தில் கருமாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோட்சத்தை அடைவது திண்ணம் என்று கூறினார்.

ஈமக்கிரிகைகளை அந்தணரையே செய்யச் சொல்லி இராவணன் வேண்ட, அதற்குச் சம்தித்த அந்தணர் இராவணனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று, அவ்விடத்தில் தமது கையில் இருந்த தடியினால் ஏழிடத்தில் ஊன்றினார். 

அந்தண வடிவம் கொண்டு மகாவிசுணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுக்கள் தோன்றின எனப் புராணங்ககள் கூறுகின்றன. இவ்விடத்தில் அந்தியேட்டி கடமைகள் செய்யப்படின் அவ்வான்மாக்கள் முத்தியடையும்என்று நம்பப்படுகிறது.

1954 இல் இந்நீரூற்றுகளை ஆராய்ந்த நிபுணர் சி.எச்.எல்.சிறிமான பின்வருமாறு கூறியுள்ளார். நிலத்தின் கீழ் உள்ள நீர்மட்டம், தரையின் மேற்பரப்பை சந்திக்கும் இடத்தில் இயற்கையாக நீரூற்று ஏற்படும். நீர் ஒரே நிலையில் நிற்பதில்லை. மழைவீழ்ச்சியின் பின் நீர்மட்டம் உயர நீரூற்று அதிகரிக்கும்.

வரண்ட காலத்தில் மழைவீழ்ச்சி குறைய நீர்மட்டம் தாழ நீரூற்று குறையும். ஆனால் கன்னியாவிலோ நீர்வற்றுவதுமில்லை;பெருக்கெடுத்துப் பாய்வதுமில்லை. இதற்குக் காரணம் சுவரால் அடைக்கப்பட்ட எல்லைக்குள், பூமியினூடே செல்லும் நீரோட்டத்தின் படுக்கை அல்லது ஆறு இருப்பதாகும். ஆனால் சுவர் எல்லைக்கு வெளிப்பகுதியிலும் நீரூற்றுகள் இருக்கின்றன. 

மாரிகாலத்தில் நிலத்தடி நீர் உயர்வதினால் அப்பகுதியெங்கும் குளிர் நீரூற்றுகள் தோன்றும். ஆனால் வெந்நீராக இருப்பதற்கான காரணம் இவரால் விளக்கப்படவில்லை. 

உலகில் பல இடங்களில் இது போன்ற வெந்நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் வெந்நீர் ஊற்றுக்கள் அம்பாந்தோட்டை முதல் திருகோணமலை வரை கன்னியா உட்பட 10 இடங்களில் காணப்படுகின்றன. 

குறிப்பாக கிழக்கில் இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளான மேட்டு நிலத்தினதும் சமதரையினதும் எல்லைப் பகுதிகளிலேயே இவ்வாறான வெந்நீருற்றுக்கள் காணப்படுகின்றன.

இப்பகுதியில் உள்ள மண், பாறைகளின் பௌதீக அமைப்பே காரணமாக கொள்ளப்படுகிறது. அதாவது சுண்ணாம்பு கற்பாறைகளை அதிகமாகக் கொண்ட நிலத் தோற்ற அமைப்பில் வெந்நீர் ஊற்றுக்கள் தென்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

பொதுவாக பூமியின் வெப்பநிலை நிலத்திற்கு கீழே செல்லச்செல்ல அதிகரித்துச் செல்கிறது. சராசரியாக ஒருகிலோ மீற்றருக்கு 30 பாகை செல்சியசு(ஸ்) என்ற அடிப்படையில் அதிகரித்துச் செல்கிறது. பூமிக்கு அடியிலுள்ள மக்மா பாறைத் தீக்குழம்புகளின் மேற்பகுதியில் காணப்படும் பாறைகளும் சூடாகவே காணப்படுகின்றன.

இந்தப் பாறைகளில் உள்ள ஊற்று, நிலத்தடிநீர் கொதிநிலையில் காணப்படுகின்றன. இந்த வெந்நீர் மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்களின் பௌதீக நிலையைப் பொறுத்து பூமியின் மேற்பகுதியில் ஊற்றாக வெளிப்படுகின்றன. சில இடங்களில் பூமியின் மேற்பகுதியில் பீறிட்டு மேலே பாய்வதும் உண்டு. சில இடங்களில் ஆவியாக வெளியேறுவதும் உண்டு.  

சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பாறைப்படைகளில் நடைபெறும் இரசாயன தாக்கங்கள் காரணமாக வெப்ப நீரூற்று பிறக்கிறது என்கிறார்கள் பொதுவாக அவை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை அளவுகளிலேயே காணப்படுகின்றன. கன்னியா வெந்நீரூற்றுகள் போல் வெவ்வேறு வெப்பநிலை அளவுகளில் காணப்படவில்லை.

2010, பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் எடுத்த வெப்பநிலை அளவுகளின்படி, முதலாவது, இரண்டாவது, நான்காவது, ஏழாவது கிணறுகள்  40 பாகை செல்சியசிலும், மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது கிணறுகள் 41 பாகை செல்சியசிலும் பதிவாகியுள்ளன.   

இதேபோல், 1821 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி காலை ஏழுமணிக்கு ஏழு கிணறுகளின் வெப்பநிலை பின்வருமாறு; 101, 101.5, 107, 88.5, 86, 105.75, 91 எனவே மிகவும் கூடிய வெப்பம் மூன்றாவது கிணறில் 107 எனவும் மிகவும் குறைந்த வெப்பம் ஐந்தாவது கிணற்றில் 86 ஆக பதிவாகியுள்ளது. 

அன்று காலை 11 மணிக்கு மீண்டும் வெப்பத்தின் அளவைப் பதிவு செய்தபோது பின்வருமாறு அமைந்திருந்தது. மூன்றாது கிணறு 107 இல் இருந்து 103 ஆகவும்ஆறாவது கிணறு 105.75 இல் இருந்து 102 ஆகவும் இருந்தது.

எனவே காற்றின் வெப்பம் அதிகரிக்க வெந்நீரின் வெப்பம் குறைந்து கொண்டே செல்வது அவதானிக்கத்தக்கது.  வெப்பமான நீரூற்றிலிருந்து சுரக்கும் தண்ணீரின் அளவு ஏனைய ஊற்றுக்களில் இருந்துவரும் நீரைவிட அதிகமாகக் இருக்கிறது.

வெப்பம் குறைந்த ஒரு கிணற்றில் அதிகமாக குமிழி வருவது இதற்கு விதிவிலக்காக உள்ளது. இக் கருத்து எவ்வளவுக்கு பொருத்தமானது என்பது ஆய்வுக்குட்பட்டதாகும். 
நன்றிகள்.

Monday 29 July 2013

சீனாவில் தமிழில் கல்வெட்டு...........!

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு

சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குப்லாய் கான்

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சிலக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான்.

தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.


சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.
நன்றிகள்.

Sunday 28 July 2013

மாபெரும் கல்லணையைக் கட்டிவித்தான் கரிகால சோழன் ........!

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விசயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள்.


நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' பெரும் அணை' (The Grand Dam) என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று.
நன்றிகள்.

Saturday 27 July 2013

குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும்........!

கருவுற்றிருக்கும் தாயா நீங்கள்? கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?...

கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள்.

மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில குறிப்புகள்...

1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை கேட்கக்கூடிய ஒரு சாதனத்தின் மூலம் (In Player)போட்டு, தலையணி ஒலிச்சாதனத்தின் வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோசத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் நேர்மறையான (Positive)-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் நேர்மறையான-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும்.

அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.

எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
நன்றிகள்.

Friday 26 July 2013

பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம்...........!

பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கசாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.


குடல் பூச்சி நீங்க

வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் வலுப்பெற

உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

மயக்கம் தீர

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கசாயம் செய்து அருந்துவது நல்லது.

பித்த அதிகரிப்பைக் குறைக்க

பித்தம் பிசகினால் பிராணம் போகும்.

என்ற சித்தரின் வாக்குப்படி பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

தலைவலி நீங்க

அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கசாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.

தடிமன் காய்ச்சல் குறைய

நிலவேம்பு 15 கிராம்
கிச்சிலித் தோல் 5 கிராம்
கொத்துமல்லி 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 குவளை நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் தடிமன் காய்ச்சல் நீங்கும்.

குழந்தைகளுக்கு

வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

நில வேம்பு சமூலம் (காய்ந்தது) 16 கிராம்
வசம்புத் தூள் 4 கிராம்
சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம்
கோரைக் கிழங்கு தூள் 17 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 1 குவளை நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். செரிப்பின்மை கோளாறுகள் நீங்கும்

நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம்
கிராம்புத்தூள் 4 கிராம்
பொடித்த ஏலம் 4 கிராம்
இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை

6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை போன்றவை நீங்கும்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கசாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.

அண்மையில் மக்களைத் தாக்கிய சிக்குன்குன்யா என்ற காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயத்தை அருந்துமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதிலிருந்தே நிலவேம்பின் மகிமை உங்களுக்கு புரிந்திருக்கும்.

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நிலவேம்பின் பயன்பாடு அதிகம். நிலவேம்பின் மருத்துவத் தன்மையைப் பயன்படுத்தி நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.
நன்றிகள்.

Tuesday 23 July 2013

இந்தோனேசியாவில் தமிழர்கள் .............!

தமிழர் வாழும் நாடுகள் - இந்தோனேசியாவில் தமிழர்கள் இந்தோனேசியாவில் தமிழர்கள் சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன.

இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்சீனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன.

தமிழர் குடியேறிய வரலாறு

சங்க கால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. இந்தோனேசியா, பிலிப்பைன்சு மொலுக்காசு(ஸ்) போன்ற தீவுப் பகுதிகள் முந்நீர்ப் பழந்தீவு என இந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இத்தீவுகளைப் பன்னிராயிரம் என மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.


தமிழர்கள் யாவாவைச் சாவகம், சாவகத் தீபம், யவத் தீபம் என்றும், சுமத்திராவை, சிரிவிசயம், சொர்ணதீபம் என்றும் அழைத்து வந்தனர். பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளிலிருந்து, தமிழ் வணிகர்களும், தமிழ்ப் பெருமக்களும் சங்க காலத்திற்கு முந்திய காலத்திலிருந்தே சாவகத்துடன் தொடர்பு வைத்திருந்ததை அறிய வருகிறோம்.

பொதுவாக அந்தமான், நிக்கோபார் தீவுகள் வழியாக இந்தோனேசியாத் தீவுகளுக்குப் பண்டைய தமிழர்கள் சென்றார்கள். சாவகம் (ஜாவா) பற்றிய செய்திகள் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் இடம் பெற்றிருக்கின்றன. மணிமேகலையில் சாவக நாட்டிலுள்ள நாகபுரம் என்னும் பட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பூமி சந்திரன், புண்ணியராசன் போன்ற அந்நாட்டு அரசர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கும் சாவகத்திற்கும் நீர்வழிப் போக்குவரத்துகள் நிகழ்ந்துள்ளதையும் மணிமேகலை (14:73-85) கூறுகிறது. மேலும், மணிமேகலை சாவக நாட்டிற்குச் சென்று, அங்கு சிறப்புற்று விளங்கிய 'தருமசாவகன்' என்ற பௌத்தத் துறவியை வணங்கியதாகவும், 

சாவகத்தில் ஆட்சி நடத்திய ஆபுத்திரனோடு மணிபல்லவம் வந்து, அங்கே தீவதிலகையின் மூலம் காவிரி பூம்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதையும் மாதவியும் சுதமதியும் அறவன அடிகளோடு வஞ்சி நகர் சென்றதையும் அறிந்து அங்கிருந்து விண்வழியாக வஞ்சி நகர் விரைந்ததாகவும் மணி மேகலையில் கூறப்பட்டுள்ளது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலுள்ள பாண்டிய நாட்டினின்று கப்பல்கள் சாவகம், சுமத்திரா முதலிய நாடுகளுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள துறைமுகத்தின் வழியாகச் சென்றன. இதற்குச் சான்று மணிமேகலையில் கிடைக்கின்றது என்று அறிஞர் சி.இராசநாயகம் பண்டைய யாழ்ப்பாணம் என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

சாவகத்தின் முதல் மன்னனுக்குச் சீர்மாறன் என்று பெயர். இந்தப் பெயர் சாவகத்தின் அரசப்பரம்பரையானது தமிழர்களோடு நெருங்கிய சம்பந்தம் உடையதென்பதை நன்கு விளக்குவதாக இருக்கின்றது. சாவகத்தில் இப்போதுள்ள பழங்குடி மக்களிடத்து, திராவிட பழங்குடி மக்கள் கூட்டத்தினரான தமிழகப் படகர்களுக்குரிய (Badagas) பெயர்கள் வழங்கி வருகின்றன.

யாவா, சுமத்திரா நாடுகளில் இந்தியக் குடியேற்றங்களை அமைத்தவர்கள் திராவிடர்களின் வழி வந்தவர்களாக இருக்க வேண்டுமென்பதை யெ.குரோம் (J.Krom-1938) என்ற வெளிநாட்டறிஞர் காரணங்கள் காட்டி நிறுவியுள்ளார். மேற்கு யாவாவில் கிடைத்த கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு பல்லவர் காலத்திய கிரந்த எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. 

அக்கல்வெட்டு யாவாவின் தலை நகரமான யகார்த்தாவின் அருகிலுள்ள தரும நகரத்தை ஆண்ட பூரண வர்மன் என்ற இந்து அரசனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. யாவாவில் சங்கல் (Changal) என்னும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு பல்லவ கிரந்த எழுத்தின் பிற்கால வடிவில் எழுதப்பட்டுள்ளது.


அக்கல்வெட்டு தென்னிந்தியாவில் குஞ்சர குஞ்சம் என்னும் இடத்திலிருந்து வந்து, குடியேறிய அரசனின் மரபிலே வந்த ஓர் அரசன் யாவாவின் நடுப்பகுதியில் சிவலிங்கம் ஒன்றை நிறுவிய செய்தியைச் சொல்கிறது. சீன நாட்டில் குவாங்-வா-டி (Kwang-wa-ti) என்னும் மன்னன் ஆட்சி செலுத்திய காலத்தில் (ஏறத்தாழ கி.பி.75) சாவகத் தீவில் இந்துக்கள் குடியேற ஆரம்பித்தார்கள் என்று வில்லியம் ஸ்மித் என்னும் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகின்றார்.

வடக்குச் சுமத்திராவில் சோழர், பாண்டியர், பல்லவர், சேரர் என்னும் பெயர்களை உடைய பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய மூதாதையர் சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் இருந்து வந்தவராகக் கருதப்படுகின்றனர். பல்லவர் காலத்தில் (கி.பி. 550-750) கடல் மார்க்கம் வழியாக இந்தோனேசியாவிற்குப் பல தமிழ் பெருமக்கள் சென்றார்கள் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. இது சம்பந்தமாக இந்தோனேசியாவில் கல்வெட்டுகள் கூட கிடைத்திருக்கின்றன.

இராசசிம்மன் எனும் பல்லவ அரசன் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலை எழுப்பியனாவான். அக்கோயிலின் வெளிப்புற மதிலுக்கு அடுத்துத் தெற்குப் பக்கத்தில் பல சிறு கோயில்கள் உள்ளன. அவற்றுள் மூன்றாவதா உள்ள கோயிலை இராசசிம்மனுடைய மனைவியருள் ரங்கபதாகை என்னும் அரசி தம் சொந்த செலவில் கட்டியுள்ளார். இதை அக்கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கின்றது.

அதில் ரங்கபதாகையின் தந்தைபெயர் சைல அதிராசா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் இந்தோனேசிய சைலேந்திர அரசனையே சுட்டுகிறது என்று தி.நா.சுப்ரமணியம் அவர் எழுதிய The pallavas of kanchi in Southeast Asia (பக் 43) எனும் நூலில் தெளிவாக்குகிறார். சைலேந்திரருடைய ஆட்சியின் தொடக்க காலகட்டமே பல்லவரின் ஆட்சி காலமாகும். சாவக அரசர்கள் 'மீனாங்கித சைலேந்திரர்' (மீனினை இலச்சினையாக உடைய மலைகளின் தலைவர்) என்ற பட்டப் பெயரை சூட்டிக் கொண்டு இருந்தனர் என்பதை அவர்களின் கல்வெட்டுகளால் அறிகின்றோம்.

பாண்டியருடைய கொடியில் எப்பொழுதும் இரட்டை கயல் மீன் பொறிக்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த செய்தியாகும். சைலேந்திரர்களுக்கும் கயல்மீன் சின்னமாக இருந்தமையால், சைலேந்திரர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்படும் மலையத்துவச பாண்டியன் வழிவந்தவராக இருக்கலாம் என கே.ஏ. நீலகண்ட சாத்திரி கூறுகின்றார்.

சோழ மன்னர்கள் கல்வெட்டுகள் சிலவற்றிலும் சாவகம் குறிப்பிடப்பட்டுள்ளது. லெய்டன் சாசனம் என்ற இராசஇராச சோழனின் சாசனத்தில் கடாரத்தின் அரசன் சூளாமணிவர்மனாலும் அவன் மகன் மாற விய(ஜ)யேத்துங்க வர்மனாலும் தமிழத்திலுள்ள நாகப்பட்டிணத்தில் கட்டப் பெற்ற ஒரு பௌத்த விகாரம் கி.பி. 1006 ஆம் ஆண்டில் கட்டுவதற்குத் தொடங்கப்பட்டது.

இதற்கு இராசஇராசன் ஆனைமங்கலம் என்னும் ஊரை நிவந்தமாக அளித்தான் என்ற குறிப்புகள் காணப்படுகின்றன. (The Larger Leiden plates of Rajaraja I,Ep. Ind.Vol.XXII No:34). இராசேந்திர சோழ அரசனின் மெய்கீர்த்தியைக் கூறும் சாசனம் இந்தோனேசியாவில் ஆட்சி செய்து கொண்டிருந்த சிறீவிசயப் பேரரசுக்கு எதிராக சோழர்கள் எடுத்த கடற்படையெடுப்பைப் பற்றி கூறியிருக்கின்றது.

தமிழர்கள் விருப்பம் போல் தென்கிழக்கு ஆசியாவில் வணிகம் செய்யத் தடை ஏற்பட்டதனால் 11ஆம் நூற்றாண்டில் மாபெரும் சோழற்படை தென்கிழக்காசியாவில் பல நாடுகளிலும் புகுந்து வெற்றி வீரர்களாக ஆங்காங்குள்ள மன்னர்களோடு நட்புறவு கொண்டு தமிழர்கள் தங்குதடையின்றி வணிகம் புரியவும் குடியேறி வாழவும் வழிவகை செய்தனர். சோழ அரசர்களுக்கும் சுமத்திராவை ஆண்ட அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததைப் பற்றி பல சான்றுகள் கிடைத்திருக்கின்றன. 

சுமத்திராவில் 11ஆம் நூற்றாண்டில் பொது மக்கள் பயன்படுத்திய பத்திரங்களில் (Public Documents) தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டது என வுல்ட்சு(ஸ்) (Hultz) என்பாரும் சே.ஏ.நீலகண்ட சாத்(ஸ்)திரியும் கூறுகின்றனர். மேலும் தமிழ் வாணிகக் குடியிருப்புகள் இங்கு இருந்ததாகவும் சான்றுகள் கிடைத்துள்ளன.


சுமத்திராவில் உள்ள லோபுதுவா (Loboe Toewa) எனும் இடத்தில் கிடைத்துள்ள தமிழ்க் 1கல்வெட்டில் 1500 பேர் அடங்கிய ஒரு வணிகக் கூட்டமைப்பு இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. அயர்லிங்கா (Airlingga கி.பி.1019-1049) எனும் சாவக அரசனின் குறிப்புகளிலும் திராவிட, கலிங்க, சிங்கள, கருநாடக நாட்டவர்கள் சாவகத்தில் வாணிகம் செய்ய வந்தனர் எனக் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் முதலாம் இராசராசன் காலத்திலிருந்து குலோத்துங்கன் காலம் வரையில் உள்ள கல்வெட்டுகளில் சுமத்திர பேரரசு சிறீவிசயாவைப் (கடாரம்) பற்றி செய்திகள் கிடைக்கின்றன. ஆகையால் பிற்கால சோழர்கள் காலத்தில் இந்தோனேசியாவிற்கும் தமிழ் நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது எனத் தெரிகிறது. இத்தொடர்பு தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்தோனேசிய அரசரான இராசசனாகர மன்னனின் அவைப் புலவரான பிரபன்சா (Prapantja) எழுதிய நகர கர்த்தகாமாவில் (Nagarakertagama கி.பி.1365) காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புத்தாதித்தியர் சாவக மன்னனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பாராட்டி சொல்லப்பட்டிருக்கின்றது.

யே(ஜெ)யனகர மன்னன் (1309-28) அவனுடைய முடிசூட்டு விழாவின் போது சுந்தரபாண்டியன் எனும் பட்டப்பெயர் சூட்டிக் கொண்டான். பாண்டிய இலச்சினையான மீனைத் தனது இலச்சினையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

காஞ்சிபுரத்திலிருந்து வந்த புத்த பிக்குகள் 14 ஆம் நூற்றாண்டில் சாவகத்தை ஆட்சி செய்த க(ஹ)யாம் வுருக் எனும் அரசரைப் புகழ்ந்துரைக்கின்றனர். பதினேழாம் நூற்றாண்டில் இந்தோனேசியாவை ஆண்ட டச்சுக்காரர்கள் தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளின் ஆவணங்களையும் பதிவேடுகளையும் வைத்திருந்தார்கள் என ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை மலாக்கா கடற்கரையோரப் பகுதிகளில் விவரமான அறிக்கைகள், கணக்கு(Account) தமிழிலும் வைக்கப்பட்டன எனச் சான்றுகள் கிடைத்துள்ளன. இச்சமயத்தில் தமிழர்களைக் கெலின்ங் (Keling) என அழைத்தனர்.

அண்மைக் காலத்தில் பாலியில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்துள்ள பழம்பொருள் சின்னங்கள் பாலி ஓர் இந்துக் குடியேற்ற நாடு என்பதை மெய்பித்துள்ளன.

பாலியிலுள்ள பழைய கல்வெட்டுகளில் எழுத்துக்கள் சமசுக்கிருதத்தில் உள்ளன. இவற்றால் பாலித் தீவில் தனித்ததோர் இந்துக்குடி அமைக்கப்பட்டு இந்தியப் பண்பாடும் நாகரிகமும் போற்றி வளர்க்கப்பட்டதை அறிகிறோம். பாலியின் கிழக்குக் கரையோரத்தில் சங்கு-பெட்ராக்கு எனுமிடத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டு கிடைத்திருக்கிறது.

அங்கு எழுப்பப்பட்ட சிவன் கோயிலையும், அதில் இடம் பெற்றுள்ள முகலிங்கத்தையும் அது குறிப்பிடுகிறது. பழங்காலத்திலேயே பாலிக்குத் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய தமிழர்கள் மூன்று நான்கு தலைமுறைக்கு மேலாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

பாலித் தீவில் வாழும் இசுலாமிய சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைமுறையினர் அன்றாடம் தமிழ்ப் பாடல்களான தாயுமானவர் பாடல்களைப் பாராயணம் செய்யும் பழக்க முடையவர்களாக உள்ளதால், இவர்களும் பழங்காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்து பாலிக்குக் குடியேறி வாழ்பவர்களாக உள்ளதை அறிய வருகிறோம்.

காலிமன்தானில் (போர்னியா) ஏழு சமசுக்கிருத மொழிக் கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. பண்டைக் காலத்து மகாகன் ஆற்றுக்கு அருகில் மௌராகமன் என்ற துறைமுகம் சிறப்புற்று விளங்கியது. அத்துறைமுகம் இருந்த இன்றைய குடேய் (Kutei) மாவட்டத்தில்தான் இவ்வேழு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

குண்டுங்கன் (Kundunga) என்ற அரசனின் மரபைச் சேர்ந்தவர்கள் கிறித்துவ சகாப்தத்தின் முதல் மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகள் தொடக்கத்தில் போர்னியோவை ஆண்டதாக அக்கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. குண்டுங்கன் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய ஓர் இளவரசனாகவும், கவுண்டினியன் என்ற புராண மரபில் வரும் அரசனாகவும் கருதப்படுகிறான். 

'குண்டுங்கன்' என்ற சொல் தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் என்றும், பல்லவர் செப்பேடு ஒன்றில் 'குண்டுகூரன்' என்ற பெயர் ஒன்று காணப்படுவதாக வரலாற்று ஆசிரியர் கூறுகின்றனர். குண்டுங்களின் மகன் அசுவவர்மன் என்பதும், அசுவவர்மனுடைய மகன் மூலவர்மன் என்பதும் அக்கல்வெட்டுகளால் தெரிய வருகின்றன.

மூலவர்மன் காலத்து 'குடை' கல்வெட்டுகள் சமசுக்கிருத மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால், நெடுந்தொலைவிலுள்ள போர்னியா தீவில் இந்திய நாட்டு மொழி, சமயம், அரசியல், சமூக நிறுவனங்கள் பெற்றிருந்த செல்வாக்கை அறிய முடிகிறது. தமிழ் மாதங்களின் பெயர்களும், தமிழ் நீட்டல் அளவைப் பெயர்களும் அந்நாட்டில் எவ்வாறு சிறப்புற்று விளங்கின என்பதை அவை எடுத்துரைக்கின்றன.

மேற்கு போர்னியோவில் ஓவிய வேலைபாடுள்ள தூபம் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பக்கச் சுவர்களில் எட்டு கல்வெட்டுகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வெட்டுகளில் பிற்காலப் பல்லவ கையெழுத்து முறைகளைப் பார்க்கலாம். செலிபிசு தீவு மிகப் பழங்காலத்திலேயே இந்தியாவோடு மிக நெருங்கிய உறவு கொண்டிருந்தது. 

இதில் தென்னிந்திய நாகரிகப் பண்பாட்டின் செல்வாக்கினைப் பேரளவில் இன்றும் நாம் காணுகின்றோம். இங்குக் கண்டெடுக்கப் பெற்ற புத்தர் சிலை குப்தர் காலத்திய கலைப்பாணியின் சாயலைக் கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் இங்குப் பண்டைக் காலத்து பூசைமணி ஒன்றும், கைத்தாளங்கள் இரண்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை இன்றும் தமிழகத்து வீடுகளில் இறைவழிபாட்டின் பொழுது பயன்படுத்தப்படும் பூசைமணியையும் கைத்தாளங்களையும் ஒத்துள்ளன.

பல்லவர் ஆட்சி காலத்திலேயே (கி.பி.450-900) தமிழர்கள் குடியேறிதற்குச் சான்றாக பல்லவர் காலச் சின்னங்கள் பல செலிபிச(ஸ)’ல் கிடைத்துள்ளன. செலிபிசு தென்னிந்தியாவோடு நேர்முகமாகத் தொடர்பு கொண்டிருந்தமை தொல்பொருள் சின்னங்களால் உறுதிப்படுகின்றன. அச்சின்னங்கள் பல்லவர்களின் எழுச்சிக்கு நெடுங்காலத்திற்கு முன்பே தமிழர்களின் குடியேற்றங்களும் வாணிகத் தொடர்புகளும் உண்டாகியிருக்க வேண்டும் என்பதை அறிவிக்கின்றன.

நியன்க(ஹ)“ய்சு(ஸ்) என்ற டச்சுப் புகையிலைத் தோட்ட உரிமையாளர் முதன்முதலில் ஒப்பந்த கூலிகளாக இருபத்தைந்து தமிழர்களை 1873 இல் இறக்குமதி செய்தனர். பாக்குத் தோட்டங்களைச் சுத்தப் படுத்தவும் குடிநீர் கொண்டு வரவும் மாட்டு வண்டி ஓட்டவும் சாக்கடைகளையும் சாலைகளையும் அமைக்கவும் அவர்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. 

1875இல் கூலித் தமிழர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது. தமிழர்களுக்கென மேற்பார்வையாளர் ஒருவர் தோட்டங்கள் தோறும் நியமிக்கப்பட்டார். தோட்ட மேற்பார்வையாளர்கள் செய்த கொடுமைகளைப் பொறுக்காது கூலித் தமிழர்கள் ஓடினால் டச்சுக்காரர்கள் ஓடியவர்களைப் பிடித்து ஆறுமாத காலச் சிறை தண்டனை விதித்தனர். சிறை சென்ற தமிழர்கள் அரசாங்கச் சாலைகளை அமைக்க பயன்படுத்தப்பட்டனர்.

ஒப்பந்தக் கூலிகளைப் பிணைத்த கூலிகள் சட்டத் திட்டத்தை 1936இல் டச்சுத் தோட்ட உரிமையாளர்கள் முழுமையாக அகற்றியதால் தமிழர்கள் சுதந்திர மனிதர்களாயினர். ஒப்பந்த கூலிகளாக பணியேற்ற தமிழர்களைத் தவிர மற்ற சுதந்திரத் தமிழர்கள் வியாபாரம் நிமித்தமாகவும் நகர்புற வேலைகள் செய்யும் பொருட்டும் மேடான் நகரத்திற்கு வந்தனர்.

செட்டியார்கள், செட்டிகள், வேளாளர், முதலியார், பத்தர்கள் பலரும் மேடானில் குடியேறினர். புதுச்சேரியிலிருந்து டச்சு வர்த்தக நிறுவனங்களில் கணக்கர்களாகப் பணியாற்ற இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிள்ளை, முதலியார் எனக் குறிப்பிடப்படும் தமிழர்களும் மேடான் வந்தனர். பூசாரிகள், ஐயர்கள், முடித்திருத்துவோர், சலவைத் தொழிலாளிகள் முதலானோரும் தமிழகத்திலிருந்து மேடானில் குடியேறினர்.

இவர்களின் வழித் தோன்றல்கள் இன்றும் இந்தோனேசியாவில் வாழ்கின்றனர். தமிழரின் இன்றைய நிலை (1) சாவகத்தில் தமிழர் நிலை: சாவகத்தில் (யாவாவில்) 1.2 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

கடந்த இரு நூற்றாண்டுகளில் குடியேறிய தமிழ் மக்களின் வழிவந்தோரோ இப்பொழுது இங்கு வாழ்ந்து வருகின்றனர். நடை உடை பாவனைகளில் அவர்கள் இந்தோனேசியராக மாறிவிட்டனர். பெரும்பாலான தமிழ் மக்கள் முருக வழிபாட்டையும் சக்தி வழிபாட்டையும் போற்றி பின்பற்றி வருகின்றனர். இத்தெய்வங்களுக்கும் சிறு கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. 

இவற்றில் விழாக்கள் நடத்தப்படுகின்றன. தமிழர்கள் பொங்கல் உள்ளிட்ட பல பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். மக்களுக்கு இடப்படும் பெயர்கள் யாவும் தமிழின் வழிவந்த பெயர்களாக உள்ளன. இராமன், லட்சுமணன், முனிசாமி, வாசு, ருக்மிணி, சரசுவதி, சிறீ அசுதுதி, பத்மா, ரத்தினா, நிர்மலா, பாஞ்சாலி, உத்தமி, ஆர்த்தி, சுவர்ணா, ரத்னாவதி, பத்மாவதி போன்ற பெயர்கள் சாவகத்தில் வழக்கிலுள்ளன.

வீட்டில் சாவக மொழிச் சொற்கள் கலந்த தமிழைப் பேசுகின்றனர். பண்டிகைகளின் போது வீடுகளில் தமிழ்நாட்டு உணவு சமைத்து உண்கின்றனர். ஆனால் வெளியே ஓட்டல்களில் தமிழக உணவு கிடைப்பதில்லை. ஆண்களும் பெண்களும் இந்தோனேசிய உடையையே அணிகின்றனர். இருபாலாரும் சமநிலையில் கல்வி கற்கின்றனர்.

தமிழ் மக்களும் பெரும்பாலோர் வாணிகம் செய்து வருகின்றனர். அவர்களுள் இராமநாதபுரத்தைச் சேர்ந்த தமிழக இசுலாமியர்கள் மிகப் பலராக உள்ளனர். தமிழருள் சிலர் அலுவலகப் பணி புரிகின்றனர். அரசுப் பணியில் பொறுப்பான பதவிகளை வகிக்கும் பெரிய அதிகாரிகள் சிலர் தமிழராக உள்ளனர்.

சுமத்திராவில் தமிழர் நிலை: வட சுமத்திராவில், சுமத்திரா நாட்டுக்குடி மக்களோடு ஒன்றாகச் சேர்ந்து சுமத்திரா மக்களாக மாறிவிட்ட தமிழர்கள் பலராவர். ஆனாலும் பல்லவர், சோழர், பாண்டியர், சேரர் எனும் தங்கள் மூதாதையரின் குடிப்பெயர்களைத் தங்கள் சாதிப் பெயர்களாகக் கொண்டு இன்றும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தோற்றத்தாலும், வீட்டினுள் பேசிக் கொள்ளும் மொழியாலும், வழிபடும் தெய்வங்களாலும், அவற்றிற்குக் கட்டியுள்ள திருக்கோயில்களாலும் கொண்டாடும் பண்டிகைகளாலும் அவர்கள் எல்லோரும் தமிழர்களாக உள்ளனர். மற்ற வகையில், அவர்கள் யாவரும் சுமத்திராவின் தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டனர்.

சுமத்திராவிலுள்ள மேடான் நகரில் மட்டும் ஏறக்குறைய 15,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் 250 ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் குடியேறிய தமிழ் மக்களின் சந்ததியினராவர். உணவாலும் உடையாலும் இந்தோனேசியர்களாக அவர்கள் மாறிவிட்டனர். மக்களுக்கு இடப்படும் பெயர்கள் பெரிதும் தமிழ்ப் பெயர்களாகவே உள்ளன.

கேசவன், தருமராசன், முனிசாமி, சுந்தரம், நித்தியானந்தம், முருகன், இராமன் எனும் ஆண்களின் பெயர்கள் பெருவழக்காக உள்ளன. பெண்களுக்கு ராசலட்சுமி, லட்சுமி, சரசுவதி, மீனா, பாக்கியவதி, ரத்னாவதி, பத்மாவதி, சுசிலா, திரௌபதி போன்ற பெயர்களும் வழங்குகின்றன. இந்தோனேசியாவிற்குரிய தேசிய மக்களுக்கும் இராமன், கிருசுணன், இந்திரன், இலக்குமணன், இராவணன், துரியோதனன், தரும(வா)ன், அருச்சுனன் எனும் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேடானில் இந்து சமயத் தெய்வங்களின் கோயில்கள் பல உள்ளன. அவற்றுள் தண்டாயுதபாணிக் கோயில், மாரியம்மன் கோயில், பிள்ளையார் கோயில் ஆகியவை சிறப்பு மிக்கன. ஆண்டு தோறும் தண்டாயுதபாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான காவடிகள் அவ்விழாவின் பொழுது முருகனுக்குச் செலுத்தப்படுகின்றன.

அவற்றுள் பால் காவடியும் சர்க்கரைக் காவடியும் அதிகம். ஆடி மாதத்தில் மாரியம்மன் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீமிதித்தல், தீச்சட்டி ஏந்துதல், கரக ஆட்டம், அலகு குத்தல் போன்ற பண்டைத் தமிழகப் பழக்க வழக்கங்கள் அங்குப் பின்பற்றப்படுகின்றன. விழாக்களின் பொழுது அந்நாட்டு அரசு தமிழர்களுக்கு மட்டும் விடுப்பு அளிக்கிறது. விழாவிற்கு வரும் இந்தோனேசியாவின் பல்வேறு பகுதி மக்களுக்கும் இலவச உணவு அளிக்கப்படுகிறது.

மேடான மைதானம் என தமிழர் சூட்டிய பெயரே திரிந்து மேடான் என நகரின் பெயராய் அமைந்தது. தமிழர்கள் தாங்கள் குடியேறிய நாடுகளில் தங்கள் ஊர்ப் பெயர்களையே தெருப் பெயர்களாகச் சூட்டியுள்ளனர். மேடானில் காவிரிப்பூம்பட்டினத்துத் தெரு, மதுரைத் தெரு, மதராசு தெரு முதலியவற்றைக் காணலாம். நவராத்திரி, தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகைகளின் போது புதிய புதிய தமிழ் நாட்டிய நாடகங்களும் மேடை நாடகங்களும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன.

அங்குள்ள தமிழ் இளைஞர் நாடகம் படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுள் நித்தியானந்தம், தமிழ்நேசன் என்போர் முக்கியமானவர்கள் ஆவர். தமிழ்த் திரைப்படங்களுக்கு இந்தோனேசியா முழுவதும் பேராதரவு தரப்படுகிறது. மேடானின் தலைவர் (சிற்றரசர்) சுல்தான் எனப்படுபவராவார். அவருடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் என்று அவர் கூறுகிறார்.

பாலியில் தமிழர் நிலை பாலித் தீவில் ஈராயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுள் பெரும்பாலோர் தமிழ்நாட்டு முசுலீம் பெருமக்களாவர். இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்தும் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்தும் ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் அங்குக் குடியேறிய தமிழ் மக்களின் வழிவந்தோர் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழையே வீட்டு மொழியாகப் பயன்படுத்துகின்றனர். தமிழ்ப் பத்திரிகைகளும், வார மாத இதழ்களும் அவர்களுடைய தமிழறிவை வளர்த்து வருகின்றன. பத்து ஆண்டிற்கு ஒரு முறையாகிலும் தமிழகம் சென்று வருகின்றனர். இன்றைய பாலித் தீவைக் காண்பவர்கள் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திய தமிழகத்தைக் காண்பதைப் போன்ற உணர்வினைப் பெறலாம்.

உலக மக்களைக் கவரும் சுற்றுலாத் தலமாக திகழும் பாலியில் தமிழர்கள் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர். சமயம்-பண்பாடு இந்தோனேசிய இந்து கோயில் கட்டட அமைப்பிலும் சிற்பங்களிலும் பல்லவ காலத்து கலாச்சார பண்பாட்டின் தாக்கத்தைப் பார்க்க முடிகின்றது. எகிப்திய கூர்ங்கோபுரம் (Pyramid) போன்ற பல தள அடுக்குகளுடன் மேற்கட்டுமானப் பகுதி உள்ள இக்கோவில்கள் தமிழ்நாட்டு மகாபலிபுரத்தில் உள்ள ஏழாம் நூற்றாண்டு கோயில்கள் போல இருக்கின்றன.

இதற்குத் சிறப்பான உதாரணம் டியங்பிளேட்டியு (Dieng plateau) நினைவுச்சின்னங்களாகும். இந்து சிவன் கோவில்கள் டியங்கில் (கி.பி.675) கட்டப்பட்டன. சாவகத்திலுள்ள சிவன் கோயில்கள் பெரும்பாலும் 6,500 அடி உயரமுள்ள டியெங் பீடபூமியிலேயே உள்ளன. இங்கு மாமல்லபுரத்திலுள்ள கோயில்களைப் போல் ஐந்து கோயில்கள் உள்ளன. இக்கோயில்கள் சிவவழிபாடுடைய திருக்கோயில்களாகும்.

இங்குள்ள சிவன் தாடியுடையவனாகவும், தொப்பி அணிந்தவனாகவும் காணப்படுகிறான். குடமுனிவன் என்றும், சிவகுரு என்றும் அழைக்கப்பட்ட தமிழ் வளர்த்த அகத்தியனின் குள்ள உருவமுள்ள சிலைகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்நாட்டைப் போலவே சாவகத்தில் சுடுமண்ணால் கோயில் கட்டப் பெற்றும், சுண்ணத்தினால் மேற்பூச்சுப் பூசப்பட்டும் வந்தது.

பிறகு கல்லால் கட்டப் பெற்றபோது, தமிழகத்திலிருந்து கல்தச்சர்களும் ஸ்தபதிகளும் பார்ப்பனர்களும் குடியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் அந்நாட்டிலேயே தங்கி நிலைத்த குடிமக்களால் வாழ்ந்து வந்தனர். தமிழ் நாட்டிலுள்ள தாராசுரம், சிதம்பரம், நாகப்பட்டிணம், பட்டீசு(ஸ்)வரம் முதலிய இடங்களிலுள்ள சிற்ப அமைப்புகளைச் சாவகத்தில் காணலாம். சாவகத்தில் பௌத்தமும் சைவமும் தலைச்சிறந்த சமயமாய் விளங்கின.

சிவனுக்கும் விசுணுவிற்கும் வேறுபாடு காட்டப் படவில்லை. ஆனாலும் சாவக மக்கள் தங்கள் மன்னர்களை விசுணுவைப் போல் காட்டாமல் சிவனைப் போலவும் புத்தரைப் போலவுமே காட்டியுள்ளார்கள். இந்தோனேசியர்கள் இந்துக் கோயில்களைச் சாண்டி (Candi) என்பர். சாண்டி என்றால் பழங்கால கல் நினைவுச் சின்னங்கள் என்று பொருள்.

குறிப்பாக, இச்சின்னங்களைச் சாவகம், சுமத்திரா, பாலி முதலிய இடங்களில் பார்க்கலாம். இங்கு பிரம்மா, சிவன், விசுணு, அகத்தியர், துர்க்கா, விநாயகர் போன்ற தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மத்திய சாவகத்திலுள்ள சோக் சக்கர்த்தாவில் சாண்டி பிரம்மா, சாண்டி விசுணு கோயில்களைப் பார்க்கலாம்.

கி.பி.900 இல் கட்டி முடிக்கப்பட்ட பிரம்மானன் என்ற இந்துக் கோயில் சாவகத்திலிருக்கின்றது. கிழக்குச் சாவகத்தில் உள்ள பாரா எனுமிடத்தில் இருக்கும் கணபதி உருவம் திராவிட சிற்ப மரபில் அரிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டதாகும். மண்டியிட்டுக் கொண்டிருக்கும் பெரிய பூதங்கள் அசுரர்களின் நுழைவாயிலைப் (Portico) பார்த்துக் கொண்டிருப்பதைச் சாவக கோயில்கள் புகுவழிகளில் பார்க்கலாம்.

இச்சிற்பங்கள் தென்னிந்திய கோயில்களில் உள்ள பேரழகு வாய்ந்த பூதவாகனங்களைப் போன்று இருக்கின்றன. எட்டாவது நூற்றாண்டில் போரோபுதூரில் தோன்றிய பௌத்த சமய சைத்தியங்கள் கூட பல்லவர்கள் சோழர்கள் கட்டடப்பாணியை ஒட்டியே காணப்படுகிறது என வரலாற்று அறிஞரான வின்சென்ட் சுமித் கூறியுள்ளார்.

சாவகத்தில் நடைபெறும் பாவைக் கூத்துகள் இந்திய மூலத்தை உடையனவாகும். ஏனெனில் இக்கூத்துகளில் இராமாயண மகாபாரத நிகழ்வுகளே ஆடப்பெறுகின்றன. எனவே இந்தியர்கள் இந்தியாவிலிருந்து பௌத்தம், சைவம் ஆகிய சமயங்களோடு இசையையும், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், இதை விளக்கும் சிற்பக் கலையையும், பொம்மலாட்டம் என்ற புதுக்கலையையும் சாவகத்திற்கு கொண்டு போனார்கள்.

தமிழர் கண்ட நாட்டியத்தின் மாறிய வடிவம் சாவகத்தில் காணக் கிடைக்கிறது. பாலியில் சித்திரை 2 ஆம் நாள் கலைமகள் விழா கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழா நடத்துகின்றனர். சிவராத்திரி அன்று பெருவிழா படைத்து நடனமாடுகின்றனர். பாலித் தீவு மக்கள் தொகையில் 93.37 சதவீதத்தினர் இந்துக்கள் ஆவர். இவர்கள் பெரும்பான்மையோர் சிவனை வழிபடுகின்றனர்.

இந்தியா, நேபாளம் நீங்கலாக இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடம் பாலித்தீவாகும். சிவவழிபாடு பிறந்த இடம் திராவிட நாடாகும். எனவே பின்பற்றும் சமயத்தில் தமிழ்ச் சமயத்தின் தாக்கம் இருக்கிறது என்று அறுதியிட்டு கூறலாம். பண்டைத் தமிழர்கள் சூரியன், நிலம், நீர், தீ, காற்று, மலை இவற்றை தெய்வங்களாகக் கருதி வணங்கினர். இதே மாதிரியான நம்பிக்கை பாலி மக்களிடம் இன்றுக் கூட நிலவுகிறது.

வட சுமத்திராவில் முப்பத்திரண்டு தமிழ் இந்துக் கோயில்களும் மேடானில் தென்னிந்திய மசூதி ஒன்றும் தமிழர்களால் எழுப்பப்பட்டன. மேடானில் 1884 இல் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது. அங்குள்ள மற்றொரு கோயிலான சுங்கு சுப்பு மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதத்தில் ஐந்து நாட்கள் தீமிதித் திருவிழா நடைபெற்று வருகிறது. மற்றும் மேடானில் உள்ள காளி கோவிலும், தண்டாயுதபாணி கோயிலும் தமிழர்களிடையே சிறப்பு பெற்றதாகும். 

இந்தோனேசியத் தலைநகர் யகாத்தாவில் தமிழர்கள் கட்டியுள்ள சிவன் கோவிலில் சித்திரை முதல் நாள் மலாயில் எழுதிய 'அரே ராமா அரே கிருசுணா' தேவார திருவாசகத்தைப் பாடி கும்பிடுவார்கள். இந்தோனேசியாவில் விலை மகளிருக்குத் தனிப்பட்ட 'சொர்க்க பூமிகள்' ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும் பொது நிலையில் சீதையின் மாட்சியைப் போற்றும் நாடானமையால் அங்கு கற்பு நெறி கண்டிப்பாக வலியுறுத்தப்படுகிறது.

வாழ்க்கைத் தரம், தொழில் வட சுமத்திராவில் வாழும் பதினைந்தாயிரம் தமிழர்களில் பொருளாதார முன்னேற்றம் கண்டிருப்பவர்கள் மிகக் குறைவாகக் காணப்படுகின்றனர். சுமார் முப்பது தமிழ்க் குடும்பங்களே பொருளாதார முன்னேற்றம் பெற்றுள்ள குடும்பங்கள் ஆகும். பெரும்பாலான தமிழர்கள் ஏதாவது சொந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். மற்றும் சிலர் சாவகர்களிடமும், சீனர்களிடம், தமிழர்களிடமும் வேலை செய்கின்றனர். 

இவ்வாறு வேலை செய்வோரின் மாத வருவாய் ஐம்பது சிங்கப்பூர் வெள்ளியிலிருந்து நூறு சிங்கப்பூர் வெள்ளிக்குள் இருக்கிறது. ஒரு சில தமிழர்கள் அரசாங்கத்திலும் பணியாற்றுகின்றனர். கல்வித் துறையில் தமிழர்கள் அதிகம் நாட்டம் காட்டவில்லை. பலர் உயர்நிலைப் பள்ளிப்படிப்போடு முடித்துக் கொண்டு ஏதாவது தொழிலில் ஈடுபடுகின்றனர். 

ஒரு காலத்தில் நூற்று இருபது வட்டிக் கடைகள் வைத்திருந்த செட்டியார்களுக்கு இன்று நான்கு கடைகளே உள்ளன. இவையும் கொடுத்த கடனை மீண்டும் பெறுவதற்காகவே இயங்குகின்றன. வட சுமத்திராவில் செட்டியார்கள் சியந்தார், ஆச்சை, மேடான் ஆகிய மூன்று இடங்களிலேயே தனி வணிகத் தொழில் செய்து வந்தார்கள். 1920க்குப் பின்னரே அவர்கள் வந்தனர். ஒரு சிலர் நேரடி ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டாலும் பலர் தனவணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

மு.அ.எ.எப் என்ற நகரத்தார் நிறுவனம் துணி, புழுங்கல் அரிசி முதலியவற்றைச் சென்னையிலிருந்து கொண்டு வந்து மேடானில் விற்றதாகத் தெரிகிறது. முதலில் டெல்லி சுல்தானின் தலைநகரான லாபுவான் எனுமிடத்தில் தங்கியிருந்தனர். டெல்லி சுல்தான் தனது தலைநகரை மேடானுக்கு மாற்றவே அவர்களும் பின் தொடர்ந்தனர். தற்சமயம் நான்கு நகரத்தார்களே மேடானில் வாழ்கின்றனர். 

ஜாகாத்தாவிலிருந்து சில தமிழர்கள் கைத்தறி லுங்கிகளைத் தமிழகத்திலிருந்து வரவழைத்து இந்தோனேசியா முழுவதும் வியாபாரம் செய்து வந்தார்கள். மேலும் சிலர் மேற்படி துணிகளை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். நாட்டுக்கோட்டை நகரத்துச் செட்டிமார்கள் சிலர். யகார்த்தாவில் வட்டிக்கடைகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் மொழி பன்னெடுங்காலமாக தமிழ்நாட்டோடு தொடர்பு கொண்டுள்ள இந்தோனேசிய மொழியில் தமிழ் சொற்கள் பலவும், தமிழ் வழிச் சமஸ்கிருதச் சொற்கள் சிலவும் பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுள்ளன. இந்தோனேசியாவில் வழங்கும் தமிழ்ச் சொற்கள் சிலவற்றை பார்ப்போம். 

ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பொருள் திரிந்த சொல் அடைப்புக்குள் தரப்படுகிறது : கவி (தோழன்), காப்பாளர் (காவலர்), செட்டி (விற்பவன்), தம்பி (இளைஞர், தவறு செய்யும் பையன்), திசாந்து (அபினி), பணம் (துணை), மதிப்பு (நிலை). தமிழின் மூலம் இந்தோனேசிய மொழியில் நுழைந்த வட சொற்கள் உள்ளன. தமிழ்வழி சமஸ்கிருத சொற்கள் இந்தோனேசியச் சொற்கள்

கஜம் கஜா 2. கொலா(சர்க்கரை) குலா 3. தேவதா(பெண்தெய்வம்) தேவதா 4. நாகம் நாகா 5. பீஜம் (விதை) பிஜி 6. புத்ரி புத்திரி 7. மந்திரி மந்திரி 8. மோக்ஷ‘ மோட்சா 9. ராஜா ராஜா 10. விஷம் விஷா. அப்பம், இடம், கஞ்சி, கட்டில், கடமை, கலம், காட்டு, காவல், கூண்டு, கூலி, சுக்கு, பண்டம், பண்டிதர், மணி, மாமா, மாமி, முகம், முத்து, வட்டில் போன்ற தனித் தமிழ்ச் சொற்கள் பண்டைய சாவகக் கவிதையில் ஆளப்பட்டுள்ளன.

இவையல்லாமல் கப்பல், குதிரை, கூடை, தாலி, பிட்டு, பெட்டி எனும் சொற்களும் காணப்படுகின்றன. இது தவிர இத்தோனேசியாவில் இடம், வட்டில், பண்டம், கலம், கடலை, கண்டு எனும் சொற்களும் வழங்கி வருகின்றன. கோயில் என்பது இந்தோனேசிய மொழியில் கூயில் என மருவி வழங்குகிறது.

போகர் தமிழ் நாட்டின் பழங்கால மூலிகை வைத்தியர். இவர் பெயரால் சாவகத்தில் போகர் (Bogor) எனும் ஊர் உள்ளது. இந்தோனேசியத் தமிழர்கள் வீட்டில் மட்டும் தமிழ் பேசுகின்றனர். அது கொச்சை தமிழாக உள்ளது. தமிழை எழுதத் தெரியாவிட்டாலும் பேசுவதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்குத் தமிழைப் பயில்வதற்குப் போதிய வசதிகள் இல்லை.

இங்குள்ள தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழை மறந்து விடக் கூடிய அவலநிலை இருந்து வருகிறது. இதனால் மேடானில் உள்ள கோயில்கள் எல்லாம் மாலை வேளைகளிலும் விடுமுறை நாட்களிலும் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. மேடான் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் கோயில்களில் எட்டாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடங்களும் பிறகலைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்தோனேசியாவின் தலைநகரான யகார்த்தாவிலுள்ள மத்தியப் பல்கலைக் கழகமான இந்தோனேசியப் பல்கலைக் கழகத்தில் இந்தியத்துறை பேராசிரியர் பதவி ஒன்றுள்ளது. அந்தப் பதவியில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த கலாநிதி செ.வை. சண்முகம் அவர்கள் இரண்டு ஆண்டுகள் அங்கு தங்கி தமிழ் கற்பித்தார். பல தமிழ் நூல்களும் தமிழ் பற்றிய ஆங்கில நூல்களும் இப்பல்கலைக்கழக நூல் நிலையத்தில் உள்ளன. 

இந்தோனேசியாவில் தமிழ் அச்சகமோ பதிப்பகமோ இல்லை. உடை, உணவு, திருமணம். தமிழர்கள் தங்கள் உணவு உடை முதலிய பழக்க வழக்கங்களில் பெரும்பாலும் இந்தோனேசியர்களையே பின்பற்றுகின்றனர். சேலை கட்டிய தமிழ்ப் பெண்களை இவர்களிடையே காண்பது அரிது. விழாக்களின் போதும் திருமணங்களில் போதும் இவர்களில் 50 சதவீதத்தினர் வேட்டி, புடவைக் கட்டிக் கொள்கின்றனர்.

பொதுவாக தமிழ்ப் பெண்மணிகள் அணியும் ஆடை கவுன் (Gown) ஆகும். ஆகையால் தமிழர்களின் கலாச்சார அடையாளங்களான புடவை, நகைகள் முதலானவை முக்கியமான நிகழ்ச்சிகளின் போதுதான் அணியப்படுகின்றன. மேலும் இந்தோனேசிய சுதந்திரத்தின் போது சாதிப் பெயர்கள் வைத்துக் கொள்வதில்லை என இத்தமிழர்கள் தீர்மானம் எடுத்துச் செயல்படுத்தினர். 

சீர்திருத்த திருமண முறையையே இவர்கள் விரும்புகின்றனர். தமிழ்த் திருமண முறையும் உண்டு. தகவல்-தொடர்புச் சாதனங்கள் போருக்கு முந்திய காலத்திலும், அதற்குப் பிந்திய காலத்திலும் செயற்பட்ட சங்கங்கள் 

(1) திராவிட இந்து சபை
(2) டெல்லி இந்து சபை
(3) கிருசுண சபை
(4) தமிழ்ச் சிறார்களுக்கென நடத்திய இந்தியன் சாரணியர் சங்கம்
(5) இந்தோனேசிய இந்து இளையர் சங்கம்
(6) வட சுமத்திரா பரோபகாரச் சங்கம்.

இன்று சிறப்பாக இயங்கும் மாதர் சங்கங்களில் பாசுந்தனன் மாதர் சங்கம் குறிப்பிடத்தக்கது. மாதர் சங்கங்கள் செவ்வாய், வெள்ளி தோறும் கூடுகின்றன.  
யகார்த்தா தமிழர்கள் 'தரும ஏக்சுனா' எனும் புதிய தரும ஸ்தாபனத்தை அமைத்திருக்கிறார்கள். மேலும் இந்தோனேசியா தமிழர் பிரதிநிதித்துவ சங்க தேசியப் பேரவை என்ற சங்கமும் 1978 இல் அமைக்கப்பட்டது. பொதுவாக இவை தமிழர்களின் கல்வி, சமூகத்துறை, மகளிர் உபகாரச் சம்பளம், அநாதை உதவி முதலிய துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.

மலேசியத் தொலைக்காட்சியில் வியாழக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் திரையிடப்படும் தமிழ், இந்தித் திரைப்படங்களை இந்தோனேசியத் தமிழர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். சிங்கப்பூர் வானொலியும் மலேசிய வானொலியும் தொலைக்காட்சியும் இந்தோனேசியத் தமிழர்களின் தமிழுணர்வை வளர்க்க உதவுகின்றன.

இந்தோனேசியத் தமிழர்களின் இல்லங்களில் தினந்தோறும் தமிழ்த் திரைபடங்களின் ஒலிச் சித்திரத்தைக் கேட்கலாம். தமிழர் சாதனை அரசியலிலிருந்து தமிழர்கள் ஒதுங்கி வாழ்ந்தனர். ஆயினும் அதிபர் சுகர்ணோ ஆட்சியின் போது பெரியசாமி கிருசு(ஷ்)ணா என்ற தமிழர், தமிழர் அல்லாதார் ஆதரவுடன் வட சுமத்திரா மாநில மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நன்றிகள்.

தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே..................!

மது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை "உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு.

இவ்வுண்மையைத் "தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு.

தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்' வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது.


த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்.

 தமிழுக்கு "முத்தமிழ்' எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும்.

நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.

சைவ சமய ஆச்சாரியராகிய ஞானசம்பந்தரை, நாம் "திரு' என்ற அடைமொழி சேர்த்து, திருஞானசம்பந்தர் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால் அவரோ, தம் பெயருக்கு முன் "தமிழ்' என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் "தமிழ் ஞானசம்பந்தன்' எனக் குறிப்பிட்டுக் கொண்டார். இது நமக்குத் தமிழையும் சம்பந்தரையும் ஒன்றாகக் காட்டுகிறது.

வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர்.

இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பன ஆகும்.

 நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

"தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. "தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர்.

இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.

 இனிமைச் சிறப்பு

"தமிழ்' என்பதற்கு "இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை "இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

"பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது: "போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?

' என்னே தமிழின் சுவை! "அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?

"தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே. என்னே தமிழின் இனிமை!

 தன்னைப் "பித்தன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் வைதபொழுது, இறைவன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாராம். காரணம், "தமிழால் வைதான்'' என்பதே. இதனாலேயே இறைவனுக்குத் "தமிழால் வைதாரையும் வாழவைப்போன்'' என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது.

புதிதாக இல்லறத்தில் வலக்காலை எடுத்து வைக்கும் மணமக்களை நோக்கி, "தமிழும் அதன் இனிமையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள்'' என்று நல்லறிஞர்கள் வாழ்த்துக் கூறி வருவது தமிழகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது.

 நன்றி என்பதைக் குறிக்கும் "தாங்சு(ஸ்)' என்ற ஆங்கிலச் சொல்லும், நல்லது என்பதைக் குறிக்கும் "அச்சா' என்ற இந்திச் சொல்லும், அதன் வலிய ஒலியால் அச்சுறுத்துவது போலத் தோன்றும். தமிழில் நன்றி, வணக்கம் என்பது மட்டுமல்ல, "இது மக்கள் தன்மைக்கு ஒவ்வாது'' என்று வைவதுகூட அதன் மெல்லோசையால் வாழ்த்துவது போலத் தோன்றும். இது நமது மொழியில் இயல்பாகவே அமைந்துள்ள ஒன்று. என்னே தமிழின் இனிமை!

 கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான்.

"நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; சட்டியில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்'' என்று.

 நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்' எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்' என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை!

 எளிமைச் சிறப்பு!

 தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண இயலாது.

 தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல, படிக்கவும் எளிது. தமிழ் ஓர் எழுத்துக்கும் ஒரே ஒலியானதால் எவரும் எதையும் படிக்க முடியும். உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தம் 247 எழுத்துக்களே.

இவைகளை அறியப் பெரியவர்களுக்குச் சில வாரங்களும், சிறியவர்களுக்குச் சில மாதங்களும் போதுமானது. பின் எடுத்த நூல்களையெல்லாம் படிக்கலாம். ஆகவே, தமிழ் படிக்கவும் எளிதானது.

 தமிழ்மொழி பேசவும் எளிது. தமிழ்ச் சொற்களில் 100 சொற்கள் எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு, அண்ணாக்கு, உண்ணாக்குக் கொண்டே ஒலிப்பதாக இருக்கும்.

தொண்டைக்குக் கீழே வேலையேயிராது. வடமொழிச் சொற்களில் பெரும்பான்மையானவை அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை.

இவ்வாறு வலிந்து ஒலிப்பதால் நாவும் உலர்ந்து, தொண்டையும் வறண்டு குடலும் காய்ந்துவிடுகிறது. ஆகவே, இதுகாறும் கூறியவற்றால், தமிழ் மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் கூட மிகவும் எளிமையானது என நன்கறியலாம்.

தமிழின் சிறப்பு

நண்பர்களே!!! நமது பழம்பெருமை பற்றிய கட்டுரையை உங்களுடன் பகிர நினைத்து உருவானதே இந்த கட்டுரை. என்னதான் தமிழைப் பற்றி எழுதினாலும் இது மிகக் குறைவே. நம் தமிழின் சிறப்பு அப்படிப்பட்டது. நான் அறிந்த விசயங்களில் இருந்து தொகுத்துள்ளேன். இதை அனைவருக்கும் கொண்டு சேர்த்தால் நமது தமிழின் பெருமையும் தமிழரின் சிறப்பும் விளங்கும்.

தமிழராய்ப் பிறந்தோம் ஆனால் டமிளராய்த்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதரில் முதல் மனிதன் ஆதாம் என்பது ஒரு கருத்தென்றாலும் அந்த ஆதமைப் படைத்தவன் எந்த கடவுள் என்பதில் இந்த மனிதன் பிரிந்துதான் இருக்கின்றான். "மனிதன் என்றுமே ஏதோவொரு பிரிவினைக்கு உட்பட்டவன் போலும்". அப்படி ஏதோ ஒரு விளைவின் காரணமாகப் பிறந்து இன்று "தமிழர்" என்று இருக்கும் நம்மைப்பற்றிய நாம் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை.

நாம்தான் தென்னிந்தியாவின் முதல் மக்கள் ஆனால் நாம் மத்திய ஆசியா, வட ஆசியா போன்ற பகுதிகளில் இருந்து தென்னிந்தியா வந்ததாகவும் கருதப்படுகிறோம். என்பதில் அறியலாம். நம்மையே நாம் அறியமுடியாத பழமைச் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று. மேலும் நாம் திராவிடர்கள் என்று அழைக்கப்படுகின்றோம். அதென்ன திராவிடர்கள்?

நமது தாய்மொழியாம் தமிழுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு இந்த மொழிகள் பேசுபவர்களையே திராவிடர்கள்

என்றும் விளிக்கப்படுகிறது.

மேலும் சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் அல்லது தமிழர்கள்தான் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இக்கருத்து இன்னும் சர்ச்சையில்தான் இருக்கிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

மேலும், இந்த மொழிக்குடும்பத்தில் மட்டும் மொத்தம் 85 மொழிகளாம். இதில் விந்தை என்னவென்றால் ராபர்ட் கார்டுவெல் என்ற அயர்லாந்துக்காரர் இந்த திராவிட மொழிகளின் ஒப்புமையைப் பற்றி ஆராய்ச்சி செய்து "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை 1856 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.

இவரே "திராவிட மொழி நூலின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார். நமது மொழியின் சிறப்பை நம்மைவிட மற்றவர்களுக்குத்தான் அதிகம் தெரிந்துள்ளது என்பது வேதனையான செய்தி.

கி.மு.6000 ஆண்டுகள் பழைமையான சிந்து சமவெளி நாகரீகத்தைப் பற்றியேதும் உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும் அங்குள்ள இலிங்க வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் கிடைத்துள்ள சான்றுகளின்படி இன்றைய இந்து சமய வழிபட்டு நாகரீகம் அப்பொழுதே தோன்றியிருப்பது வெளிச்சமாகிறது.

மேலும் க(ஹ)ரப்பா, மொக(ஹ)ஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் உள்ள குறியீடுகள், நமது தமிழ்நாட்டின் காவிரி கழிமுகப் பகுதியில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரியது.

நமது தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்...இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

நாம்தான் இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பதில் அனைவரும் பெருமைபடுதலுடன் ஒற்றுமையுடன் பெருமை சேர்க்கவும் வேண்டியது அவசியம்.

இதைவிட இது நமது மண்தான் என்பதற்கான ஆதாரங்களும் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. கி.மு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மண்ணில் புதைக்கப்பட்ட மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களும் நமது இலக்கிய நூல்களில் உள்ள குறிப்புக்களும் ஒத்துப்போகிறது என்பது இது நமது மண்தான் என்பதை ஆணித்தரமாய் பறைசாற்றுகிறது. ஆனால் நமக்குத்தான் நமது நாடு என்றால் இளக்காரம். 

ஒரு காலத்தில் நமது தமிழ்நாடு மெட்ராசு(ஸ்) என்றே அழைக்கப்பட்டது. இன்றும் சிலர் அப்படித்தான் அழைக்கின்றனர் என்பது கொடுமையானது. இதனை தமிழ் நாடு என்று மாற்றுவதற்காக 1956 ஆடி 27 ல் உண்ணாவிரமிருந்து உயிர்துறந்தவர் தியாகி சங்கரலிங்கனார் என்பவர்.

இவரது கொள்கையை அப்போதைய காங்கிரசும் ஏற்கவில்லை. தொடர்ச்சியாக 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த பின்னரே 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

ஒரு உயிரை பலிகொடுத்தே நாம் நமது உரிமையை நிலை நாட்டியிருக்கிறோம். ஆனால் இதனை டமிள் நாடு என்று கூறும் தமிழராய்ப் பிறந்த சில தமிழை கெடுக்கும் கோடாரிக்காம்புகளும் இருக்கின்றனர். 

இது நமது நாடு, நமது மண், நமது மொழி என்ற பெருமையைக் கட்டிக்காப்பது நமது கடமையே. கல் தோன்றா காலத்தே முந்தோன்றிய மூத்தகுடி நாம். பலவகை சிறப்புக்கள் வாய்ந்தது நமது மொழி.

தமிழராய் பிறந்த நாம் ஏன் தமிழில் பேசுவதற்கு மட்டும் கூச்சப்படவேண்டும். நாலு பொண்களை பார்த்தால் நாக்கில்  தமிழ் வருவதேயில்லை. நாக்கு சிக்குகிது. அப்படி என்ன கூச்சம்? இந்தப் பைந்தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் பெருமைப்படவேண்டும்

ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே இந்த சமுதாயம் நம்மை மதிக்குமாம். என்ன ஒரு அபத்தமான கருத்து இது. நாம்தான் சமுதாயம் என்பதை ஏன் மறந்துவிடுகிறோம். தோழர்களே, ஒன்று மட்டும் நாம் மறந்துவிடவேண்டாம்.

இது நமது தாய்மொழி. தாயை மதிப்பது போலவே இதனையும் நாம் மதிக்கவேண்டும். இங்கு உள்ளவர் எவர் தம் தாயை பழிப்பர்?!

எவருமில்லை. ஆனால், தாய் மொழியில் பேசுவது மட்டும் கேவலம் என்று நினைக்கிறோம். நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். தமிழிலேயே பேசுவோம். தமிழராய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம். நமது பெருமையை அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்.

தமிழின் தொன்மைச் சிறப்பு

உலகில் முதல் முதல் மக்கள் தோன்றிய நாடு தமி ழகமும், அதனைய டுத்திருந்த கடல் கொண்ட தென் னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காவிரிப் பூம்பட்டினத்தில் நிலைத்து நின்று வாழும் தமிழ் மக்களை ‘பதியெழு அறியாப் பழங்குடியினர்’ என இளங்கோவடிகள் கூறுகிறார். இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார்

‘படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்’ எனக் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்’

என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை. ஏனெனில் அது ஒரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை. எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும் காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டடமும், சிற்பமும், கல்வெட்டும், புதை பொருட்களும் ஒருவாறு தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் ‘தமிழ் மொழியே உலகின் முதல் மொழி’ எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் ‘இலத்தின்’, ‘கிரீக்’ மொழிகளுக்கு முந்திய மொழி’ எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாக விருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும்.

முற்காலத்திய சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி. யு. போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர், வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாராட்டப் பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு பாராட்டைப் பெற்ற ஒரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப்பெற்று வந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று.

1700 ஆண்டுகளுககு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமை கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்களாலும், வரலாறுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்ற உண்மைகளாகும்.

இதனால் தமிழ் மொழியானது அக்காலத்திலுமே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஒரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கின்றது என்பது தெரிய வருகிறது.

2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன. 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் ‘நற்றிணை’ என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.

2800 ஆண்டுகளுக்கு முன்பு உரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில், தமிழ் நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர்.

அப்பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன.

அரிசி ‘ரைஸ்’ எனவும், சந்தனம் ‘சண்டல்’ எனவும் தேக்கு ‘டீக்’, எனவும் கட்டுமரம் ‘கட்டமெரன்’ எனவும், இஞ்சி ‘ஜிஞ்சர்’ எனவும், ஓலை ‘ஒல்லா’ எனவும் கயிறு ‘காயர்’ எனவும் ஆயின. காலப் போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் ‘தொல்காப்பியம்’ ஒன்றே. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றி யிருக்கின்றன. இவ்வுண்மையை ‘தோலென மொழிப தொன் மொழிப்புலவர்’ என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம்.

3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாக நம்பப்பெறுகிற நூல்களில் ‘அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுவோரும் உண்டு.

தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும், இது நடந்த காலம் 3000ம், 5000ம், 9000ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.

மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும் அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர்.

தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்? அதற்கு முன்னே உரைநடை தோன் றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்? அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்?

ஏதேனும் கூற வேண்டுமானால் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.

மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே!
நன்றிகள்.

Monday 22 July 2013

தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே..................!

புகைப்படங்கள் பெயர்ச் சிறப்பு மது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு.

இவ்வுண்மையைத் ""தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு. 


தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்' வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது.

த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம். தமிழுக்கு "முத்தமிழ்' எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும்.

நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.

சைவ சமய ஆச்சாரியராகிய ஞானசம்பந்தரை, நாம் "திரு' என்ற அடைமொழி சேர்த்து, திருஞானசம்பந்தர் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால் அவரோ, தம் பெயருக்கு முன் "தமிழ்' என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் "தமிழ் ஞானசம்பந்தன்' எனக் குறிப்பிட்டுக் கொண்டார். இது நமக்குத் தமிழையும் சம்பந்தரையும் ஒன்றாகக் காட்டுகிறது.

வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர்.

இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பன ஆகும். நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

""தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர்.

இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம். இனிமைச் சிறப்பு "தமிழ்' என்பதற்கு "இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை "இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

"பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது: "போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?

'என்னே தமிழின் சுவை! "அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா? 

"தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே. என்னே தமிழின் இனிமை!

தன்னைப் "பித்தன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் வைதபொழுது, இறைவன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாராம். காரணம், "தமிழால் வைதான்'' என்பதே. இதனாலேயே இறைவனுக்குத் "தமிழால் வைதாரையும் வாழவைப்போன்'' என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது.

புதிதாக இல்லறத்தில் வலக்காலை எடுத்து வைக்கும் மணமக்களை நோக்கி, "தமிழும் அதன் இனிமையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள்'' என்று நல்லறிஞர்கள் வாழ்த்துக் கூறி வருவது தமிழகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது.

நன்றி என்பதைக் குறிக்கும் "தாங்க்சு(ஸ்)' என்ற ஆங்கிலச் சொல்லும், நல்லது என்பதைக் குறிக்கும் "அச்சா' என்ற இந்திச் சொல்லும், அதன் வலிய ஒலியால் அச்சுறுத்துவது போலத் தோன்றும்.

தமிழில் நன்றி, வணக்கம் என்பது மட்டுமல்ல, ""இது மக்கள் தன்மைக்கு ஒவ்வாது'' என்று வைவதுகூட அதன் மெல்லோசையால் வாழ்த்துவது போலத் தோன்றும். இது நமது மொழியில் இயல்பாகவே அமைந்துள்ள ஒன்று. என்னே தமிழின் இனிமை!

கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான். 

"நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; சட்டியில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்'' என்று.

நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! 

இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்' எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்' என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை! எளிமைச் சிறப்பு!

தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண இயலாது.

தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல, படிக்கவும் எளிது. தமிழ் ஓர் எழுத்துக்கும் ஒரே ஒலியானதால் எவரும் எதையும் படிக்க முடியும். 

உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தம் 247 எழுத்துக்களே. இவைகளை அறியப் பெரியவர்களுக்குச் சில வாரங்களும், சிறியவர்களுக்குச் சில மாதங்களும் போதுமானது. பின் எடுத்த நூல்களையெல்லாம் படிக்கலாம்.

ஆகவே, தமிழ் படிக்கவும் எளிதானது. தமிழ்மொழி பேசவும் எளிது. தமிழ்ச் சொற்களில் 100 சொற்கள் எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு, அண்ணாக்கு, உண்ணாக்குக் கொண்டே ஒலிப்பதாக இருக்கும்.

தொண்டைக்குக் கீழே வேலையேயிராது. வடமொழிச் சொற்களில் பெரும்பான்மையானவை அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை. இவ்வாறு வலிந்து ஒலிப்பதால் நாவும் உலர்ந்து, தொண்டையும் வறண்டு குடலும் காய்ந்துவிடுகிறது.

ஆகவே, இதுகாறும் கூறியவற்றால், தமிழ் மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் கூட மிகவும் எளிமையானது என நன்கறியலாம். தமிழின் சிறப்பு நண்பர்களே!!

நமது பழம்பெருமை பற்றிய கட்டுரையை உங்களுடன் பகிர நினைத்து உருவானதே இந்த கட்டுரை. என்னதான் தமிழைப் பற்றி எழுதினாலும் இது மிகக் குறைவே. நம் தமிழின் சிறப்பு அப்படிப்பட்டது. நான் அறிந்த விசயங்களில் இருந்து தொகுத்துள்ளேன். இதை அனைவருக்கும் கொண்டு சேர்த்தால் நமது தமிழின் பெருமையும் தமிழரின் சிறப்பும் விளங்கும். 

மிழராய்ப் பிறந்தோம் ஆனால் டமிளராய்த்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதரில் முதல் மனிதன் ஆதாம் என்பது ஒரு கருத்தென்றாலும் அந்த ஆதமைப் படைத்தவன் எந்த கடவுள் என்பதில் இந்த மனிதன் பிரிந்துதான் இருக்கின்றான்.

"மனிதன் என்றுமே ஏதோவொரு பிரிவினைக்கு உட்பட்டவன் போலும்". அப்படி ஏதோ ஒரு விளைவின் காரணமாகப் பிறந்து இன்று "தமிழர்" என்று இருக்கும் நம்மைப்பற்றிய நாம் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை. நாம்தான் தென்னிந்தியாவின் முதல் மக்கள் ஆனால் நாம் மத்திய ஆசியா, வட ஆசியா போன்ற பகுதிகளில் இருந்து தென்னிந்தியா வந்ததாகவும் கருதப்படுகிறோம். என்பதில் அறியலாம்.

நம்மையே நாம் அறியமுடியாத பழமைச் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று. மேலும் நாம் திராவிடர்கள் என்று அழைக்கப்படுகின்றோம். அதென்ன திராவிடர்கள்?

நமது தாய்மொழியாம் தமிழுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு இந்த மொழிகள் பேசுபவர்களையே திராவிடர்கள் என்றும் விளிக்கப்படுகிறது. மேலும் சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் அல்லது தமிழர்கள்தான் என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் இக்கருத்து இன்னும் சர்ச்சையில்தான் இருக்கிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மேலும், இந்த மொழிக்குடும்பத்தில் மட்டும் மொத்தம் 85 மொழிகளாம்.

இதில் விந்தை என்னவென்றால் ராபர்ட் கார்டுவெல் என்ற அயர்லாந்துக்காரர் இந்த திராவிட மொழிகளின் ஒப்புமையைப் பற்றி ஆராய்ச்சி செய்து "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை 1856 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.

இவரே "திராவிட மொழி நூலின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார். நமது மொழியின் சிறப்பை நம்மைவிட மற்றவர்களுக்குத்தான் அதிகம் தெரிந்துள்ளது என்பது வேதனையான செய்தி. கி.மு.6000 ஆண்டுகள் பழைமையான சிந்து சமவெளி நாகரீகத்தைப் பற்றியேதும் உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும் அங்குள்ள இலிங்க வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் கிடைத்துள்ள சான்றுகளின்படி இன்றைய இந்து சமய வழிபட்டு நாகரீகம் அப்பொழுதே தோன்றியிருப்பது வெளிச்சமாகிறது

 மேலும் ஹரப்பா, மொஹஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் உள்ள குறியீடுகள், நமது தமிழ்நாட்டின் காவிரி கழிமுகப் பகுதியில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரியது.

நமது தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்...இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

நாம்தான் இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பதில் அனைவரும் பெருமைபடுதலுடன் ஒற்றுமையுடன் பெருமை சேர்க்கவும் வேண்டியது அவசியம். இதைவிட இது நமது மண்தான் என்பதற்கான ஆதாரங்களும் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன.

கி.மு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மண்ணில் புதைக்கப்பட்ட மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களும் நமது இலக்கிய நூல்களில் உள்ள குறிப்புக்களும் ஒத்துப்போகிறது என்பது இது நமது மண்தான் என்பதை ஆணித்தரமாய் பறைசாற்றுகிறது.

ஆனால் நமக்குத்தான் நமது நாடு என்றால் இளக்காரம். ஒரு காலத்தில் நமது தமிழ்நாடு மெட்ராசு(ஸ்) என்றே அழைக்கப்பட்டது. இன்றும் சிலர் அப்படித்தான் அழைக்கின்றனர் என்பது கொடுமையானது. இதனை தமிழ் நாடு என்று மாற்றுவதற்காக 1956 / 07 / 27 ல் உண்ணாவிரமிருந்து உயிர்துறந்தவர் தியாகி சங்கரலிங்கனார் என்பவர்.

இவரது கொள்கையை அப்போதைய காங்கிரசும் ஏற்கவில்லை. தொடர்ச்சியாக 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த பின்னரே 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. ஒரு உயிரை பலிகொடுத்தே நாம் நமது உரிமையை நிலை நாட்டியிருக்கிறோம்.

ஆனால் இதனை டமிள் நாடு என்று கூறும் தமிழராய்ப் பிறந்த சில தமிழை கெடுக்கும் கோடாரிக்காம்புகளும் இருக்கின்றனர். இது நமது நாடு, நமது மண், நமது மொழி என்ற பெருமையைக் கட்டிக்காப்பது நமது கடமையேயாம்.

கல் தோன்றா காலத்தே முந்தோன்றிய மூத்தகுடி நாம். பலவகை சிறப்புக்கள் வாய்ந்தது நமது மொழி. தமிழராய் பிறந்த நாம் ஏன் தமிழில் பேசுவதற்கு மட்டும் கூச்சப்படவேண்டும். நாலு பொண்ணுங்களை பார்த்தா நாக்குல தமிழ் வரமாட்டேங்குது. நாக்கு சிக்கிக்கிது. அப்டி என்னங்க கூச்சம்?

இந்தப் பைந்தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் பெருமைப்படவேண்டும் ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே இந்த சமுதாயம் நம்மை மதிக்குமாம். என்ன ஒரு அபத்தமான கருத்து இது. நாம்தான் சமுதாயம் என்பதை ஏன் மறந்துவிடுகிறோம். தோழர்களே, ஒன்று மட்டும் நாம் மறந்துவிடவேண்டாம்.

இது நமது தாய்மொழி. தாயை மதிப்பது போலவே இதனையும் நாம் மதிக்கவேண்டும். இங்கு உள்ளவர் எவர் தம் தாயை பழிப்பர்?!

எவருமில்லை. ஆனால், தாய் மொழியில் பேசுவது மட்டும் கேவலம் என்று நினைக்கிறோம். நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். தமிழிலேயே பேசுவோம். தமிழராய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம். நமது பெருமையை அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்.

தமிழின் தொன்மைச் சிறப்பு உலகில் முதல் முதல் மக்கள் தோன்றிய நாடு தமி ழகமும், அதனைய டுத்திருந்த கடல் கொண்ட தென்னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காவிரிப் பூம்பட்டினத்தில் நிலைத்து நின்று வாழும் தமிழ் மக்களை ‘பதியெழு அறியாப் பழங்குடியினர்’ என இளங்கோவடிகள் கூறுகிறார்.

இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார் ‘படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்’ எனக் கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்’ என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார்.

இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை. ஏனெனில் அது ஒரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை. எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும் காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டடமும், சிற்பமும், கல்வெட்டும், புதை பொருட்களும் ஒருவாறு தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் ‘தமிழ் மொழியே உலகின் முதல் மொழி’ எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் ‘இலத்தின்’, ‘கிரீக்’ மொழிகளுக்கு முந்திய மொழி’ எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாக விருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும். 

முற்காலத்திய சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி. யு. போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர், வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாராட்டப் பட்டிருக்கிறது.

இந்த அளவிற்கு பாராட்டைப் பெற்ற ஒரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப்பெற்று வந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று.

1700 ஆண்டுகளுககு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமை கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்களாலும், வரலாறுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்ற உண்மைகளாகும். 

இதனால் தமிழ் மொழியானது அக்காலத்திலுமே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஒரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கின்றது என்பது தெரிய வருகிறது. 2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன.

2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் ‘நற்றிணை’ என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.

2800 ஆண்டுகளுக்கு முன்பு உரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில், தமிழ் நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர். 

அப்பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி ‘ரைஸ்’ எனவும், சந்தனம் ‘சண்டல்’ எனவும் தேக்கு ‘டீக்’, எனவும் கட்டுமரம் ‘கட்டமெரன்’ எனவும், இஞ்சி ‘ஜிஞ்சர்’ எனவும், ஓலை ‘ஒல்லா’ எனவும் கயிறு ‘காயர்’ எனவும் ஆயின. காலப் போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் ‘தொல்காப்பியம்’ ஒன்றே.

அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றி யிருக்கின்றன. இவ்வுண்மையை ‘தோலென மொழிப தொன் மொழிப்புலவர்’ என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம். 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாக நம்பப்பெறுகிற நூல்களில் ‘அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் ஒன்று.

இதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுவோரும் உண்டு. தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும், இது நடந்த காலம் 3000ம், 5000ம், 9000ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.

மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும் அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர். தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது?

அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்?
அதற்கு முன்னே உரைநடை தோன் றிய காலம்?
அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்?
அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது?
என்பதை எவர் அறிந்து கூற இயலும்?

ஏதேனும் கூற வேண்டுமானால் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும். மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே!
நன்றிகள்.