Tuesday 30 April 2013

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்.............!

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.


வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். 

அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.

தாய்மார்கள் பால் சுரப்பதை நிறுத்த மல்லிகைப் பூக்கள் உதவுகின்றன. நன்றாக மலர்ந்த 20 மல்லிகைப்பூக்களை பால் ஊட்டும் தாய்களின் மார்பில் வைத்துக் கட்ட வேண்டும்.தினமும் மாலையில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால் பால் சுரப்பி நிற்கத் தொடங்கிவிடும்.

20 பூக்களை அரைத்து மார்பகத்தின் மீது பூசி வரவும் செய்யலாம். 

தொண்டைப்புண் அற்றுப் போவதற்கு மல்லிகைப் பூக்களை அரைத்து, புண் உள்ள பகுதியில் இரவில் பூசி வரவேண்டும். அதாவது, குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்றுவிடும்.

இதனால் குடல் புண்ணாகும். இதனால் செரிமானத் தன்மை குறையும். இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீரில் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும்.

வயிற்றில் புண்கள் ஏற்படும். இந்த புண்களின் வேகம் வாய்ப்பகுதியில் தாக்கி வாய்ப்புண் உண்டாகும். இவை நீங்க மல்லிகைப் பூவை தண்ணீரில் கொதிக்க வைத்து அது பாதியான பின்பு வடிகட்டி அந்த நீரை காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். 

மல்லிகை பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். கண்களில் சிலருக்கு சதை வளரும். இதனால் பார்வைக் கோளாறுகள் ஏற்படும்.

இவர்கள் மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.

மல்லிகைப் பூக்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி ஏற்படும் தடிமன், மூக்கடைப்பு, இருமல் போன்ற தொல்லைகளிலிருந்து மீளலாம்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேநீர் போல அருந்தி வந்தால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல் நீங்கும்.

மல்லிகை மொட்டுக்களை புண்கள், காயம்பட்ட இடங்கள், கொப்புளங்கள், வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து மேல் பூச்சாக பூசினால் உடனே குணமாகும்.

மல்லிகை மொட்டுக்களை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை, பால்வினை நோய்கள் குணமாகும்.

மல்லிகை கசாயத்தை அருந்தி வந்தால் கண் வீக்கம், தொண்டை கரகரப்பு, சரும நோய்கள் ஆகியன குறையும். இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வைத் தரும்.

இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ. 
நன்றிகள்.

Monday 29 April 2013

சிவப்பு அரிசி ரகசியங்கள் ..............!

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுச்(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.


சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. யப்பான், கொரியா, பிலிப்பைன்சு(ஸ்), இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சா வூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.  இந்தியாவில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம்.

இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு ஆட்சி செலுத்துபவர் (Governor) இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், எரியம் (Phosphorus) போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன.

தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர்.

இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் (Asthma) மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி... இப்போது காணாமல் போன மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு.

ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.

ஏன்..?

இரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராச்(ஜ்)யத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை.

தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர்.

'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?!
நன்றிகள்.

Sunday 28 April 2013

நுண்ணலை அடுப்பின் தோற்றம்...........!

இரண்டாம் உலகப் போரின்போது விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் (Radar) மேக்னட்ரான் (Magnetron) என்ற பொருள் பயன்படுத்தப்பட்டது.

அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ச்(ஸ்)பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார்.

ஒருநாள் ச்(ஸ்)பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது, அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது.

அப்போதுதான் அவருக்கு, இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே! என்று தோன்றியது.

ச்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். சோழன்பொரி  (Popcorn), பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள்.

அடுப்பு \ சூளை (Owen) வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன. 

இதையடுத்து, வர்த்தகரீதியாக நுண்ணலை அடுப்புக்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது. 

1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது  நுண்ணலை அடுப்பு. 
நன்றிகள்.

Saturday 27 April 2013

மழலைப் பருவத்திலேயே மலரும்......!

மழலைப் பருவத்திலேயே மலரும் மொட்டுகள்!


”பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பூப்பெய்தி விட்டாள்!?” – சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல்களை இப்போது அதிகம் கேட்க முடிகிறது. 

10 வயதில் பாவாடை அணிந்த பட்டாம்பூச்சியாகக் குதூகலித்தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக்கிறது.

உறவுக்காரர்களின் மடியில் படுத்துறங்கி, அவர்களின் விரல் பிடித்து வெளியிடங்களுக்குச் சென்று ஆனந்தப்படும் வாய்ப்புகள் இப்போதைய சிறுமிகளுக்கு வாய்ப்பது இல்லை.

காரணம், பள்ளிக்குச் செல்லும் பால்யம் மாறாத பருவத்திலேயே உடலாலும் உணர்வாலும் அவர்கள் பெரும் மாற்றத்தைச் சந்திக்கின்றனர்.

10 வயதுக்குள்ளாகவே பூப்பெய்திவிடும்போது, உடல் – மனரீதியாக ஒரு சிறுமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன?

அவர்களுக்கான தீர்வு என்ன என்பதைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும் அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

”சமீப காலமாக 8-9 வயதிலேயே சிறுமிகள் பூப்பெய்தி விடுகின்றனர். இதற்கு மரபியல் மற்றும் சுற்றுச்சூழல் என இரண்டு காரணங்கள். சுற்றுச்சூழல் சார்ந்த காரணியில், உடல் பருமன் அதிகரிப்பதுதான் பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.

அவர்கள் சாப்பிடும், உபயோகப்படுத்தும் சில பொருட்களில் பெண் உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) என்று சொல்லக்கூடிய எசுத்தோசென் (Estrogen) அதிகமாக இருக்கிறது. 

ஈசு(ஸ்)ட்ரோசெ(ஜெ)ன் உள்ள (In estrogen) ஈஸ்ட்ரோசெ(ஜெ)ன் மரபணு(Estrogen gene) , பைட்டோ(piatto) ஈஸ்ட்ரோஜென் என்று இரண்டு வகைகள் உண்டு. இதில் மரபணு ஈஸ்ட்ரோசென் என்பது   உருவாக்கத்தக்க (plastic) பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தப்பட்ட சில உணவுகள்,முகத்துக்குரிய (Facial)ஒப்பனைப் பொருட்களில் அதிகமாக இருக்கிறது.

சோயா போன்ற உணவுப் பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோசென் அதிகமாக உள்ளது. உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகளில் ஒன்று (Hormone) பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற பொருட்கள் மற்றும் உணவு வகைகளைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு ஈஸ்ட்ரோசென் அதிகமாகி, பூப்பெய்தலும் மிகக் குறைந்த வயதிலேயே நிகழ்கிறது.

மரபியல் ரீதியான பிரச்னையில், பூப்பெய்துவதைத் தூண்டும் எல்.ஹெச். மற்றும் எப்.எஸ்.ஹெச். உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகள் இளம் வயதிலேயே அதிகமாகச் சுரப்பது ஒரு முக்கியக் காரணம்.

இவை தவிர, பிட்யூட்டரி சுரப்பியின் அருகிலேயே கட்டி உண்டாகுதல், தலையில் அடிபடுவது, மூளைக்காய்ச்சல் நோய், கருப்பையில் நீர்க்கட்டி உண்டாதல் போன்ற பிரச்னைகளால் பெண் குழந்தைகளுக்கு மேற்கண்ட உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகைகள் முன்கூட்டியே சுரக்க ஆரம்பிக்கின்றன.

சிறுவர்களுக்கு பிட்யூட்டரி சுரப்பி அருகில் கட்டி அல்லது பிட்யூட்டரி சுரப்பியில் பாதிப்பு, விரைப்பையில் கட்டி போன்ற காரணங்களால் பருவம் அடைதல் விரைவாக நடக்கிறது (இது வெளியே தெரிவது இல்லை என்றாலும், மன ரீதியாக சில மாற்றங்களை ஏற்படுத்தும்).

ஒரு சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பருவம் அடைவதற்கான அறிகுறிகள் 7-8 வயதுக்கு முன்பாகவே தெரிய ஆரம்பித்தால், உடனடியாக என்டோகிரைனாலசி(ஜி) அல்லது மகப்பேறு மருத்துவர்களைச் சந்தித்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.

மிக சீக்கிரத்தில் பருவம் அடைவதால், ‘என்ன பிரச்னை?’ என்று நினைக்கலாம். ஒரு ஆண் அல்லது பெண் பருவம் அடையும்போது அவர்களின் எலும்பின் வளர்ச்சி நின்று, ஒன்றுகூடுகிறது. இதனால் கடைசிக் கட்ட உயரம் என்பது குறைகிறது.

பெண்களுக்கு உடல் ரீதியாக, சமூக ரீதியாகப் பல்வேறு பிரச்னைகளும் வர ஆரம்பிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மருத்துவச் சிகிச்சை மூலம் பூப்பெய்துதலை சில வருடங்கள் தள்ளிப்போட முடியும்” என்கிறார் மருத்துவமனையின் முதுநிலை நாளமில்லா சுரப்பிகள் சிகிச்சை நிபுணர்.

குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்துவதைத் தவிர்க்க, ஊட்டச்சத்து மற்றும் உடல் எடை மேலாண்மை நிபுணர் கூறும் யோசனை இது…

”உடல் பருமன் அதிகரிப்பது மட்டும் அல்ல… உடல் உழைப்பு குறைந்துபோனதும்கூட இந்தப் பிரச்னைக்கான காரணம். எனவே, குழந்தைகளை ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கச் செய்யாமல், ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்த வேண்டும்.

கொழுப்புமிக்க உணவு வகைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடலாம். இறைச்சிக்காக பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் எடையை அதிகரிக்க உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர் வகை (hormone) மருந்து வகைகள் தரப்படுகின்றன. எனவே இறைச்சிக்காக வளர்ககப்படும் வகைக் கோழிக் கறியைத் தவிர்த்து, நாட்டுக் கோழி இறைச்சியைச் சாப்பிடலாம்.

கால்சியம் சத்துக்காக அதிக அளவில் பால் அருந்துவது தவறு. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், கீரை வகைகளைச் சாப்பிடலாம். இவற்றில் கால்சியமும் நிறைய உள்ளது.”

நம் கலாசாரத்தில், ‘ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால், அவள் திருமணத்துக்குத் தயார்’ என்பதை ஊராருக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் சடங்கு செய்வார்கள். இது அந்தப் பெண்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒரு பெண் பூப்படைந்துவிட்டாள் என்றாலே, ‘ஆண்கள் எதிரில் செல்லக் கூடாது; தொட்டுப் பேசக் கூடாது’ என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் போடுவார்கள். நேற்றுவரை தன்னுடன் விளையாடிய பையன்களுடன் பேசவே கட்டுப்பாடு எனும்போது, அது அவர்களது மனதில் பெரும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

பருவம் அடையும்போது பால் இன ஊக்கிகள் (Sex hormones) அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மன ரீதியாக சில பிரச்னைகள் எழும். வளர்நிலைப் பருவத்தில் ஒரு பெண் தன் வயதுக்கு நிகரான மற்ற பெண்களைப் பார்த்துத்தான் தன்னை ஒப்பிட்டுக்கொள்வார்.

பூப்பெய்தும் பருவத்தில், சக வயது நண்பர்களைவிட அவர்களது உயரம், உடல் எடை போன்றவை அதிகரிக்கும். இது அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

தவிர, முகப்பரு, மாதவிடாய் போன்ற மாற்றங்கள் அசௌகரியமாக, தினசரி வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியவையாக இருப்பதால், மன ரீதியான பாதிப்புகளும் அதிகரிக்கும்.

சிறு வயதிலேயே ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டாலும், மனதளவில் அவள் இன்னமும் குழந்தையாகத்தான் இருப்பாள். இந்த மாதிரியான நேரத்தில் பெற்றோர்கள் அவளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பதற்குப் பதில், அன்பாக, ஆதரவாக இருக்க வேண்டும்.

அவளுக்குப் புரியும் விதத்தில் சில விசயங்களை பக்குவமாக, நாசூக்காகச் சொல்லித்தர வேண்டும். பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் அவளுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமும் மன ரீதியாக எழும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் நம்பிக்கையோடு.

தள்ளிப்போடுவது சாத்தியமே!

சங்க காலத்தில், ‘பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை’ என வகைப்படுத்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கைப் பருவங்களுக்கு இடையே இருந்த இடைவெளி இப்போது சுருங்கிவிட்டது.

100 வருடங்களுக்கு முன்பு, சராசரியாக 15 முதல் 17-வது வயதில்தான் பெண்கள் பூப்பெய்தினார்கள். ஆனால், இன்றோ, 6 முதல் 13 வயதுக்குள் சிறுமிகள் பூப்பெய்திவிடுகின்றனர்.

நம் மூளையில் ‘கை(ஹை)போதலாமசு(ஸ்)’(hypothalamus) எனும் ஒரு பகுதி பிறந்ததில் இருந்தே சுவிட்ச் ஆஃப் மோடில்தான் இருக்கும். உரிய வயது வரும்போது அந்த சுவிட்ச் ஆன் ஆகி பால் உணர்வுத் தூண்டுதலை ஏற்படுத்தும். அடுத்து, ‘கைபோதலாமசு’ பிட்யூட்ரியைத் தூண்டிவிட்டு, மாதவிடாய் சுழற்சிக்கான ஹார்மோனைத் தூண்டும்.

அப்போது கட்டிகள் தோன்றும். இந்த கட்டிகள் கைபோதலாமசிலும் வரலாம்; பிட்யூட்ரியிலும் வரலாம். பூப்பெய்தும் பருவத்தில், பெண்கள் உடல்வாகைப் பொறுத்து இந்தக் கட்டிகள் உருவாகும். சிறு வயதிலேயே கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கான சிகிச்சைகள் செய்து பூப்பெய்தும் காலத்தை தள்ளிப் போடலாம்.

குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு, பாரம்பரிய உணவுப் பழக்கத்தையும் போதிய உடல் பயிற்சிகளையும் கற்றுத் தருவது பெற்றோர்களின் கடமை!.
நன்றிகள்.

Thursday 25 April 2013

உயிர்க்கொல்லி நோயை விட மோசமான நோய்...............!

உயிர்க்கொல்லி நோயை (aids) விட மோசமான இன்னொரு நோய் உடலுறவு மூலம் பரவுகிறது!


இது நாள் வரை மனிதர்களை ‘உயிர்க்கொல்லி நோய்’ எனும் நோய்தான் மிரட்டி வந்தது. அதற்கு ஓரளவு மருந்து கண்டுபிடித்து விட்ட நிலையில் உடலுறவு மூலம் பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் -ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்று அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது. .

இந்த வகையானது ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை இப்போதே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.

உலக அளவில் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐநா கூறுகிறது.

இது நாள் வரை வெட்டை நோயை எதிர்க்கவல்ல புதிய கிருமிகளின் (bacteria) வளர்ச்சியை தடுக்கும் மருந்தை (Antibiotic) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நோயாளிகளுக்கு மற்ற சிகிச்சைகளைத் தந்து காலம் தாழ்த்துவதைத் தவிர சுகாதாரத்துறை நிர்வாகிக்களுக்கு வேறு வழியில்லாமல் போகலாம் என நுண்ணுயிரியல் வல்லுநர்களுக்கான (Microbiologist) இந்த மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.

அதே சமயம் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்கள், மேம்பட்ட நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் போன்றவை அவசியம் என இம்மாநாட்டில் பாலுறவு நோய்கள் சம்பந்தப்பட்ட பிரிட்டனின் முன்னணி நிபுணரான பேராசிரியை கேத்தி ஐசன் குரலெழுப்பவுள்ளார்.
நன்றிகள்.

Wednesday 24 April 2013

தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.............!

இன்று சித்திரை (ஏப்ரல்) 24 - தமிழுக்குச் சேவை செய்த சி (ஜி).யு. போப் அவர்களின் பிறந்த நாள். அமெரிக்காவில் பிறந்து கிறிசுத்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.


இறப்புக்கு பின் தனது கல்லறையில் ''இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்'' என்ற வரி இடம்பெற வேண்டும் என்று தனது உயிலில் கூறினார்.

ஒரு விளையாட்டாளரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மக்கள், இவரை மறந்து விட்டது ஏனோ?

உலகினில் இவர் மறைந்தாலும், தமிழுக்காக இவர் ஆற்றிய சேவை என்றும் மறையாது.. என்றுமே, நம் உள்ளங்களில் இவர் வாழ்வார்.
நன்றிகள்.

Tuesday 23 April 2013

பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது.............!

நம் பாரம்பரியமான நடன கலையான பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும், அதை பற்றி இன்று அறிவோம்.



அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை.

அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும்.

அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும்.

இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன.

பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் அபிநயிக்கப்படுகின்றன. அவையாவன

1 ஆகார்ய அபிநயம்
2 வாசிக அபிநயம்
3 ஆங்கிக அபிநயம்
4 சாத்விக அபிநயம்

ஆகார்ய அபிநயம்

அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.

சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச் செய்து கொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். 

இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.

வாசிக அபிநயம்

பாடலுக்கேற்ப அபிநயிப்பது வாசிக அபிநயம் எனப்படும். இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆங்கிக அபிநயம்

உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் எனப்படும். உடல் உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கைமுத்திரைகள் முதன்மையானவைகளாகவும், சிறப்பானவைகளாகவும் கொள்ளப்படுகின்றன.

கைமுத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரைகளும், இரட்டைக்கை முத்திரைகளும் உள்ளன. ஒற்றைக்கை முத்திரை தமிழில் பிண்டி எனவும், சமசுக்கிருதத்தில் அசம்யுதகசுத்(ஹஸ்)தம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இரட்டைக்கை முத்திரை தமிழில் பிணையல் எனவும், சமசுக்கிருதத்தில் சம்யுதகசுத்(ஹஸ்)தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டுகின்றன. கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.

சாத்விக அபிநயம்

நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர்வுகளை கை முத்திரைகள், முக பாவம் போன்ற உடல் மெய்பாடுகளால் அபிநயித்தல் சாத்விக அபிநயம் எனப்படும்.

அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன

 வெட்கம் (ஸ்ருங்காரம் )
 வீரம்
 கருணை
 அற்புதம்
 சிரிப்பு (ஹாஸ்யம்)
 பயம் (பயானகம்)
 அருவருப்பு (பீபல்சம்)
 கோபம் (ரெளத்ரம்)
 அமைதி (சாந்தம்)
நன்றிகள்.

பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது..............!

திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது.


அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.

அவை-

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு.

தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது. தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது.

தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர்.

பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.)

தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை. இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்.

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.)

மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]. புலிப்பல் தாலி, புலிநகத் தாலி, அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது. 
நன்றிகள்.

Monday 22 April 2013

துரைராசா பாலம் என அழைக்கப்பட............!

பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1934ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை பருத்தித்துறை கா(ஹா)ட்லிக் கல்லூரியிலும் பயின்றார்.


இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியற் கற்கை நெறியை நிறைவு செய்தார். அன்றைய காலத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்திலேயே பொறியியற்பீடம் இயங்கியது.

தன்னுடைய பட்ட மேற்படிப்பை கேம்பிறிச்(ஜ்) பல்கலைக் கழகத்தில் 1962ம் ஆண்டு கலாநிதிப் பட்டத்துடன் நிறைவு செய்தார். ‘துரை விதி’ என்னும் மணல் துறை சார்ந்த விதி ஒன்றையும் நிறுவினார். இன்றும் கூட குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் கேம்-களிமண் நியமப்பாதை (Cam- clay locus) ஆனது துரை விதியிலிருந்தே பெறப்பட்டது.

தொடர்ந்து இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்பட்டதும் அங்கும் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற்பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றினார்.

பின்னர் 1988ம் ஆண்டு புரட்டாதி மாதத்திலிருந்து 1994ம் ஆண்டு சித்திரை மாதம் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தராக கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஒன்று நிறுவப்படும் என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதி மொழியையடுத்தே பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். ஆனால் இன்று வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்படவேயில்லை. எனினும் தற்போது அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியரினால் நிர்மாணிக்கப்பட்டது. சிங்களப் பேராசிரியர் ஒருவரின் சவாலை ஏற்று மகாவலி ஆற்றில் ஒரேயொரு தூணை மட்டும் நிறுவி இப்பாலம் கட்டப்பட்டது. ‘துரைராசா பாலம்’ என அழைக்கப்பட வேண்டிய அந்தப் பாலம் இன்று ‘அக்பர் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது. தமிழர்களாகிய எங்கள் பலருக்கே இந்த விடயம் தெரியாது.

நாங்களாவது அந்தப் பாலத்தின் பெயரை ‘துரைராசா பாலம்’ என அழைப்பதன் மூலம் பேராசிரியரின் திறமைகளை மறைக்காமல் நினைவு கூறப்பட வேண்டியவரை நினைவு கூர்ந்து உண்மைகளை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிய போது உடுப்பிட்டியிலிருந்து ஏறக்குறைய முப்பது கிலோ மீற்றர்கள் தூரமுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துவிச்சக்கர வண்டியிலேயே சென்று வந்தார்.

போர் மேகங்கள் வடமராட்சிப் பகுதியை அதிகமாகச் சூழ்ந்திருந்த அந்தக் காலப்பகுதியிலும் வல்லை வெளியினூடாகப் பயணம் செய்து தன்னுடைய பணியைத் தவறாது செய்தார். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் ஒழுக்க சீலர். அதனால் எல்லோருக்குமே பேராசிரியர் துரைராசாவை மிகவும் பிடிக்கும்.

அளப்பரிய சேவைகள் செய்த பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நோயின் கொடிய பிடியில் சிக்கி 1994ம் ஆண்டு ஆனிமாதம் 11ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.
நன்றிகள்.

Sunday 21 April 2013

முடிக்கு அழகே கருப்பு நிறம்.....!

இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?


முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.

சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும்.

எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும்.

அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம்.

சரி, இப்போது கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும், இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம்.

அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பின்பற்றி வந்தால், இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம்.

1) முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் பழுப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது.

மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையைத் தேய்த்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.

2)  கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு தேய்த்தால், கருமையான முடியைப் பெறலாம்.

3) முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.

4) வெளியே வெயிலில் செல்லும் போது, முடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது துண்டு (Scrap) அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.

5)நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை தேய்த்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.

6) ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அசு(ஸ்)வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது. எனவே இந்த அசுவகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.

7) அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.

8) கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.

9) எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும்.

10) முடிக்கு இராசயனம் கலந்த மயிரை சுத்தம் செய்யும் பொருள் (Shampoo) பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும். 
நன்றிகள்.

Friday 19 April 2013

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி...!

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?


அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.

உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும்.

இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.

அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ கூடி 'த' வாகவும், ம்+இ கூடி 'மி' யாகவும், ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று தமிழு என்று ஆக்கி, பிறகு கடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ் என்று அழைத்தனர். அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!
நன்றிகள்.

"ஈழம்" அல்லது "எலம்"..............!



அசோக சக்கரவர்த்தியின்  கண்டகா(ஹா)ர் 
கல்வெட்டு (கி.மு. 250  )

ஆப்கானிசுத்(ஸ்)தானில், கி.மு. 250 ல் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடம் கண்டகா(ஹா)ர்! ஆமாம், ஆப்கானிசுத்தானில் உள்ள கண்டகார் நகரம் தான்.

இறுதியாக, கம்யூனிசுட்(ஸ்)டுகள் ஆப்கானிசுத்தானை ஆண்ட காலம் வரையில், இந்தக் கல்வெட்டு காபுல் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்தது. இசுலாமிய கடும்போக்காளர்களின் ஆட்சி ஏற்பட்ட குழப்பகரமான காலப்பகுதியில் காணாமல் போய்விட்டது.

ஆப்கானிசுத்தானில் கண்டெடுக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுகளில், பிரசைகளின் நன்னடத்தையை குறிக்கும் அறிவுரைகள் எழுதப் பட்டுள்ளன.

இதிலே நாம் கவனிக்க வேண்டிய விடயம், கல்வெட்டில் பயன்படுத்தப் பட்டுள்ள தொடர்பாடல் மொழி. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சின் கீழ் இருந்த இந்திய சாம்ராச்சியத்தில், அந்தந்த மாநில மக்களின் பிரதான மொழிகளில் கல்வெட்டுகள் எழுதப் பட்டன.

ஆப்கானிசுத்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டுகளில், கிரேக்கம், அராமி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன. கண்டகார் நகருக்கு வடக்கே இருந்த பகுதிகளில், கிரேக்க காலனிகள் உருவாகி, அது கிரேக்கர்களின் நாடாக இருந்தது. அதனால் கிரேக்க மொழியில் எழுதப் பட்டது.

அப்படியானால் அராமி மொழி? கீ(ஹீ)ப்புரு, அரபு மொழிகளுக்கு நெருக்கமான, இயேசு நாதர் பேசிய அராமி மொழி, ஒரு காலத்தில் மேற்காசிய நாடுகளின் சர்வதேச மொழியாக இருந்தது.

பாலச்சுத்தீனம் முதல், பாகிசுத்தான் வரையில் அராமிய மொழி பேசத் தெரிந்த மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் யார்? திராவிடர்களா? ஆப்கானிசுத்தானில், பசுட்(ஷ்)டூன் மக்கள் வாழும் பிரதேசத்தை பற்றி, புராதன கால கிரேக்கர்களும், ஈரானியர்களும் எழுதி வைத்துள்ளனர்.

"அந்த மக்கள் இடுப்பில் ஒரு துண்டு  மட்டுமே ஆடையாக அணிந்திருந்தனர். மார்புப் பகுதியை மூடுவதில்லை. காலில் செருப்பு அணிந்திருந்தார்கள். அவர்களது வாள்கள் நீளமானவை என்பதால், வாளின் உறையில் தொங்கும் பட்டியை, தோளில் மாட்டி இருப்பார்கள்..."

என்று அந்த புராதன கிரேக்க, ஈரானிய வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளது (கி.மு. 450). (ஆதாரம்: Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang)   ஆப்கானிசுத்தானின் ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள், பண்டைய தமிழர்களின், அல்லது திராவிடர்களின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றது.

ஆப்கானிசுத்தானின் பூர்வகுடிகள், தமிழர்களின் முன்னோர்களாக இருந்திருக்கலாம்.

இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், தற்போது ஆப்கானிசுத்தானில் வாழும் இனங்கள் பேசும் மொழிகள். இன்று ஆப்கானிசுத்தானில் யாரும், கிரேக்க அல்லது அராமிய மொழி பேசுவதில்லை.  (அராமி மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய சிரியாவில் மட்டும் சில ஆயிரம் பேர் பேசுகின்றனர்.)

பெரும்பான்மை இன மக்கள் பேசும் பசுட்டூன் மொழி, ஈரானின் பார்சி மொழிக்கும், இந்தியாவின் இந்தி மொழிக்கும் இடைப்பட்டது. இந்தோ-ஈரானிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி.

பசுட்டூன் இன மூதாதையர்கள், வடக்கே இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பதை, அந்த மக்களே ஒத்துக் கொள்கின்றனர். அதாவது, அவர்களது சரித்திர சான்றுகள் யாவும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிந்தியவை தான். அப்படியானால், பசுட்டூன் மக்கள் ஆரியர்களா? ஆமாம்!

ஆப்கானிசுத்தான் தேசிய விமான சேவையின் பெயர்: "ஆரியானா".  அதன் அர்த்தம், "ஆரியர்கள்" என்பது தான்! ரிக் வேதத்தில் "ஆர்ய வர்த்தம்" என்று அழைக்கப் பட்ட நாடு, பண்டைய ஆப்கானிசுத்தான் தான்.

மகாபாரதத்தில் "காந்தர்வர்கள்" என்ற இன மக்களின் குறிப்புகள் வருகின்றன. காந்தர்வர்கள் என்பது, காந்தார நாட்டை சேர்ந்த மக்களை குறிக்கும். இன்றைய கண்டகார் நகரின் பழைய பெயர், காந்தாரம்!

கண்டகார் என்பது, அங்கு குடியேறிய ஆரியர்களால்  ஆரியமயமாக்கப் பட்ட இடப் பெயர் ஆகும்.  இன்று பசுட்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தில், ஒரு காலத்தில் சக்திவாய்ந்த காந்தார தேசம் இருந்தது.

காந்தர்வ மக்கள், இன்றைய பசுட்டூன் மக்கள் அல்ல. காந்தர்வ மக்கள், பௌத்த மதத்தையும், இந்து மதத்தையும் பின்பற்றினார்கள். இந்து மதம் என்றால், எந்த இந்து மதம்? ஆரியர்களின் இந்து மதமா? அல்லது திராவிடர்களின் இந்து மதமா? இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, ஆப்கானிசுத்தானில் தான் தோன்றியது.

ஆப்கானிசுத்தானில் வாழ்ந்த திராவிட மக்களுடன், ஆரியர்களான பசுட்டூன் மக்களின் இனக்கலப்பு நடந்துள்ளது. அது இரண்டு வகையில் நடந்திருக்கலாம். ஒன்று, கலப்பு  மண உறவுகளின் விளைவாக  உருவான புதிய இனம்.

இரண்டாவது, தாய்மொழியை மறந்து விட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை ஏற்றுக் கொள்ளுதல். ஏதோ ஒரு வகையில், ஆரியர்களான பசுட்டூன் மக்களின் மொழி, அந்தப் பிரதேசத்தில் நிலைத்து விட்டது.

தமிழர்களின் தேசிய அரசியல் போன்று, பசுட்டூன் மக்களின் தேசியமும், மொழியை அடிப்படையாக கொண்டது, என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஒரு பசுட்டூ தனது மொழியை பேசத் தெரியாமல், வேறொரு அந்நிய மொழியை பேசினால், அவன் பசுட்டூன் இனத்தை சேர்ந்தவனாக கருதப்பட மாட்டான்.

19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பசுட்டூன் இனத்தை சேர்ந்த சா(ஷா) மன்னர், பார்சி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்ததால், பெரியதொரு கலவரம் வெடித்தது.  அதன் பிறகு தான், ஆப்கானிசுத்தான் தலைநகரம், கண்டகாரில் இருந்து காபுலுக்கு இடம் மாறியது.

ஆப்கானிசுத்தானில் இன்னமும் திராவிட இனங்கள் இருக்கின்றனவா? ஆம்! "பிராகூ(ஹு)ய்" (Brahui)  என்ற, திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த, மொழி ஒன்றை பேசும் மக்கள் இன்னமும் வாழ்கின்றனர்.

அவர்கள், ஆப்கானிசுத் தானிலும், பாகிசுத்தானிலும் பல இடங்களில் சிதறிப் போயுள்ளனர். மேலும், பலுச்சி மொழி பேசும் மக்கள், ஒரு காலத்தில் பிராகூய் மொழி பேசியிருக்கலாம். அதனை நிரூபிக்கும் வகையில், இரண்டு இனங்களினதும் கலாச்சாரங்கள் ஒன்றாக உள்ளன.

பலுச்சி ஒரு இந்தோ-ஈரானிய மொழி என்பது மட்டுமே வித்தியாசம். "திராவிடர்களான" பலுச்சி, பிராகூய் மக்கள் இன்று இசுலாத்தை பின்பற்றுகின்றனர். ஆனால், இசுலாம் என்பது, 1500 ஆண்டுகளுக்கு முன்னர், அரேபியாவில்  தோன்றிய புதிய மதம் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களை விட, "பாசை(ஷை)" என்றொரு வித்தியாசமான மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். பாசை மக்கள் தம்மை பசுட்டூனியருடன் அடையாள படுத்திக் கொள்கின்றனர். ஆனால், தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டவர்கள்.

பாசை இன மக்கள் மத்தியில், கருப்பு நிற மேனியை கொண்ட, அல்லது தென்னிந்தியர்கள் போல தோற்றமளிக்கும் பலரை காணலாம். (எல்லோரும் அப்படி அல்ல.)

வடக்கு ஆப்கானிசுத்தானில், காபுல் நகருக்கு கிழக்கே, பாகிசுத்தான் எல்லையோரம், "நூரிசுத்(ஸ்)தான்" மாகாணம் உள்ளது. அவர்கள் தனித்துவமான, "நூரிசுத்தானி" மொழி பேசுகின்றனர்.

பார்சி, பசுட்டூன், உருது ஆகிய இந்தோ-ஈரானிய மொழிகளுடன் சம்பந்தமில்லாத தனித்துவமான மொழி அது. ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு வெள்ளை இனத்தவர்  போன்று தோற்றமளிக்கின்றனர்.  அந்த மக்களுக்கு, நூரிசுத்தானி என்ற பெயர் வரக்காரணம் ஒரு தனிக்கதை.

19 ம் நூற்றாண்டு வரையில், நூரிசுத்தானி மக்கள் "இந்துக்களாக" இருந்தார்கள். (இன்று மிகத் தீவிரமான இசுலாமிய மதப் பற்றாளர்கள். ரசி(ஷ்)ய படைகளினால் ஆக்கிரமிக்கப் பட முடியாமல் இருந்த, ஒரேயொரு மாகாணம் அது தான்.)

வேத கால இந்துக் கடவுளரான, இந்திரன், வருணன், அக்கினி போன்ற தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் முசுலிம்களாக மாறிவிட்டாலும், பாரம்பரிய வேத கால இந்துக் கலாச்சாரங்களை இன்னமும் பின்பற்றி வருகின்றனர்.

19 ம் நூற்றாண்டு வரையில் அந்த மாகாணம், "காபிர்சுத்(ஸ்)தான்" என்ற பெயரில் அழைக்கப்பட்டது.  இசுலாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், அது நூரிசுத்தான் என்று மாற்றப் பட்டது.

ஒரு காலத்தில், தெற்கு ஈரானில் இருந்த, "ஈழம்" அல்லது "எலம்"  (Elam)  என்ற, திராவிடர்களின் ராச்சியத்தை சேர்ந்த மட்பாண்டங்கள், ஆப்கானிசுத்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டன.

அது அந்தக் காலத்தில் இருந்த, வர்த்தகத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு, ஆப்கானிசுத்தானில் வாழ்ந்த திராவிடர்கள் எல்லாம், கறுப்பின மக்கள் என்று நாங்கள் அறுதியிட்டுக் கூற முடியாது.  உண்மையில், ஆரியர், திராவிடர் என்று, மக்களை இன அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாது.

"ஆரியர்கள் என்றால் வெள்ளையர்கள், திராவிடர்கள் என்றால் கருப்பர்கள்" என்ற, கருப்பு-வெள்ளை பாகுபாடு, எல்லா இடங்களிலும் பொருந்தாது.

"ஆரிய கலாச்சாரம், திராவிட கலாச்சாரம்" என்று நாங்கள் பாகுபடுத்தலாம். ஆரியர்களின் வருகைக்கு முன்னர், ஆப்கானிசுத்தானில் திராவிடர் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த வெள்ளையின மக்களும்  அதனை பின்பற்றி வந்தனர்.

சில நூறாண்டுகளுக்குப் பின்னர், அந்த இடத்தில் ஆரிய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், அங்கு வாழ்ந்த கறுப்பின மக்களும் அதனை பின்பற்றி வந்தனர்.

தெற்காசியாவில், இன்றைய ஆப்கானிசுத்தான், பாகிசுத்தான், வட இந்திய பகுதிகளில் வாழ்ந்த ஒரு முக்கியமான இனத்தவர்கள் பற்றி, நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.

 "யூதர்கள் (ஹீபுருக்கள்), பாலசுத்தீனத்தில் மட்டுமல்ல, தெற்காசியாவிலும் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்," என்று நான் சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள்.

நாங்கள் இப்போதும், ஐரோப்பியரின் மூளையை பொருத்திக் கொண்டு சிந்திப்பதால், எமது கடந்த கால வரலாற்றையே மறந்து விட்டோம்.

ஐரோப்பியர்களோ, தங்களது தேச, இன நலன்களை மையமாக கொண்டு தான், அனைத்தையும் ஆராய்கிறார்கள். 3000 வருடங்களுக்கு  முன்னர், கீப்புரூ  மக்கள் யூத மதத்தை பின்பற்றவில்லை.

ஆனால், யூதர்களின் புனித மொழியான கீப்புருவுக்கு நெருக்கமான அராமிய மொழி பேசினார்கள். யூத மதம் கூட, சரதூசர் என்ற (ஈரானிய) தீர்க்கதரிசியின் மத தத்துவங்களை உள்வாங்கிக் கொண்ட புதிய மதமாக உருவெடுத்திருந்தது.

ஒரு காலத்தில், பாகிசுத்தானில் இருந்து பாலசுத்தீனம் வரையில், அராமி  மொழி பேசப் பட்டு வந்தது.  அந்தப் பகுதியில் வாழ்ந்த எல்லோரும் அராமியை தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை.

ஆனால், சர்வதேச மொழியாக தெரிந்து வைத்திருந்தனர். கீப்புரு மொழி பேசிய யூதர்கள், அரேமி வம்சாவளியினர் தான். அராமி, கீப்புரு மொழிகளை, தமிழ், மலையாளத்துடன் ஒப்பிடலாம். 19 ம் நூற்றாண்டு வரையில், ஆப்கானிசுத்தானில் இலட்சக் கணக்கான யூதர்கள் வாழ்ந்தார்கள்.

1836 ம் ஆண்டு, ஆப்கானிசுத்தானை ஆண்ட மன்னர் தோசு(ஸ்)த் மொக(ஹ)மட் கான், இசுலாமிய மதத்தை அரச மதமாக்கி, கடுமையான மத சட்டங்களை அமுல்படுத்தினார். மது பாவனை தடை செய்யப் பட்டது.

இதனால், ஆப்கானிசுத்தானில் வாழ்ந்த பெருந்தொகையான யூதர்கள் வெளியேறி விட்டனர். அன்று அவர்கள் பாலசுத்தீனா செல்லவில்லை. 

அருகில் இருந்த மத்திய ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். 20 ம் நூற்றாண்டில், இசுரேல் என்ற நாடு நிறுவியதன்பின் பின்னர், எஞ்சியிருந்த ஆப்கான் யூதர்களும் வெளியேறி விட்டார்கள்.

ஆப்கானிசுத்தானில் வாழ்ந்த யூதர்கள் எப்படியான தோற்றத்துடன் இருந்திருப்பார்கள்? இது சம்பந்தமான பழைய புகைப்படங்கள், ஆம்சு(ஸ்)டர்டாம் நகரில் உள்ள யூத கலாச்சார-வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அந்தப் படத்தில் இருக்கும் யாரும், வெள்ளையின ஐரோப்பியராக தோற்றம் அளிக்கவில்லை.

மாறாக, இந்தியர்களை போன்ற முகச் சாயலை கொண்டிருந்தனர். ஆப்கானிசுத்தானில் வாழ்ந்த கீ(ஹீ)ப்புருக்கள், அல்லது அரேமியர்கள், தென்னிந்திய திராவிடர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இன்றைக்கும் ஒரே மாதிரியான  சொற்கள், தமிழிலும், கீ(ஹீ)ப்புருவிலும் காணப் படுகின்றன.
நன்றிகள்.

Wednesday 17 April 2013

காமவர்த்தினி என்றும் அழைக்கப்படுகிறது..................!

தொட்டாற்சிணுங்கி இய‌ற்கை வைத்தியம்:-

தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல... உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.

தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள்.

சர்க்கரைக்கு சர்க்கரைக்கு சரியான தீர்வு! 

தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை ஒரு கரண்டி அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும். இதே சூரணக் கலவையைத் தினமும் மூன்று வேளை ஒரு கரண்டி அளவு எடுத்து, காய்ச்சியப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களும் குணமாகும்.

சிறுநீர் சிக்கல் தீர...

சுத்தம் செய்த தொட்டாற்சிணுங்கி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேரை மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய இந்த நீரை கால் அவுன்சு(ஸ்) அல்லது அரை அவுன்சு வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நீர் அடைப்பு, கல் அடைப்பு ஆகியவை குணப்படும்.

தளர்ச்சி நீங்க... மலர்ச்சி ஓங்க... 

தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து, மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். நீர் ஒரு பங்கு ஆகும் வரையிலும் நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் கசாயமாக்க வேண்டும்.

சூடு தணிந்த பின் கசாயத்தை வடிகட்டி, அரை அவுன்சு வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், தளர்ச்சி நீங்கி உடல் தேறுவதோடு சுக்கில (விந்தணு) இழப்பும் நீங்கும். இதனால்தான் தொட்டாற்சிணுங்கி வேர் 'காமவர்த்தினி’ என்றும் அழைக்கப்படுகிறது.
நன்றிகள்.

பேசிப் பழகிவிடு தமிழா............!

கடல்கடந்து திரவியங்கள் தேட - நீ
கடல்கடந்து செல்வதெல்லாம் சரியே;
உடல்சுமந்து உனையீன்ற தாயை - நீ
உணர்விழந்து மறப்பதுதான் முறையோ?


தாயை மறப்பதுவும் சரியோ? - அன்னை
தமிழை மறப்பதுவுன் நிலையோ?
பேச இனியமொழி தமிழ்தான்! - அதனைப்
பேசிப் பழகிவிடு தமிழா!


அகத்தியனார் தந்தமொழி தமிழாம் - இச்
சகத்தினிலே சிறந்தமொழி அதுவாம்;
அகத்தினிலே தவழவிடு தமிழை! - அதுதரும்
சுகத்தினிலே திளைத்துவிடு தமிழா!


நாட்டில் பலமொழிகள் இருக்கு - அதிலேநம்
தமிழுக்கே தனிப்பெரும் சிறப்பு!
வீட்டில் தமிழ்பேசு தமிழா! - நீ
விரும்பித் தமிழ்பேசு தமிழா


மூத்த மொழியென்று சொல்வார் - அதனைநம்
வீட்டு மொழியாக்கிக் கொள்வோம்;
மூத்த குடிமக்களோடு நாம்
தமிழில் உரையாடி மகிழ்வோம்!


தமிழை அமுதென்று சொன்னார் - நீ
தமிழைப் படித்துப்பார் புரியும்!
தமிழெங்கள் உயிரென்றும் சொன்னார் - தாசன்
கவிதை படித்துப்பார் தெரியும்!


வார்த்தை வளமிகுந்த தமிழை - நாம்
வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்!
வழக்கம் மாற்றிக்கொண்டால் - சொற்கள்
வழக் கொழிந்து போகும்!
நன்றிகள்.

Tuesday 16 April 2013

உடலுக்கு தேவை நடை பயிற்சி.................!

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடைபயிற்சி தான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது நடைபயிற்சி போங்க என்பதாக தான் இருக்கும்.


ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ நடக்க ஆரம்பித்து நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம். 

இது ஆண்களுக்கு 92 முதல் 102 பாத அடியாகவும் பெண்களுக்கு 91 முதல் 115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால் தான் ஆண்களுக்கு இணையாக நடக்க முடியும். நடைப்பயிற்சியின் போது வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.

சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி காலுறைகள் (shocks), செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும். 
நன்றிகள்.

Sunday 14 April 2013

அழிந்து வரும் கொடுக்காப்புளி.............!

"அழிந்து வரும் கொடுக்காப்புளி மரங்கள்"


கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரத் தளபாடங்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சிலரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் கொக்கைத்தடிகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கைத்தடிகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு கொக்கைத்தடிகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்..?!
நன்றிகள்.

தமிழ் புத்தாண்டாய் கொண்டாடி.............!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...


ஏன் சித்திரை ஒன்றை தமிழ் புத்தாண்டாய் கொண்டாடி வருகிறோம் ?..

கடந்த சில வருடங்களாக இதற்கு சர்ச்சைகளையும் கிழப்பி வருகிறோம் . இருக்கிறது இதற்கு சரியான விளக்கம் ...

நாம் வாழும் பூமி , பால்வெளி திரளில் சூரிய குடும்பத்தில் ஒரு கோள் அவ்வளவுதான் .. இந்த சூரிய குடும்பத்தை ஆட்சி செய்பவன் சூரிய பகவான். நம் முன்னோர்க்கு முன்னோர்கூட இயற்க்கை வழிபாட்டைத்தான் மேற்கொண்டு இருந்தார்கள்.

அதிலும் சூரிய வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது . இது இந்துக்கள் மட்டுமல்ல , இசுலாம் மதத்துக்காரர்கள் பிறை நிலவை வழிபட்டனர், கிரிசுத்துவர்கள் நச்சத்திரத்தை வழிபட்டனர்.

இப்படி எல்லோருக்கு மாதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் வழிபாடு இயற்கையை நோக்கியதாக தான் இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் இந்த உலகையே ஒளியுட்டி கொண்டு இருக்கும் சூரிய பகவான்.

இந்த சித்திரை மாதத்தில்தான் மிகவும் பலம் வாய்ந்தவராக வலம் வருகிறார். அதனால்தால் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த சூரிய பகவன் பலம் வாய்ந்த மாதமான சித்திரை மாதத்தில் இருந்தே நம் மாதம் கணக்கிடப்படுகிறது.

ஏன் இந்த சித்திரை மதத்திற்கு சித்திரை என்று பெயர் வந்தது தெரியுமா ? .. 

இந்த சித்திரை மாதம் சூரியன் உச்சத்தில் மாதம், இந்த மாதத்தில் சந்திரனும் பலம் பெரும் நாள் பௌர்ணமி . இந்த பௌர்ணமி துலாம் ராசி கட்டத்தில் உள்ள சித்திரை நட்சத்திரத்தில் சந்திர பகவான் வரும்போது நிகழ்வதால் இம்மாதத்திற்கு இப்பெயர் வந்தது.

இந்த நாளில் சூரியனும் சந்திரனும் உச்ச பலத்தை எட்டுவதால், இந்த சித்திரை நட்ச்சதிரத்தை கொண்டே இந்த சித்திரை மாதத்தை முதல் மாதமாக கொண்டாடி வருகிறோம்.
நன்றி.

Saturday 13 April 2013

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு.............!


சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.

இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது

 அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதைக் கற்பனை வளம்மிக்க கவிஞர்கள் உயர்வு நவிற்சியாக வருணித்துள்ளனர்.


"வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் கொடுவரிக்
குருளைகூட்டுள் வளர்த்தாங்குப் பிறர், பிணியகத்திருந்து
பீடுகாழ், முற்றி யருங்கரை கவியக்குத்திக் குழி
கொன்று யானை பிடிபுக்காங்கு"(பட்டினப்பாலை 220 – 228)

"நுண்ணுதி னுணர நாடி நண்ணார்
செறிவடைத் திண்காப் பேறிவாழ் கழித்
துருகெழ தாப மூழி னெய்திப்
பெற்றவை மகிழ்தல் செய்வான்" (பட்டினப்பாலை 220 – 228)

புலிக்குட்டி, கூண்டுக்குள்ளஇருந்து வளர்ந்தே பலம் பெறுவது போல, எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த போது கரிகாலன் வல்லவன் ஆயினான். ஒரு குழியில் யானை பிடித்து அடக்கப்படுகிறது.

ஆனால் அதே குழியை நிரப்பி தப்பித்து ஓடி, பெண் யானையுடன் சேர்ந்துவிடும் இயல்பு அதற்கு உண்டு. இவ்வாறே கரிகாலன் சிறையில் இருந்த காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து, சீரிய முடிவுகளுக்கு சிறைக்காவலரரைக் கொன்று தப்பி, பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.

இவனது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே.

ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்துவிட்டான். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமன்னன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான்.

இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானுற்றுப்புலவர் விளக்குகிறார்.

இவனது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்ககாமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான்.

கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவன் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழந்திருந்தான் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார்.

நாங்கூரைச்சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தயை கரிகாலன் மணந்தான் என்று உரையாசிரியர் நச்சினார்கினியார் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார்.

புராணக்கதைகள்

பழங்காலந்தொட்டே கரிகாலனைப்பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது.

இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பட்டோ செய்து கொண்டான்.

காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக்கட்டினான் என்பதை ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம்.

சமயம் இறப்பு

வைதீக மதத்தில் கரிகாலனுக்கு இருந்த நம்பிக்கை பற்றியும் அவன் இறந்ததால் ஏற்பட்ட ஆறாத்துயரத்தைப் பற்றியும் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
நன்றிகள்.

தயிரை விடச் சிறந்தது..............!

தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.


எத்தனைதான்  வண்ணவண்ணமான குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா?

வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், செரிமானம் சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு குவளை  பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும்.

கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா?

மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பொசுபரசு சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது.

எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள். இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும்.

அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க..

தேவையான பொருட்கள்:

தயிர் – 1/2 குவளை 
தண்ணீர் – 1 ½ குவளை 
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 குவளை  மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும்.

தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை குவளையில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:

வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.

கோடை காலத்தில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்...! 
நன்றிகள்.

Thursday 11 April 2013

இந்தியா முழுவதும் தமிழே.............!

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!


இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன் பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான்.

தமிழனின் தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.

இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!

நெல்லை பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும், எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப் பேசினோம்.

‘‘1989-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குநராக நான் பணியாற்றிய போதுதான் தமிழ்நாட்டில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடந்தன என்று ஆரம்பித்தார் அவர்.

‘‘குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை ஆறு கடலோடு கலக்கும் அழகன்குளம், ஈரோடு மாவட்டம் கொடுமணல், நாகை மாவட்டம் பூம்புகார் ஆகிய இடங்களில் நிலம் மற்றும் கடல் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன. 

அழகன்குளத்தில் கொத்துக் கொத்தாய் ரோமானிய காசுகள், இடுப்பில் குழந்தையுடன் கூடிய மரத்தால் ஆனதாய் சிற்பம், கண்ணாடி கைப்பிடியை வைத்திருக்கும் மூன்று தாய்மார்களின் சிற்பம் போன்றவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அந்தப் பொருட்கள் மூலம் பழங்காலத் தமிழன் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

கொடுமணலில் சாம்பிராணிப் புகை போடப் பயன்படும் செப்புப் பாத்திரம், இரும்பு ஈட்டிகள், தவிர ராஜசுத்(ஸ்)தானிலிருந்து தருவிக்கப்பட்ட கார்னிலியன் கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டன.

மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் சங்ககால படகுத்துறை, நீர்த்தேக்கம், புத்தவிகாரை போன்றவை கிடைத்தன. தமிழக தொல்லியல்துறை சார்பில் நாங்கள் செய்த அகழ்வாராய்ச்சியில், கிழார்வெளி என்கிற இடத்தில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய இன்னொரு படகுத்துறை, படகுகளைக் கட்டும் இலுப்பை மரம், எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளைக் கண்டுபிடித்தோம்.

அதேபோல் கோவா கடல் ஆய்வு நிறுவனத்துடன் சேர்ந்து நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து, கடல் தற்போது 5 கி.மீ. தூரம் முன்னேறி ஊருக்குள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். தவிர, ‘சைட் ஸ்கேன் சோனார் என்கிற நவீன தொழில்நுட்ப முறையின் மூலம் கடலுக்குள் 21 அடி ஆழத்தில் 5 கட்டடங்கள் இருப்பதையும் கண்டுபிடித்தோம்.

அவை செம்புரான் கல்லினால் கட்டப்பட்ட கோயில்கள் அல்லது புத்த விகாரைகளாக இருக்கலாம்.

அதுபோல பூம்புகார் அருகே வானகிரி பகுதியில் கடலுக்குள், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு டேனிசு(ஷ்) கப்பல்மூழ்கிக் கிடப்பதைக் கண்டுபிடித்தோம்.

அது டென்மார்க் அல்லது இங்கிலாந்திலிருந்து வந்த கப்பலாக இருக்கலாம். அதிலிருந்த ஈயக்கட்டிகள் சிலவற்றை எடுத்து கடல் அகழ் வைப்பகத்தில் வைத்தோம். நான் பதவியிலிருந்த காலத்தில்தான் இவை அனைத்தும் நடந்தன என்றவர், அடுத்ததாக...

‘‘தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணிக் கரையிலுள்ள ஆதிச்சநல்லூரை ‘தமிழகத்தின் க(ஹ)ரப்பா என்றே சொல்லலாம். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல்களம் அது.

கடந்த 2004-2005-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் அகழாய்வு இயக்குநர் எஸ்.டி.சத்தியமூர்த்தி தலைமையில் அங்கே நீண்டநாட்களாக நடந்த அகழாய்வுகளில் 150 -க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

அதில் ஒரு தாழி, 3000 ஆண்டுகள் பழைமையானது. அதியற்புதமான அந்தத் தாழியில் ‘அப்ளிக்யூ முறையில் ஒரு பெண், மான், வாழை மரம், ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பது மாதிரியான உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்தப்பானைகளின் ஓட்டில் இருந்த சில குறியீடுகள் கரப்பா கால உருவ எழுத்தை ஒத்திருந்தன. அது மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது. தவிர, அங்கு கிடைத்த செப்புப் பொருட்கள் குச(ஜ)ராத் டைமமாபாத்தில் கிடைத்தது போன்ற கரப்பா காலப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு தாழியின் உட் பகுதியில் பழந்தமிழ் எழுத்துக்கள் இருந்தன. அதைப் பார்த்த சத்தியமூர்த்தி உடனடியாக கல்வெட்டுத்துறை இயக்குநர் எம்.டி.சம்பத்தை அழைத்து வந்து, அந்தக் கல்வெட்டை வாசிக்கச் சொன்னார்.

அதில் ‘கரி அரவ நாதன் என்று எழுதப்பட்டிருந்ததாக சம்பத் சொல்லியிருக்கிறார் ‘கதிரவன் மகன் ஆதன் என்று அதற்குப் பொருள். ஆதனைப் புதைத்த தாழிதான் அது.

கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் போன்றோரும் அந்தத் தாழியை அபூர்வமானது, அந்தப் பழந்தமிழ் எழுத்துக்கள் கரப்பா கால உருவ எழுத்துக்களைப் போல இருப்பதாக கருத்துச் சொன்னார்கள். அந்தத் தகவல்கள் கடந்த 01.07.05-ம் தேதி ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளிவந்தன.

ஆனால் அதன்பிறகு அவர்களுக்கு என்ன நெருக்கடி வந்ததோ? தற்போது தாழியில் கல்வெட்டே இல்லை என்று சொல்கிறார்கள். ‘அது அபூர்வமான தாழி என்று சொன்ன ஐராவதம் மகாதேவன், இப்போது, ‘அது கரப்பா கால எழுத்தல்ல என்கிறார்.

தாழியைக் கண்டுபிடித்த சத்தியமூர்த்தியும், சம்பத்தும் கூட இப்போது அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அவர்கள் இருந்த பல மேடைகளில் நான் இதுபற்றிப் பேசியும் அவர்கள் பதில் சொன்னதில்லை. இதையெல்லாம் நான் எழுதிய ‘தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம் என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

‘வடநாட்டில் அசோகர் கால கல்வெட்டுக்கள் தான் முதன்மையானவை, பழைமையானவை, அதன் காலம் கி.மு. 2300 ஆண்டுகள் என்பதுதான் இதுவரை சொல்லப்பட்ட வரலாறு.

ஆனால், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியிலிருந்த பழந்தமிழ் எழுத்துக்கள் கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முந்தையவை. அதாவது அசோகர் கல்வெட்டை விட 200 ஆண்டுகள் பழைமையானவை.

அப்படியானால் தமிழ்மொழியில் இருந்து கடன்பெற்றுத்தான் அசோகர் அவரது கல்வெட்டுகளைப் பொறித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இதுவரை வடக்கிலிருந்துதான் எழுத்துக்கள் வந்தன என்கிற வாதம் இதனால் தவிடுபொடியாகிறது. ‘தமிழன் அந்தக் காலத்திலேயே கற்றறிந்தவனாக இருந்திருக்கிறான். அவன் பயன்படுத்திய தமிழ் மொழியில்தான் இந்திய மக்கள் அனைவரும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உறுதியாகிறது.

இந்த வரலாற்று உண்மைகள் வெளியே வந்து தமிழனுக்குப் பெருமை சேர்ந்து விடக்கூடாது என்பதாலேயே சிலர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆய்வு முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன பின்னரும் ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கை வெளியிடப்படாததற்கு இதுவே காரணம். 
நன்றிகள்.