Friday 28 September 2018

மாதங்களின் பெயர்க்காரணம்...............!.

12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் எப்படி வந்தது என்பதற்கான காரணத்தைப் பற்றி காண்போம். 

ஜனவரி :

ஜனவரி மாதத்தின் பெயர் ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் அமைந்தது. ஜனஸ் என்ற ரோமானிய கடவுளுக்கு கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருக்கின்றன.

பிப்ரவரி :

மாதங்களில் இரண்டாவது மாதத்தின் பெயர் பிப்ரவரி ஆகும். ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டு அழைத்தனர். பெப்ருய என்பதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச் : 

மார்ச் என்ற பெயர் மார்ஸ் என்ற ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் ஆகும். இந்த மார்ஸ் கடவுள் ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும். மார்ஸ் என்ற கடவுளின் பெயரால் தோன்றியதுதான் மார்ச் மாதம் ஆகும். 

ஏப்ரல் : 

ஏப்ரல் என்ற பெயர் ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது. 

மே : 

இந்த மாதத்திற்கு மே என்று பெயர் வரக் காரணம், உலகத்தை சுமக்கும் அட்லஸின் மகளின் பெயர் மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே மாதம் ஆகும். 

ஜூன் : 

ரோமானியர்கள் ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக வழிபட்டு வந்தனர். அந்த தேவதையின் பெயரால் வந்தது தான் ஜுன் ஆகும். 

ஜூலை : 

மாதங்களில் ஏழாவது மாதத்தின் பெயர் ஜூலை ஆகும். இம்மாதம் ஆரம்ப காலத்தில் ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 

ஆகஸ்ட் : 

ஆகஸ்ட் மாதமானது ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே பிறகு ஆகஸ்ட் என மருவியது. 

செப்டம்பர் : 

ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர். மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது. 

அக்டோபர் : 

அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக இருந்தது. அக்ட்டோ என்றால் எட்டு. இதுவும் பெயர் மாற்றம் செய்யப்படாமல் எட்டாவது மாதத்திலிருந்து பத்தாவது மாதமாக மாறிவிட்டது. 

நவம்பர் : 

நவம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான நவம் என்றால் ஒன்பது என்று அர்த்தம். இந்த நவம்பர் மாதத்தை ஆரம்பத்தில் ஒன்பதாம் மாதமாக கணித்தனர். இந்த மாதம் பதினொன்ராவது மாதமாக மாறிய பிறகும் இந்த மாதத்தின் பெயர் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. 

டிசம்பர் :

டிசம்பர் மாதத்தில் முதல் மூன்று எழுத்துக்களான டிசம் என்றால் பத்து என்று அர்த்தம். இதனால் டிசம்பர் என்று அழைக்கப்பட்டது. பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், பன்னிரென்டாம் மாதமாக மாறிய பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

                                                                                                                                                                                                                                                                                                              நன்றிகள்.

Thursday 27 September 2018

அந்தக் காலத்தில் மழைமானி.....................!.

அந்தக் காலத்தில் மழைமானி பற்றி தெரியாத தகவல்.

உரல் உணர்த்தும் உண்மை.ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். . 

முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர். 

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும். .இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். 

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள். மழை என்பது மழைத்துளிகளின் தொகுப்பு என்பதை அறிவோம். 

அதன் அடிப்படையில் அதன் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவற்றைக் காண்போம் 

தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். 

சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். 

மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். 

பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும். 

அடைமழை – ஐப்பசியில் பெய்வது 

கனமழை – கார்த்திகையில் பெய்வது 

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது. 

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல். 

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை. 

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால் அது கனமழை.யாகும். 

மழையைப் பற்றித் திருவள்ளுவர் நிறையப் பேசியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் வியக்க வைக்கும் செய்தி 20ம் நூற்றாண்டின் அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசியிருப்பது. 

இந்த உலகம் தோன்றிய போது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். 

திருவள்ளுவர் இதை ‘மாறா நீர்’ என்று உரைத்திருக்கிறார். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார். கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - (குறள் 701) இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்.

பழ. கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு (குறள் 452) எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

                                                                                                                               நன்றிகள்.

Wednesday 26 September 2018

அது என்ன கூப்பிடு தூரம்.......................................?.

அது என்ன கூப்பிடு தூரம்? 

’இன்று தான் தெரிந்தது. 

கூப்பிடு தூரம் 

அது எவ்வளவு தூரம் என்பதைப் பார்ப்போம். 

வீரசோழிய உரையில், ‘முழ நான்கு கோல்; அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு’ 

என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

முழநான்கு கொண்ட கோல் = 6 அடி நீளமுள்ள கோல் 

இந்தக் கோலால் 500 = 500 X 6 = 3000 அடிகள். 

கிட்டத்தட்ட முக்கால் மைலுக்குச் சற்றுக்குறைவான தூரம். 

இன்னொன்று ‘யோசனை’ எனப்படும். இதன் அளவுகள் ஒன்றுடன் 

ஒன்று மிகவும் வித்தியாசப்படும். 

பொதுவாக இது நான்கு காதம் கொண்டது. 

அப்படியானால் 

12000 நீட்டளவு (Yard) X 4 = 48000 நீட்டளவுகள் கொண்டது. கிட்டத்தட்ட 30 மைல் என்று கொள்ளலாம். 

ராமாயணத்தில் எல்லாமே யோசனைக் கணக்கில்தான் இருக்கும். 

நூறு யோசனை நீளம், நூறு யோசனை உயரம், நூறு யோசனை அகலம் என்று இப்படி. நாட்டுக்கு நாடு பல அளவைகள் இருந்திருக்கின்றன. 

பொதுவான வழக்கில் இருந்ததைச் சொல்கிறேன். 

இந்த வாய்ப்பாடுகளையெல்லாம் எங்காவது சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் கொள்ளுப்பேரப்பிள்ளைகளிடம் நீங்கள் கதை சொல்லும் போது, “இப்படியெல்லாம் அளந்து விட்டிருக்கிறாங்கப்பா, நம்ப ஆளுங்க”, என்று அளந்துவிடலாம். 

8 நெல் = 1 விரக்கடை (0.75 inches) 

12 விரக்கடை = 1 சாண் (9 inches) 

2 சாண் = 1 முழம் (18 inches) 

2 முழம் = 1 கஜம் (3 feet = 36 inches) 

4 முழம் = 1 பாகம் ( 6 feet) 

6000 பாகம் = 1 காதம்(12000 கஜம்) 

1 காதம் என்பது கிட்டத்தட்ட 7 மைல். 

கீலோமீட்டராக்க 7 X 8 / 5 செய்துகொள்ளுங்கள். 

இதனை ‘ஏழரை நாழிகை வழி’ என்றும் சொல்வார்கள். 

ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம். 

ஒரு சராசரி மனிதன் 3 மணி நேரத்தில் பொடிநடையால் கடக்கும் தூரமாக இதைக் கருதினார்கள். 

சரிதானே? மூன்று மணி நேரத்தில் 7 மைல். ஒரு மணிக்கு ஒன்றே முக்கால் மைல். 

மனிதனே மூன்று மணி நேரத்தில் காத தூரம் போகிறான். 

ஆனால் ஒரு குறிப்பிட்ட குதிரை அப்படியல்ல. 

காளமேகப்புலவர் சொல்கிறார் கேளுங்கள்: 

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க 

பின்னே இருந்திரண்டு பேர்தள்ள – எந்நேரம் 

வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை 

மாதம்போம் காத வழி! 

விகடராமன் என்பவனுடைய குதிரை ஒரு காதம் செல்வதற்கு 

ஒரு மாதம் பிடிக்குமாம். அதுவும் முன்னாலிருந்துகொண்டு மூன்று பேர் கடிவாளத்தைப் பற்றியிழுக்க, பின்னாலிருந்துகொண்டு இரண்டு பேர் தள்ளினால்தான் அந்த வேகமும்கூட. 

சிவகங்கைப் பக்கத்தில் ராசசிங்கமங்கலக் கண்மாய் என்றொரு பேரேரி இருக்கிறது. 

ராசசிம்ம பாண்டியன் காலத்தில் கிபி 800 வாக்கில் வெட்டப்பட்டது. 

அதற்கு நாற்பத்தெட்டுக் கலிங்குகள் இருந்தனவாம். 

ஒரு காதத்துக்கு ஒரு கலிங்கு வீதம் கட்டியிருக்கிறார்கள்.

அதையொொட்டி ஒரு பெயர் அந்தக் கண்மாய்க்கு ஏற்பட்டிருக்கிறது. 

‘நாரை பறக்காத நாற்பத்தெட்டுக் காதவழி’. 

நாரைகள் ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து நவம்பர் டிசம்பர் மாதத்தில் தெற்கு நோக்கி பறந்துவரும். 

ஆங்கில V எழுத்து அமைப்பில் அவை கூட்டங்கூட்டமாகப் பறந்துவந்து தமிழக நீர்நிலைகளில் நிலை கொள்ளும்.

நாரை அடாது விடாது நீண்ட தூரம் பறக்கக்கூடியது. அப்பேர்ப்பட்ட நாரையும்கூட ராசசிங்கமங்கலத்துக் கண்மாயின் நாற்பத்தெட்டுக் கலிங்குகளையும் ஒரே வீச்சில் பறந்து கடக்கமாட்டாதாம்.

                                                                                                                                       நன்றிகள்.

Sunday 23 September 2018

தொப்புளில் ஏன் எண்ணெய்விட வேண்டும்.................?

நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத பரிசு. 62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது.

இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண் மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும் ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டுவிட்டதால் மீண்டும் பார்வை ஒருபோதும் வராது என்றும் கூறிவிட்டார்....

அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான். தொப்புள் உருவானவுடன், அது தாயின் நஞ்சுக்கொடியுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்படுகிறது.

நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான். அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம்.

காரணம் ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.

முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு 270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் ஆகின்றன.

நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். தொப்புளே நமது உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட.

தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்.

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு, முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கண்கள் வறட்சி நீங்க குறைந்தபார்வை சரியாக பளபளப்பான தலைமுடி பெற மெருகூட்டப்பட்ட சருமம் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும். முழங்கால் வலி குணமடைய இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி விளக்கெண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும். 

நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட சருமத்திலிருந்து நிவாரணம் பெற இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி கடுகு எண்ணெய் தொப்புளில் விட்டு ஒன்றரைஇன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும். 

தொப்புளில் ஏன் எண்ணெய்விட வேண்டும்? 

எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது. 

சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் காயப்பொடியுடன் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும். எண்ணெயும் அவ்வாறே வேலை செய்கிறது.

                                                                                                                             நன்றிகள் .

Thursday 20 September 2018

விலை மதிப்பற்ற செல்வம் ..............!.

மனிதனுக்கு இந்த உலகில் விலை மதிப்பற்ற செல்வம் அறிவு..!

பலமான ஆயுதம் பொறுமை..!

மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை..!

அற்புதமான மருந்து புன்னகை..!

சிந்தித்து செயலாற்றுங்கள்.

                                                                                                                நன்றிகள்.

மகனி்ன் திகைப்பு.................!.

தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான். 

அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன். 

அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன் 

தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள். 

அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்? 

இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செய்தாக வெண்டுமென நினைத்தான். தொடர்ந்து அம்மாவிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். அம்மாவும் மறுத்தலித்து வந்தாள். ஒரு கட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்த தாய், மகனிடம், 

சரி…..நீ தொடர்ந்து கேட்பதால், ஒன்று சொல்கிறேன். அதை நிறைவேற்றினால் போதும் – என்றாள். 

மகனுக்கு ஒரே மகிழ்ச்சி. 

அம்மா என்ன வேண்டும் சொல்லுங்கள் – என்றான் மகன், 

ஒன்றுமில்லை மகனே, நீ குழந்தையாக இருந்த போது எனது அருகில் படுத்து உறங்கினாயே, அதைப் போல இன்று ஒரு நாளைக்கு என்னுடன் படுத்து உறங்கு – எனக் கூறினாள் தாய். 

அம்மா, நீ கேட்பது, வித்தியாசமாக உள்ளது. இருப்பினும் அது உனக்கு மகிழ்ச்சியை தருமென்றால் அதை இன்றே நிறைவேற்றுகிறேன் என்று அன்றிரவு, தனது தாயின் படுக்கையில், தாயுடன் படுத்துக் கொண்டான். 

தனது மகன் தூங்கி விட்டான் என்று அறிந்த தாய், எழுந்து சென்று ஒரு வாளியில் நீரை நிரப்பி கொண்டு வந்து, தனது மகன் படுத்திருந்த இடத்தில் ஒரு குவளை தண்ணீரை வீசி நனைத்தாள். தூக்கத்தில் தான் படுத்திருக்கும் இடம் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் மறு பக்கத்திற்கு உருண்டு சென்று படுத்தான். அங்கே சென்று மகன் தூங்கியதும், இன்னொரு குவளை நீரை எடுத்து அவன் படுத்திருந்த இடத்தில் நீரை வீசி ஈரப்படுத்தினாள். மீண்டும் படுக்கை ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கத்திலேயே படுக்கையின் கால்புறம் இடம் நோக்கி நகர முயன்றான். சிறிது நேரத்தில் அந்த இடமும் ஈரமாக இருப்பதை உணர்ந்த மகன், தூக்கம் கலையவே, எழுந்து பார்க்கும் போது, தனது தாய் தண்ணீர் குவளையுடன் இருப்பதைப் பார்த்து, கோபமாக, 

என்ன அம்மா செய்கிறாய்… தூங்க கூட விட மாட்டேன் என்கிறாய்? ஈரத்தில் தூங்க வேண்டுமென எப்படி எதிர் பார்க்கிறாய் – எனக் கேட்டான் மகன். 

அப்போது தாய் அமைதியாக சொன்னாள்: 

மகனே.. அம்மாவின் தியாகத்துக்கு ஈடுகட்ட, திருப்பி ஏதாவது செய்ய வேண்டுமென நீ நினைக்கிறாய். நீ குழந்தையாக இருக்கும்போது இரவு நேரங்களில் அடிக்கடி படுக்கையை நனைத்து விடுவாய். உடனே நான் எழுந்து உனக்கு உடையை மாற்றி ஈரமில்லாத இடத்தில் படுக்க வைத்து விட்டு, நான் ஈரமான இடத்தில் படுத்துக் கொள்வேன். முடியுமானால், உன்னால் இந்த ஈரமான படுக்கையில் ஒரு இரவு தூங்க முடியுமா? – என்றாள் தாய் 

மகன் திகைத்து நின்றான். 

இது உன்னால் முடியுமென்றால், தாயின் தியாகத்திற்கு ஈடு கொடுத்ததாக எடுத்துக் கொள்கிறேன் – என்றாள் தாய். 

நண்பர்களே, உலகில் எல்லா கடன்களையும் அடைத்து விட முடியும், ஒன்றைத் தவிர. அதுதான் தாயின் தியாகம். தாயின் தியாகத்திற்கு, எந்த ஒரு மகனாலும் ஈடு செய்ய முடியாது. தாய் காட்டிய அரவணைப்பு, அன்பு, காலநேரம் பாராது, தனது மகனை சீராட்டி, உணவூட்டி. வளர்த்து, தனது தேவைகளை தியாகம் செய்து தனது மகனே உலகம் என்று அவனது வளர்ச்சியில் ஆனந்தம் கொண்டு, தனது குழந்தைக்காக தன்னையே வழங்கிய தாயிற்கு நீ எதை திருப்பி கொடுத்து ஈடுகட்ட முடியும்? நீ அவளுடைய சதையும், ரத்தமுமாகும், தாயில்லாமல் நான் இல்லை என்பதை நினைவில் கொள், ஏனென்றால் உனது தாய் இதை என்றுமே மறந்ததில்லை. 

எவ்வளவுதான் வயதானாலும், தாயின் நினைவு நமது வாழ்வில் தினமும் ஒரு அங்கம் தான். அன்பே சிவம் என்கிறார்கள் பெரியோர்கள். என்னைப் பொறுத்தவரை, அன்பே தாய் என்பது தான் நிதர்சமான உண்மை. 

நினைத்தபோது இறைவனைக் காணத்தான், இறைவன் தாயைப் படைத்தான். 

பாசம் உங்களை இழக்கலாம் ஆனால் நீங்கள் பாசத்தை இழக்காதீர்கள்.....!

                                                                                                                                                                                                                                                                                                             நன்றிகள்.

Saturday 15 September 2018

அப்பாவுக்கு மகள் எழுதும் மனம் கவர்ந்த கவிதை.................!.

நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ.. எப்பொழுது நேசிக்க தொடங்கினேன் என்ற கேள்வியை மட்டும் கேட்காதே அப்பா.. 

அம்மாவின் அடிவயிற்றில் கைவைத்து என்னுடன் பேசினேயே!! அப்பொழுதே நிகழ்ந்து இருக்கக்கூடும்... 

இல்லையேல்...கொடி கூட அவிழாத நிலையில் உன் கையில் ஏந்தி உச்சிநுகர்ந்து முத்தம் பதித்தாயே!

அப்பொழுது நிகழ்ந்து இருக்கக்கூடும்... 

ஆயிரம் ஆயிரம் கதைகளை சொல்லி அன்னை உறங்க வைத்த பொழுதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா?! 

கண் எரியாமல் நீராட செய்வதும் ஒரு கலையாகும் அதில் தாயை விட நீ தேர்வு பெற்றதாலோ என்னவோ..? 

உன்னை மட்டுமே தேடி அழுதேன் குளிக்கும் வேளையில்.. நடைபழகும் வேலையை விடுத்து என் பாதங்கள் தரையில் ஊன்றியதாய் நினைவில்லை..

உன் தோள் மீது அமர்ந்து என் கொலுசோடு உரசிய உன் சட்டை பொத்தான்கள் மட்டுமே நியாபகம்.. சின்ன சின்ன மணிகளை வைத்து தைத்த பாவாடை சட்டை அணிந்த பொழுது "தேவதையே எனக்கு மகளாக பிறந்துவிட்டாள்!!"என்று கொண்டாடினாயே அதுவும் நினைவிருக்கிறது அப்பா... 

உலையில் கொதித்திட அரிசி இல்லை என்ற பொழுதிலும் நான் கேட்டேன் என்பதற்காக இனிப்புகளை வாங்கி தந்து தாயாரின் வெறுப்பை சம்பரித்துக் கொள்வாயே!

அது ஏன் அப்பா? மிரட்டலாக என்னை வகுப்பறையில் அமர்த்திவிட்டு கலகத்துடன் வெளியேறும் உன்னை யான் அறியாமல் யார் அறிவார்? 

தாவணியின் நுனியினை பிசைந்தார் வண்ணம் உன் முன் நானி நான் நிற்க.. உன்னை விட்டு விலகிச்செல்ல வெகு நாட்கள் இல்லை என்று நினைத்தாய் போலும்! 

கண்களில் துளிர்த்த நீரை யவருக்கும் தெரியாமல் துடைத்துக்
கொண்டாய்.. பலவாறாக தம்மிடம் நான் வாதாடினாலும் உன் ஒரு சொல்லுக்கு கட்டு படாமல் நான் இருந்ததில்லை அப்பா.. 

நான் சமைத்த உணவை நா கூசாமல் புகழ்ந்து தள்ளுவாயே...! உன் பொய்யிற்க்கும் ஒரு காதல் உண்டு அப்பா... என் விழி அசைவினில் என் தேவைகளை பூர்த்தி செய்யும் உன்னை தெய்வத்திற்கு ஈடாக பார்க்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்... 

பக்தி இருந்தால் ஒழிய கிடைக்கும் தெய்வத்தின் வரம்.. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காக்கும் நீயே ஒரு வரம் அல்லவா? 

மலையளவு துன்பத்தை கூட திணையளவும் பொருட்படுத்தாத நீ.. என் கண்களில் நீரை கண்டால் உடைந்துப் போவது ஏனோ? 

நான் விரும்பாததை நீ என்னிடம் புகுத்தியதும் இல்லை.. என் விருப்பத்தை நீ வெறுத்ததும் இல்லை... என் ஒரே ஒரு கவலை என்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு கண்ணீர் விடும் உன்னை தேற்ற என்னை அன்றி எவருக்கு தெரியும் என்பதே?! 

என் கணவனை எந்நாளும் உன்னுடன் ஒப்பிட மாட்டேன்.. எனக்கு நன்றாகவே தெரியும் என்னை முழுதாக நேசிக்கும் ஒரே ஒரு ஆடவன் நீ மட்டும் தான் என்று... 

இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று எண்ணியதில்லை.. 

ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் மறுபடி உன் மகளாக பிறக்கும் வரம் மட்டும் போதும் அப்பா.... 

மகளை பெற்ற மகாதேவர்களுக்கு சமர்ப்பணம். *( யாரோ எழுதி எனக்கு வந்ததை கண்களில் கசிந்த கண்ணீரோடு வாசித்து, பின் பகிர்ந்துள்ளேன் ) 

எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட (FOEWARD TO ALL LOVABLE) அப்பாக்களுக்கு.

                                                                                                                                      நன்றிகள்.

Friday 14 September 2018

சமாதானம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும்......................!.

சமாதானம்

சமாதானம் என்பது இப்போது உதட்டளவில் பேசப்படும் ஒரு விடயமாகியுள்ளதால் உலகெங்கும் வாழும் மக்களிடையே பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. 

சமாதானத்திற்காக உழைப்பவர்களும், சமாதானத்திற்காக உழைக்கும் நாடுகளும் தங்கள், தங்கள் புவிசார், நலன்சார், பொருளாதார நலன்கள் சார்பாகவே உழைக்கிறார்கள். இப்படி இவர்கள் உழைபதனால் உண்மையான சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியுமா? இதற்காக எதனை அமைப்புக்களை ஏற்படுத்தினாலும், எவ்வளவு காலத்தையும், எவ்வளவு பொருள் விரயத்தை மேற்கொண்டாலும் அதற்கான எந்தப்பயனையும் எட்டமுடியாத ஒன்றாகவே இருக்கும்.


ஆதலால், `வாழு வாழ விடு' கோட்பாட்டை பின்பற்றினால் மாத்திரமே உலகில் சமாதானம் நிலவும். 

இந்த கோட்பாட்டின் அடிப்படையில் உலக மக்கள் யாவரும் அடுத்தவர் நிம்மதியைக் குலைக்காமல் நாம் வாழ வேண்டும். தாம் என்ன உரிமைகளுடன் வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனரோ அதே உரிமையுடன் மற்றவர்களும் வாழ உரிமையுண்டு என்பதை மனப்பூர்வமாக உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும்.
யதார்த்தமாக உலகை நோக்கும்போது எங்கே சமாதானம், எங்கே சமாதானம் என்று தேடுவது மட்டுமல்ல எது சமாதானம் என்று அறிந்து கொள்ளும் ஆர்வமும் கூட வருகின்றது. உலக சமாதானத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சமாதானம் என்றால், என்ன என்று ஒரு வரையறை செய்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. உலகிற்கு சமாதானம் மிகவும் முக்கியமானது. 

சமாதானம் எவ்வாறு ஏற்படும் என்பதை வரையறை செய்வது அவசியமாகும். நாடுகளுக்கிடையே யுத்தங்கள் நிகழாதிருப்பது மட்டும்தான் நிலையான சமாதானமா? அல்லது நாடுகளெல்லாம் ஓரிடத்தில் கூடிப் பேசுவது மட்டும் தான் சமாதானமா?


இல்வேயில்லை சமாதானம் எனக்குரல் கொடுப்பவர்களும், சமாதானத்திற்காக உழைப்பவர்களும் தங்களுடைய நாடுகளில் தயாரிக்கும் மனிதகுலத்திற்கு பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களின் விற்பனை, உற்பத்திகளை முற்றாகக் கட்டுப் படுத்துவதோடு, அவற்றின் தொழிநுட்ப அறிவினை ஏனைய நாடுகளிற்கோ, ஆயுத உற்பதியாளர்களிற்கு விற்பனை செய்வதை சட்டப்படி முடுக்கவேண்டும். 

எங்கெங்கு தனிமனிதசுதந்திரமோ, இன, மத, குழுக்களிற்கான. சுதந்திரமோ பறிக்கப்பட்டால் அவ்விடங்களில் உண்மை, நேர்மை, நடுநிலைமை பேணப்பட்டால். அதுதான் சமாதானம்.


உலக சமாதானத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சமாதானம் என்றால், என்ன என்று ஒரு வரையறை செய்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. உலகிற்கு சமாதானம் மிகவும் முக்கியமானது. சமாதானம் எவ்வாறு ஏற்படும் என்பதை வரையறை செய்வது அவசியமாகும். 

சமாதானம், அமைதிக்குப் பதிலாக தினந்தோறும் இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் பகைமை, வெறுப்பு, அச்சம் ஆகிய கொடிய சிந்தனைகள் விதைக்கப்பட்டு அவை கருகிவிடாமலிருக்க உரமூட்டி வளர்க்கப்படுகின்றன. 


நாளும், பொழுதும் இதே சிந்தனை மேலோங்கி செயற்படுத்தப்படுகிறது. இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் ஆயுதவிற்பனை மூலம் பெரும் பணம் ஈட்டுபவர்களும், இடைத்தர்களுமேயாகும். 

மனிதகுலத்திற்கு பேரழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகள் உலகில் சமாதானத்திற்காக உழைப்பதை போன்று வேசமிடுகின்றனவேயனறி அதற்காக உழைக்கவில்லை என்பதே உண்மையாகும்.


முன்கதவினூடாக சமாதானத்திற்கும், பின்கதவிநூடாக ஆயுதவிற்பனையே மேற்கொள்ளுவதாலேயே இப்பூமிப்பந்தில் சமாதானம் எட்டாப்போருளாகிவிட்டது. 

இதனாலோ, எனவோ சமாதானம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் அளவிற்குப் போய்விட்டது என எண்ணத் தோன்றுகிறது.


                                                                                      நன்றிகள்.

Thursday 13 September 2018

மருத்துவம் 500 என்ற பாடலில்...................!.

இப்பாடல்......

அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற
பாடலில் இருந்து எடுக்கப்பட்டது !.

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!

                                                                         நன்றிகள்.

Tuesday 11 September 2018

மன்னித்து மகான் ஆகுங்கள்...............!.

'மன்னிப்போம்; மறப்போம்..'' ............................................

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.

உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.

அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.

அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாக, ஆரோக்கியமாக இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'எல்லா ஆராய்ச்சிகள் மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும்.

மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால், அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம்தானே முளை விடும்.

ஆம்.,நண்பர்களே..

மன்னிப்பு வாழ்க்கையை உருவாக்குகிறது !

மன்னிப்பு மனிதர்களை உருவாக்குகிறது.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.

வாழ்க்கை அழகானது, அதை மன்னிப்பின் மூலம் அனுபவிப்போம்.

மன்னித்து மகான் ஆகுங்கள்..

                                                                                                                                  நன்றிகள்.


Saturday 8 September 2018

தூங்கும் நேரம் போதுமானதா.......................... !.

நீங்கள் தூங்கும் நேரம் போதுமானதா ! 

அது ஒரு கனாக் காலம் என்பது போல 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் என்று வாழ்க்கைக்குரிய குறைந்தபட்ச அர்த்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றோ வாழ்க்கையில் தூக்கம் 6 மணி நேரம், வேலை 16 மணி நேரம் என்று மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

போதாக் குறைக்கு, 24 மணி நேரமும் ஓடுகிற தொலைக்காட்சி, தூக்கத்தில் கூட கைப்பேசியில் முகநூல் மேய்ச்சல், ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்கங்கள் என்று நம்மைத் தூங்கவிடாத விஷயங்கள் அதிகரித்துவிட்டன.

யாருக்கு எவ்வளவு தூக்கம் அவசியம்?

▶ பெரியவர்கள் அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம்.

▶ மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்குத் தூக்கத்தின் நேரம் கூடும்.

▶ புதிதாகப் பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் தூங்குகின்றன.

▶ பள்ளி செல்லும் குழந்தைகள் (நான்கு வயது வரை) 10 மணி நேரம் தூங்குவார்கள்.

▶ இளம்பருவத்தினருக்கு 8 மணி முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். பிரச்சனைக்குக் காரணம் என்ன?

கல்வியமைப்பு மற்றும் நண்பர்களுடனான பிரச்சனைகள் போன்ற காரணங்களால் இப்போதெல்லாம் கல்வி பயிலுபவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது.

தூக்கமின்மையால் அதிக அவதிக்குள்ளாகும் மற்றொரு பிரிவினர் முதுமையடைந்தவர்கள். முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, முறையற்ற தூங்கும் நேரம் போன்றவற்றால் இவர்களுடைய இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது.

சிலருக்கு 6 மணி நேரத் தூக்கம் சரியாக வரும். இன்னும் சிலருக்கு 8 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தூக்கம் தேவைப்படும்.

பாதிப்புகள் என்ன?

முறையான தூக்கம், தேவையான தூக்கம் இல்லையென்றால் கவலை, அதிகம் கோபப்படுதல், மன அழுத்தம், ஞாபக மறதி மற்றும் சக மனிதர்களுடனான தகவல் தொடர்புப் பரிமாற்றத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். மேலும் தூக்கமின்மையால் செயல்பாட்டு திறன் பாதிக்கப்பட்டு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அறிகுறிகள் என்ன?

குறட்டை விடுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வது, காலை நேரத் தலைவலி, ஞாபகமறதி, கவனமின்மை, அதிகம் கோபப்படுதல், மன அழுத்தம் மற்றும் அடிக்கடி மனநிலை மாறிக்கொண்டே இருப்பது போன்றவை சரியான தூக்கமின்மையின் அறிகுறிகளாகும்.

தூக்கமின்மையைப் போக்க வேண்டுமா? ▶ தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளப் பழக வேண்டும்.

▶ தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

▶ அதிகாலையில் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்ல தூக்கத்தை கொடுக்கும்.

▶ தூங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தைத் தரும்.

▶ படுக்கச் செல்லும் முன் கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் ! 8 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குகின்றவர்களில் 58 சதவீதம் பேரின் வேலைகள் சரியான தூக்கம் இல்லாததால் பாதிக்கப்படுகின்றது.

இது பெரும்பாலும் 35 முதல் 65 வயது வரையுள்ளவர்கள் அதிகமாக உள்ளனர். பரபரப்பான வாழ்க்கை முறையை மாற்றி நிதானப்படுத்திக் கொண்டு மன அமைதிக்கான பயிற்சிகள், போதுமான உடற்பயிற்சி, சத்தான உணவுகள் போன்றவற்றை கடைபிடித்தால் அது இனிய தூக்கத்துக்கு வழிவகுக்கும்.

தூக்கமின்மை என்பது வியாதி கிடையாது. அது பல்வேறு வியாதி காரணமாக உண்டாகும் ஒரு அறிகுறிதான். அடிப்படை காரணத்தை அறிந்து நோயை கண்டறிந்து குணப்படுத்தினால் மட்டுமே தூக்கத்தை ஏற்படுத்த முடியும்.

                                                                                                                                                                                                                                                                                                        நன்றிகள்.

Friday 7 September 2018

மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை அது நிகழ்காலம்..................!.

அழகான பணக்காரியான அதிக மதிப்புள்ள உடை உடுத்தி ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கருத்துரை வழங்கல் செய்பவரை காணச்சென்றாள்.

அவரிடம் "என் வாழ்வு ஒரே சூனியமாக இருக்கு.. எவ்வளவு இருந்தும் வெற்றிடமாக உணர்கிறேன்.

அர்த்தமே இல்லாமல் , இலக்கே இல்லாமல் வாழ்க்கை இழுக்கிறது , என்னிடம் எல்லாம் இருக்கிறது. இல்லாதது நிம்மதியும் மகிழ்ச்சியும் மட்டுமே என் மகிழ்ச்சிற்கு வழி சொல்லுங்கள் என்றாள்.

"கருத்துரை வழங்கல் செய்பவர் அவரின் அலுவலக தரையை கூட்டிக்கொண்டிருந்த ஒரு பணி பெண்ணை அழைத்தார்.

அவர் அந்த பணக்கார பெண்ணிடம், " நான் இப்பொழுது பணி பெண்ணிடம் எப்படி *மகிழ்ச்சியை* வரவழைப்பது என்று சொல்லச் சொல்கிறேன்.. நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் கேளுங்கள் " என்றார்.

பணி பெண்ணும் துடைப்பத்தை கீழே போட்டு விட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்து சொல்ல தொடங்கினாள்..

"என் கணவர் மலேரியாவில் இறந்த மூன்றாவது மாதம் என் மகன் விபத்தில் இறந்து போனான். எனக்கு யாரும் இல்லை எதுவும் இல்லை. என்னால் உறங்க இயலவில்லை. சாப்பிட முடியவில்ல. யாரிடமும் சிரிக்க முடியவில்லை.

என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். இப்படி இருக்கையில் ஒரு நாள் நான் வேலை முடிந்து வரும் பொழது
ஒரு பூனை என்னை பின் தொடர்ந்தது. வெளியே சில்லென்று *மழை* பெய்துக்கொண்டு இருந்தது , எனக்கு பூனையை பார்க்க பாவமாக இருந்தது. அதை நான் என் வீட்டில் உள்ளே வர செய்தேன்.

மிகவும் சில்லென்றிருப்பதால் நான் அதற்கு குடிக்க கொஞ்சம் பால் கொடுத்தேன்.

அது அத்தனை பாலையும் குடித்து விட்டு என் கால்களை அழகாக *வருடிக்* கொடுத்தது. கடந்து போன 3 மாதத்தில் நான் முதல் முதலாக புன்னகைத்தேன்*..!

நான் அப்பொழுது என்னையே கேள்வி கேட்டேன். ஒரு சிறு பூனைக்கு நான் செய்த ஒரு உதவி என்னை *மகிழ்ச்சிக்கிறது* எனில், ஏன் இதை பலருக்கு செய்து நான் என் மன நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாது என யோசித்தேன்.

அடுத்த நாள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அடுத்த வீட்டு நபருக்கு உண்பதற்கு கஞ்சி கொடுத்தேன்.

அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரை *மகிழ* வைத்து நான் *மகிழ்ந்தேன்*.

இப்படி ஒவ்வொரு நாளும் நான் பலருக்கு உதவி உதவி செய்து அவர்கள் மகிழ நானும் பெரு *மகிழ்வுற்றேன்*.

இன்று என்னை விட நிம்மதியாக உறங்கவும், உணவை ரசித்து உண்ணவும் யாரேனும் இருக்கிறார்களா என்பதே சந்தேகம்.

*மகிழ்ச்சி* என்பது , அதை மற்றவர்க்கு கொடுப்பதில் தான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டேன்.

"இதை கேட்ட அந்த பணக்கார பெண் ஓலமிட்டு கத்தி அழுதாள். அவளால் பச்சை காகிதம் கொண்டு வாங்கக்கூடிய எல்லாம் இருந்தது.

ஆனால் பணத்தால் வாங்க முடியாத ஒரு விடயம் *மகிழ்ச்சி,* அது அவளிடம்இல்லை.

வாழ்க்கையின் அழகு என்பது நீங்கள் எவ்வளவு *மகிழ்ச்சியாக* இருக்கிறீா்கள் என்பதில் இல்லை...

உங்களால் அடுத்தவர் எவ்வளவு *மகிழ்ச்சி* ஆகிறார்கள் என்பதிலேயே இருக்கிறது...

*மகிழ்ச்சி* என்பது போய் சேரும் இடம் அல்ல .

அது அற்புத ஒரு பயணம்...

*மகிழ்ச்சி* என்பது எதிர்காலம் இல்லை
அது நிகழ்காலம்...

*மகிழ்ச்சி* என்பது ஏற்றுக்கொள்வது அல்ல

அது ஒரு முடிவு...

நீங்கள் என்ன வைத்திருக்கிறீா்கள் என்பதில் இல்லை *மகிழ்ச்சி* நீங்கள் யார் என்பதில் தான் *மகிழ்ச்சி* !

"*மகிழ* வைத்து *மகிழுங்கள்* உலகமும் இறையும் உங்களை கண்டு *மகிழும்*..!

                                                                                                                               நன்றிகள்.

Thursday 6 September 2018

கத்தி கத்தி யாரும் தன் பலத்தை....................!.

கத்திப்பேசுவது ஒரு இயலாமை.

நாம் சொல்லப்போகும் கருத்து நியாயமானதாக இருந்தாலும் கத்திப் பேசும்போது யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கத்துவது நமக்கொரு தவறான உருவத்தை தந்துவிடும். கத்திப் பேசுவது நல்லதா ? என்று யாரைக் கேட்டாலும் நல்லதில்லை என்றுதான் சொல்லுவார்கள்.

ஆனால் கோபம் வரும்போதும், நாம் சொன்ன கருத்தை மறுத்துப் பேசும்போதும் கத்திப் பேச வேண்டிய அவசியம் வருகிறது...

அந்த நேரம் பதற்றம் அதிகமாகி இதயத்துடிப்பு எகிறி, ரத்தநாளங்கள் சூடேறி, கண்கள் சிவந்து கோபத்தின் உச்சிக்கே என்று விடுகின்றோம்..

இப்படி அடிக்கடி நடந்தால் பல வேண்டாத விளைவுகள் ஏற்படும். இதெல்லாம் அமைதியாக இருக்கும்போது புரியும்.

ஆனால் பதற்றம் தலைக்கேறும்போது யாருக்கும் புரிவதில்லை. கத்தும்போது மனிதன் என்ற நிலையை மீறி ஒருபடி கீழே இறங்கிப்போய் விடுகிறோம். அப்போது நம் மீது நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது.

கத்துவது மரியாதைக் குறைவான செயல். அமைதியின் சக்தியை யாரும் புரிந்துகொள்வதில்லை என்பதே கத்திப்பேச காரணமாக இருக்கிறது.

அமைதியானவர்களால்தான் எதையும் சாதிக்க முடியும். ‘பொறுத்தவர் பூமியாள்வார்’ என்பார்கள்.

கத்துபவர்களால் எதையுமே சாதிக்க முடியாது.

நம் உயிரின் சக்தியை சேமித்து வைத்துக்கொண்டால் தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும்.

ஆம்.,நண்பர்களே..,

உளவியல் ரீதியாக பார்க்கும்போது கத்துவது ஒரு இயலாமை. கத்தும் பழக்கம் இடம் பொருள் பார்க்காது.

கத்தி கத்தி யாரும் தன் பலத்தை நிரூபிக்க முடியாது.

கத்தாமல் வாழ்க்கை நடத்த முடியும்.

முயற்சித்துப் பார்த்தால் அந்த வாழ்க்கை ஆரோக்கியமான தாகவும், மகிழ்ச்சியான தாகவும் இருக்கும்....

                                                                                                                               நன்றிகள்.

Wednesday 5 September 2018

மனிதனின் அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது....................!.

உங்களிடம் ஈகோ இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது 

உடனடியாக தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்காமல் எல்லாம் எனக்கு தெரியும் என்று விட்டுவிட்டால் உங்களிடம் ஈகோ உள்ளது என்பதை உடனடியாக நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

ஈகோ….என்றால் என்ன?

ஈகோ என்பது என்ன? தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது.

கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது என்பதன் சுருக்கம் தான் (Ending God out) ஈகோ என்பர்.

நமது பலவீனத்தை, தவறை யாராவது சுட்டிக் காட்டினால் ஈகோ விழித்துக் கொள்கிறது. மோதல் ஏற்படுகிறது.

ஈகோ மனிதர்களின் அடையாளம்:

நம்மிடம் வணக்கத்தை கட்டாயம் எதிர்பார்ப்பர், நன்கு தெரிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போல நடப்பர். அதிகம் பேச மாட்டார். தம் இனத்துடன் மட்டும் பழகுவர். தம்மை நாடியே பிறர் வர வேண்டும் என்று இருப்பர். தன்னை விட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பர். தான் மட்டும் தான் சிறந்தவர் என நம்புவர். ஈரமும், இரக்கக் குணமும் அற்றதன்மை பேச்சில் வெளிப்படும். மற்றவர் தன்னை மதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்பதில் தீராத ஆசை கொள்வர், தன்னை முந்தி செல்வோர் மீது பொறாமைபடுவர். தன் சுயநலத்திற்காக பிறரை சுரண்டுவர்.

தன்னைவிட குறைந்த படிப்பு, பதவி, சமுதாய நிலை உள்ளவர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள். தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். தன்னை சாதாரண மனிதர்களாய் நினைத்து கொள்வதே கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத காரியமாகும். பிறர் தன்னை மிகவும் குறைவாக மதிப்பிடுவார்கள் என்றநினைப்பில் தங்களை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு முயல்வர்.

எல்லா புனிதமான தோற்றத்திற்கு மறுபுறம் இன்னொரு மோசமான குரூரமான முகமிருக்கும். தகவல் தொடர்பு சரியான முறையில் இருக்காது. தெரியாதததைக் கேட்டு தெரிந்து கொள்ள தயங்குவர். அதிக முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதில் தீவிரமாக இருப்பர். ஈகோ பிரச்சினையால் பல விசயங்களில் முரண்டு பிடிப்பது. முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிப்பது இவர்களது வழக்கமாக இருக்கும்.

ஈகோ மனிதர்களை சமாளிப்பது எப்படி?

நமது வாழ்க்கைத் துணையோ, நமது அதிகாரியோ, நண்பர்களோ உறவினர்களோ ஈகோ குணம் உடையவர்களாக இருந்து விட்டால் இவர்களிடம் சற்று விலகியே வாழ வேண்டும். இவர்களுக்கு எதிராக நாம் செயல்பட்டால் அது அவர்களின் ஈகோவைக் கூட்டிவிடும். முடிவில்லாத தொல்லைகள், மனஉளைச்சல் ஏற்படும்.

யார் பெரியவர் என்ற சிக்கலுக்கு என்னதான் வழி?

சிலர் இவர்களை விட்டு விலகி சென்று விடுகிறார்கள். இத்தகைய சூழல் அவர்களைக் காட்டிலும் மிகத் திறமையாக கையாண்டு சமாளிக்கிறவர்களும் உண்டு. சகித்துக் கொண்டு வேறு வழியின்றி அடிமையாக வாழ்க்கையை ஓட்டுகிறவர்களும் உண்டு.

இறைவனது படைப்பில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லை?

அவரவர் திறமைக்கேற்ப வாழ்வில் உயரத்தை எட்டுகிறார்கள். வளர்ச்சி பெறுகிறார்கள். எல்லோரும் ஒரே மட்டத்தில் சம சமுதாய நிலை இருக்க முடியாது.

ஈகோ குணம் படைத்தவர்களை சமாளிப்பது மிகக் கடினம் தான். நமது ஒவ்வொரு நாள் அலுவலையும் நரகமாக்கி விடுவார்கள். நம்மைத் தீவிரமாக கண்காணிப்பார்கள். குறைச்சலாக பேசுவார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. மனதில் வலியை உண்டாக்கும் நிகழ்வுகள் தொடர்கதை ஆகும். விலகிச் செல்லவும் முடியாது. இனிமையின்மை பட நேரிடும். பாதிப்பின் தாக்கத்தால், எதிலும் கவனம் செலுத்த இயலாது. இவர்களை விட்டு விலகினால்தான் அமைதி திரும்பும்.

ஈகோ மோதல்களும் விளைவுகளும்:

கூட்டு முயற்சியால் தொடர்ந்து வெற்றியும், வரவேற்பும் பெற்ற பலர் திடீரென ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரிந்த பின்னர் இருவருக்குமே பெரும் பாதிப்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் துறையே விட்டே ஒதுங்கும் நிலை பலரது வாழ்வில் ஏற்பட்டு உள்ளது. அரசியல், சினிமா, அலுவலகம், தொழில், கிரிக்கெட், உள்ளிட்ட பல துறைகளில் கூட்டு முயற்சியும் பங்களிப்புமே வெற்றிக்கு காரணமாக உள்ளது. கௌரவப்போட்டி பலரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. உரிய மரியாதை வழங்காததால் தொடர்ந்து பின்னுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் புறந்தள்ளப்பட்டவர்கள் பலர்.

இரண்டு ஆசிரியர்களுக்கு இடையே ஈகோ மோதல் ஏற்பட்டால் அது பல மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. கணவன் மனைவி இடையே ஈகோ தகராறு ஏற்பட்டு வாழ்வில் விரிசல் விழுந்தால் பிள்ளைகளைப் பெரிதும் பாதிக்கிறது....

ஈகோ மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. பிறந்த வீட்டில் மாப்பிள்ளைகளில் யாருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என சகோதரிகள் யுத்தம் செய்கின்றனர். நண்பர்கள் ஈகோ மோதலால் பிரிந்தால் அவர்கள் செய்த பல நன்மைகள் மறந்து விடும். சில தீமைகள் மட்டும் பெரிதாகத் தெரியும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைந்திட ஈகோ தடுக்கிறது. இதனால் பாதகங்களை சந்திக்க நேரிடுகிறது. அவல நிலைக்கு தள்ளி விடுகிறது. அரிதான வாய்ப்புகள் வீணடிக்கப்படுகிறது.

ஈகோ பிரச்சினையால், வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் பலருண்டு. எல்லோரும் உயிரோடு இருந்தும் எந்த உறவும் இல்லாமல் அநாதையாக இனிமையின்மைபடுபவர்கள் பலர். ஈகோவால் காதல், உறவு, நட்பு எல்லாம் நொறுங்கிப் போகிறது. அதிகமான குடும்ப உறவுக்கு ஈகோ தான் வேட்டு வைக்கிறது. வாழ்வில் வெற்றிக் கொடி நாட்டி முன்னணியில் இருந்தவர்கள் தடாலென சரிந்து விழுந்து சகதியில் புரண்டெதெல்லாம் ஈகோ என்கிற உயிர்கொல்லியால் தான். ஈகோவால் முகவரி இழந்து காணாமல் போனவர்கள் ஏராளம்.

உலக அளவில் இந்தியா சில துறைகளில் தலை நிமிரக் காரணமாக இருந்தவர்கள் கூட ஈகோ மனிதர்களால் அவமானங்களையும், வேதனைகளையும் சந்தித்து இருக்கிறார்கள். உறவுகளை அழிப்பதற்கு, பாழ்படுத்துவதற்கு, நாசம் செய்வதற்கு ஈகோ என்கிற ஒன்று மட்டும் போதுமானது.

அதிகப்படியான ஈகோ நமது திறமைகளை கொன்றுவிடுகிறது. உறவுகள் இயற்கையாய் இறப்பதில்லை. ஈகோவால் படுகொலை செய்யப்படுகிறது. ஈகோதான் மனிதனின் மிகவும் மோசமான எதிரியாகும்.

நம்முள் இருக்கும் ஈகோ என்கிற மிகப் பெரிய ஆயுதம் நம்மையே கீழே தள்ள நம்மாலேயே பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உச்சக்கட்ட சோகம். தொழில் பங்குதாரர்களின் ஈகோ மோதல் வியாபாரத்தில் நஷ்டத்தை தருகிறது.

ஈகோ அற்றவர்களின் இயல்புகள்: ஈகோ இல்லாத மனிதர்கள் பதவி கிடைத்து விட்டது என்று அதிகப்படியான அதிகாரம் செய்ய மாட்டார்கள். பதவி நிலையானது அல்ல என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அழகு கூடுகிறது என கர்வம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். ஒருநாள் உடல் அழகு மங்கப் போகிறது என்று. பணக்காரர் ஆனாலும் பகட்டாக இருப்பதில்லை. பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அந்தஸ்து வந்தாலும், உடன்பிறந்தவர்களை முற்றிலுமாக பிரிந்து விட மாட்டார்கள். நட்பு கசந்து விடாமல், திருமண வாழ்க்கை சரிந்து விடாமல் கவனமாக நடந்து கொள்வார்கள்.

விட்டுக் கொடுப்பதால் குறைந்து போவதில்லை என்பதை உணர்ந்தவர்கள். நல்லது, கெட்டதை ஒதுக்கி வைக்காமல் முக்கிய குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பவர்கள். தானாக முன்வந்து, தவறுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள். கணவன் மனைவிக்குள் சிறு சண்டை என்றால் ஈகோ பார்க்காமல் சரணடைந்து விடுவர். தாங்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். நடுவில் யாரையும் நுழைய விட்டால் சிறிய பிரச்சனை பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு என்பதை நன்கு உணர்ந்தவர்கள். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல் தண்ணீரை ஊற்றி அணைப்பவர்கள் இவர்கள்.

பல நாடுகளை கைப்பற்றிய மன்னாதி மன்னர்களானலும் நோயுற்றபோது அவர்களது உயிரை மருத்துவர்களால் காப்பாற்றமுடியவில்லை. கோடி கோடியாய் குவிந்தவர்கள் ஒரு குன்றி மணிக்கூட தன்னுடன் எடுத்துச் செல்ல இயலாது. பூமிக்கு வரும் போது ஒன்றும் கொண்டு வரவில்லை. போகும் போது ஒன்றும் எடுத்து செல்வதில்லை.

பக்குவப்பட்ட மிகப்பெரிய மாமனிதர்கள் தன் மீதான தவறு சுட்டிக்காட்டப்படும் போது கொந்தளிப்பதில்லை. திருத்திக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். தம்மை விட்டு சுற்றத்தார், தோழர்கள், பாசமானவர்கள், நம் மேல் அக்கறை கொண்டு உள்ளவர்களிடம் இருந்து பிரிந்து தனித் தீவாக இருக்க விரும்புவதில்லை. ஈகோ வாழ்வை நிர்மூலமாக்கிவிடும் என்பதை நன்கு உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உயர்நிலைக்கு சென்றபின்பும் சாதாரணப் பணிகளைத் தயங்காமல் மேற்கொள்வர். மிகப்பெரிய சாதனை படைத்த மாமனிதர்கள் பேருந்தில், சைக்கிளில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயணிக்கிறார்கள். மகாத்மா காந்தியடிகள் ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் மேற்கொண்டார். தொழில் அதிபர் ரத்தன் டாட்டா தனது கோப்புகளை தானே கை நிறைய எடுத்துக் கொண்டு இயங்கு ஏணியில், தனது அறைக்கு செல்லத் தயங்குவதில்லை.

ஈகோவை விட்டுவிட்டால் வாழ்வு லேசாகி விடும் என்பதை உணர்ந்தவர்கள். வானம், பூமி, ஆறு, கடல், மலை எல்லாம் இறைவன் தந்தது. நாம் உருவாக்கியது அல்ல. நமது சக்தி, பலம், முயற்சி நமக்கு செல்வத்தை தந்து இருக்கலாம். ஞாபகமிருக்கட்டும்.நமது திறமைகள் கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை.

மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கும் போது ஈகோ குறைந்து விடுகிறது. அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது...

                                                                                                                              நன்றிகள்.

Tuesday 4 September 2018

''பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?

பிரச்சனை; என்றால் என்ன?

அதற்க்கு ஏதாவது உருவம் உண்டா?

நிச்சயமாக கிடையாது.

மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும், அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.

ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை.

எந்த ஒரு நிகழ்வுக்கும் முடிவு என்பது ஒன்று உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டும்.நம்பவில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு பிரச்னை என்றுதான் பெயர் சூட்ட வேண்டும்.

வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாதோர் யாரும் இல்லை. கல்யாணம் ஆனவருக்கும் கல்யாணம் ஆகாதவருக்கும், குழந்தை பெற்றவருக்கும் குழந்தையே பெறாதவர்க்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும் பிரச்சனைகள் உண்டு.

அமைதியாக எந்த நிகழ்வையும் ஏற்று கொண்டால் அங்கு பிரச்னை என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

அமைதியாக ஏற்று கொள்ளும்போது உணர்சிகளுக்கு இடமில்லை.

உணர்ச்சிகள்தான் எந்த ஒரு நிகழ்வையும் பெரிய பிரச்சனையாக ஆக்கி விடுகிறது.

இதில் கோபத்திற்கு முக்கிய பங்குண்டு.

சாதாரண நிகழ்வையே இந்த கோபம் பெரிய பிரச்சனையாக்கி விடும்.

ஆனால் அன்பு என்பது எரிந்து கொண்டு இருக்கும் தீயை அணைக்கும் தண்ணீரை போன்று.. நிகழ்வுகளை நிகழ்வுகளாகவே மாற்ற செய்யும் சக்தி உண்டு.

ஆம்.,நண்பர்களே. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றியும்,சவால்களைப் பற்றியும் சிந்திப்பது மிக மிக முக்கியம்தான், ஆனால், அதைவிட முக்கியம் அவைகள் நம்மை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு நிகழ்வையும் அறிவு பூர்வமாக அணுகும் போது அங்கு ''பிரச்னை'' என்பதற்கு இடம் இல்லை.

                                                                                                                                    நன்றிகள்.

Monday 3 September 2018

மனம் விசித்திரமானது...............!.

மனித மனம் விசித்திரமானது மட்டுமல்ல.

அது வக்கிரமானதும்கூட. காதல், பாசம், கருணை, கோபம், பரிதாபம், விருப்பு, வெறுப்பு என எல்லா உணர்வுகளையும்போல அது வக்கிரங்களையும் சுமந்தே அலைகிறது.

இது அத்தனை பேரிடமும் உண்டு.

ஆனால், அதன் அளவீடு எவ்வளவு, அதை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்பதிலிருந்தே ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள்.

அதிலும் பாலுணர்வின் வக்கிரம் வரைமுறைகளற்றது. எளிதில் நிறைவடையாதது.

ரத்த உறவுகளையே கூறுபோடும். பாலினம் பார்க்காது, வயது தெரியாது. குழந்தைகள், முதியவர்கள் தொடங்கி ஆடு, மாடு, குதிரை வரை அடுத்தடுத்து இரை தேடுவது அது.

                                                                                                                        நன்றிகள்.

Saturday 1 September 2018

பெண்கள் எதிர் பார்ப்பது இதைத்தான்.............!


மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?.

வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.

நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பங்காளர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.

சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.

இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும். வாழ்க்கையில் பிரிக்க முடியாதது – திருணம் செய்தவர்களுக்கு. அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம்.

உடல் உறவின்போது மட்டும்தான் பெண்கள் இன்பமடைவார்கள் என்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன காதல்கதை என நிறைய விடயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதுபோல நிறைய விடயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், மிதமான உருவுதல் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்…இப்படி நிறைய இருக்கிறது.

மனைவி சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடக் கூடாது. மனைவி சொல்லை மதிக்காதவனாகவும் இருக்கக் கூடாது. கலந்து பேசி முடிவெடுக்கணும்.

*வேலை முக்கியம் என்றாலும் குடும்பத்துக்கும் நேரம் செலவழிக்கணும். அது வெறும் "அளவு நேரம்" ஆக இல்லம "தரமான நேரம்" ஆக இருக்கணும் கிடைப்பது இரண்டு நிமிடங்கள் என்றாலும் அந்த இரண்டு நிமடங்களும் குடும்பத்தினருடன் மனம் விட்டு பழகினால் போதும். சும்மா நானும் வீட்டில் செலவிடும் நேரம் தொலைகாட்சி முன்னாடியோ கணனி முன்னாடியோ தவம் கிடக்கக் கூடாது.நகைச்சுவை உணர்வு இருக்கணும்.

*மனைவி தன் வீட்டினரிடம் பாசமாக நெருங்கிப் பழகணும்னு எதிர் பார்ப்பது போல் ஆண்களும் மனைவி வீட்டாருடன் நெருக்கமாக இருக்கணும்.

* பெண்ணுக்கே உரிய உடல் பிரச்சினைகளை புரிந்து நடந்து கொள்பவனாக இருக்கணும்.

*பெண்களின் அகராதி குறிப்பாக மனைவியின் அகராதியை தெரிஞ்சு வச்சுக்கணும். இல்லேன்னா பெண்களிடம் தரமான பெறுபேறுகளை வாங்குவது கடினம்தான் .

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் ‘அதை’ மட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல கோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதெல்லாம் சரியாக இருந்தால் நீதிமன்றப் பக்கம் யாருமே போகத் தேவையில்லை-விவாகரத்து கோரி.

                                                                                                                            நன்றிகள்.


Friday 31 August 2018

வாழ்க வளமுடன்.........!.

நல்ல விடயங்களை தெரிந்து கொள்ளுவோம்.

வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கின்றது.

வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.

வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்ற ஒருவர் வாழ்த்துகிறார் என்ற அர்த்தம்.

ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும் ?

தேவைகள் பூர்த்தியடையும் பொது நிறைவுத் தன்மை ஏற்படும்.

தேவைகளை எப்படி பட்டியலிடுவது.

மனிதனின் பொதுவானத் தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ இந்து தேவைகள் முக்கியம்.

1. உடல் நலம்.

2. நீளாயுள்

3. நிறைச்செல்வம்

4. உயர்புகழ்

5. மெய்ஞானம்

இந்த ஐந்தையும் உணர்ந்தும் அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முமையான வாழ்க்கை.

உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் தங்கிவிடும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் பொது நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகின்றார்.

இது வெறும் வார்த்தை வேடிக்கையில்லை !, இதனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன் பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.

அது என்ன?

வாழ்க வளமுடன் என்ற இன்னொரு முறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள் நாக்கு அதாவது தொண்டையில் உள் மேல் பகுதியில் "ழ்" எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணர முடியும்.

உள்நாக்கின் உச்சியில் அதாவது நெறிக்கும் பின் மண்டையில் பிடறிக் கண்ணுக்கும் நேர் கொட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ள்ளது.

அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தொடு  நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி.

உங்களின் எண்ணங்களில் எழும் தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத் தரும் சூட்சுமம் அது.

உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலகீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்கு உள்ளாவது செயலுக்கு வந்துவிடும் எண்ணம் எப்போது வீணாவது இல்லை.

எண்ணமும் வீணாவது இல்லை. அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.

அந்த சூட்சுமப் பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள்.
ஆன்மீகத்தில் துரியம் என்பார்கள்.

வாழ்க வளமுடன் உச்சரிக்கும் பொது உங்களின் துரியமையும் கட்டளைகள் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

ஒருவர் உங்களை வாழ்த்தும் பொது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம்.

வாழ்க வளமுடன் வெறும் வாழ்த்துச் சொல் அல்ல... அது ஒரு மந்திரச்சொல் .

இன்று முதல் நாமும் வாழ்க வளமுடன் சொல்லி பழகலாம்.

                                                                                                                  நன்றிகள்.




அவமானம் என்பது ஒருவித மூலதனம் ..........!.

அவமானமே மூலதனம்....

மன்னரின் அரசவை

ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

அந்த மன்னர் இந்து என்றாலே கோபப் படுவர்.

நிதி தானே இந்தா என தன காலில் இருந்த காலணியை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிபாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும். ஒருபக்கம்
அவமானம். மனதை துன்பப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்லள விடயத்துக்காகத் தானே அவமானப்படுகின்றோம் என தேற்றிக்கொண்டு மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை.

என்னடா நாம் அவமானபடுத்த முயன்றாலும் எதிரிலிருப்பவர் தன நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்.

மேலும் தன்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் அவமானத்தை உணர்ந்து மனக்கிளர்ச்சி அடைவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் அமைச்சரை அளித்த மன்னர் என்ன அங்கே என்றார்.

நீங்க எறிந்த காலணியை ஏலம் போடுகிறான் .
கல்லூரி கட்ட மன்னர் தந்த காலணி என்றே கூவுகின்றான் என்றார்.

எவ்வளவு போகிறது....

படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்.

அய்யய்யோ என்ன விலையானாலும் ஏலம் எடு.

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்.

நிதி கேட்டு வந்தவர் மீண்டும் மன்னரிடம் வந்தார்.

மன்னா நீங்கள் போட்ட காலணி பாதிகட்டம் கட்ட கிடைத்து விட்டது.

அடுத்த காலணியை எப்போது போடுவீர்கள் என்றார் பாருங்கள்.

மன்னர் வந்தவரின் சாமர்த்தியத்தையும் சகிப்புத்தன்மையும் எண்ணி தாமே கல்லூரியை கட்டிக்கொடுத்தார்.

அவமானத்தை யாரோவர் அவமானமென உணர்கின்றார்களோ அவர்கள் ஒருநாளும் எதையும் வெற்றி கொள்ள முடியாது.

எப்போதும் நோக்கம் நிறைவேறுவதுதான் முக்கியம்.

மான அவமானங்களல்ல.....

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவமானமும் வெறிக்கான படிக்கட்டுக்கள்.

என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

                                                                                                                        நன்றிகள்.  

Thursday 30 August 2018

வீட்டுக்கு வீடு வாசப் படி..........!.

தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..

யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை
இருந்தால் அணிலுக்கு தன உடம்பு இவ்வளவு சிறிதாக இருகிறதே என்ற கவலை.

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலை என்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை.

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு.
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு.

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு.
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே திண்டாடுவதும் உண்டு.

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை.

ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் துன்பப் படுவது போலவும் பிரமை வேண்டாம்.

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிரச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது.

கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது.


"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால் "எந்த நாய் சொன்னது?" என்ற கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை தன் தவறை ஒத்துக் கொண்டு ."சரி இனி பார்த்து வாங்குகின்றேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது.

 "நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்,
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் நீங்க உங்க அம்மா வீட்டுக்கு பொய் சாப்பிடுங்க" என்ற மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.

"இன்னிக்கு உடம்புக்கு முடியல நாளைக்கு நன்றாக சமைக்கின்றேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்.

மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்த புடவை நன்றாக இருக்கு.... அழகா இருக்கே" என்று சொல்லணும் .

கணவன் வெளியிலிருந்து வரும் பொது "ஏன் இப்படி வியர்த்திருகிறது. எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்.

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்.

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி.

படுக்கை அறையில் சபையில் பேசுவது போல் பேசக் கூடாது , கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக்கூடாது.

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்
சரி செய்யப்பட்டு சேர்ந்து விட வேண்டும்.

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விசயம் வார்த்தைகளில் எச்சரிக்கை.

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.

முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது.

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்.

இரண்டு கை தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் பொது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்.

"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள்" என்றும் "கணவன் தானே பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது உடல் வலிக்காது ...ஊர் சிரிக்காது ..

வாழ்க இல்லறம்.....

                                                                                                     நன்றிகள்.                       

கவர்ந்த வாசகங்கள்....!.

பேசித்  தீருங்கள்.
பேசியே  வளர்க்காதீர்கள்.

உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

நட்பை பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.

உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.

விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.

விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.

விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்.

பரிசீலனை செய்யுங்கள்.
பணிந்து போகாதீர்கள்.

சங்கடமாய் இருந்தாலும்.
சத்தியமே பேசுங்கள்.

செல்வாக்கு இருந்தாலும்.
சரியானதைச் செய்யுங்கள்.

எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.

எவ்வளவு சீக்கிரம் தீர்வு
வரும் பாருங்கள்.

நேரம் வீணாகாமல்
விரைந்து முடியுங்கள்.

தானாய் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.

யாரோடும் பைகையில்லை என்பது
போல் வாழுங்கள்.

                                                             நன்றிகள்.