Sunday 4 September 2022

மனிதனின் அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது....................!.

 உங்களிடம் ஈகோ இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது உடனடியாக தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்காமல் எல்லாம் எனக்கு தெரியும் என்று விட்டுவிட்டால் உங்களிடம் ஈகோ உள்ளது என்பதை உடனடியாக நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

ஈகோ….என்றால் என்ன?

ஈகோ என்பது என்ன? தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது.

கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது என்பதன் சுருக்கம் தான் (Ending God out) ஈகோ என்பர்.

நமது பலவீனத்தை, தவறை யாராவது சுட்டிக் காட்டினால் ஈகோ விழித்துக் கொள்கிறது. மோதல் ஏற்படுகிறது.

ஈகோ மனிதர்களின் அடையாளம்:

நம்மிடம் வணக்கத்தை கட்டாயம் எதிர்பார்ப்பர், நன்கு தெரிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போல நடப்பர். அதிகம் பேச மாட்டார். தம் இனத்துடன் மட்டும் பழகுவர். தம்மை நாடியே பிறர் வர வேண்டும் என்று இருப்பர். தன்னை விட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பர். தான் மட்டும் தான் சிறந்தவர் என நம்புவர். ஈரமும், இரக்கக் குணமும் அற்றதன்மை பேச்சில் வெளிப்படும். மற்றவர் தன்னை மதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்பதில் தீராத ஆசை கொள்வர், தன்னை முந்தி செல்வோர் மீது பொறாமைபடுவர். தன் சுயநலத்திற்காக பிறரை சுரண்டுவர்.

தன்னைவிட குறைந்த படிப்பு, பதவி, சமுதாய நிலை உள்ளவர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள். தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். தன்னை சாதாரண மனிதர்களாய் நினைத்து கொள்வதே கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத காரியமாகும். பிறர் தன்னை மிகவும் குறைவாக மதிப்பிடுவார்கள் என்றநினைப்பில் தங்களை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு முயல்வர்.

எல்லா புனிதமான தோற்றத்திற்கு மறுபுறம் இன்னொரு மோசமான குரூரமான முகமிருக்கும். தகவல் தொடர்பு சரியான முறையில் இருக்காது. தெரியாதததைக் கேட்டு தெரிந்து கொள்ள தயங்குவர். அதிக முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதில் தீவிரமாக இருப்பர். ஈகோ பிரச்சினையால் பல விசயங்களில் முரண்டு பிடிப்பது. முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிப்பது இவர்களது வழக்கமாக இருக்கும்.

ஈகோ மனிதர்களை சமாளிப்பது எப்படி?

நமது வாழ்க்கைத் துணையோ, நமது அதிகாரியோ, நண்பர்களோ உறவினர்களோ ஈகோ குணம் உடையவர்களாக இருந்து விட்டால் இவர்களிடம் சற்று விலகியே வாழ வேண்டும். இவர்களுக்கு எதிராக நாம் செயல்பட்டால் அது அவர்களின் ஈகோவைக் கூட்டிவிடும். முடிவில்லாத தொல்லைகள், மனஉளைச்சல் ஏற்படும்.

யார் பெரியவர் என்ற சிக்கலுக்கு என்னதான் வழி?

சிலர் இவர்களை விட்டு விலகி சென்று விடுகிறார்கள். இத்தகைய சூழல் அவர்களைக் காட்டிலும் மிகத் திறமையாக கையாண்டு சமாளிக்கிறவர்களும் உண்டு. சகித்துக் கொண்டு வேறு வழியின்றி அடிமையாக வாழ்க்கையை ஓட்டுகிறவர்களும் உண்டு.

இறைவனது படைப்பில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லை?

அவரவர் திறமைக்கேற்ப வாழ்வில் உயரத்தை எட்டுகிறார்கள். வளர்ச்சி பெறுகிறார்கள். எல்லோரும் ஒரே மட்டத்தில் சம சமுதாய நிலை இருக்க முடியாது.

ஈகோ குணம் படைத்தவர்களை சமாளிப்பது மிகக் கடினம் தான். நமது ஒவ்வொரு நாள் அலுவலையும் நரகமாக்கி விடுவார்கள். நம்மைத் தீவிரமாக கண்காணிப்பார்கள். குறைச்சலாக பேசுவார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. மனதில் வலியை உண்டாக்கும் நிகழ்வுகள் தொடர்கதை ஆகும். விலகிச் செல்லவும் முடியாது. இனிமையின்மை பட நேரிடும். பாதிப்பின் தாக்கத்தால், எதிலும் கவனம் செலுத்த இயலாது. இவர்களை விட்டு விலகினால்தான் அமைதி திரும்பும்.

ஈகோ மோதல்களும் விளைவுகளும்:

கூட்டு முயற்சியால் தொடர்ந்து வெற்றியும், வரவேற்பும் பெற்ற பலர் திடீரென ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரிந்த பின்னர் இருவருக்குமே பெரும் பாதிப்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் துறையே விட்டே ஒதுங்கும் நிலை பலரது வாழ்வில் ஏற்பட்டு உள்ளது. அரசியல், சினிமா, அலுவலகம், தொழில், கிரிக்கெட், உள்ளிட்ட பல துறைகளில் கூட்டு முயற்சியும் பங்களிப்புமே வெற்றிக்கு காரணமாக உள்ளது. கௌரவப்போட்டி பலரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. உரிய மரியாதை வழங்காததால் தொடர்ந்து பின்னுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் புறந்தள்ளப்பட்டவர்கள் பலர்.

இரண்டு ஆசிரியர்களுக்கு இடையே ஈகோ மோதல் ஏற்பட்டால் அது பல மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. கணவன் மனைவி இடையே ஈகோ தகராறு ஏற்பட்டு வாழ்வில் விரிசல் விழுந்தால் பிள்ளைகளைப் பெரிதும் பாதிக்கிறது....

ஈகோ மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. பிறந்த வீட்டில் மாப்பிள்ளைகளில் யாருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என சகோதரிகள் யுத்தம் செய்கின்றனர். நண்பர்கள் ஈகோ மோதலால் பிரிந்தால் அவர்கள் செய்த பல நன்மைகள் மறந்து விடும். சில தீமைகள் மட்டும் பெரிதாகத் தெரியும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைந்திட ஈகோ தடுக்கிறது. இதனால் பாதகங்களை சந்திக்க நேரிடுகிறது. அவல நிலைக்கு தள்ளி விடுகிறது. அரிதான வாய்ப்புகள் வீணடிக்கப்படுகிறது.

ஈகோ பிரச்சினையால், வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் பலருண்டு. எல்லோரும் உயிரோடு இருந்தும் எந்த உறவும் இல்லாமல் அநாதையாக இனிமையின்மைபடுபவர்கள் பலர். ஈகோவால் காதல், உறவு, நட்பு எல்லாம் நொறுங்கிப் போகிறது. அதிகமான குடும்ப உறவுக்கு ஈகோ தான் வேட்டு வைக்கிறது. வாழ்வில் வெற்றிக் கொடி நாட்டி முன்னணியில் இருந்தவர்கள் தடாலென சரிந்து விழுந்து சகதியில் புரண்டெதெல்லாம் ஈகோ என்கிற உயிர்கொல்லியால் தான். ஈகோவால் முகவரி இழந்து காணாமல் போனவர்கள் ஏராளம்.

உலக அளவில் இந்தியா சில துறைகளில் தலை நிமிரக் காரணமாக இருந்தவர்கள் கூட ஈகோ மனிதர்களால் அவமானங்களையும், வேதனைகளையும் சந்தித்து இருக்கிறார்கள். உறவுகளை அழிப்பதற்கு, பாழ்படுத்துவதற்கு, நாசம் செய்வதற்கு ஈகோ என்கிற ஒன்று மட்டும் போதுமானது.

அதிகப்படியான ஈகோ நமது திறமைகளை கொன்றுவிடுகிறது. உறவுகள் இயற்கையாய் இறப்பதில்லை. ஈகோவால் படுகொலை செய்யப்படுகிறது. ஈகோதான் மனிதனின் மிகவும் மோசமான எதிரியாகும்.

நம்முள் இருக்கும் ஈகோ என்கிற மிகப் பெரிய ஆயுதம் நம்மையே கீழே தள்ள நம்மாலேயே பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உச்சக்கட்ட சோகம். தொழில் பங்குதாரர்களின் ஈகோ மோதல் வியாபாரத்தில் நஷ்டத்தை தருகிறது.

ஈகோ அற்றவர்களின் இயல்புகள்: ஈகோ இல்லாத மனிதர்கள் பதவி கிடைத்து விட்டது என்று அதிகப்படியான அதிகாரம் செய்ய மாட்டார்கள். பதவி நிலையானது அல்ல என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அழகு கூடுகிறது என கர்வம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். ஒருநாள் உடல் அழகு மங்கப் போகிறது என்று. பணக்காரர் ஆனாலும் பகட்டாக இருப்பதில்லை. பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அந்தஸ்து வந்தாலும், உடன்பிறந்தவர்களை முற்றிலுமாக பிரிந்து விட மாட்டார்கள். நட்பு கசந்து விடாமல், திருமண வாழ்க்கை சரிந்து விடாமல் கவனமாக நடந்து கொள்வார்கள்.

விட்டுக் கொடுப்பதால் குறைந்து போவதில்லை என்பதை உணர்ந்தவர்கள். நல்லது, கெட்டதை ஒதுக்கி வைக்காமல் முக்கிய குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பவர்கள். தானாக முன்வந்து, தவறுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள். கணவன் மனைவிக்குள் சிறு சண்டை என்றால் ஈகோ பார்க்காமல் சரணடைந்து விடுவர். தாங்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். நடுவில் யாரையும் நுழைய விட்டால் சிறிய பிரச்சனை பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு என்பதை நன்கு உணர்ந்தவர்கள். எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றாமல் தண்ணீரை ஊற்றி அணைப்பவர்கள் இவர்கள்.

பல நாடுகளை கைப்பற்றிய மன்னாதி மன்னர்களானலும் நோயுற்றபோது அவர்களது உயிரை மருத்துவர்களால் காப்பாற்றமுடியவில்லை. கோடி கோடியாய் குவிந்தவர்கள் ஒரு குன்றி மணிக்கூட தன்னுடன் எடுத்துச் செல்ல இயலாது. பூமிக்கு வரும் போது ஒன்றும் கொண்டு வரவில்லை. போகும் போது ஒன்றும் எடுத்து செல்வதில்லை.

பக்குவப்பட்ட மிகப்பெரிய மாமனிதர்கள் தன் மீதான தவறு சுட்டிக்காட்டப்படும் போது கொந்தளிப்பதில்லை. திருத்திக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். தம்மை விட்டு சுற்றத்தார், தோழர்கள், பாசமானவர்கள், நம் மேல் அக்கறை கொண்டு உள்ளவர்களிடம் இருந்து பிரிந்து தனித் தீவாக இருக்க விரும்புவதில்லை. ஈகோ வாழ்வை நிர்மூலமாக்கிவிடும் என்பதை நன்கு உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உயர்நிலைக்கு சென்றபின்பும் சாதாரணப் பணிகளைத் தயங்காமல் மேற்கொள்வர். மிகப்பெரிய சாதனை படைத்த மாமனிதர்கள் பேருந்தில், சைக்கிளில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயணிக்கிறார்கள். மகாத்மா காந்தியடிகள் ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் மேற்கொண்டார். தொழில் அதிபர் ரத்தன் டாட்டா தனது கோப்புகளை தானே கை நிறைய எடுத்துக் கொண்டு இயங்கு ஏணியில், தனது அறைக்கு செல்லத் தயங்குவதில்லை.

ஈகோவை விட்டுவிட்டால் வாழ்வு லேசாகி விடும் என்பதை உணர்ந்தவர்கள். வானம், பூமி, ஆறு, கடல், மலை எல்லாம் இறைவன் தந்தது. நாம் உருவாக்கியது அல்ல. நமது சக்தி, பலம், முயற்சி நமக்கு செல்வத்தை தந்து இருக்கலாம். ஞாபகமிருக்கட்டும்.நமது திறமைகள் கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை.

மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கும் போது ஈகோ குறைந்து விடுகிறது. அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது...

                                                                                                                                            நன்றி.


Friday 6 May 2022

ஏன் அளவோடு உண்ண வேண்டும்?

ஏன் அளவோடு உண்ண வேண்டும்? தமிழில் உணவு என்பதற்கு முரண்பட்ட கருத்தில் வார்த்தைகள் இருக்கின்றன. அவை ஒரே மாதிரியாக தெரிந்தாலும் உள் அர்த்தம் வேறு வேறாக இருக்கும். 

அளவோடு உண்டால் "உணவு". அளவுக்கு மீறி உண்டால் "தீனி". ஆக மனிதன் உண்பது உணவாகவும், ஆடு மாடுகள் உண்பது தீனியாகவும் குறிப்பறிந்து சொல்லப்படுகிறது. 

ஆனால் மனிதர் நாம் சுவைக்கு அடிமையாகி வயிற்றின் கொள்ளளவை மீறி உண்கிறோம். வயிறு பசிக்காமல் உண்கிறோம். நேரம் கெட்ட நேரத்தில் கொறிக்கிறோம். இந்த தீனியே சாதாரண நோயில் ஆரம்பித்து நீங்காத பிணியில் கொண்டு போய் விடுகிறது. 

நம் வயிறும் ஒரு சலவை இயந்திரத்தை போன்றது தான். சலவை இயந்திரத்தில் 5 கிலோ அளவு உடைகளை தான் கழுவ முடியும் என்றிருந்தால் அதற்கு மேல் உள்ளே இடமிருக்கிறது என்று திணிக்க முடியாது. 

அப்படி திணித்தால் ஒழுங்காக துணிகள் கழுவப்படாது போவது மட்டுமன்றி இயந்திரம் நின்று விடும் அல்லது செயல் இழந்து விடும். அந்த இடைப்பட்ட வெற்றிடம் மூலம் தான் அந்த இயந்திரம் இலகுவாக சுழன்று சுழன்று ஆடைகளை கழுவும். 

இதே போல் தான் நம் வயிறும். இந்த சிறிய இயந்திரத்தின் அளவை விட அதீதமாக திணித்தால் பல பிரச்சினைகள் தோன்றும். 

உணவு எதுக்களித்தல், சரிவர உணவு ஜீரணிக்கப்படாமை, அஜீரண பிரச்சினைகள், போன்ற இன்னோரன்ன வயிற்று பிரச்சினைகள் தோன்றுவதோடு அதீதமாக உண்ணப்படும் உணவுகள் சக்தியாக மாற்றப்படாது கொழுப்பாக உடலில் தேங்கி விடும். 

என்றுமே கால் வயிறு காலியாக இருக்கும் படி நம் உணவை முடித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஜீரண உறுப்புக்கள் சீராகவும், சிறப்பாகவும் செயல்படும். 

அத்தோடு எளிதில் ஜீரணிக்க கூடிய ஆரோக்கியமான உணவுகளை வயிறு பசிக்க விட்டு உட்கொண்டால் நம் ஆரோக்கியமும் சிறப்பாக மேம்படும். 

உடல் மொழியை அறிந்து அளவோடு உண்போம். நலமோடு வாழ்வோம்.

                                                                                                                               நன்றிகள்.

ஆண்கள்.........!.

 ஆண்கள்

நிறமான ஆண்கள் கூட கவரப்படலாம்.ஆனால் ஆண்களை எப்போது பெண்களுக்கு பிடிக்கும்.

ஒரு ஆண் கலராக இருக்கும் போது சைட் அடிக்க மட்டுமே செய்வார்கள் பெரும்பாலான பெண்கள் ஆனால் தன் வாழ்க்கை துணையை நிறத்தால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

ஒரு ஆண் நடை உடை பாவனையிலே ஒரு பெண்ணை ஈர்க்கிறான்.

உண்மையில் கறுப்பாக இருக்கும் ஆண்களே அதிகமாய் அழகாக தெரிவார்கள்.

ஒரு ஆண் பெண்களிடம் பழகும் விதம்,தன் குடும்பத்தை பார்த்து கொள்ளும் விதம் போன்றவையே ஒரு ஆணை அழகாக்கிறது.

ஒரு பெண்ணால் உண்மையில்  நேசிக்கப்படனும் என்று நினைத்தால் நீங்கள் அழகானவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீங்களாக அன்பானவர்களாக உங்கள் பாதையில் நல்ல வழியில் செல்லுங்கள். 

மற்றவர்களையும் பெற்றவர்களையும் மதியுங்கள்.

பெண்களுடன் உங்கள் வீட்டு பெண்கள் போல மரியாதையுடன் பேசுங்கள் பழகுங்கள்.கட்டாயம் எல்லாப் பெண்களுக்கும் உங்களை பிடிக்கும்.   

                                                                                                                                            நன்றிகள்.

Thursday 30 December 2021

வாழ்க்கையை அழகா கொண்டு செல்ல......

 வாழ்க்கையை அழகா கொண்டு செல்ல ஆறு கட்டளைகள் எடுத்துக்கோங்க.. வாழ்வு ரொம்ப மகிழ்ச்சியா மாறிடும்.

1. எதற்கெடுத்தாலும் எல்லாத்துக்கும் கவலை படாதீங்க. காலையில அழுதா ஈவினிங் சிரிப்போம்..துக்கமோ மகிழ்வோ எதுவோ அதிக நேரம் நம்ம உடல் நிலை எடுத்துக்காது. எல்லாம் கொஞ்ச நேரம். மீறி போனா அதை நீங்களே பிடிச்சு தொங்கறீங்கன்னு அர்த்தம்.

2. யதார்த்தம் பழகுங்க.. அதான் முக்கியம். யார்‌ வேணா கீழிருந்து மேலையும் மேலிருந்து கீழேயும் ஒரு நாளிலியே மாறிடுவாங்க. எனக்கா இந்த நிலைமை ன்னு வாயடைச்சு போகாதீங்க.உங்களை விட அவமான பட்டவங்க எல்லாம் உலகத்துல இருக்காங்க.

3. எதையும் ஆழமாக நேசிக்காதீங்க. எதையும் ஆழமாக யோசிக்காதீங்க. ரொம்ப சிம்பிள் இது. நேசித்தலும் அதற்கான யோசித்தலும் தான் அழுகைக்கு அடிப்படை காரணம் என்ற தத்துவத்தை புரிஞ்சுக்கோங்க.

4. ஒருத்தவங்க போயிட்டாங்கன்னா கெஞ்சாதீங்க. வேணும் வரை இருந்துட்டு திடீர்னு போறாங்கன்னா கஷ்டபட வேண்டியது அவங்க தான். ‌ நீங்க இல்ல. உதாசீன படுத்தினா உதறி விடுங்க. விலகி செல்பவர்களிடம் தானா போயிட்டு அன்பை கொட்டாதீங்க.. அதனால் வர அற்ப கவலைகளுக்குஇடம் தராதீங்க.. அந்த நினைவுகள் மேலே எழும்பிச்சுன்னா ஒரே போடு போட்டு புதைச்சிடுங்க..

5. துரோகம் பழகுங்க... பிறப்பு இறப்பு போல துரோகமும் மனித வாழ்வில் ஓர் அங்கம். ஏமாற்றத்தை ஏற்றுக்கங்க. அப்பதான் அடுத்த முறை ஏமாற மாட்டீங்க. இழப்புகளை இயல்பாக்குங்க. அப்போதுதான் இழப்புகளை பற்றிகவலைபட மாட்டீங்க. அவ்வளவு எளிதில் எவரையும் நம்பிடாதீங்க. வாழ்க்கையில் இதான் முக்கியம்.

6.ஆறுதலா இருக்க உங்களை தயார்படுத்திக்கங்க. வேற யாரும் பண்ணுவாங்கன்னு நிக்காதீங்க. உங்களுக்கு நீங்க தான் வேலைக்காரன் எஜமான் எல்லாமே..

                                                                                                                             நன்றி.

Thursday 2 December 2021

உடல் சொல்லும் நற்செய்திகள்..........

விக்கல் தும்மல் கொட்டாவி உடல் சொல்லும் நற்செய்திகள். 

நம் முகத்துக்கு நேராக மிக வேகமாக யாராவது கையைக் கொண்டுவரும்போது என்ன நடக்கும்? நாம் சுதாரித்து நகர்ந்துகொள்ளவோம் அல்லது அடிபடுவோம். அடிபட்ட ஒருவரிடம் அது எப்படி நிகழ்ந்தது என்று கேட்டால், முழுமையாக அவருக்கு சொல்லத் தெரியாது. ஏனென்றால், அந்தக் கணத்தில் கண்கள் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அதுவாகவே மூடியிருக்கும். கொட்டாவிவிட்டுக்கொண்டே இருந்ததற்காக ஆசிரியர் உங்களை வகுப்புக்கு வெளியே அனுப்பி இருக்கலாம். ஆனால், கொட்டாவி விட்டது உங்கள் தவறல்ல; உண்மையில், அதைச் செய்தது நீங்களே அல்ல. மூளை தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் கொட்டாவிவிட்டது. இப்படி நமது உடல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நம்மை அறியாமலேயே செய்யும் காரியங்கள் பல. அவை... 

*மயிர்க்கூச்செரிதல்* 

விலங்குகள் சண்டையிடும்போது அவற்றின் உடலில் உள்ள முடிகள் நீட்டிக்கொண்டு (சிலிர்த்து) நிற்கும். இதனால் அவற்றின் தோற்றம் இயல்பான அளவைவிடப் பெரியதாகவும், வலிமையானதாகவும் தெரியும். இப்படி மயிர்க்கூச்செரிந்து நிற்பது உடலில் காயங்கள் அதிகமாக ஏற்படாமல் அவற்றுக்குப் பாதுகாப்பளிக்கும். மனிதனும் விலங்குகள் கூட்டத்தை சேர்ந்தவன்தான். அவனுக்கும் இதே மாதிரி தோற்றம் மாறுகிற அளவுக்கு ஆரம்பத்தில் அதிகமான முடி இருந்ததும் உண்மை. மனிதர்கள் சண்டைகளைக் குறைத்துக்கொண்டு நாகரிக வாழ்க்கை வாழ ஆரம்பித்ததும், அவன் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர ஆரம்பித்தன. ஆனால், நமது உள்ளுணர்வின் காரணமாக மிகப் பரபரப்பான சண்டைக்காட்சியைப் பார்க்கும்போதோ, பேய்ப் படம் பார்க்கும்போதோ. விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போதோ நமக்கு அனிச்சையாக மயிர்க்கூச்செரியலாம். மயிர்கூச்செரிதல் நமது உடலில் வெப்ப இழப்பைத் தடுக்கும்; அதோடு, குளிர்காலங்களில் நமது உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும். 

*கொட்டாவி* 
 
மிகவும் போர் அடிக்கும் வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, ஒரு மொக்கைப் படத்தை பார்க்கிறபோது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல் இப்படிச் செய்கிறது என்பதில் உண்மையில்லை. மூளை அதிகம் சூடாகும்போது கொட்டாவி வரும். இதன் மூலமாக, மூளை தன்னை இயல்புநிலைக்கு மாற்றிக்கொள்கிறது. வெப்ப மாற்றங்கள் நிகழும் பகுதியில் இருந்தாலும், கொட்டாவி வரும். நாள் முழுக்க வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்ததும், வாயைத் திறந்து, சொடக்குப் போட்டு இதை நாமே அடக்க முயன்றிருப்போம். கவனித்து இருக்கிறீர்களா? அதற்குக் காரணம் இதுதான். 
*விக்கல்* 
 
ஓர் உணவுவிடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நண்பர்களுக்குள் சண்டை வந்துவிடுகிறது. அடித்துக்கொள்ளும் அளவுக்குச் சண்டை முற்றிவிடுகிறது. அப்போது திடீரென்று உங்களுக்கு விக்கல் வந்தால் எப்படி இருக்கும்? `எங்க சண்டையைப் பார்த்தா உனக்கு நக்கலா இருக்கா?’ என்று திட்டுவார்கள் நண்பர்கள். ஆனால், நீங்கள் மிக வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உணர்த்தத்தான் உடல் விக்கலை வெளிப்படுத்துகிறது. `இந்த இடத்திலிருந்து கிளம்பினால்தான் சண்டை முடியும்’ என்ற நல்லெண்ணத்தில் நீங்கள் அவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என உங்கள் நண்பர்களுக்குத் தெரியாமல் போவதுதான் துரதிர்ஷ்டம். 

*திடீர் விழிப்பு* 
 
அடித்துப்போட்ட மாதிரி தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று அதிர்ச்சி அடைந்த மாதிரி சத்தத்தை எழுப்பியபடி எழுகிறீர்கள். சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள். கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்ததென்று உங்களுக்குப் புரியவில்லை. இந்த மாதிரி உங்களுக்கு நிகழ்ந்தது உண்டா/ அப்படி உணர்ந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! மூளை, நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றத்தான் இப்படிச் செய்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நாம் தூங்கும்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு போன்றவை குறைந்திருக்கும். தசைகளின் இயக்கம் குறைவாகி, அவை ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும். இதன் காரணமாக நாம் இறந்துவிட்டதாக உடல் மூளைக்கு சிக்னல் அனுப்பும். நாம் இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளும் மூளை சுதாரித்துக்கொண்டு நம்மை எழுப்பிவிடும். 
 
*விரல்களில் தோல் சுருக்கம்!* 
 
தண்ணீரில் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் கையை முக்கி வைத்துவிட்டு எடுத்துப் பார்த்தால், விரல்களில் உள்ள தோல் சுருங்கிப்போயிருக்கும். ஆறு, ஏரி அல்லது நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வரும்போது, இந்தச் சுருக்கங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம். `கை விரல்களின் அழகு போய்விட்டதே..!’ என்று வருத்தப்பட்டு இருக்கலாம். ஈரமான கையால் ஒரு பொருளைத் தொடும்போது, அது நழுவிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தச் சுருக்கங்களை உடல் உருவாக்குவதால்தான் எந்தப் பொருளையும் நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்ள நம்மால் முடிகிறது. 
 
*தும்மல்* 
 
பாக்டீரியா, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருள்கள், தூசுக்கள் போன்றவை மூக்குக்குள் செல்லும்போது நம்மை அறியாமலேயே தும்மல் வந்துவிடும். பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டிவிட உடல் செய்யும் நல்ல நடவடிக்கை இது. 
 
*சோம்பல் முறித்தல்!* 
 
இரவில் நாம் தூங்கியவுடன் நமது தசைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். காலையில் சோம்பல் முறிப்பதன் மூலம் உடல் இந்தத் தசைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. சோர்வாக இருக்கும்போதும் நாம் சோம்பல் முறிப்போம். இதனால் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, அவை சுறுசுறுப்பாகும். உடல்தான் தனக்குள் எவ்வளவு அதிசயங்களை ஒளித்து வைத்திருக்கிறது! *விக்கல், தும்மல், கொட்டாவி போன்றவை இயல்பானவை. அவற்றை யாராலும் தடுக்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். இதை உணர்ந்துகொண்டால் இன்னொருவர் கொட்டாவி விடும்போது நமக்குக் கோபம் வராது. மாறாக, அதிலிருக்கும் *`இயற்கை’* என்கிற ஆச்சர்யம்தான் கண்முன் தெரியும்!.
                                                                                                                               நன்றி.

Monday 14 December 2020

மறை நீர் அரசியல்...........!.

ஒரு முட்டை உற்பத்திக்கு தேவை 196 லிட்டர் 'மறை நீர். 

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20.தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட் மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால்,எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? 

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். 

மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது.இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்கு ஆகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து வைத்திருக்கின்றன. 

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.

இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை.ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் 

தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு.

இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன. 

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய்.ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன் மற்றும் இதர உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு பனியன் தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம். 

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது நாம் மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

கடந்த அரை நூற்றாண்டு காலமாக செழுமையான நிலப்பகுதிகள், மரங்கள் கொழிக்கும் அடர் வனங்கள், அரிய நில வாழ், கடல் வாழ் உயிரினங்கள் போன்ற இயற்கையின் இன்ன பிற அரிய வடிவங்கள் மீது தொடர்ச்சியாக மனித வன்முறை நிகழ்த்தப்பட்டு வருகிறது. எதிர் செயலற்ற அந்த இயற்கையாக்கங்கள் முற்றிலும் அழிவதில் முழுப்பொறுப்பு என்றும் நம்முடையதாக இருக்கும் நிலையில் இயற்கை ஆர்வலர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலக நாடுகளிடையே நடைபெற்று வரும் நீர் வணிகம் பற்றியது. அதாவது நீரை கேலன் கேலனாக விமானம் மூலமோ, கப்பலில் ஏற்றியோ ஏற்றுமதி செய்வதல்ல இதன் அர்த்தம்.

தமிழகத்தின் வேளாண் நிலவரத்தை கூர்ந்து கவனித்து வந்திருப்பவர்கள் இந்த செய்தியை அறிந்திருக்கலாம். தமிழகத்தின் காவிரி பாசன உழவர்கள் அணையிலிருந்து நீரை திறந்து விடுமாறு போராட்டம் நடத்த கர்நாடக காவிரிப் பாசன உழவர்களோ நீரை திறக்கக்கூடாது என்று போராடுவார்கள். ஓர் அணைக்கு மேல் பகுதியில் இருப்பவர்கள் அணையைத் திறக்கக்கூடாது என்றும் அவ்வணைக்கு கீழ்ப் பகுதியில் இருப்பவர்கள் திறக்க வேண்டும் என்றும் போராடுவது பொதுவாகவே உலகமெங்கும் காணப்படும் வேளாண்மை அரசியல்.

காவிரியின் துணை ஆறான நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில்தான் திருப்பூரின் சாயப்பட்டறை கழிவுகள் மொத்தமும் தேங்குகிறது. இதனால் நீர் நஞ்சாகி அணைக்கு மேல் பகுதியில் உள்ள வேளாண் பயிர்கள், கால் நடைகள் மற்றும் குடிநீரும் பாழாகிவிட்டன. இதே நச்சு நீரை திறந்துவிட்டால் கீழ்பகுதி மக்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே அணை நீரை திறக்கக்கூடாது என்கிறார்கள். இப்பிரச்சினையை தீர்க்க தெரியாமல் விழிக்கும் அரசோ காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில் அணை நீரை திறந்துவிடுவதன் மூலம் இப்பிரச்சினையை தொடர்ந்து சமாளித்து வருகிறது.

இதற்கு மூல காரணமான திருப்பூரின் பின்னலாடைத் தொழிலை இன்றைய தேதியில் வருடத்துக்கு 12000 கோடி அந்நியச் செலவாணியை ஈட்டித் தருகிறது என்பதற்காக அரசு சீராட்டி வருகிறது. இது நியாயம்தானே என்று தோன்றலாம். ஆனால் நாம் இன்னும் சற்று ஆழமாக யோசித்தோமானால், சில உண்மைகளை எளிதாக புரிந்து கொள்ளலாம். பருத்தியை விளைவிக்க தெரிந்த மேல் நாட்டினருக்கு, பின்னலாடை தொழில் நுட்பத்தை அறிந்திருக்கும் மேல் நாட்டினருக்கு, அதற்கான எந்திரங்களை உற்பத்தி செய்து தரும் மேல் நாட்டினருக்கு இந்த பின்னலாடைகளை மட்டும் அங்கேயே தயாரிக்க தெரியாதா என்ன? பின் ஏன் அதை இங்கு உற்பத்தி செய்து வாங்கிக்கொள்கிறார்கள்?

இதே போல் உலக அளவில் காலணி தயாரிப்புக்கு புகழ்பெற்ற நாடு இத்தாலி. ஆனால், இந்த நாட்டுக்கு பதப்படுத்தப்பட்ட தோல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது நம் பாலாற்றங்கரையை நாசம் செய்த வாணியம்பாடி, ஆம்பூர், இராணிப்பேட்டை போன்ற ஊர்கள் தான். இந்த இத்தாலி நாடு கச்சாப் பொருளான பதப்படுத்தப்படாத தோல்களை அப்படியே இறக்குமதி செய்துகொண்டு அதை இத்தாலியில் பதப்படுத்திக்கொண்டு காலணிகளை தயாரித்தால் கூடுதலான அந்நிய செலவாணியை மிச்சப்படுத்தி கொள்ளலாம் அல்லவா? பின் ஏன் அவர்கள் அதை செய்வதில்லை? இக்கேள்விக்கு வழமையான விடையாக முன்னிறுத்தப்படும் ‘மலிவான மனிதவளம் இங்கு கிடைக்கிறது’ என்ற ஒற்றைப் பொருள் தன்மையை கொண்ட அரசியல் சொற்றொடரை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு வேறுசில வினாக்களை நாம் எழுப்பிப் பார்க்கலாம். கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு அதை ஏற்றுமதியும் செய்து வந்த நாடு சவுதி அரேபியா, தற்சமயம் அந்நாடு கோதுமையை இறக்குமதி செய்துகொள்கிறது.

ஏன்?

சீனர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு பன்றி இறைச்சி. ஆனால், சீன அரசாங்கம் பன்றி இறைச்சி உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது. ஏன்? சிக்கன நீர் பாசன வேளாண்மைக்கு புகழ் பெற்ற இஸ்ரேல் பல வேளாண் விளை பொருட்களை ஏற்றுமதி செய்தாலும் ஆரஞ்சுப் பழங்களை அது ஏற்றுமதி செய்வதில்லை. ஏன்? இப்படியாக பல ஏன்?-களை எழுப்பிக்கொண்டே செல்ல முடியும். இத்தகைய வினாக்களுக்கான விடைகளில்தான் ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது. அதுதான் நீர் அரசியல்.

மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நடைபெற்றால் அது நீருக்காகவே நடைபெறும் என்று பல அறிஞர்கள் பலர் கணித்திருக்கிறார்கள். அதற்கான சாத்தியக்கூறுகளும் பல நாடுகளுக்கிடையே காணப்பட்டு வருகிறது. ஆனாலும், பெருமளவு தண்ணீர் தட்டுப்பாடும், பற்றாக்குறையும் நிலவும் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக வளைகுடா பகுதி நாடுகளில் நீருக்கான தேவை அதிகமிருக்கும்போதும் அங்கு ஏன் போர் நடைபெறவில்லை என்ற கேள்விக்கு ஏன் நடைபெற வேண்டும்? என்ற கேள்வியை எழுப்புகிறார் இலண்டனை சேர்ந்த புவியியலாளர் டோனி ஆலன். தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டாலே போதுமே, அது அவர்களுக்குத் தேவையான நீரை தந்துவிடுகிறதே என்கிறார் அவர். மேலும் நீரை நேரடியாக இறக்குமதி செய்துகொள்வதைவிட இது கொள்ளை மலிவு என்றொரு கருத்தாக்கத்தை முன்வைக்கிறார் அவர். 1990-ல் வெளியிட்ட இந்த கருத்தாக்கத்திலிருந்து ஆங்கிலத்தில் விர்ச்சுவல் வாட்டர் என்று பெயரிட்டார். இக்கருத்தாக்கத்தில் இருந்த உண்மைக்காக உலகளாவிய விருது ஒன்றினையும் இவர் பெற்றார்.

தனது ‘வர்ச்சுவல் வாட்டர்’ (Virtual Water) கருத்தாக்கத்துக்கு விளக்கம் தர முன்வரும் ஆலன் இவ்வாறு கூறுகிறார். “கோதுமை மணிகளை விளைவிப்பதற்கு நீர் தேவைப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், கோதுமை மணி விளைந்தவுடன் அதை உருவாக்குவதற்கு பயன்பட்ட நீர் அதில் காணப்படுவதில்லை. ஆனால், அதே சமயம் அந்த நீர் அந்த கோதுமை மணிக்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மைதானே? அந்த நீர்தான் ‘விர்ச்சுவல் வாட்டர்’.

(இதை தமிழாக்கத்துக்கு பயன்படுத்துகையில் ‘மறைந்துள்ள நீர்’ என்னும் பொருள்பட ‘மறைந்துள்ள’ என்பதின் வேர் சொல்லான ‘மறை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி ‘மறை நீர்’ என்ற வார்த்தை இப்பதிவில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது).

இப்படி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துள்ள நீர்தான் மத்திய கிழக்கு நாடுகளுக்குள் பிரச்சினையை எழுப்புவதில்லை என்கிறார் ஆலன். எடுத்துக்காட்டாக ஒரு நாடு ஒரு டன் கோதுமையை அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளும்போது அந்நாடு 1300 க.மீட்டர் நீரையும் இறக்குமதி செய்து கொள்கிறது அல்லது 1300 க.மீட்டர் அளவுக்கு தனது சொந்த நீரை சேமித்து கொள்கிறது என்று பொருள். ஒரு தோராயமான கணக்கீட்டின் படி ஒரு டன் தானியம் 1000 டன் நீருக்குச் சமம் என புரிந்து கொள்ளலாம்.

‘ஆலனின் இந்த ‘மறை நீர்’ கருத்தாக்கத்துக்கு தொடர்ந்து ஒவ்வொரு பொருளுக்குமான ‘மறை நீர்’ அளவை கணக்கிட தொடங்கினர் ஹோக்ஸ்த்ரா, சாப்பகைன் போன்ற அறிவியலாளர்கள்.. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் காலையில் ஒரு கோப்பை காப்பி அருந்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். அக்காப்பியில் உள்ள மறை நீரின் அளவு 140 லி ஆகும்.

அதாவது ஒரு காப்பி செடியைப் பயிரிட்டு, வளர்த்து, கொட்டையை அறுவடை செய்து, தூளாக்கி, சிப்பமிட்டு அதை கப்பலில் ஏற்றுமதி செய்யும் நாட்டின் நீர் அதில் மறைந்துள்ளது. இது ஒவ்வொரு ஏற்றுமதி பொருளுக்கும் பொருந்தும். இப்படி கணக்கிடும் போதுதான் ஒரு கோப்பை காப்பியின் மறை நீர் அளவு 140 லி ஆகிறது. இந்த அளவானது ஒரு இங்கிலாந்து நாட்டவர் நேரடியாக புழங்கும் ஒருநாள் நீரின் அளவாகும். அதாவது குளிக்க, குடிக்க, சமைக்க, கழிவறை சுத்தம் செய்ய என அனைத்துக்கும் பயன்படுத்தும் நீரின் அளவாகும். ஆனால், இந்த காப்பிக்கான மறை நீரை ஏற்றுமதி செய்த ஆப்பிரிக்க நாட்டினரோ நாளொன்றுக்கு சராசரியாக 10 முதல் 20 லிட்டர் நீர் வரைக்கூட புழங்குவதற்கு கிடைக்காமல் அவதியுறுகின்றனர். 

இத்தகவலை தெரிந்து கொண்ட கையோடு நாம் முன் எழுப்பப்பட்ட மூன்று ‘ஏன்?’ கேள்விகளுக்கான விடைகளை இப்போது காண்போம்.

தன் உணவு உற்பத்திக்காக 75 விழுக்காடு நிலத்தடி நீரையே சார்ந்திருந்த சவுதி அரேபியா தொன்னூறுகளின் தொடக்கத்தில் கோதுமை விளைச்சலை அதிகப்படுத்திக் கொண்டு அந்நிய செலவாணியை அதிகமாய் ஈட்ட ஏற்றுமதியையும் ஊக்குவித்தது. இதனால் உலக வரலாற்றில் சவுதியைப் போல் நிலத்தடி நீரை அதிகமாய் உறிஞ்சியதில் முன்னிலை பெற்ற நாடு வேறு எதுவுமில்லை என்ற பெயரை அது பெற்றது. விளைவு நிலத்தடி நீரை வெகுவாக காலி செய்துவிட்டு இன்றைய நிலையில் 6 பில்லியன் க.மீ. நீர் பற்றாக்குறையுள்ள நாடாக மாறிவிட்டது. இப்பாடத்தைக் கற்றுக்கொண்ட பிறகுதான் சவுதி இப்போது கோதுமையை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது.

நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் முட்டைகளை நாம் ஏற்றுமதி செய்கிறோம். ஒரு முட்டையின் மறை நீர் அளவு 200 லி. நாம் மாதந்தோறும் இப்படியாக பல லட்சக்கணக்கான முட்டைகளை மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. பல கோடி கன அடிகள் அளவில் நமது நன்னீரையும் சேர்த்துதான் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறோம். இவ்வளவு நன்னீரையும் ஏற்றுமதி செய்துவிட்டுதான் 1 லி தண்ணீரை 20 ரூபாய் விலை கொடுத்து வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம்.

சென்னையை ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ என்று பெருமையுடன் அழைத்துக் கொள்கிறோம். இந்த பெருமைக்குப் பின்னே காணப்படும் கார் தயாரிப்பில் உள்ள மறைநீரின் அளவைக் கணக்கிட்டோம் எனில் தலை சுற்றிவிடும். 1.1 டன் எடையுள்ள ஒரே ஒரு காரின் மறை நீர் அளவு நான்கு இலட்சம் லிட்டர்தான். இந்த அளவானது இரண்டாயிரம் மக்கள் தொகைக் கொண்ட 5 கிராமங்களின் ஒரு நாள் புழங்குநீர் அளவுக்கு சமமாகும். ஒரு ஆண்டுக்கு இலட்சக்கணக்கில் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது எனில் எவ்வளவு மறை நீர் இங்கிருந்து ஏற்றுமதி ஆகிறது என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். அத்தோடு சேர்ந்து சென்னையில் நிலவும் நீர் பஞ்சத்தையும் கணக்கிட்டு கொள்ளுங்கள்.

இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் ஏன் கார் தயாரிப்பை மேற்கொள்ளுவதில்லை என்பதற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்த விவகாரத்தில் அவர்கள் எவ்வளவு கவனமுடன் இருக்கிறார்கள் என்பதற்கு ஆஸ்திரேலியாவே சிறந்த எடுத்துக்காட்டு.

அங்கு நன்னீரைக் கொண்டு கார் கழுவுவது கூட சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய பின்னணியில்தான் திருப்பூரையும், வாணியம்பாடியையும் நாம் கணக்கில் எடுத்துப் பார்க்க வேண்டும். ஒரே ஒரு பின்னலாடையில் மட்டும் மறைந்துள்ள நீரின் அளவு 2700 லி. அதன் விளைவோ இன்றைக்கு திருப்பூரின் நீர் பற்றாக்குறை மட்டும் ஆண்டுக்கு 22 மில்லியன் க.மீ. ஒரு கிலோ பதனிடப்பட்ட தோலின் மறை நீர் அளவு 16,600 லி.இதன் விளைவால் இன்று பாலாற்றையே இழந்து நிற்கிறோம்.

’ஒரு கிலோ பன்றி இறைச்சியின் மறை நீர் அளவு 4810 லி. இது கோழி மற்றும் பண்ணை மீன்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுவதை விட இருமடங்கு அதிகம். எனவேதான் சீனர்களின் மிகை விருப்ப உணவான பன்றி இறைச்சி உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகிறது சீன அரசு. உலக மக்கள் தொகையில் சீனர்களின் தொகை 21 விழுக்காடு. ஆனால், அந்நாட்டின் நன்னீர் வளம் வெறும் 7 விழுக்காடுதான். ஆகையால்தான் குறைந்த அளவு நீர் தேவைப்படும் உணவுகளையே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ள சீனா அதை செயற்படுத்தியும் வருகிறது.

இறுதியாக இஸ்ரேலுக்கு வருவோம். ஒரே ஒரு ஆரஞ்சு பழத்தின் மறை நீர் அளவு 50 லி. நீர் சிக்கனத்தைப் பின்பற்றும் இஸ்ரேல் அரசு பின் எப்படி ஆரஞ்சு பழங்களை ஏற்றுமதி செய்யும்? இப்படியாக விழித்துக்கொண்ட நாடுகள் எல்லாம் மறை நீர் அளவு அதிகமுள்ள பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்த முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் உணவுப் பொருளைப் பற்றியும், ஓர் உற்பத்திப் பொருளைப் பற்றியும் காண்போம். 

நீரின் அருமை உணர்வோம்!

உலகில் அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் தற்போது எண்ணெய் வளம் பெற்று வருகிற முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இன்னும் 50 ஆண்டுகளில் நன்னீர் முக்கியத்துவம் பெற்றுவிடுமென அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இயற்கை வளங்கள், மனித வளம், நீடிப்புத் திறனுள்ள பொருளாதார வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, ஆயுத பலம், பூகோள ராஜதந்திரங்கள் ஆகியவற்றுடன் நன்னீர் வளமும் எதிர்கால அரசியலை வடிவமைக்கும் காரணியாக அமையும். தேவையான அளவில் நன்னீரும் உணவும் ஆற்றலும் கிடைக்கிற வரைதான் உலகில் அமைதி நிலவும்.

இயற்கை தன் நீரியல் சுழற்சிச் செயல்பாடுகள் மூலம் ஆண்டுக்குச் சுமார் 43 ஆயிரம் பில்லியன் கன மீட்டர் அளவுக்கு நன்னீர் இருப்பைப் புதுப்பிக்கிறது. அதனிடமுள்ள மொத்த நீர் இருப்பு வரையறுக்கப்பட்டு விட்ட மாறிலி. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் உலக ஜனத்தொகை இரட்டிப்பாகியுள்ளது. உலகின் தொழில் துறைகளும் பொருளாதாரமும் அதைவிட வேகமாக வளர்ந்து வருகின்றன.

குடிநீர் வழங்கல் எதிர்காலத்தில் ஒரு பணம் கொழிக்கும் வியாபாரமாகப் போகிறது என்று நீர் வணிகர்கள் நாவில் நீரூறக் காத்திருக்கிறார்கள்.

அறிவியலார் நாளைய நன்னீர்த் தேவைகளை நிறைவு செய்ய புதிய உத்திகளைக் கண்டறிந்து வருகிறார்கள்.

ரஷ்யாவைச் சேர்ந்த இகார் செக்ட்ஸர் என்ற நீரியல் நிபுணர் கடலடித் தரையிலிருந்து தற்போது எண்ணெய் எடுப்பதைப் போல நன்னீரையும் எடுக்க முடியும் என்கிறார்.

கடலடித் தரையில் பல இடங்களில் நன்னீர் ஊற்றுகள் பீறிட்டெழுந்து கொண்டிருக்கின்றன.அவற்றிலிருந்து வெளிப்படும் நீர் மேலெழுந்து கடலின் மேற்பரப்புக்கு வரக்கூடிய அளவுக்கு அந்த ஊற்றுகளில் அழுத்தமும் விசையும் தென்படுகின்றன.

ரஷ்ய அறிவியல் கழகத்தின் நீர்ப் பிரச்னை ஆய்வகம், உப்பு நீர்க் கடலடித் தரைக்கும் கீழே தூய நீர் தேங்கியுள்ள நீர்த் தேக்கங்களைக் கண்டறிந்துள்ளது.கடற்கரையோர ஆழமற்ற பரப்புகளிலும் அவற்றுக்கப்பாலுள்ள கண்டச் சரிவுகளிலும், ஆழ்கடலின் அடித் தரைகளிலும் துளைகளிட்டு அவர்கள் கடலடி நீர்த் தேக்கங்களை அளவிட்டுள்ளனர்.அட்லாண்டிக் கடற்கரையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில்கூட இத்தகைய நிலத்தடி நீர்த் தேக்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைக்கெட்டாத வண்ணம் கடலடித் தரையில் புதைந்துள்ள நன்னீரை வெளிப்படுத்தினால், நன்னீர்ப் பற்றாக்குறையுள்ள பல கடலோரப் பிரதேசங்களுக்குத் தேவையானதை விட அதிகமாகவே நன்னீர் கிடைக்குமென்று இகார் செக்ட்ஸர் உறுதியளிக்கிறார்.அவரது ஆய்வுக் குழு உலகு முழுவதிலுமுள்ள நிலத்தடி நீரோட்டம் மூலம் கடலுக்குள் பாயும் மொத்த நன்னீரின் அளவைக் கணக்கிட்டிருக்கிறது.கண்ணுக்குத் தெரியாமல் கடலில் கலந்து கொண்டிருக்கிற நிலத்தடி நீரோடைகளின் நீர் அளவைக் கணக்கிடுவது கடினம்.

அதன் காரணமாகவே உலகின் நன்னீர் இருப்புகளை மதிப்பிடும்போது நிலத்தடி நீர் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

பூமியின் நடு உறையிலிருந்து வெளிப்படும் வாயுக்களில் நிறைய நீராவியும் கலந்துள்ளது.அதுவும் கடல் நீரில் கலக்கிறது. எரிமலைகளிலிருந்தும் வென்னீர் ஊற்றுகளிலிருந்தும் பூமியின் ஆழ்பிளவுகளிலிருந்தும் ஏராளமான நன்னீர் வெளியாகிறது. அவ்வாறு வெளிப்பட்டு கடலில் கலக்கும் நன்னீர் அளவு ஆண்டுக்கு அரை முதல் ஒரு கன கிலோ மீட்டர் வரையிருக்கலாமென்று ரஷ்ய நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள்.அது ஒரு லட்சம் கோடி லிட்டருக்கு சமம்.

அடுத்து தரைப் பகுதியிலிருந்து நீர் சொட்டுச் சொட்டாக கடலில் கலந்து கொண்டேயிருக்கிறது. இந்த நீரின் அளவை கணக்கிடவே முடியாது.உலகிலுள்ள மொத்த நீரின் அளவை சரியாக கணக்கிட முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்.

ஒவ்வோராண்டும் ரஷ்ய ஆய்வர்கள் கடலோரக் கரைகளையும் கரையோரக் கடல்களையும் ஒரே சமயத்தில் ஆய்ந்து 2,400 கன கிலோ மீட்டர் அளவில் நன்னீர் கடற்கரைகளின் ஊடாகக் கசிந்து கடலில் சங்கமித்து விடுவதாக மதிப்பிட்டுள்ளனர்.

வட அமெரிக்கக் கண்டத்தின் கரைகளிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 400 கன கிலோ மீட்டர் அளவுக்கு நன்னீர் கடலுக்குப் போய் விடுகிறது. தென் அமெரிக்கக் கண்டத்திலிருந்து இவ்வாறு வெளியேறும் நீரின் அளவு சற்றே குறைவு. ஆஸ்திரேலிய கண்டத்தில் அது சுமார் 25 கன கிலோ மீட்டர் அளவிலுள்ளது. பெருங் கண்டங்களிலிருந்து வெளியேறிக் கடலில் பாய்கிற மொத்த நிலத்தடி நீரின் அளவை விட, சிறு தீவுகளிலிருந்து அதிக அளவு நீர் கடலில் கலக்கிறது.அதற்கு அத்தீவுகளின் தட்பவெப்ப நிலையும், அவற்றின் மேடு பள்ளத் தரையமைப்பும் காரணமாகின்றன.

தென் துருவத்தில் சுமார் 24 மில்லியன் கன கிலோ மீட்டர் அளவுக்கு நன்னீர் உறைந்து கிடக்கிறது. அது உலகின் நன்னீர் இருப்பில் 80 முதல் 90 சதவீதம். ஆண்டுதோறும் 1,000 முதல் 1,300 கன கிலோ மீட்டர் வரையிலான அளவுக்கு பனிப் பாறைகள் அன்டார்டிகாவிலிருந்து வெளியேறி கடலில் மிதந்து கரைகின்றன. அவை சுமார் 600 கோடி மக்களுக்கு தேவையான நன்னீரை கடலில் கரைத்து விடுகின்றன.

குறைந்தபட்சமாக பத்துக் கோடி கன மீட்டர் பருமனுள்ள பனிமலையைக் கட்டி இழுத்து வந்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்குக் கரையோர நாடுகள், வட அமெரிக்காவின் தென் மேற்குக் கரை போன்ற இடங்களுக்கு நன்னீர் வழங்கும் பல கனவுத் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. அத்தகைய ஒரு பனிமலையின் எடை நூறு மில்லியன் டன்னாக இருக்கும். பெரும் பொருட் செலவும், தொழில்நுட்பச் சிக்கல்களும் அத்திட்டங்களை நிறைவேற்றத் தடையாக உள்ளன.

கடல் நீரின் வெப்ப நிலை பனிமலையின் வெப்பநிலையைவிட 15 செல்சியஸ் டிகிரி அதிகமாக உள்ள இடங்களில் கடல் நீரின் வெப்பத்தால் ஒரு திரவத்தை ஆவியாக்கி மின் உற்பத்திச் சாதனங்களை இயக்கலாமெனவும், ஆவியைப் பனிமலையின் குளிர்ச்சியைப் பயன்படுத்தித் திரும்பவும் திரவமாக்கிக் கொள்ளலாம் எனவும் ஆய்வுத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு கன கிலோ மீட்டர் பருமனுள்ள பனிக்கட்டி மூன்றாண்டுகளுக்கு 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவும் என்கிறார்கள்.

இவையெல்லாம் ஆகாயக் கோட்டை போன்ற திட்டங்களாகத் தோன்றினாலும் இவற்றை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலை விரைவில் தோன்றி விடலாம். 

விதை நெல்லை விற்று உணவை வாங்குவதைப் போல நாளைக்கான நன்னீரை உலகம் இன்றே செலவழித்துக் கொண்டிருக்கிறது.நீர்வளம் குறைந்ததால் கடந்த 50 ஆண்டுகளில் உலகின் பல்லுயிர்ப் பன்மை பாதியாகக் குறைந்துள்ளது. நிலத்தடி நீரை அளவுக்கு மீறி பயன்படுத்துவதால் ஆறுகளின் சுயமான நீரோட்டப் பாணிகளும், சதுப்பு நிலங்கள் மற்றும் ஏரிகளின் நீர் இருப்பும் அவற்றைச் சார்ந்திருக்கும் பல்லுயிர்ப் பன்மையும் நிலை குலைந்திருக்கின்றன.

ஒரு நாட்டில் நீர்வளம் அற்றுப்போனால், அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்குக் குடிபெயரும் நிலை உருவாகும். 

தொழிற்சாலைகளை அமைக்க ஏதுவாக தண்ணீர் வளமுள்ள இடங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. ஒடிசாவில் பாஸ்கோ எஃகு உற்பத்தி நிறுவனம் தொடங்குவதை உள்ளூர் மக்கள் எதிர்ப்பதற்கு தண்ணீர்ப் பிரச்னையும் ஒரு காரணம்.

தென் கொரியா, தனக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளை நீர்வளம் மிக்க அயல்நாடுகளில் நிறுவுமாறு தொழிலதிபர்களை வற்புறுத்துகிறது. மாமிச உணவு உற்பத்திக்கு அதிக நீர் செலவாகிறபடியால் பல நாடுகள் தம் மக்களைச் சைவ உணவுக்கு மாறும்படி வேண்டுகோள் விடுக்கின்றன. 

பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்காதே என்று சொல்வதை விட்டு விட்டு தண்ணீரைப் பணமாகச் செலவழிக்காதே என அறிவுரை கூறும் காலம் வந்து விடும் போலிருக்கிறது.

                                                                                                                                         நன்றி.

Wednesday 27 May 2020

வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!.....................

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது.

கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.

இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான காரியம் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?

ஆச்சரியம் உண்டு! பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது!

கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன.


எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.

பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!

                                                                                                                        நன்றிகள்.

Sunday 29 March 2020

கரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்.........!.

இந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.

மனித இனம் உலகளாவிய ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் அரசும் மக்களும் எடுக்கப்போகும் முடிவுகள் தான் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன. அவை நமது சுகாதார கட்டமைப்பை மட்டுமல்லாது, நமது பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் ஆகியவற்றையும் முடிவு செய்யும். நாம் விரைந்து, உறுதியாக முடிவெடுக்க வேண்டும். நமது செயல்களின் நீண்டகால விளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாற்று முடிவுகளைத் தேர்ந்தெடுக்கும் போது, தற்போதைய சிக்கலை எப்படித் தீர்ப்பது என்பதோடு, இந்தச் சிக்கல் முடிவடைந்த பிறகு எப்படிப்பட்ட உலகை நாம் அடையப் போகிறோம் என்பதையும் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். ஆமாம். இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துவிடும்; மனித இனம் பிழைத்திருக்கும்; நம்மில் பலர் உயிரோடுதான் இருப்போம் – ஆனால் நமது உலகம் மாறிப் போயிருக்கும்.

அவசரகாலத்தின் பல திடீர் முடிவுகள் வாழ்நாள் வரை தொடரும். அவசர நிலையின் இயல்பு அதுதான். வரலாற்றுச் செயல்முறைகளை அவை விரைவு படுத்துகின்றன. சாதாரணமாக பல ஆண்டுகள் பிடிக்கும் முடிவுகள் சில மணி நேரங்களில் ஏற்கப்பட்டு விடும். ஒன்றும் செய்யாமல் இருப்பதன் பாதிப்பு பெரியது என்பதால், தேறாத, ஆபத்தான தொழில்நுட்பங்கள் கூட பயன்படுத்தப் பட்டுவிடும். ஒட்டு மொத்த நாடுகளே பெரிய அளவிலான சமூக ஆய்வுகளுக்கு சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்படும்.

எல்லோரும் வீட்டிலிருந்தே வேலை செய்து, தொலைத் தொடர்பு வழியாக மட்டுமே தொடர்பில் இருந்தால் என்ன ஆகும்? எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் இணையதலம் வழியாக மட்டுமே செயல்பட்டால் என்ன ஆகும்? சாதாரண நேரங்களில் அரசோ, தொழில், கல்வி வாரியங்களோ இப்படிப்பட்ட சோதனைகளைச் செய்து பார்க்க உடன்படாது. ஆனால் இது சாதாரண நேரமல்ல.

சிக்கலான இந்த நேரத்தில், குறிப்பாக இரண்டு முக்கிய முடிவுகளை நாம் எதிர் கொண்டிருக்கிறோம். முதலாவது, சர்வ வல்லமை கொண்ட அரசின் கண்காணிப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா அல்லது தன்னுரிமை கொண்ட மக்களாக வாழப் போகிறோமா என்பது. இரண்டாவது, தேசமாக நம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ளப் போகிறோமா அல்லது உலகமாக ஒன்றினையப் போகிறோமா என்பது.

உடலை ஊடுறுவும் கண்காணிப்பு 

தொற்று நோய்களைத் தடுக்க மக்கள் அனைவரும் சில வழிகாட்டுதல்களை ஏற்க வேண்டும். இதை அடைய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. அரசு மக்களைக் கண்காணிப்பதும், விதி மீறுபவர்களைத் தண்டிப்பதும் முதல் வழி. மனித வரலாற்றில் முதன் முறையாக, இன்று எல்லோரையும் இடைவிடாது கண்காணிப்பதை தொழில்நுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ரஷ்ய உளவுத் துறையால் அந்த நாட்டின் இருபத்து நான்கு கோடி மக்களை நாள் முழுவதும் கண்காணிக்க முடியவில்லை; திரட்டப்பட்ட தகவல்களையும் முழுமையாக ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இப்போது மனிதர்களை நம்பி இருக்காமல், எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் அசைவை உணரும் கருவிகளையும் (sensors), கணிப்பு முறைகளையும் (algorithms) அரசுகள் பயன்படுத்துகின்றன.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் பல அரசுகள் ஏற்கனவே புதிய கண்காணிப்புக் கருவிகளை களமிறக்கியுள்ளன. இதில் சீனா செய்திருப்பது முக்கியமானது. மக்களின் நவீன செல்பேசிகளை(smart phones)க் கண்காணித்தும், முகங்களை அடையாளம் காட்டும் லட்சக்கணக்கான கேமராக்களைக் கொண்டும், மக்கள் தங்கள் உடல் வெப்பம், உடல்நிலை ஆகியவற்றைத் தெரிவிப்பதைக் கட்டாயமாக்கியும், கொரோனா வைரஸ் தொற்று கடத்தியாக செயல்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்களது நடமாட்டத்தைக் கண்காணித்ததோடு, அவர்களோடு தொடர்பில் வந்த அனைவரையும் சீன அதிகாரிகள் அடையாளம் கண்டனர். தொற்றுநோய் பீடித்த ஒருவர் அருகில் வருகிறார் என்பதை எச்சரிக்க பல மொபைல் ஆப்-புகள் உருவாக்கப் பட்டன.


இத்தகைய தொழில் நுட்பங்கள் கிழக்கு ஆசியாவுக்கு மட்டும் உரியவை அல்ல. தீவிரவாதிகளுக்கு எதிராக போராட மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை, கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளைக் கண்டுபிடிப்பதில் பயன்படுத்த இஸ்ரேல் பாதுகாப்பு முகமைக்கு அனுமதி தந்தார் அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அதிகாரம் படைத்த நாடாளுமன்ற துணைக்குழு அதற்கு அனுமதி அளிக்க மறுத்த போது, நெதன்யாகு தனது ‘அவசர உத்தரவாக’ அதைச் செயல்படுத்தினார்.

இதில் புதிதாக ஒன்றும் இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். அண்மைக்காலங்களில் அரசாங்கமும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களை கண்காணிக்கவும், தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்கவும் புதிய புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. இப்போது நாம் கவனமாக இருக்காவிட்டால், கண்காணிப்பு வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக இந்தத் தொற்று மாறிவிடும். இதுவரை அதை ஏற்க மறுத்த நாடுகளிலும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது வழக்கத்திற்கு வந்துவிடும் என்பது மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக இதுவரை உடம்பின் மேல் புறத்தைக் கண்காணித்த நிலையில் இருந்து, உடம்பிற்குள் ஊடுறுவிக் கண்காணிக்கும் நிலைக்கு மாறுவதை அது குறிக்கிறது.

இதுவரை உங்கள் விரல்கள் செல்பேசித் திரையில் தொடும்போதும், இணைப்புகளை சொடுக்கும்போதும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பியது அரசு. கரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு, ஆர்வத்தின் மையம் மாறுகிறது. இப்போது அரசு உங்கள் விரலின் வெப்பத்தையும், உங்கள் தோலுக்கு அடியில் நிலவும் ரத்த அழுத்தத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறது.

உணவுக்காக அவசரநிலை

இனி வரும் ஆண்டுகளில் என்ன நடக்கப்போகிறது, எப்படி நாம் கண்காணிக்கப் படுவோம் என்று யாருக்கும் சரியாகத் தெரியாதது, அதைப்பற்றிய நம் நிலைப்பாட்டை முடிவுசெய்யத் தடையாக உள்ளது. கண்காணிப்புத் தொழில்நுட்பம் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் கதையில் வரும் சம்பவமாகத் தோன்றியது, இன்று பழைய செய்தியாகிவிட்டது.

எடுத்துக் காட்டாக, இதயத் துடிப்பையும் உடல் வெப்பத்தையும் இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிக்க, பயோமெட்ரிக் கங்கனத்தை ஒவ்வொருவரும் கட்டிக்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். அதிலிருந்து பெறப்படும் தகவல்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு, அரசின் அல்கிரிதம் ஆய்வு செய்கிறது. இப்போது, உங்கள் உடல்நிலை கெட்டிருப்பது உங்களுக்குத் தெரிவதற்கு முன்பே அரசுக்குத் தெரிந்துவிடும். நீங்கள் எங்கே போனீர்கள், யாரைப் பார்த்தீர்கள் என்பதும் அதற்குத் தெரியும். அதைக்கொண்டு நோய் பரவுவதை கடுமையாகக் குறைத்து விடலாம்; நோயே இல்லாமலும் செய்துவிடலாம். அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தால் தொற்று நோயைத் தடுத்து நிறுத்திவிட முடியும். பிரமாதம், இல்லையா?

இதன் குறைபாடு என்னவென்றால், அது ஆபத்தான கண்காணிப்பு முறையை நியாயப் படுத்துவதாக முடிந்துவிடும். உதாரணமாக, செய்திகளைத் தெரிந்து கொள்ள எந்தத் தொலைக்காட்சி சேனலை நான் தேர்ந்தெடுக்கிறேன் என்பதைக் கொண்டு, எனது அரசியல் நிலைப்பாட்டை அது கற்பிக்கும். எனது ஆளுமையைப் பற்றியும் அது சொல்லும். ஒரு வீடியோவை நான் பார்க்கும்போது, எனது உடல் வெப்பம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடிந்தால், என்னை சிரிக்க வைப்பது எது, அழ வைப்பது எது, கோபப்படுத்துவது எது என்று தெரிந்துகொள்ளலாம்.


காய்ச்சலையும் இருமலையும் போல, காதல், சலிப்பு, மகிழ்ச்சி எல்லாம் உயிரின் இயல்புகள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். இருமலை அடையாளம் கண்டுகொள்ளும் அதே தொழில்நுட்பத்தால் சிரிப்பையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும். வணிக நிறுவனங்களும் அரசும் நமது பயோமெட்ரிக் தரவுகளை மொத்தமாக அறுவடை செய்யத் தொடங்கினால், நமக்கு நம்மைப் பற்றித் தெரிந்திருப்பதை விட, அவர்களால் கூடுதலாகத் தெரிந்துகொள்ள முடியும். நமது உணர்வுகளைக் கணிக்க முடியும்; அவற்றை ஆட்டிப்படைத்து அவர்கள் விரும்பும் எதையும் – ஒரு அரசியல்வாதியையோ அல்லது பொருளையோநம்மிடம் விற்றுவிட முடியும். பயோமெட்ரிக் கண்காணிப்போடு ஒப்பிட்டால், இதற்கு முன் அதிகம் பேசப்பட்ட கேம்பிரிட்ஜ் ஆனாலிடிகாவின் உத்திகள் கற்கால முயற்சி போலத் தோன்றும். ஒவ்வொரு குடிமகனும் நாள்முழுவதும் பயோமெட்ரிக் கைக்கடிகாரம் கட்டிக்கொள்வது கட்டாயமாகப் போகும் 2030ஆம் ஆண்டின் வடகொரியாவை கற்பனை செய்து பாருங்கள். “பெருந் தலைவ”ரின் உரையைக் கேட்கும்போது உங்களுக்கு கோபம் வருவது போன்ற சிறு அதிர்வை உங்கள் கைக்கடிகாரம் கண்டறிந்தால், உங்கள் கதி அதோகதிதான்.

அவசர நிலையில் எடுக்கப்படும் தற்காலிக
நடவடிக்கை;

அவசரநிலை முடிந்ததும் அதுவும் முடிவுக்கு வந்துவிடும் என்று பயோமெட்ரிக் கண்காணிப்பை நீங்கள் நியாயப் படுத்தலாம். இன்னொரு அவசரநிலை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது என்ற நிலை எப்போதுமே நிலவும் சூழ்நிலையில் – தற்காலிக நடவடிக்கைகள் அவசர காலத்தைக் கடந்து நீடிக்கும் அசிங்கமான வழக்கம் கொண்டவை.

உதாரணமாக எனது தாய் நாடான இஸ்ரேல், 1948 ஆம் ஆண்டு சுதந்திரப் போரின் போது பிரகடனம் செய்த அவசரநிலை, உணவு செய்வதற்காக (நான் கிண்டல் செய்யவில்லை) நிலங்களைப் பறித்தது, பத்திரிக்கை தணிக்கை கொண்டுவந்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. சுதந்திரப் போர் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்ட போதும் , அவசர நிலை முடிந்து விட்டதாக இஸ்ரேல் இன்னும் அறிவிக்கவில்லை; 1948ல் எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ளவில்லை (கருணையோடு உணவுக்கான அவசரநிலை உத்தரவு கடந்த 2011ல் விலக்கிக் கொள்ளப் பட்டது).


கரோனா வைரஸ் தொற்று முற்றிலும் முடிவுக்கு வந்தாலும், தரவுகளைத் திரட்டத் துடிக்கும் சில அரசுகள், கரோனா வைரசின் இரண்டாவது அலை பற்றிய அச்சம் இருக்கிறது, மத்திய ஆப்பிரிக்காவில் புதிய வகை எபோலா உருவாகி வருகிறது, இது வருகிறது, அது வருகிறது …. என்று எதையாவது சொல்லி பயோமெட்ரிக் கண்காணிப்பு தொடர வேண்டும் என்று வாதிடலாம் 

நமது அந்தரங்கத்தைக் காத்துக்கொள்ளும் உரிமை பற்றிய பெரும் யுத்தம் அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சிக்கல் அதில் ஒரு முக்கியப் புள்ளி – ஏனென்றால், உங்கள் அந்தரங்க உரிமையா அல்லது ஆரோக்கியமா இரண்டில் எது என்று கேட்டால் மக்கள் இப்போது ஆரோக்கியத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். 

சோப்புக் காவலர்கள் 

அந்தரங்க உரிமையா ஆரோக்கியமா என்று மக்களைக் கேட்பதுதான் உண்மையில் பிரச்சனையின் ஆணி வேராக இருக்கிறது; ஏனென்றால் இது ஒரு தவறான கேள்வி. நாம் அந்தரங்க உரிமை, ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் பெற வேண்டும். சர்வ அதிகாரம் கொண்ட கண்காணிப்பு அரசை நிறுவாமல், குடிமக்களை அதிகாரம் பெற்றவர்களாக ஆக்குவதன் மூலம் – நமது உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ளவும் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கவும் நாம் முடிவு செய்யலாம். சில வாரங்களுக்கு முன்பு, கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் ஆசிய நாடுகள் முன் வைத்துள்ளன. கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை ஓரளவு பயன்படுத்தினாலும், அவை பரவலாக மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வது, நேர்மையான அறிக்கைகளை வெளியிடுவது, அனைத்துத் தகவல்களையும் மக்களுக்குத் தெரிவித்து அவர்களே விரும்பி ஒத்துழைக்கச் செய்வது ஆகியவற்றை நம்பியிருந்தன.

மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, கடுமையான தண்டனைகள் ஆகியவை மட்டுமே, மக்களை நன்மை தரும் வழிகாட்டு முறைகளை ஏற்கச் செய்வதற்கான முறைகள் அல்ல. அறிவியல் உண்மைகளை மக்களுக்குத் தெரிவித்தால், அதிகார அமைப்புகள் உண்மையைத்தான் சொல்கின்றன என்று மக்கள் நம்பினால், அவர்களை பெரிய அண்ணன் (Big Brother) கண்காணிக்காத போதும் அவர்கள் சரியான செயல்களைச் செய்வார்கள். கட்டுக் காவலில் வைக்கப்படும் அறிவில்லாத மக்களைவிட, அனைத்துத் தகவல்களையும் அறிந்த, தானே முன்வந்து ஏற்று நடக்கும் மக்கள்தான் வீரியமும் செயல்திறனும் கொண்டவர்களாக இருப்பார்கள்.


உதாரணமாக, உங்கள் கைகளை சோப்பு போட்டு கழுவுவதை எடுத்துக்கொள்ளுங்கள். மனிதர்களின் தன்சுத்தத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய முன்னேற்றங்களில் இதுவும் ஒன்று. இந்தச் சாதாரண செயல் ஆண்டுதோறும் பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றுகிறது. நம் தலைமுறைக்கு அது பெரிதாகத் தெரிவதில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் சோப்பு போட்டு கை கழுவுவதன் முக்கியத்துவத்தை அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்தார்கள். அதற்கு முன்பு, மருத்துவர்கள் கூட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடுத்தது என்று கையைக் கழுவாமல்தான் செய்தார்கள். இன்று கோடிக்கணக்கான மக்கள் கைகளை தினமும் சோப்பு போட்டுக் கழுவுகிறார்கள் என்றால் அவர்களுக்கு உண்மை தெரிந்திருப்பதால்தானே தவிர, அது சோப்பு போலீஸ் மீது உள்ள பயத்தால் அல்ல. வைரஸ், பாக்டீரியா ஆகியவை பற்றி நான் கேள்விப் பட்டிருப்பதால், அந்த நுண்ணுயிரிகள் நோயை உண்டாக்கும் என்று புரிந்திருப்பதால், சோப்பு அவற்றை நீக்கும் என்று எனக்குத் தெரிந்திருப்பதால், நான் சோப்பு போட்டு கை கழுவுகிறேன். 

அந்த அளவுக்கு ஒத்துழைப்பும் ஏற்பும் கிடைக்க நம்பிக்கை ஏற்பட வேண்டும்; மக்களுக்கு அறிவியல் மீதும், அதிகார அமைப்புகள் மீதும், ஊடகங்கள் மீதும் நம்பிக்கை ஏற்பட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக பொறுப்பற்ற அரசியல்வாதிகள் வேண்டுமென்றே அறிவியல் மீதும், அதிகார அமைப்புகள் மீதும், ஊடகத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை குலைத்திருக்கிறார்கள். இப்போது அதே பொறுப்பற்ற அரசியல்வாதிகள், மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் என்று நம்ப முடியாது என்ற வாதத்தை முன்வைத்து, சர்வாதிகாரத்திற்கான பாதையைத் தேர்ந்தெடுக்கத் துடிக்கிறார்கள்.


சாதாரணமாக, பல ஆண்டுகளாகவே இழந்துவிட்ட நம்பிக்கையை ஓர் இரவில் சரிக்கட்டி விட முடியாதுதான். ஆனால் இது அசாதாரண நேரம். சிக்கலான நேரத்தில், மனங்களும் விரைவாக மாறலாம். உங்கள் சகோதரர்களோடு பல ஆண்டுகளாக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுவரும் நீங்கள், ஒரு அவசர நிலை ஏற்பட்டால் கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கையும் நட்புணர்வும் உங்களிடையே நிலவுவதைக் கண்டு கொள்வீர்கள். ஒருவருக்கு ஒருவர் உதவ ஓடுவீர்கள்.

கண்காணிப்பு ஆட்சிக்கு மாற்றாக, மக்களுக்கு அறிவியலின் மீதும், அதிகார அமைப்புகளின் மீதும், ஊடகத்தின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்த காலம் கடந்து விடவில்லை. நாம் புதிய தொழில்நுட்பங்களையும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும், ஆனால் அந்தத் தொழில் நுட்பங்கள் மக்களுக்கு அதிகாரம் தருபவையாக இருக்க வேண்டும். எனது உடல் வெப்பத்தையும் ரத்த அழுத்தத்தையும் கண்காணிப்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் அந்தப் புள்ளி விவரங்களை சர்வ வல்லமை படைத்த அரசை உருவாக்கப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, நான் அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்கவும் அரசாங்கத்தை அதன் செயல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யவும் அது எனக்கு உதவ வேண்டும்.

எனது உடல்நிலையைப் பற்றிய தகவல்கள் இருபத்து நான்கு மணி நேரமும் எனக்கு கிடைக்குமென்றால், என்னால் அடுத்தவர்களின் உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை மட்டுமல்ல, என் உடல்நிலை கெடக் காரணமான நடத்தை எது என்றும் தெரிந்து கொள்வேன். கரோனா வைரஸ் பரவுவது பற்றிய நம்பத்தகுந்த புள்ளிவிவரங்களை அணுகவும் ஆராய்ந்து பார்க்கவும் முடியுமானால், அரசு உண்மையைச் சொல்கிறதா, தொற்றைக் கட்டுப்படுத்த சரியான திட்டங்களைச் செயல்படுகிறதா என்பதை நான் எடைபோட முடியும். கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசும்போது, அரசுகள் தனி மனிதர்களைக் கண்காணிக்க மட்டுமல்ல, தனிமனிதர்கள் அரசுகளைக் கண்காணிக்கவும் அவற்றைப் பயன்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆகவே, கரோனா வைரஸ் தொற்று, குடியுரிமைக்கு வந்த ஒரு முக்கியமான சோதனை. வரும் நாட்களில் நாம் ஒவ்வொருவரும், தன்னலம் பிடித்த அரசியல்வாதிகளையும், சதித்திட்டம் பற்றிய அடிப்படை ஆதாரமில்லாத கதைகளையும் நம்பாமல், அறிவியல் புள்ளிவிவரங்களையும், மருத்துவ நிபுணர்களையும் நம்பவேண்டும். சரியான முடிவை நாம் எடுக்கத் தவறினால், நமது உடல்நலத்தைப் பாதுகாக்க இதுதான் ஒரே வழி என்று நினைத்து, மிக அரிதான நமது சுதந்திரங்களை எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்து விடும் நிலைமை ஏற்படலாம்.

உலகளாவிய திட்டம் 

தேவை நாம் எதிர்கொள்ளும் இரண்டாவது முடிவு தனித்து நிற்கும் தேசியமா அல்லது உலக ஒற்றுமையா என்பது. நோய்த்தொற்று, அதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்கள் ஆகிய இரண்டுமே உலக அளவிலான பிரச்சனைகள். உலக அளவிலான ஒத்துழைப்பின் மூலம்தான் அவற்றை வெற்றிகரமாக தீர்க்க முடியும்.

முக்கியமாக, வைரசைத் தோற்கடிக்க முதலில் உலக அளவில் நாம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும்; அதுதான் வைரசோடு ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இருக்கும் அனுகூலம். சீனாவில் இருக்கும் ஒரு கரோனா வைரசும் அமெரிக்காவில் இருக்கும் ஒரு கரோனா வைரசும், மனிதர்களை எப்படித் தாக்குவது என்ற யோசனைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் கரோனா வைரஸ் பற்றி கற்றுக்கொண்ட பாடங்களையும் அவற்றை சமாளிக்கும் முறைகளையும் சீனா அமெரிக்காவுக்குக் கற்றுத் தரலாம். காலையில் மிலன் நகரில் ஒரு இத்தாலிய டாக்டர் கண்டுபிடித்த ஒரு தகவலைக் கொண்டு, மாலையில் டெஹ்ரான் நகரில் பல உயிர்களைக் காக்க முடியும். பல்வேறு மருத்துவ கொள்கைகளுக்கு இடையில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தயங்கும் பிரிட்டிஷ் அரசு, ஒரு மாதத்திற்கு முன்பு அதே சிக்கலை எதிர் கொண்ட கொரியாவிடம் இருந்து ஆலோசனை பெறலாம். ஆனால் அப்படி நடக்க, உலக அளவிலான கூட்டுறவும் நம்பிக்கை உணர்வும் தேவை.


நாடுகள் தகவல்களை வெளிப்படையாகப் பரிமாறிக் கொள்ளவும், இணங்கி ஆலோசனை பெறவும் முன்வரவேண்டும். அவை பெறுகின்ற தரவுகளையும் விளக்கங்களையும் நம்பி ஏற்கும் நிலை உருவாக வேண்டும். மருத்துவ உபகரணங்களை, குறிப்பாக சோதனைப் பெட்டிகளையும், சுவாசக் கருவிகளையும் தயாரிக்கவும் விநியோகிக்கவும் உலக அளவிலான முயற்சி தேவை. ஒவ்வொரு நாடும் உள்நாட்டிலேயே அதை உற்பத்தி செய்யவும், கிடைக்கும் கருவிகளை பதுக்கி வைத்துக் கொள்ளவும் முயலாமல், உலக அளவில் கூட்டு முயற்சி செய்தால், உற்பத்தி துரிதமாவதோடு உயிர்காக்கும் கருவிகளை நியாயமான முறையில் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் படுவதையும் உறுதி செய்யலாம். போரின்போது நாடுகள் தொழிற்சாலைகளைத் தேசியமயமாக்குதைப்போல, கரோனா வைரசுக்கு எதிரான மனிதர்களின் போரில், உற்பத்தி வசதிகளை மனிதாபிமானம் கொண்டதாக மாற்றுவதற்கான தேவை ஏற்படலாம். கரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள ஒரு பணக்கார நாடு, தனக்குத் தேவையானபோது மற்ற நாடுகள் உதவும் என்ற நம்பிக்கையில், தொற்று அதிகமுள்ள ஒரு ஏழை நாட்டுக்கு விலைமதிப்பில்லாத கருவிகளை அனுப்ப முன்வரவேண்டும். 

மதுத்துவ நிபுணர்களைத் திரட்டவும் அப்படிப்பட்ட உலகலாவிய ஒரு முயற்சியைப் பற்றியும் யோசிக்கலாம். அதிகம் பாதிக்கப்படாத நாடுகள் தங்கள் மருத்துவர்களை அதிகம் பாதிக்கப் பட்டுள்ள நாடுகளுக்கு அனுப்பினால், உதவியாக இருப்பதோடு, தொற்றைப் பற்றிய அனுபவம் பெறவும் உதவும். பிறகு, தொற்று இடம் மாறினால், உதவிகளும் மறுபுறத்தில் இருந்து வரத் தொடங்கலாம்.

பொருளாதாரம் சார்ந்தும் உலக ஒத்துழைப்பு தேவைப்படும். சங்கிலித் தொடராகப் பிணைக்கப் பட்டிருக்கும் உலகப் பொருளாதாரத்தின் தன்மையால், மற்ற நாடுகளைக் கணக்கில் கொள்ளாமல் ஒவ்வொரு நாடும் தனித்துச் செயல் படத் தொடங்கினால், பொருளாதாரச் சிக்கல் தீவிரமடைவதோடு, குழப்பமும் ஏற்படும். நமக்கு உலகம் தழுவிய செயல்திட்டம் தேவை; அதுவும் விரைவாகத் தேவை.


பயணம் குறித்த உலக ஒப்பந்தமும் தேவைப் படுகிறது. பன்னாட்டுப் பயணங்களை மாதக் கணக்கில் நிறுத்தி வைப்பது பெரும் சிரமங்களைத் தரும்; கரோனா வைரசுக்கு எதிரான போரில் பின்னடைவை ஏற்படுத்தும். விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள் போன்ற மிக அவசியமான சிலரையாவது அனுமதிக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். பயணிகளை அவர்களது நாடுகளிலேயே சோதித்து அனுப்புவது குறித்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். கவனமாக பரிசோதித்த பயணிகள்தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப் படுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் உங்கள் நாட்டில் அவர்களைத் தாரளமாக ஏற்கலாம்.

கெடுவாய்ப்பாக, தற்போது நாடுகள் இவற்றில் எதையும் செய்யவில்லை. ஒரு முடக்குவாதம் உலக சமுதாயத்தைப் பீடித்திருக்கிறது. பக்குவம் பெற்றவர்கள் யாரும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்பே உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி பொதுவான செயல்திட்டத்தை வகுத்திருப்பார்கள் என்று நாம் எதிர்பார்த்திருக்கலாம். ஜி-8 நாடுகளின் தலைவர்கள் இந்த வாரம்தான் காணொலி மூலம் சந்தித்தார்கள் – ஆனால் அவர்கள் செயல்திட்டம் எதையும் வகுக்கவில்லை.

இதற்கு முன்பு, 2008-ல் நிதிச் சிக்கல் ஏற்பட்ட போதும், 2014-ல் எபோலா தொற்று ஏற்பட்ட போதும், அமெரிக்கா தலைமைப் பொறுப்பை ஏற்றது. ஆனால், தற்போதைய அமெரிக்க நிர்வாகம் தலைமைப் பொறுப்பை ஏற்கவில்லை. மனித இனத்தின் எதிர்காலத்தைவிட, அமெரிக்காவின் பெருமைதான் முக்கியம் என்று அது தெளிவுபடுத்தி விட்டது. அதன் நெருக்கமான நட்பு நாடுகளையும் அது கைவிட்டுவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது பயணத் தடை விதிப்பதற்கு முன்பு, அவற்றோடு கலந்து பேசுவதைப் பற்றியோ, முன்னெச்சரிக்கை செய்வதைப் பற்றியோ அது கவலைப்படவில்லை. கோவிட் -19 தடுப்பு மருந்தை தயாரிக்கும் தனி உரிமையை வாங்க ஒரு ஜெர்மன் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டாலர் கொடுக்க முன்வந்ததன் மூலம், ஜெர்மனியை அது அவமதித்து விட்டது. தற்போதைய தலைமை அதன் போக்கை மாற்றிக் கொண்டு உலக அளவிலான செயல்திட்டத்தை முன்வைத்தாலும், பொறுப்பை ஏற்க முன்வராத, தனது தவறுகளை ஒப்புக் கொள்ளாத, வழக்கமாகவே வெற்றியைத் தனதாக்கிக் கொண்டு, தோல்விக்கான பழியை மற்றவர்மீது போடும் தலைமையை யாரும் ஏற்க மாட்டார்கள்.


அமெரிக்கா காலியாக விட்டுள்ள வெற்றிடத்தை மற்ற நாடுகள் நிரப்பாவிட்டால், தற்போதைய நோய்த் தொற்றைத் தடுப்பது சிரமம் என்பதோடு, இனி வரும் ஆண்டுகளில் அதன் தொடர்ச்சி சர்வதேச உறவுகளையும் கெடுக்கும். இருந்தாலும் ஒவ்வொரு சிக்கலும் ஒரு வாய்ப்புதான். உலக ஒற்றுமையின்மையின் ஆபத்தை மனித இனம் உணர்ந்துகொள்ள நடப்பு நோய்த் தொற்று உதவும் என்று நம்பலாம். 

மனித இனம் எதைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க வேண்டும். ஒற்றுமையற்ற வீழ்ச்சிப் பாதையில் பயணிப்பதா அல்லது உலக ஒற்றுமை வழியை தேர்ந்தெடுப்பதா? ஒற்றுமை இன்மையைத் தேர்ந்தெடுத்தால், தற்போதைய சிக்கலை நீடிக்கச் செய்வதோடு, வருங்காலத்தில் இன்னும் மோசமான பேரழிவுகளைச் சந்திப்பதிலும் முடியலாம். உலக ஒற்றுமையைத் தேர்ந்தெடுத்தால், அது கரோனா வைரசுக்கு எதிராக மட்டுமல்ல இனி வரப்போகும் தொற்றுகளுக்கும், இருபத்தோறாம் நூற்றாண்டில் மனித இனத்தைத் தாக்கப் போகும் சிக்கல்களுக்கும் எதிரான வெற்றியாக இருக்கும்.

யுவல் நோவா ஹராரி – சேப்பியன்ஸ், ஹோமோ தியஸ், 21ஆம் நூற்றாண்டுக்கு 21 பாடங்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர். 

தமிழில்: மா.அண்ணாதுரை

                                                                                                                            நன்றிகள்.

Tuesday 25 February 2020

உரிமை மனு.............!.

சட்டமெய்யியல், சட்டம் ஆகியவற்றில், உரிமை என்பது, ஒரு பண்பட்ட சமுதாயத்தில், சட்டப்படி அல்லது ஒழுக்கநெறிப்படி; செயல், பொருள், ஏற்றுக்கொள்ளல் என்பவை தொடர்பில்; செய்தல் அல்லது செய்யாமல் இருத்தல், பெறுதல் அல்லது பெறாமல் இருத்தல் என்பவற்றுக்கான உரித்து ஆகும். 

உரிமைகள் மக்களிடையேயான தொடர்பாடலுக்கான விதிகளாக அமைவதால், அவை தனிமனிதர் மீதும், குழுக்கள் மீதும் கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றன. 

எடுத்துக் காட்டாக ஒருவருக்கு வாழும் உரிமை உண்டெனில், மற்றவர்களுக்கு அவரைக் கொல்லும் சுதந்திரம் கிடையாது. 

உரிமைகள் குறித்த மிகப் பிந்திய கருத்துருக்கள், எல்லாம்தழுவிய சமத்துவ நோக்கம் கொண்டவை. 

அதாவது, எல்லோருக்கும் சம உரிமை என்பவை. 

உரிமைகள் தொடர்பாக தற்காலத்தில் இரண்டு முக்கியமான கருத்துருக்கள் நிலவுகின்றன. 

ஒன்று, இயல்புரிமை என்னும் கருத்துரு ஆகும். 

இது, சில உரிமைகள் இயற்கையாக அமைந்தவை அதில் எந்த மனித சக்தியும் முறையாக மாற்றம் செய்ய முடியாது என்கிறது. 

இரண்டாவது, சட்ட உரிமை என்னும் கருத்துரு. 

இது, உரிமை என்பது சமுதாயத்தால் ஆக்கப்படுவதும், அரசுகளால் நடைமுறைப்படுத்தப்படுவதும், மாற்றங்களுக்கு உட்படக் கூடியதுமான மனித உருவாக்கம் என்கிறது. 

மாறாக, பெரும்பாலான முற்காலத்து உரிமை தொடர்பான கருத்துருக்கள் படிமுறை அமைப்புக் கொண்டவை. 

இவற்றின்படி, தகுதி அடிப்படையில் மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. 

சிலருக்கு மற்றவர்களிலும் அதிகமான உரிமைகள் வழங்கப்பட்டன.

                                                                                                                              நன்றிகள்.

எண்ணெய் குளியல் என்றால்...............!.

பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? 

உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. 

எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 

1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 தேக்கரண்டி சீரகம், கால் தேக்கரண்டி புழுங்கலரிசி, 2 பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி, வடிகட்டவும். அதைத் தலை, தொப்புள், அடி வயிறு, கால் கட்டை விரல் என உச்சி முதல் பாதம் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவும். 

பிறகு ஷாம்பு குளியல் எல்லாம் வேலைக்கு ஆகாது. பஞ்சகற்பம் (கடுக்காய் தோல், நெல்லி வற்றல், வேப்பம் விதை, வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் ஆகிய ஐந்தும் சேர்த்தரைத்த பொடி) சிறிது எடுத்து, பசும்பால் விட்டுக் கலந்து, தலைக்குத் தேய்த்துக் குளிக்க வேண்டும். 

கர்ப்பப்பை என்பது மண் என்றால், விந்து என்கிற விதை அதில் விழுந்து, வளர மண் வளமாக இருக்க வேண்டுமில்லையா? 

மண் உவர்ப்புத்தன்மையுடன் இருந்தால், விதை, துளிர்க்காது. உடலை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க இன்னொரு அவசிய சிகிச்சை உண்டு. 50 மி.லி. விளக்கெண்ணெயை, 25 மி.லி. நீராகாரத்துடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 

இது இயற்கையான பேதி மருந்து. 6 மாதங்களுக்கொரு முறை இப்படிச் செய்தால், ஒட்டுமொத்த உடலும் சீராகும். நீங்கள் அணிகிற உடைக்கும், கர்ப்பம் தரிக்கிற தன்மைக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா? 

‘கூபகப் பகுதி’ எனப்படுகிற இடுப்பெலும்புப் பகுதி இடர் இல்லாமலும், காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும் என்றுதான், அந்தக் காலத்தில் பாவாடை, புடவை போன்ற உடைகள் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. 

பாவாடையின் மடிப்பும், புடவையின் கொசுவமும், கூபக அறைக்கு, திரைச்சீலை மாதிரி பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டவை. 

கர்ப்பப்பை மற்றும் பெண் உறுப்பின் இயற்கைத்தன்மையை பாதிப்பதுடன், கருத்தரிக்காமல் செய்வதற்கும், ஜீன்ஸ் பேன்ட், டிரவுசர் போன்ற நவீன உடைகள் காரணம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. அடுத்ததாக குதிகால் உயர்ந்த காலணிகள். 

குதிகாலை உயர்த்தி, விரல் பகுதியை அழுத்தியபடி நடக்க வைக்கிற அந்தக் காலணிகளைத் தொடர்ந்து அணிவதால், கர்ப்பப்பையானது, கருவாயின் வழியே கீழ்நோக்கி சரியத் தொடங்கும். விந்து தங்காதபடியான ஒரு வடிவமைப்பை தானே ஏற்படுத்தி விடும். 

ஆரம்பத்தில் குழந்தையின்மைக்குக் காரணமாகிற இந்தச் சின்ன விஷயம், பிற்காலத்தில், கர்ப்பப்பை அடித்தள்ளல் பிரச்னை வரை கொண்டு போய் விடும். 

இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு மஞ்சள் பூசிக் குளிப்பது தெரியும்? ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பதில், மஞ்சளின் மகிமை பற்றி அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 

தோலில் தடவும் மஞ்சள்தான். குறிப்பாக, உள் உறுப்புகளில் தடவுவதன் மூலம், ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடிய தொற்றுக்கிருமிகள் தவிர்க்கப்படும். 

ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதன் காரணமாக தடைப்பட்டுப்போன கர்ப்பம் கை கூடும். களிங்காதி எண்ணெய், ஆற்றுத்தும்மட்டி எண்ணெய் என சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும். 

மாதவிடாயின் முதல் 3 நாள்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த எண்ணெயை சாப்பிட்டால், கரு தங்கி நல்ல முறையில் வளரும். 

விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், சின்ன வெங்காயச் சாறு, மலை வேப்பிலைச் சாறு, ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு எல்லாவற்றையும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, மாதவிடாயின் 3 நாள்களிலும் எடுத்துக் கொண்டால், கர்ப்பப்பை பலம் பெறும். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்கட்டிகளும், சாக்லெட் சிஸ்ட் பிரச்னையும் தன்னால் நீங்கி, கர்ப்பம் தங்கும். 

சினைப்பையில் இருந்து சினைமுட்டையானது, கர்ப்பப்பைக்கு முதிர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லவும் உதவும். 

                                                                                                                               நன்றிகள்.

திருமணத்தின்பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா...........?.

திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? 

பிரம்மிப்பூட்டும் இரகசியம்..! 

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும். கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம். 

அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விசத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விசம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விசம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும். 

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர். 

மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால், 

ஏ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும். 

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள். 

திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல. ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது.
               
                                                                                                                                    நன்றிகள்.

இரண்டே வேட்கைகளில் சண்டை நடக்கிறது.............!.

பசி எடுத்தால் உணவு, இச்சை பிறந்தால் இணை என்ற இரண்டே வேட்கைகளில் தான் அதற்க்குள் சண்டை நடக்கிறது. 

அது மிருக இனம் பிழைத்திருப்பதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்க்கும் இயற்க்கை விதித்திருக்கும் விதி. மற்ற‌படி மிருகங்கள் ஒன்றை ஒன்று பார்த்து, பொறாமைப்படுவது இல்லை, வஞ்சம் கொள்வது இல்லை, சதிச் செயல்களில் ஈடுபடுவது இல்லை மனிதன் தான் இயல்பை உணராமல் தடுமாறுகிறான். 

ஆரம்பத்தில் அவனும் தன் உணவுக்காக, உடைக்காக, உறைவிடத்திற்க்காக சண்டை போடத்துவங்கினான். 

பிற்பாடு நாகரீகம் வளர வளர அவனுடைய தேவைகளும் பெருகிவிட, கூடுதலான வசதிகளுக்காகவும் தன் பெருமைகளுக்காகவும் போரிடும் குணம் அவன் அடிப்படை குணம் ஆகிவிட்டது. 

அதை மறைத்து தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பு அவன் இயல்பு ஆகிவிட்டது. சட்ட திட்டங்களால் ஆளப்படுவதால் மட்டுமே எந்த சமூகமும் நாகரீகம் அடைந்து விட்டதாக சொல்ல முடியாது. 

லண்டன், பாரீஸ், மும்பை, நியூயார்க் என இன்றைக்கு மிக நாகரீக நகரம் என்று நீங்கள் கருதும் எந்த நகர‌த்தை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளுங்கள் அங்கே சட்டத்தை விலக்கி காவல்த்துறையை கலைத்து விட்டு பாருங்கள்....

மூன்றே நாளில் எல்லாம் தலைகீழாகிவிடும். மிக நாகரீகமான மனிதன் என்று நீங்கள் கருதியவர் கூட குகை மனிதனை விடக் கேவலமானவனாக நடந்து கொள்வதை நீங்கள் பார்க்கலாம். 

நாகரீகம், கல்வி உங்களின் மிருக குணங்களைப் பின்னிழுக்க வைத்து உங்களை போலியாக வெளியுலகில் காட்டிக் கொள்ளத் தூண்டுகின்றன. 

எப்பொழுதெல்லாம் நாகரீகமும், கல்வியும் மறந்து போகின்றதோ அப்பொழுதெல்லாம் உங்களின் அடக்கி வைத்த குணம் தன்னை முன் தள்ளி வெடித்துக் கிளம்புகின்றது. 

ஒரு ஆணும் பெண்ணும் விரும்பி தங்களுக்கிடையில் பாலியல் தேவைகளைபூர்த்தி செய்து கொள்வதை நான் எந்த தருணத்திலும் எதிர்க்க மாட்டேன். ஆனால், அதனை நான்கு சுவர்களுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
                                                                                                                       
                                                                                                                        நன்றிகள்.

மற்றவர்களைத் திருத்துவதா.............. ?.

ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. 

அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். 

நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை.
                                                                                                                                   நன்றிகள்.
                                                                                                    

எங்கே இருக்கிறது திருப்தி............... ?.

“திருப்தி என்பது என்ன?

பணத்தால் திருப்தி ஏற்பட்டு விடுமா…? 

பத்தாயிரம் ரூபாய் கையிலிருந்தால், இருபதாயிரம் ரூபாய் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். 

ஒரு வீடு சொந்தமாக இருந்தால், இன்னொரு வீடு எப்போது வாங்கலாம் என்கிற ஆசை பிறக்கும். இல்லாவிட்டால் இந்த வீட்டை மேலும் விரிவுபடுத்தலாம் என்கிற ஆசை பிறக்கும். 

எல்லா வசதிகளுமே இப்படித்தான். 

திருப்தி என்பது தொடுவானம் போன்றது. 

நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும்.

                                                                                                                                                                                                                                                                                                         நன்றிகள்.