Thursday 31 May 2012

என்னவள் புருவத்தில் ...............!

வானவில்
ஏழு நிறம் என்பார்கள்
ஆனால்
நான் காண்கிறேன்
இரண்டு மட்டும்
இரண்டும் ஒரே நிறத்தில்,


என்னவள் புருவத்தில் ...

நன்றிகள்.

Wednesday 30 May 2012

பித்தப்பை என்றால் என்ன...................?


பித்தப்பை என்பது கல்லீரலுக்கு வலப்புறமாக, கீழே, ஒரு 'கோல்ப்' பந்தின் அளவுள்ள பேரிக்காய் வடிவிலுள்ள ஒர் உட்பையாகும். இதுனுடைய முக்கிய பயன்பாடு என்னவென்றால் நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புப்பொருட்களைச் சீரணிக்க உதவும், இயற்கை இயக்கியான, பித்தநீரைச் சேகரித்து அனுப்புவதாகும். பித்தநீரானது கல்லீரலில் உற்பத்தி செய்யப்பட்டு, பித்தப்பையில் தற்காலிகமாக இருப்பு வைக்கப்படும் ஒரு பசும் பொன் வண்ண திரவமாகும்.

கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை நாம் உட்கொண்டதும் பித்தப்பையில் விடுதலை செய்யப்படும். பித்த நீரானது, சாதாரணமாக பித்தப்பை குழாய், மற்றும் பித்தநீர்க்குழாய் என்றழைக்கப்படும். இழை நாளங்களின் வழியே சிறு குடலுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள கொழுப்புப பொருட்களைச் சீரணிக்க உதவும்.

பித்தப்பை சிக்கல்கள் யாருக்கு உண்டாகும் ?

பொதுவாக பித்தப்பை சம்பந்தமான சிக்கல்கள் தோன்றுவதற்கு வாய்ப்பிற்கு பல காரணங்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலுள்ள கொழுப்புச்சத்தை நம் உடல் எவ்வாறு செரிமாணம் செய்கிறது என்பதையும், பித்தப் பையில் ஏதேனும் தொற்றுநோய் உள்ளதா என்பதையும் பொருத்துப் பித்தப்பை சிக்கல்கள் உண்டாகின்றன என்று நம்பப் படுகிறது.

பின் கண்ட பருவத்தினருக்குப் பித்தப்பை சிக்கல்கள் தோன்ற பெரிதும் வாய்ப்புகளுள்ளன என ஆய்வுகள் சுட்டுகின்றன.

வயது நாற்பதுகளிலுள்ள பெண்கள் அதிக எடையும் பருமனுமுள்ள ஆண்கள், பெண்கள். பால் சம்பந்தமான உணவுப் பொருட்களையும் விலங்கு கொழுப்புப் பொருட்களையும், பொரிக்கப்பட்ட உணவு வகைகளையும் அதிகமாக உட்கொள்ளும் மக்கள்.பித்தப்பை சிக்கல்களுள்ள மக்களின் பெற்றோர்கள், உடன் பிறப்புகள், குழந்தைகள்.

பித்தப்பை சிக்கல்கள் எப்படி உண்டாகின்றன ?

பொதுவாக பித்தப்பையில் பித்தக்கற்கள் ஏற்படுவதால் பித்தப்பை சிக்கல்கள் உண்டாகின்றன. பித்தப் பையின் உள்ளே பித்த நீரும் பிற நீர்ம இரசாயனங்களும் அளவுக்கு அதிகமாகும் போது, அதன் விளைவாக இரசாயன கலப்பு ஏற்பட்டுக் கனப் பொருட்களாகவும் வண்டல் படிவங்களாகவும் ஏற்படுகின்றன. காலப் போக்கில் இந்த வண்டல்கள் உருவில் பெரியதாக வளர த் தொடங்கி பித்தக் கற்களாகின்றன.

பித்தக்கல் பெரியதாக இருந்து பித்தநீர்க் குழாயில் பயணம் செய்யும்போது, பித்தப் பையில்ருந்து பித்த நீரின் வெளியேற்றத்தைத் தடை செய்யக்கூடும். வெளியேற்றும் வழி அடைக்கப் படுவதால் பித்தப்பை வீங்கத் தொடங்கும்.

பித்தநீரால் பித்தப்பை முழுதும் நிரப்பப்பட்டதும் பித்தநீரின் பின்னோட்டம் நிகழ வாய்ப்புள்ளது. இதன் விளைவாக பித்தப்பை தொற்று நோயால் பீடிக்கப் படுகிறது.

உணவுக்குப் பின்னர், சிறப்பாக பொரிக்கப் பட்ட உணவு, பொரியல் முதலிய எண்ணெய்ப்பாங்கான உணவுப் பொருட்களை உண்டபின்னர் வலது பக்க, மைய வயிற்றுப் பாகத்தில் பெரும் வலி ஏற்படுவது இந்நோய் அறிகுறிகளில் அடங்கும். மெல்ல இந்த வலி முதுகுக்கும் தோளின் நுனிபாகத்திற்கும் பரவக்கூடும்.

இதைத்தவிர குமட்டல், வாந்தி, காய்ச்சல், மஞ்சள் காமாலையும் உண்டாகும்.

திறந்த பித்தப்பை அறுவை மருத்துவம் :

வயிற்றினை பெரியதாக அறுத்து பித்தப் பையை அகற்றுவது காலங் காலமாக நடைபெற்று வரும் மருத்துவ முறையாகும். அதிக அளவில் இரத்தக்கசிவு, தொற்று நோயால் பீடிக்கப் படுவது இந்த முறையிலுள்ள சிக்கல்களும் அபாயமுமாகும். இதனை இப்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் செய்வது இல்லை..

லேப்ரோ ஸ்கோபிக் பித்தப்பை அறுவை மருத்துவம்:

தற்போது, இந்தப் புதிய நுட்பத்தின் மூலம் 1 செ.மீக்கும் குறைந்த வட்ட முள்ள 4 சிறு துளைகள் செய்யப்பட்டு அவற்றின் வழியே பித்தப்பை அகற்றுதல் சிறப்பாக நடத்தப் படுகிறது.

ஒரு லாப்ரோ ஸ்கோப் (ஒரு புகைப்படக் கருவியுடன் இணைக்கப்பட்ட ஒரு தொலைநோக்கி) ஒரு சிறு துளையின் மூலம் உள்ளுர செலுத்தப்பட்டு, பித்தப்பையின் பெரிய அளவு காட்டி பெறப்படுகிறது. இன்னொரு சிறு துளையின் வழியே அறுவை கருவிகள் உள்ளே நுழைக்கப்படும்.

பித்தப்பை நாளமும், பித்தப்பைக்குக் குருதியை எடுத்துச் செல்லுப் தமணியும் கண்டு பிடிச்சப்பட்ட பின்னர் பற்றுக்கோள்களால் (forceps) கெட்டியாகப் பற்றப்பட்டுக் கல்லீரலின் அடியிலுள்ள பித்தப்பை தனித்துக் துண்டாக்கப்படும்.

இந்த வைத்தியம் முடிந்ததும் சிறு துளைகள் ஓரிரு தையல் மூலம் அத்துளைகள் மூடப்படும். ஒரு சில மாதங்களில் அந்தத் துளைகளின் தடயமே இல்லாமல் மறைந்து போகும்.......

நன்றிகள்.

இதுதான் சூரியன் ......................!


அண்டவெளியில் நம் சூரிய குடும்பத்தின் ஆதரமாக விளங்கும் சூரியனை குறிக்கும் கிழமை, ஞாயிற்றுக்கிழமை. நமது பூமியில் உயிர்களுக்கு மூலாதாரமே சுரிய ஒளி ஆகும்.சூரியன் பெருமளவு ஐதரஜன் (சுமார் 74%) மற்றும் ஈலியம்(24%) ஆகியவற்றையும், சிறிதளவு, இரும்பு, சிலிக்கன் நிக்கில், கந்தகம், ஒட்சிசன் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

இது காந்த ஆற்றல் மிகுந்த நட்சத்திரம் என் கண்டறியப்பட்டுள்ளது. சூரியமரு,(sunspot), சூரியஎரிமலை (solar flare), சுரியசுறாவளி (solar winds), ஆகிய விளைவுகளை சூரியனின் காந்தப்புலம் ஏற்படுத்துகிறது.

இந்த விளைவுகள் கதிரணு உயிர்ப்பு (solar activity) என்று கூறப்படுகிறது. சூரியன் தோராயமாக 25000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை சுமார் 225 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது.

இந்த தகவல்கள் நவீன கணித முறைப்படி கண்டறியப்பட்டுள்ளது.

நன்றிகள்.

Monday 28 May 2012

உலகின் முதலாவது மடிக்கணினி.................!


ஒஸ்போர்ன் கணினி கழகம், ஆஸ்பார்ன் 1 மூலம் 1981 ல் வெளியான உலகின் 1வது மடிக்கணினி முதல் உண்மையான கையடக்க கணினி (Portable Computer) கருதப்படுகிறது.

ஆஸ்பார்ன் 1
அறிமுகம்: ஏப்ரல் 1981
விலை: ஐக்கிய அமெரிக்க $ 1.795
எடை: 24.5 பவுண்டுகள்
சிபியூ: ஜைலாக் Z80@4.0 மெகா ஹெர்ட்ஸ்(Zilog Z80 @ 4.0 MHZ)
ரேம்: 64K ரேம்(RAM: 64K RAM)
காட்சி: 5 "மானிட்டர் கட்டப்பட்ட-ல் 53 எக்ஸ் 24 உரை( DISPLAY: built-in 5" monitor 53x24 text)
துறைகள்: இணையாக / IEEE-488 (Ports: parallet/ IEEE-488)
மோடம் / சீரியல் போர்ட்(modem/serial port)
சேமிப்பு: இரட்டை 5-1/4 இன்ச், 91K இயக்கிகள்(Storage: dual 5-1/4 inch, 91K drivers)
OS: CP / M.

நன்றிகள்.

அகமனதைக் கண்டுபிடித்த...................!

 1990 ம் ஆண்டின் ஒரு நாள். திடீரென்று அவரது கைகால் உட்பட வலது பக்க உடல் முழுவதுமாக செயல் இழந்துவிட்டது. கூடவே அவருக்குப் பேச்சு சுத்தமாகவே வரவில்லை. ‘இனி அவ்வளவுதான். அவரால் எதுவும் செய்யமுடியாது.

எழுத முடியாது. இலக்கியம் பற்றி பேசமுடியாது. இருக்கும் காலத்தை பேசாமல் படுக்கையில் முடங்கியே கடத்த வேண்டியதுதான்’. இப்படித்தான் எல்லோரும் ஏளனம் செய்தார்கள்.

ஆனால் அவர் சிந்தித்தார். இன்னும் கூடுதலாக எழுதினார். கவிதைகள் வந்து கொட்டின. அவரது மனஉறுதியைக் கண்டு நாடே வியந்தது. 2004-ல் அவர் எழுதி வெளியிட்ட, ‘The great Enigma’ என்ற கவிதைத் தொகுப்பைக் கண்டு உலகமே எழுந்து நின்று அவருக்குத் தலை வணங்கியது (Salute).

மனிதர்களின் ஆழ்மனத்தில் உள்ள ரகசியங்களை யதார்த்தமாக வெளிப்படுத்தும் இவரது படைப்புகளுக்கு இன்று நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

பெயர் தாமஸ் ட்ரான்ஸ் ரோமர். தாமஸ் 1931:04:15-ல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பிறந்தவர். தந்தை பத்திரிகையாளர். தாய் ஆசிரியை. வழக்கமான மேற்கத்திய கலாச்சார பிரச்னை. தாயும் தந்தையும் விவாகரத்து பெறுகிறார்கள்.

சிறுவன் தாமஸ் தாயின் அரவணைப்பில் வளர்கிறார். அந்த பாதிப்பில் சிறுவயதிலேயே தன் சோகங்களை கவிதைகளாக வடிக்க ஆரம்பித்தார்.

23-ம் வயதில் ‘17 Poems’ என்ற அவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. ஸ்டாக்ஹோம் பல்கலையில் உளவியல் (Psychology) படித்து, ஒரு உளவியலாளர் (Psychologist) ஆகவே பணிபுரிந்தார்.

இதுதான் மற்றவர்களின் உள் உலகத் தைக் கண்டுபிடித்து, யதார்த்தமான கவிதைகளாக வெளியில் கொண்டு வர உதவியது.

1966-ல் அவர் வெளியிட்ட ‘விண்டோஸ் அண்ட் ஸ்டோன்ஸ்’ என்ற தொகுப்பு உலகப்புகழ் பெற்றது.

1954 முதல் 2004-ம் ஆண்டு வரையான அவரது படைப்புகளை ‘போனியர்ஸ்’ என்ற பதிப்பகம் அவரது 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்தான் வெளியிட்டது.

இந்தத் தொகுப்புகள்தான் அவருக்குப் பிறந்தநாள் பரிசாக நோபல் பரிசையே பெற்றுத் தந்து விட்டன. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் சு(ஸ்)வீடனுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் தாமஸ்.

"என் நண்பர்களின் மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் நோபல்பரிசு எனக்குக் கிடைத்தி ருக்க சாத்தியமில்லை" என்று எழுதிக் காட்டினாராம் தாமஸ். உண்மை தான் அமெரிக்கக் கவிஞரான ராபர்ட் பிளே, ராபின் ஃபஸ்டன், ராபின் ராபர்ட்ச(ஸ)ன் போன்ற கவிதை நண்பர்கள் இவரது கவிதைகளை மொழிபெயர்த்து உலக அரங்கிற்கு எடுத்துச் சென் றிருக்கிறார்கள்.

தாமஸ், 1984-ல் போபால் விசவாயுக் கசிவின்போது, இந்தியா வந்து, அந்த துயரச் சம்பவத்தை கவிதையாக வடித்தவர் என்பது கூடுதல் செய்தி. அப்போது இன்றைக்கு நோபல் பரிசை நழுவ விட்டதாகப் பேசப்பட்ட மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தனும் உடன் இருந்திருக்கிறார்..

நன்றிகள்.

Saturday 26 May 2012

குறிஞ்சி மலர்....................!


எப்பொழுதாவது தோன்றும் நல்ல விசயத்துக்கு உவமையாக திகழ்கிற குறிஞ்சி மலர்.(பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மையுடையது) அறிவியல் பெயர் Strobilanthes kunthianus அதிகம் காணப்படக் கூடிய இடம்: எரவிக்குளம் தேசிய பூங்கா-கேரளம், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்.

அடையாளம்: குறிஞ்சி பூப்பு சுழற்சியை வைத்து தோடர்கள் தங்கள் வயதைக் கணக்கிடுகிறார்கள்.

இயற்கையின் எத்தனையோ அதிசயங்களில் ஒன்று குறிஞ்சி மலர். ஒரே நாளில் இரண்டு முறை பூக்கும் தாவரங்கள் ஒருபக்கம். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மறுபக்கம்.

குறிஞ்சி மலர்கள் மலைச் சரிவுகளில் பூத்துக் குலுங்கி மலைப் பகுதிகளுக்கு புதிய வண்ணங்களைத் தீட்டிவிடுகின்றன. நீலக்குறிஞ்சி என்றொரு வகை உண்டு. இந்த குறிஞ்சி மலர் பூத்துக் குலுங்கும் கண்கொள்ளாக் காட்சியால்தான், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதிக்கு நீலகிரி (நீலமலை) என்ற பெயர் உருவானது.

உலகம் முழுக்க ஸ்டிரோபிலாந்தஸ் தாவரப் பிரிவில் 200க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. அவற்றில் 150 வகைகள் இந்தியாவில் இருக்கின்றன. 

பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலேயே வளருகின்றன மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியவுடனேயே சொல்லி வைத்தது போல, அந்த மலர்களை தேனீக்கள் மொய்க்கத் தொடங்குகின்றன.

அவை கொண்டு வரும் பெருமளவு தேனை தோடர் பழங்குடிகள் சேகரிக்கின்றனர்.

நன்றிகள்.

சமமான இரண்டு நிலைகள்.......................!

மனித வாழ்வில் அனைவருக்கும் சமமான இரண்டு நிலைகள் எவை தெரியுமா?












வருவதும் போவதும் இரண்டு- இன்பமும், துன்பமும்.

வந்தால் போகாதது இரண்டு- புகழும், பழியும்.

போனால் வராதது இரண்டு- மானமும், உயிரும்.

தானாக வருவது இரண்டு- இளமையும், முதுமையும்.

உடன் வருவது இரண்டு- புண்ணியமும், பாவமும்.

அடக்க முடியாதது இரண்டு- ஆசையும், துக்கமும்.

தவிர்க்க முடியாதது இரண்டு- பசியும், தாகமும்.

பிரிக்க முடியாதது இரண்டு- பந்தமும், பாசமும்.

இழிவைத் தருவது இரண்டு- பொறாமையும், கோபமும்.

அனைவருக்கும் சமமாவது இரண்டு- பிறப்பும், இறப்பும்.

இவையாவும் அனைவருக்கும் சமமாகும்.

நன்றிகள்.

Thursday 24 May 2012

எளிமையாகத் தமிழ் ...............!

எளிமையாகத் தமிழ் இலக்கணம் கற்போம் !!!


தமிழ் தமிழ் என்றுமே, தமிழே தலை சிறந்த மிகவும் மூத்த மொழி என்றும் நாம் அனைவரும்.

பல்வேறு நிலைகளில் சொல்லி வரும்போது, சில நேரங்களில் தமிழைப் பற்றிய அடிப்படை அறிவு பற்றிய கேள்விகளுக்கு நம்மால் விடை அளிக்க முடியாமல், திணறும் நிலை ஏற்படுகிறது. அந்நிலையை மாற்றி அடிப்படை தமிழ் இலக்கணம் நாம் அனைவரும் கற்றுணர்ந்த ஒரு ஆற்றலாக இருக்க வேண்டும். இந்த இழையில் தமிழை அடிப்படையில் இருந்து கற்போம், உங்கள் அய்யங்களை கேளுங்கள், நமக்குத் தெரிந்த அளவில் களைய முயல்வோம், இல்லையெனில் கற்க முயல்வோம்.

தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இதன் தமிழ் அகரவரிசை, நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது.தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களும், ஆயுத எழுத்தும் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் சில தமிழ்நெடுங்கணக்கைச் செர்ந்ததல்ல. மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும்.

உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆயுத எழுத்தும் சேர்ந்தது மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள்.

தமிழ் நெடுங்கணக்கில் சேரா கிரந்த எழுத்துக்கள் (ஜ,ஷ,ஸ,ஹ வரிசைகள்) 52ம் ஸ்ரீ முதலான எழுத்துக்களும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.

உயிரெழுத்துகள்

ஒருமொழிக்கு உயிராக அமையும் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் எனபடுகிறது, ஆங்கிலத்தில் இதனை (VOWELS) என்று அழைக்கின்றோம். அவற்றின் வரிசை கிழே கொடுக்கப் பட்டுள்ளது.

அ அகரம்
ஆ ஆகாரம்
இ இகரம்
ஈ ஈகாரம்
உ உகரம்
ஊ ஊகாரம்
எ எகரம்
ஏ ஏகாரம்
ஐ ஐகரம்
ஒ ஒகரம்
ஓ ஓகரம்
ஔ ஓலைகரம்
ஃ அஃகேனம்

மெய்யெழுத்துக்கள்

கீழ்க்கண்ட எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் ஆகும், உயிரும், உடலும் இணைந்து வாழ்வை உருவாக்குவது போல், எழுத்துக்களில் உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்து உயிர்மெய் எழுத்தையும் உருவாக்குகின்றன.

க் ங் ச ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

மெய்யெழுத்துக்கள்
உயிர் மெய்யெழுத்துக்கள்

முதலாவது வரிசையில் மெய்யெழுத்துக்கள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் சந்திக்குமிடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்துக் காட்டப்பட்டுள்ளது.

உயிர்மெய்யெழுத்துக்கள்.

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

வல்லின்கள்.

க் க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ங ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞ ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ண ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ

இடையினங்கள்.

த் த தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் ந நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ

மெல்லினங்கள்.

ல் ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழ ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ள ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் ற றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் ன னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

உயிர் மெய்யெழுத்துக்களில் ஓசை வடிவங்கள் உயிர் மெய்யெழுத்துக்களில் மூன்று வகையான ஓசை வடிவங்கள் கிடைக்கப் பெறும், அவை முறையே வல்லினம், இடையினம் மற்றும் மெல்லினம் ஆகும்.

அதாவது வன்மையாக ஒலிக்கவும், மேல் தாடையின் முற்பகுதியில் ஒட்டி உறவாடி பிறக்கும் ஓசையாம் க, ச, ட, த, ப, ற என்பவை வல்லினமாகவும்.

வன்மையும் அன்றி, மென்மையும் அன்றி ஒலிக்கவும், மேல் தாடையின் நடுப்பகுதியில் இருந்து உறவாடி பிறக்கும் ஓசையாம் ய, ர, ல, வ, ழ, ள என்பவை இடையினமாகவும்.

மிகவும் மென்மையான ஓசையுடன், மேல் தாடையின் அடிப்பகுதியில் இருந்து உறவாடிப் பிறக்கும் ஓசையாம் ஞ, ங, ந, ண, ம, ன என்பவை மெல்லினமாகவும் அழைக்கப்படுகின்றன.

குறில் எழுத்துக்கள் உயிரெழுத்துக்களில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் அல்லது குற்றெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

நெடில் எழுத்துக்கள் உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்களும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.

சார்பெழுத்துகள்

உயிர்மெய் எழுத்து
ஆய்த எழுத்து
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலுகரம்
குற்றியலிகரம்
ஐகாரக் குறுக்கம்
ஔகாரக் குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்

எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன.

உயிர்மெய் எழுத்து

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

ஆய்த எழுத்து

ஃ இங்ஙனம் மூன்று புள்ளி வடிவமாக இருப்பது ஆய்த எழுத்து. இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

உயிரளபெடை

உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.

உயிர் + அளபெடை = உயிரளபெடை
மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.

1 ஓஒதல் வேண்டும் முதல்
2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை
3 நல்ல படாஅ பறை கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை காணலாம். ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.

ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.

ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை

செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.

வெஃஃகு வார்க்கில்லை குறிற்கீழ் இடை
கண்ண் கருவிளை குறிற்கீழ் கடை
கலங்ங்கு நெஞ்ச்மிலை குறிலிணைகீழ் இடை
மடங்ங் கலந்த மன்னே குறிலிணைகீழ் கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம். ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.

குற்றியலுகரம்

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.

இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும்.

குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.

குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்

(குறுகிய ஓசையுடைய உகரம்) நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.

இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

பந்து என்னும் சொல்லில் கடிசியாக உள்ள து என்னும் எழுத்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.

இதில் பல் எழுத்துகளைத் தொடர்ந்து இறுதியில் வல்லின மெய்யோடு (த்) சேர்ந்த உகரம் (து)வந்துள்ளது. இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேடடு, பேசசு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.

குற்றியலுகரத்தின் வகைகள், குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
வன்றொடர்க் குற்றியலுகரம்
மென்றொடர்க் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரம்


குற்றியலிகரம் நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும்.

அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.

குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
(குறுகிய ஓசையுடைய இகரம்)
நாடு + யாது = நாடியாது
கொக்கு + யாது = கொக்கியாது
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்.

ஐகாரக்குறுக்கம்.

ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.

ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும்.

மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில்வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும்.

இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்.
ஐந்து - ஐகாரம் மொழிக்கு முதலில் - 1 1/2 மாத்திரை
வலையல் - ஐகாரம் மொழிக்கு இடையில் - 1 மாத்திரை
மலை - ஐகாரம் மொழிக்கு கடையில் - 1 மாத்திரை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதை காண்க.

ஔகாரக் குறுக்கம்

ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.

ஔவை

மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள 'ஔ' தனக்குறிய இரெண்டு மாத்திரையிலிடுந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.

குறிப்பு:

ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.

மகரக்குறுக்கம்

"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.

மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்

வரும் வண்டி
தரும் வளவன்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன.

இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இவ்வாறு குறைந்தொலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.

ஆய்தக்குறுக்கம்

ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும்.

ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம்.

எ.கா:

முள் + தீது = முஃடீது

மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின்கீழ் வரும் ளகரம், தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆயுதாமாக மாறியுள்ளது.

அவ்வாறு மாறிய ஆயுதம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆயுதக் குறுக்கமாகும்.

மாத்திரை

தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும்.

எழுத்துக்கள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது.

நாம் இயல்பாகக் கண்ணிமைப்பதற்கு ஆகும் நேரம் சற்றேறக்குறைய கைநொடிப்பதற்கு ஆகும் நேரம் ஆகும். இதுவே ஒரு மாத்திரை ஆகும்.

குற்றெழுத்துக்களுக்கு (குறில் எழுத்துக்களுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)

நெட்டெழுத்துக்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)

இதுவரையில் நாம் பார்த்தவை அனைத்தும் எழுத்திலக்கணம் சார்ந்தவைகளாகும், இதனை முழுமையாக புரிந்துணர்ந்த பின்னர் நாம் சொல் இலக்கணம் பற்றிய புரிதலுக்கு செல்வோம்.

சொல்லிலக்கணம்

ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சோல் எனப்படும்.

எ.கா:

வீடு, கண், போ,

சொல்லின் வகைகள்

பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.

ஆதலால் பெயர்ச்சொல்

பொருட் பெயர்
இடப் பெயர்
காலப் பெயர்
சினைப் பெயர்
பண்புப் பெயர்
தொழிற் பெயர்

என்று ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு அன்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர்.

எ.கா:
பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம்
இடப்பெயர் : சென்னை, தமிழகம்
காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு
சினைப்பெயர் : கண், கை, தலை
பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம்
தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல்

இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

1. இயற்கைப் பெயர்கள் 2. ஆக்கப் பெயர்கள்
1. இடுகுறிப் பெயர்கள் 2. காரணப் பெயர்கள்
1. சாதாரண பெயர்கள் 2. பதிலிடு பெயர்கள்
1. நுண்பொருட் பெயர்கள் 2. பருப்பொருட் பெயர்கள்
1. உயிர்ப் பெயர்கள் 2. உயிரில் பெயர்கள்
1. உயர்திணைப் பெயர்கள் 2. அஃறிணைப் பெயர்கள்
1. தனிப் பெயர்கள் 2. கூட்டுப் பெயர்கள்

வினைச்சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும்.

முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்.

முற்று இருவகைப்படும். அவை

1.தெரிநிலை வினைமுற்று
2.குறிப்பு வினைமுற்று

எச்சம்

இரண்டு வகைப்படும். அவை

1.பெயரெச்சம்
2.வினையெச்சம்

தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.

எ.கா:

கயல்விழி மாலை தொடுத்தாள்

குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

எ.கா:

அவன் பொன்னன்.

எச்சம்

பெயரெச்சம்

பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும்.

பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.

எ.கா:

படித்த மாணவன்

வினையெச்சம்

வினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம்.

குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.

எ.கா:

படித்துத் தேறினான்

இடைச்சொல்

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருவது.

ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுக்களும்; யா முதலிய வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும்.


மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும்.

எ.கா:

அவன்தான் வந்தான்
சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்.

உரிச்சொல்

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் சொல்லாகும்.

பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.

உரிச்சொல் இருவகைப்படும்
1.ஒரு பொருள் குறித்த பல சொல்
2.பல பொருள் குறித்த ஒரு சொல்

எ.கா

ஒரு பொருள் குறித்த பல சொல்
சாலப் பேசினான்.
உறு புகழ்.
தவ உயர்ந்தன.
நனி தின்றான்.

இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன.

பல பொருள் குறித்த ஒரு சொல்

கடிமனை - காவல்
கடிவாள் - கூர்மை
கடி மிளகு - கரிப்பு
கடிமலர் - சிறப்பு

இந்நான்கிலும் வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்.

பொருள் இலக்கணம் பொருள் இரண்டு வகைப்படும். அவை

அகப்பொருள்
புறப்பொருள்

நம் இலக்கியஙளுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும்.

ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள்.

அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும் கூறுவது அகப்பொருள் எனவும், அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை தவிர்த்து கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள்.

நன்றிகள்.

Wednesday 23 May 2012

அந்தமானில் தமிழர்கள்...............!














பர்மாவில் உள்ள அராகன் மலையில் இருந்து தெற்கு நோக்கிச் சுமத்திரா தீவுவரை நீண்ட நெடிய மலைத்தொடரின் தொடர்ச்சி கடலில் மூழ்கிப் போனது. எஞ்சிய சிகரங்களே இன்றைய அந்தமான் - நிக்கோபார் தீவுகள் ஆகும்.

சிறிதும் பெரிதுமாக 567 தீவுகள் இன்றும் உள்ளன. இந்தியாவின் தென்கோடி முனை குமரியல்ல; இந்தியாவிற்குத் தூரக் கிழக்கில், நிக்கோபார்த் தீவுக்கும் தெற்கே உள்ளது. இப்பகுதி நிலநடுக்கோட்டிற்கு வடக்கே உள்ளது. இதன் பெயர் பிக்மலியன் பாயின்ட் இது அண்மையில் 'இந்திரா முனை' என நடுவணரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அந்தமானின் தலைநகர் போர்ட் பிளையர், சென்னையிலிருந்து 1191 கடல் மைல் தூரத்திலும், கல்கத்தாவிலிருந்து 1255 கடல் மைல் தூரத்திலும் இருக்கின்றது. 1945 இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அந்தமான் முதலிய தீவுகள் 1-11-1956 முதல் நடுவணரசின் நேரடி மாநிலமாயின.

தமிழர் குடியேறிய வரலாறு

தீவுமக்களும் தமிழரும் : அந்தமான் தீவில் ஆப்ரிக்கரைப் போன்ற கருப்பு நில பழங்குடிகள் வாழ்கின்றனர். இம்மக்கள் 'நீக்ரிடோ' இனத்தவர். இவர்களின் ஊர்ப் பெயர், பழக்க வழக்கங்கள், பயன்படுத்தும் பொருள், மொழியின் வேர்ச்சொல் ஆகியவை தமிழோடு ஒத்துப் போகின்றன. இவர்களைப் போலவே நிகோபார் தீவுகளில் மங்கோலியன் கலப்பு இன மஞ்சள் நிறப் பழங்குடியினராக நிகோபாரிகள் வாழ்கின்றனர்.

நிகோபாரி மொழியில் தமிழைப் போல் 'ழ' கரம் பயன்படுத்தப் படுவதோடு, குடுமி வளர்த்தல் மற்றும் மங்கோலியரோடு ஒத்துப் போகாத தமிழரோடு இணைந்த குடும்ப வாழ்க்கையும், பழக்க வழக்கங்களும் உண்டு.

பெரிய நிகோபாரில் உள்ள 'சாம்பன்' பழங்குடியினரைப் பற்றி ஆராய்ச்சியாளர் ஒருவர் இப்படி எழுதியுள்ளார். "இந்த இன மக்கள் வாழும் காட்டுப் பகுதியில் ஒரு தமிழனைச் சந்தித்தால் 'சாம்பன்' பழங்குடியினரில் இருந்து என்னால் வேறு படுத்திக் காண முடியாது" என்கிறார். இந்த அடிப்படையில் பழங்காலந்தொட்டே தமிழனுக்கு அந்தமானோடு தொடர்பு இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

'அந்தமான்' என்ற பெயரே தமிழர் கொடுத்ததுதான். மான்கள் நிறைந்திருந்த காரணத்தால் இப்பெயரால் அழைத்தனர். சோழர்களின் ஆட்சியில் தென்கிழக்காசியா முழுவதும், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பது வரலாறு. சோழனின் கடற்படை இன்றைய நிக்கோபாரில் இருந்ததாம். இதற்கான ஆதாரத்தை தஞ்சைக் கோயில் கல்வெட்டில் இன்றும் காணலாம்.

நிக்கோபாருக்குத் தமிழர்கள் வைத்தபெயர் : 'நக்கவரம்' என்பது. அக்காலத்தில் அத்தீவில் இருந்த மக்கள் நிர்வாணமாக இருந்ததால் இப்பெயர் வைக்கப்பட்டது என்கின்றனர்.

கார் நிகோபாரை 'கார்தீவிபா' என்றும் கிரேட் நிகோபாரை 'நாகதீவிபா' என்றும் சோழர்கால சமசுக்(ஸ்)கிருத கல்வெட்டு கூறுகிறது. மார்கோபோலோ வரவால் இத்தீவின் பெயர் 'நெக்குவரம்' என்று மாறிவிட்டது.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான 'மணிமேகலை'யில் வரும் சாதுவன் என்ற வணிகன் இத்தீவில் தான் மாட்டிக்கொண்டான் என்கின்றனர். 'நக்க சாரணர் நாகர்வாழ்மலை' என்று குறிப்பிடும் பகுதி இஃதே எனச் சொல்லலாம்.

இரண்டாம் கட்ட குடியேற்றம் :

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இத்தீவின் முக்கியத்துவத்தை உணர்ந்து படைகளை நிறுத்தி இருந்தனர். பின்னர் அரசியல் கைதிகளை வாழ்நாள் தண்டணை தந்து இங்கு குடியேற்றினர். சிறைச்சாலைக் கட்ட சென்னையிலிருந்து பல தமிழர் குடியேறினர்.

அரசியல் கைதிகளைத் தவிர மற்ற குற்றவாளிகளும் குடியேறினர். அரசியல் கைதிக்கு அடுத்து, வணிகர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் தமிழர்கள் பெருமளவில் குடியேறினர்.

அரசியல் கைதிகளில் வங்காளிகளும், மாப்பிளா கலகத்தின் போது போராடிய 1400 மலையாளிகளும் பெருமளவில் குடியேறியவர்களில் குறிப்பிடத் தக்க வர்கள்.

1971-ஆம் ஆண்டு மொழிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வங்காளிகள் முதலிடம், தமிழர் இரண்டாம் இடம். இன்று 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

567 தீவுக் கூட்டத்தில் இதுவரை மக்கள் குடியேறியிருப்பவை 38 மட்டுமே. மற்றவை அனைத்தும் மனிதவாசனை அற்ற தீவுகளே ஆகும்.

1943-இல் யப்பானியர் இந்தத் தீவுகளை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றி 1945 வரை மூன்றாண்டுகள் வைத்திருந்தனர். பின்னர் இத்தீவை நேதாசி சுபாசு(ஷ்) சந்திர போசிடம் விட்டனர்.

இந்தியாவின் முதல் சுதந்திரப் பிரகடனமும், மூவண்ணக் கொடியும் இங்கே தான் ஏற்றப்பட்டது. முதல் ஆளுனராக நேதாசியால் நியமிக்கப்பட்டவர்  வைத்தியர் (டாக்டர்). கர்னல் லோகநாதன் என்ற தமிழர் ஆவார்.

தமிழரின் இன்றைய நிலை சமயம் :
ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் செல்வாக்கே எங்கும் இருந்தது. அவர்களின் தலைமையிடமாக 'ராஸ்' என்ற சின்னஞ் சிறியத் தீவு விளங்கியது. இங்குதான் கிருறிசு(ஸ்)த்துவ தேவாலயம் இருந்தது.

அது தவிர்த்து அனுமதிக்கப்பட்ட ஒரே கோவில் தமிழர்கள் கட்டிய முருகன் கோயில்தான்! தலைநகர் போர்ட் பிளையரின் வெற்றிமலை முருகன் கோயிலை இங்குள்ள மக்கள் அந்தமானின் திருப்பதி என்கிறார்கள்.

இதே போல போற்றப்படும் மற்றொரு கோயில் அலைகடல் அய்யனார் கோயிலாகும். தீவெங்கும் முருகன், வினாயகர், மாரியம்மன் ஆலயங்களைக் கட்டி, அவை தொடர்பான விழாக்களை நடத்தி, தமிழர் பண்பாட்டினைக் காப்பாற்றுகின்றனர்.

காதணிவிழா, திருமணம் போன்றவை இக்கோயில்களில் நடப்பதுண்டு. இங்கு விழாக்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தாம் நடத்தப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம் முதலியவை முக்கிய விழாக்களாகும்.

உணவு :

வங்காளிகள் அதிகம் என்பதால் இனிப்பு வகைகள் சந்தைகளில் மிகுதியாகக் காணப்படுகின்றன. தமிழர்களின் மரபான இட்லி, தோசை, வடைக்கும் மக்களிடம் பேராதரவு உண்டு.

உடை :

பேண்ட்-சட்டைகளையே எல்லோரும் அணிகின்றனர். இதுவே தேசிய உடையாகக் காணப்படுகிறது. பெண்கள் சேலை, ஜாக்கெட், பாவாடைகள் அணிகின்றனர்.

பிறபழக்கவழக்கங்கள் :

பெண்கள் தலையில் பூச்சூடுவதும், நெற்றியில் திருநீறும், குங்குமமும் இடுவதிலிருந்தும் தமிழர் என்பதை இனம் காணலாம். நாள்தோறும் சாணிதெளித்து கோலமிடும் வழக்கத்தைத் தமிழர் இங்கு விட்டுவிட்டனர்.

ஊர் பெயர் :

தமிழர்கள் வாழும் ஊர்களுக்கு வள்ளுவர்நகர், இராமச்சந்திரபுரம், புதுமதுரை எனப்பெயரிட்டுள்ளனர்.

தகவல்தொடர்பு சாதனங்கள் :

'அந்தமான் முரசு' என்கிற இதழ் 18 ஆண்டுகளாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர் சுப. சுப்பிரமணியன் ஆவார். இன்று வேறு எட்டு கிழமை இதழ்கள் வெளிவருகின்றன.

இவற்றுள் சில கட்சி இதழ்கள் என்றாலும் பிறமொழிகளில் இந்தளவு இதழ்கள் ஏதும் வெளி வரவில்லை. வேறு மொழியினர் கணிசமான அளவு வாழ்ந்தாலும் யாரும் தமது தாய்மொழியில் இதழ்கள் வெளியிடமுன் வருவதில்லை.

அதே நேரத்தில் தமிழில் மட்டும் இத்தனை இதழ்கள் எப்படி வெளி வருகின்றன என மற்றவர்கள் வியப்படைகிறார்கள். அந்தமானிலுள்ள 12 அச்சகங்களில் பத்து அச்சகங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும் மொழி தமிழ் மட்டுமே. இங்கே பத்திரிக்கைகள் 10 நாளைக்கொருமுறை கப்பல் மூலமும் வாரத்தில் மூன்று நாள் விமானத்தின் மூலமும் வருகின்றன.

தமிழகத்திலிருந்து வெளிவரும் இதழ்கள் அனைத்தும் இங்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

திரைப்படங்கள் :

தமிழகத்திலிருந்து வரும் திரைப்படங்கள் தீவில் உள்ள 4 திரை அரங்குகளிலும் திரையிடப்படுகின்றன. இங்கு ரசிகர் மன்றங்களும் உண்டு.

தமிழ் மொழியின் நிலை அந்தமானில் -

வங்காளியர், பஞ்சாபியர், தமிழர், மலையாளிகள், தெலுங்கர் போன்ற பல மொழிபேசும் மக்கள் இருந்தாலும் 'இந்தி'யே ஆட்சிமொழியாக இருக்கிறது.

அந்தமான் தமிழர்பற்றி இதுவரை முழுமையான நூல் ஒன்று கூட வெளிவரவில்லை.

கல்வி :

தீவின் மொத்த மக்களில் இரண்டாம் இடத்தில் தமிழர்கள் இருந்தாலும் 'தமிழ்க்கல்வி' தருவதில் மத்திய அரசு தயக்கமே காட்டி வந்தது. தமிழர்களுக்குத் தமிழ்க்கல்வி கொடுக்காமல் இந்திபேசும் இந்தியர்களாக ஆக்கிவிட வேண்டும் என்பதே அப்போதைய நிலை.

தமிழ்க் கல்விப் பிரச்சினைப் பற்றி அந்தமான் தலைமைக் கமிசனராக அப்போதிருந்த ஹர்மந்தர்சிங் சொல்கிறார் : "இந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளே உயர்நிலைப் பள்ளியில் போதனா மொழிகளாக இருந்தன.

வங்காளிகள் நெருக்குதல் கொடுத்தார்கள். பிறகு அதுவும் போதனா மொழியாக்கப்பட்டது.

இப்போது தமிழ்மொழி மீடியம் வேண்டும் என்று நெருக்குதல் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது ஓர் இருவழிப்பிரச்சினை. இந்தப் பிரச்சினையைக் கிளப்புவோர் உள்ளூர்த் தமிழர்கள் அல்லர். அவர்கள் இந்திமொழியைச் சிரமமின்றி ஏற்றுக் கொண்டவர்கள்.

இந்திப்படிப்பவர்கள். மெயின்லாண்டுக்குப் போக வர இருப்பவர்கள்தான் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள்" என்று மொழிந்திருப்பதிலிருந்து அன்றையப் போக்கை உணர்ந்து கொள்ளலாம்.

அந்தமான்-நிக்கோபார் கல்வித் துறையின் மதிப்பீட்டின்படி ஆறாயிரம் தமிழ்க் குழந்தைகள் மும்மொழித் திட்ட ரீதியில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு 33 பள்ளிகளில் கல்வி பயின்று வருகிறார்கள்.

இங்கே மேல்நிலைப் பள்ளித் தேர்வுகளை முடித்த பலர் உயர்க்கல்வி பயில தமிழகத்தையே எதிர்நோக்க வேண்டியுள்ளது. தமிழில் கல்லூரிக்கல்வியோ, பல்கலைக்கழக வசதியோ அந்தமானில் இல்லை.

அமைப்புக்கள் :

1. அந்தமான் தமிழர் சங்கம் போர்ட் பிளேயர்
2. தமிழர் சங்கம், மாயா பந்தர், டிக்லிபூர், லிட்டில் அந்தமான்
3. தமிழ்க் கல்விப் பாதுகாப்புக்குழு, போர்ட் பிளேயர்
4. அநிகார் தமிழ் எழுத்தாளர் பேரவை, போர்ட் பிளேயர்
5. கலை இலக்கிய மன்றம், விவேகானந்தபுரம்
6. தமிழ் இலக்கிய மன்றம், போர்ட் பிளேயர்
7. முத்தமிழ் இலக்கிய மன்றம்,
இரங்கத் அந்தமான் தமிழர் சங்கம்,
தமிழ் இலக்கிய மன்றம்

போன்ற அமைப்புகள் தமிழர்களின் இலக்கியப் பசியைக் களைவதில் பெரும் பங்காற்றி வருகின்றன.

இதே போல ரெங்கத், மாயாபந்தர், டிக்லிட்பூர், கேமல் பே, கச்சால், வெம்பாலிர்கஞ் போன்ற இடங்களில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இனரீதியான மக்களை ஒருங்கிணைக்கவும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் பணியாற்றுகின்றன.

தமிழ் இலக்கிய விழாக்கள் நடத்துவதில் தமிழ் இலக்கிய மன்றத்தின் பணி குறிப்பிடத்தக்கதாகும்.

பாரதி-பாரதிதாசன் விழா, தமிழ்ப்புத்தாண்டு, முத்தமிழ்விழா, புலவர் விழா, சிலப்பதிகார விழா எனப் பல விழாக்களை அது நடத்தி வழிகாட்டியுள்ளது. 

இவ்விழாக்களில் குன்றக்குடி அடிகளார், பாவலர் பெருஞ்சித்திரனார், க.ப. அறவாணன், அவ்வை நடராசன், பேராசிரியர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் வளனரசு, டாக்டர். ந. சஞ்சீவி போன்றோர் பங்கெடுத்துக் கொண்டு தீவு மக்களுக்கு இலக்கியச் சமய விருந்தளித்திருக்கிறார்கள்.

தமிழர் சாதனைகள்

இரண்டு தீக்குச்சி தயாரிக்கும் மர ஆலைகளைத் தமிழர்கள் நடத்தி வருகின்றனர். 4 திரையரங்குகளில் 2 தமிழர்களுடையது. இது தவிர வர்த்தக சங்கத் தலைவராக கந்தசாமி இருந்துள்ளார்.

இவரின் தந்தை கன்னியப்ப முதலியார் 1920-இல் மிடில் அந்தமானில் வியாபாரத்தைத் தொடங்கி இருக்கிறார். கந்தசாமி 'லாங் ஜலண்டில்' அண்ணாவுக்குச் சிலை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்.

கே.ஆர். கணேசு(ஷ்) அந்தமான் எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். க. கந்தசாமி இன்று மக்கள் கட்சி தலைவராகவும், பிரதேசக்கவுன்சில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

பெரும் வணிகராக லிங்கவேல் இருக்கிறார். "தீவின் 44 ஊராட்சி மன்றங்களில் ஒரு தமிழர் மட்டுமே தலைவராக இருக்கிறார்.

போர்ட் பிளேயர் நகராட்சியில் 11 உறுப்பினர்களில் தமிழர் மூவர். ஒருவர் நியமன உறுப்பினர். இதுபோல முப்பதுபேர் கொண்ட பரிந்துரை மன்றத்தில் ஒரே ஒரு தமிழர் மட்டுமே உறுப்பினராகவும் பரிந்துரைஞராகவும் இருக்கிறார்" என்று சுப. சுப்பிரமணியம் 94-ம் ஆண்டு நிலவரத்தை விளக்குகிறார்.

94-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலவரத்தை பத்திரிக்கையாளர் முகவை முத்து விளக்குகிறார்: இப்போதைய நிலைப்படி போர்ட் பிளேயர் நகராட்சித் தலைவர் தமிழர். அமைச்சர் தகுதியில் (அந்தஸ்தில்) அதுகூட முதலமைச்சர் தகுதியில் தமிழர். மிகப்பெரிய அதிகாரிகளாக-மாவட்ட ஆட்சித் தலைவராகக் கூட தமிழர்.

பத்திரிக்கை ஆசிரியராக - ஆளுங்கட்சிக்காரராக தமிழர். பெரிய பெரிய வணிகராக தொழிலதிபராக தமிழர். சற்றேறக் குறைய தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இங்கே உண்டு.

அந்தமான் தீவில் முதன்முதலாக கட்சிக் கொடிகட்டி அரசியல் கூட்டம் போட்டவன் தமிழன்தான். முதன் முதலாகப் போராட்ட நடத்தியவன் தமிழன் தான்.

முதல் துப்பாக்கிச் சூட்டுக்கு மூன்று பே உயிரை தியாகம் செய்தவனும் தமிழன். சரித்திரப் பிரசித்திப் பெற்ற செல்லுலார் சிறைச் சாலையில் (சுதந்திர இந்தியாவில்) முத முதல் சிறைவாசம் அனுபவித்த அரசியல் கைதி தமிழன்" என்கிறார்.

வணிகம்/தொழில் புரிவோர் விவரங்கள் :

தீவில் முன்பு குடியேறியவர்கள் அரசு ஊழியம் தேடிக் கொண்டவர்கள். இப்போதெல்லாம் பெரும்பாலும் தனியார் துறையில் தினக் கூலிகளாகவே பணியாற்றுகின்றனர். ஆனால் நல்ல ஊதியம் கிடைக்கிறது.

1970க்கு முன் தீவின் முக்கிய பொறுப்புக்களான வனத்துறை, கப்பல் போக்குவரத்து, காவல்துறை, நீதித்துறை, வைத்தியர்கள் (டாக்டர்கள்) என பல பெரிய பொறுப்புகளைத் தமிழர்கள் வகித்தனர்.

இன்று எல்லா இடங்களிலும் வங்காளிகளும், வடஇந்தியருமே உள்ளனர். இருந்தபோதிலும் தீவின் பெரியதும் சிறியதுமான ஐம்பது விழுக்காட்டு வணிகத்தை தமிழர்களே செய்து வருவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்தே இருக்கிறது.

தமிழர்படும் இன்னல்கள் :

தமிழர்கள் தென் அந்தமானிலும், போர்ட் பிளையரிலும் பெருந்தொகையில் வாழ்ந்து வருகின்றனர். தமிழரின் தொகையைச் சிதரடிப்பதற்கும் பெரும் முயற்சி நடந்து வருகிறது.

கிழக்கு வங்கப் பிரிவினைக்குப் பின்னர் வங்காளிகளின் கள்ளக் குடியேற்றம் நடந்து வருகிறது. பர்மா, இலங்கைத் தமிழர்களை அந்தமானில் குடியேற்றுங்கள் என்றால் வட இந்தியர் ஒப்புவதில்லை.

567 தீவுகளில் 38-இல் மட்டுமே மக்கள் குடியேறியுள்ளனர். மற்றவை காடாகவே இருக்கின்றன. மெல்ல, மெல்ல வங்காளியர் தொகை மட்டும் கூடிக்கொண்டே போகிறது.

தெற்கு அந்தமானில் தமிழர்களின் வீடுகளையும், விளை நிலங்களையும் வங்காளியர் சூறையாடி வருகின்றனர்.

சூறாவளிப்புயல் மழையில் தமிழர்களின் குடியிறுப்புக்கள் நாசம் செய்யப்பட்டன. மீண்டும் தீவு ஆட்சியாளரிடம் வீடுகட்ட இடம் கேட்டபோது அவர் சொன்னபதில்: "உங்களுக்கு வீடுகட்ட இடம் வேண்டுமானால் கருணாநிதியிடம், எம்.ஜி.ஆரிடம் போய்க் கேளுங்கள்" என்று அன்றைய தீவின் துணை ஆளுனரே பேசியதாகக் கூறப்படுகிறது.

ஆளுனரின் நிலையே இது வென்றால் மற்ற பொதுமக்கள் எப்படி இருப்பார்கள்? தமிழரை இந்திக்காரன் 'ஐயாலோக்' (ஐயா என்று சொல்பவர்); 'கட்டாபானிவாலா' (ரசம் குடிப்பவன்) என்றும் 'ஹே ராவன்' என்றுதான் அழைப்பார்கள்.

இதுதான் வட இந்தியரின் மன நிலையாக இருக்கிறது.

கட்டுரைக்கான ஆதார நூல்கள் :

1. அந்தமான் தீவில் தமிழர் நிலை - முகவை. முத்து.
2. உலகத் தமிழர் - பாகம் 2. இர.ந. வீரப்பன்.
3. பாரெல்லாம் பரந்த தமிழர் - சுப. சுப்பிரமணியம்.
4. இந்தியாவின் ஹவாய் - ஆனந்தவிகடன் 1974.

நன்றிகள்.

Tuesday 22 May 2012

விடாமுயற்சி, துவண்டு போகாத................!

உலகத்தின் முகத்திலிருந்து பெரியம்மை நோயை ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்த உன்னத மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் (1749-1823) பிரிட்டிசு (BRITISH)ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மைக் குத்துவது கட்டாயமாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை உலகெங்கும் விரைவாக பரவியது. எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு.

ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார்.

ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிசு நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது.

நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர்.

அம்மை நோயை துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன. மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது.

அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்கு பலியாகியிருப்பர்.

அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாக துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.

எதையும் கூர்ந்து கவனிக்கும் பண்புதான் அம்மைக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க எட்வர்ட் ஜென்னருக்கு உதவிய முதல் பண்பு.

தாம் கண்டுபிடிக்க வேண்டிய உண்மைக்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இரண்டாவது பண்பு.

சமகால மருத்துவர்கள்கூட எச்சரித்த போதும் துவண்டு போகாத அளவுக்கு அவரிடம் இருந்த தன்னம்பிக்கை மூன்றாவது பண்பு.

உயிர்காக்கும் தனது கண்டுபிடிப்பை உலகத்தோடு பகிர்ந்துகொண்ட உயரிய எண்ணம் நான்காவது பண்பு.

இவையனைத்தும் சேர்ந்ததால் உலகுக்கு கிடைத்ததுதான் அம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்து. சிந்தித்துப் பாருங்கள் இந்த பண்புகளை நாமும் வளர்த்துக்கொண்டால் நம்மாலும் எந்த வானத்திலும் சிறகடித்துப் பறக்க முடியும்.

நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்.

மருத்துவர் ஜென்னருக்கு மரியாதை செய்த மாவீரன் நெப்போலியன் எட்வர்ட் ஜென்னர் எந்த அளவுக்கு உலக மரியாதையைப் பெற்றிருந்தார் என்பதற்கு ஒரு குறிப்பு...

அவர் அறிமுகப்படுத்திய அம்மைக் குத்தும் முறை பிரான்சிலும் பரவி நல்ல பலனை தந்ததைத் தொடர்ந்து ஜென்னர் மீது அதிக மரியாதை கொண்டார் மாவீரன் நெப்போலியன்.

அதனை அறிந்த ஜென்னர் பிரான்சில் இருந்த சில ஆங்கில கைதிகளை விடுவிக்குமாறு நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஜோசப்பின் அரசியாரின் கைகளுக்கு சென்றது.

அவர் நெப்போலியனிடம் அந்த கோரிக்கையை விடுத்தார்.

முதலில் அதனை நிராகரித்த நெப்போலியன் கோரிக்கையை விடுத்திருப்பது எட்வர்ட் ஜென்னர் என்று அரசி சொன்னவுடன் சற்றும் தாமதிக்காமல் அந்த பெயரை தாங்கி வரும் எந்த விண்ணப்பத்தையும் என்னால் நிராகரிக்க முடியாது என்று கூறி அந்த கைதிகளை விடுவித்தாராம்.

நன்றிகள்.

தமிழ் எவ்வாறு செம்மொழி ஆனது?!


தமிழ் எவ்வாறு செம்மொழி ஆனது?

செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி.

1.தொன்மை
2.தனித்தன்மை
3.பொதுமைப் பண்பு
4.நடுவு நிலைமை
5.தாய்மைத் தன்மை
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை
8.இலக்கிய வளம்
9.உயர்சிந்தனை
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
11.மொழிக் கோட்பாடு

நன்றிகள்.

Sunday 20 May 2012

வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்.......!


சோற்றுக் கற்றாழை என்ற தாவரம் பல மருத்துவ குணங்களை கொண்டது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. இந்த தாவரம் பல வகைகளில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம் எனப்படுகிறது.

தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்ந்தவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.

பொதுவாக் 40 வயதைக் கடந்து விட்டாலே மூட்டு வலி, கை,கால் வலி ஏற்படுவது பெரிதும் வாடிக்கையாகி விட்டது. அதிலும் வயது முதிர்ந்தவர்களுக்கு கால் மூட்டில் இருக்கும் திரவம் குறைவதால், நடப்பதே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியதாகி விட்டது.

மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற “அலோசன் ஹெல்த் டிரிங்க் உதவும். இது உலகின் அபூர்வ சாகாவரம் பெற்ற சோற்றுக் கற்றாழை மூலிகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.

மேலும் எலும்புகளுக்குத் தேவைப்படும் சுண்ணாம்புச் சத்தையும் (கால்ஷியம்) அலோசன் ஹெல்த் டிரிங்க் அளித்து மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.

மஞ்சள் காமாலை நோய்க்கும் சோற்றுக் கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதால் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையும் அதிகரிக்கிறது.

கண்நோய், கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர, உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.

உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும், தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம், வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.

பிரயாணக் களைப்பினால் சோர்வுற்ற கால்களுக்கு கற்றாழை சாறைத் தடவலாம். சருமத்தில் ஏற்படும் எரிச்சலை அடக்கி, சருமத்திற்கு குளிர்ச்சி தரும். திசுக்களைப் புதுப்பித்து, ஈரப்பதம் அளிக்கும்.

இத்தகைய கற்றாழை இளம் தலைமுறையின் இனிய தோழி தானே! வீட்டிற்கொரு கற்றாழை வளர்ப்போம்.

நன்றிகள்.

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை...........!

























6 மாதங்களுக்கும் மேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் மிகவும் குறைவு என்பது எல்லோரும் அறிந்த ஒன்று, ஒரு புது செய்தி...

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் 56000 தாய்மார்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. 6 மாதங்களுக்கும் அதிகமாக தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு எதிர்காலத்தில் ரத்த அழுத்த பிரச்னைகள் மிகவும் குறைவாகவே வருகிறதாம்.

அது மட்டுமல்ல... அதிகம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பருமன் பிரச்னையில் சிக்குவதில்லை.

காது, தொண்டை, ஆஸ்துமா நோய்களும் எளிதில் அண்டுவதில்லை. நோயெதிர்ப்பு சக்தியும் அதிகம் உண்டாகிறது. முக்கியமாக தாய்க்கும் சேய்க்கும் உள்ள பாசப்பிணைப்பு அதிகமாகிறது.

ஆக தாய்க்கும் சேய்க்கும் வாழ்நாள் முழுமைக்கும் நலம் பல தரும் விசயங்கள் தாய்ப்பாலில் இருக்க செயற்கை உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டி தாய்ப்பால் மறுப்பது முறையாகுமா?

தாய்ப்பாலை சேய்களுக்கு மறுத்திடும் நிலை அதிகரிக்குமானால் மழலைகள் விலங்குகளின் குட்டிகளை ஏக்கத்துடன் பார்த்து ஏங்கிடும் நிலை உருவாகிவிடும்.

எந்த ஒரு செயற்கை உணவும் தாய்ப்பாலுக்கு இணையாகாது. தாய்ப்பால் மறுத்தல் என்பது நம் நாட்டை பொறுத்த வரையில் எங்கோ ஒன்றாகத்தான் இருக்கும் என நம்புவோம்.

அத்தகு எதிர்மறையான எண்ணம் எல்லா பெண்களிடத்தும் சென்று அடையும் முன் "தாய்ப்பால்" குறித்த "விழிப்புணர்வை" ஏற்படுத்துவோம்.

நன்றிகள்.

மரத்தின் சமாதி.................!


அமர மாற நாற்காலி
செய்தாகி விட்டது !
நிழலுக்கு மரம்
செய்ய முடியுமா?

நன்றிகள்.

தமிழின் தலையார்ந்த நூல்...................!

தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள் அதை உலகப் பொதுமறை என்று அழைப்பதில் நாம் உவகை கொள்கிறோம்.

குறள் காலத்தால் அழியாதது என்றும் விதந்து பாராட்டுகிறோம்.






அதை வாழ்க்கை நெறி என்றும் கூறி மகிழ்கின்றோம்.

தமிழினத்தின் பழம்பெரும் பண்பாட்டையும் பாரம் பரியத்தையும் பற்றி உலகம் வியக்கிறது என்றால் அதற்கு தமிழிலக்கியம் முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

தமிழகத்தின் மைலாப்பூர் வாழ் நெசவாளர் குலத்தோன்றலான திருவள்ளுவர் மானுடத்தின் தலைசிறந்த புலமைப் பெரியோர்களில் ஒருவராகக் கணிப்பிடப்படுகிறார்.

ஒட்டுமொத்தம மனிதச் சிந்தனையின் சிறந்த பிழிவு என்று திருக்குறள் போற்றப்படுகிறது இருப்பினும் திருக்குறளின் அழியாப்புகழ் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் மாத்திரம் சொந்தம் என்றால் மிகையல்ல.

இற்றைக்கு பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஆக்கம் பெற்ற திருக்குறள் தமிழினம் அப்போது அடைந்திருந்த அதியுச்ச நாகரீக வளர்ச்சிக்கு உதாரணமாகத் திகழ்கிறது.

அப்படியானதொரு சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவரால்தான் திருக்குறள் போன்ற இலக்கியத்தை படைக்க முடியும் பொது மானுடத்திற்கும் பொருத்தமான முறையில் தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விதத்தில் குறட்பாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தனது காலத்திற்குறிய இலக்கிய மரபுகளை திருவள்ளுவர் மீறியுள்ளதை எம்மால் வியப்புடன் பார்க்க முடிகிறது.

எந்தவொரு இடத்திலாவது ஒரு இனத்தையோ சாதியையோ, மதத்தையோ மதப்பிரிவையோ அரசையோ ஆளும் வர்க்கத்தையோ அவர் குறிப்பிடாமல் அல்லது உயர்த்தியோ தாழ்த்தியோ பேசாமல் விட்டுள்ளதை குறளின் மிகப்பெரிய சிறப்பம்சமாக கருதமுடியும்.

தமிழ் என்ற சொல்லைக்கூட குறள் நூலில் எங்காயினும் காணமுடியவில்லை தலைமகன் இல்லாதா நீதி நூல் என்றும் குறளை வகைப்படுத்தமுடியும்.

தமிழ்ப் பாரம்பரியத்தின் படி ஒரு வாழ்க்கைத் தத்துவ நூல் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கு பிரிவுகளை உள்ளடக்கி இருத்தல் வேண்டும். 

வள்ளுவர் வீடு பற்றிக்கூறாமல் விடுத்துள்ளார் அறம் பொருள் இன்பம் என்பன பற்றி கூறியவர் இந்த மூன்று கட்டங்களையும் தாண்டிச் செல்பவன் தானாகவே வீடு பேறு அடைவான் என்று அவர் கூறாமல் விளங்கவைத்துள்ளார்.

தர்மத்தின் படி இல்லறம் நடத்தி நீதி தவறாமல் பொருள் திரட்டி மனையாளோடு இன்பம் கண்டவன் முக்தி அடைவான் என்ற அர்த்தம் திருக்குறளில் தொக்கி நிற்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

திருக்குறளைத் துருவி ஆராயும் போது அதன் ஆசிரியர் மறுபிறப்பில் நம்பிக்கையுள்ளவர் என்ற உண்மை புலப்படும்.

மனித வாழ்வின் நான்கு படிநிலைகளான

திருமணமாகாத காளைப்பருவம்
இல்வாழ்வு
ஒடுப்பம்
துறவறம்

(குறள் 41)
"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை",

(விளக்கம்)
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்று துணையாவான்.

என்பனவற்றில் திருவள்ளுவருக்கு ஏற்புடமை உண்டு என்பதை 41வது குறளில் இருந்து அறியலாம்.

கீதையின் அடிப்படைத் தத்துவமான கர்மயோகத்திற்கு நிகரான கருத்தை 371ஆம் குறளில் காணலாம்.

(குறள்371)
"ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை; கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி".

(விளக்கம்)
கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

வெற்றி தோல்வி பாராமல் எடுத்த கருமத்தில் முழு ஈடுபாடும் முயற்சியும்காட்டும் பணிச் சிறப்பை இந்தக் குறள் வலியுறுத்துகிறது.

618ஆம் இலக்கக் குறளிலும் இதே கருத்து வலியுறுத்தப்படுகிறது.

(குறள் 618)
"பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து
ஆள்வினை இன்மை பழி".

(விளக்கம்)
நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறியவேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

இல்லறம் நடத்துபவன் உலக விவகாரங்களில் முழுஈடுபாடு காட்ட வேண்டும் ஒதுக்கக் கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார்.

அதே சமயத்தில் ஒரு இல்லறத்தான் வீண் விரயம் செய்யாமல் ஆடம்பரமற்று வாழ வேண்டும் என்றும் அவர் எடுத்துரைக்கிறார். இல்வாழ்வு நல்லறமாக அமைய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்தக் கருத்துக்களை 48, 225ஆம் குறள்களில் காணலாம்.

(குறள் 48)
"ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா; இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து".

(விளக்கம்)
மற்றவரையும் அறநெறியில் ஒழுகச்செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை, தவம் செய்தவரை விட மிக்க வல்லமை உடைய வாழ்க்கையாகும்.

(குறள் 225)
"ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்".

(விளக்கம்)
தவ வலிமை உடையவரின் வலியை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மார்ருகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

பொருள் அனிதனுக்கு அடிமையாவதில்லை மனிதன் தான் பொருளுக்கு அடிமையாகிறான் என்ற கருத்தையும் திருக்குறளில் இருந்து திரட்டிக்கொள்ளலாம்.

ஓவ்வொரு அத்தியாயத்திலும் பத்துக்குறள் பாக்களைக் கொண்ட 133 அத்தியாயங்கள் குறள் நூலில் காணப்படுகின்றன மொத்தம் 2,660 வரிகளைக் கொண்ட 1330குறள் பாக்கள் இருப்பது கண்கூடு.

பெரும்பாலான குறள் பாக்களின் முதல் வரிகளில் ஏழு சொற்கள் இருப்பதால் அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகத்திய குறள் என்று அவ்வையார் அதைப் புகழ்ந்துள்ளார்.

திருக்குறளின் முதலாம் பாகம் இல்லறம் தொட்டு துறவறம் பற்றிய சிறப்பைக் கூறுகிறது. முதலாம் பாகத்தில் 38 அத்தியாயங்கள் இருக்கின்றன. 

அரச நெறி இராசதந்திரம் போர்த்தந்திரம் உள்ளடங்கலான உலக விவகாரங்கள் பற்றிக் குறளின் இரண்டாம் பாகம் கூறுகிறது.

இதில் 70 அத்தியாயங்கள் உள்ளன குறளின் மூன்றாம் பாகத்தில் ஆண் பெண் இல்லற உறவுகள் பற்றிக் கூறும் 25 அத்தியாயங்கள் காணப்படுகின்றன.

மேற்கூறிய இராண்டாம் பாகக் குறள் பாக்கள் அரசர்களுக்கும் படைத்துறையினருக்கும் மாத்திரம் உரியதன்று உலகியல் வாழ்வில் ஈடுபடும் பொதுமக்கள் உள்ளடங்கலான அனைவருக்கும் பொருத்தமான கருத்துக்கள்.

அவற்றில் செறிந்துள்ளன ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்போரும் வரலாற்று ஆசிரியர்களும் இரண்டாம் பாகக் குறள்பாக்களை இன்றும் துருவி ஆய்ந்து வருகின்றனர்.

இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த குறள் நூலின் உண்மையான பெயரும் அதன் ஆசிரியர் திருவள்ளுவரின் உண்மையான பெயரும் இன்று வரை தெரியவரவில்லை.

குறள் என்பது காரணப்பெயர் சிறியது சுருக்கமானது குறுகலானது என்பது குறள் என்ற சொல்லின் பொருள் அதேபோல் வள்ளுவர் என்பதும் குலப்பெயர் என்று ஆய்வாளர்கள் கூறுவர்.

வள்ளுவரின் இயற்பெயர் என்னவென்பது அறியப்படாததாக இருக்கிறது குறளைவிட வேறு நூல் அல்லது நூல்களை வள்ளுவர் படைக்கவில்லை என்பது ஆய்வாளர் முடிவு.

தமிழிலக்கியப் பரப்பில் மிகக் கூடுதலான பிறமொழிகளுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட ஒரே ஒரு நூல் என்ற சிறப்பு திருக்குறளுக்கு உண்டு.

அதை ஆங்கில மொழிக்கு மாற்றிய ஜீ யூ போப் என்ற தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஆங்கிலேயர் தனது குறள் மொழிபெயர்ப்பு நூலுக்குச் செய்த முகவுரையில் பின்வருமாறு கூறுகிறார்.

குறள் ஒரு தனித்துவமான நூல் அதை வடமொழியில் இருந்து தமிழுக்கு மாற்றப்பட்ட நூல் என்று கூறுவது மிகப் பெருந்தவறு குறள் தூயதமிழில் ஆக்கப்பட்டுள்ளது.

அதில் வடமொழிக் கலப்பு சிறிதளவும் இல்லை தமிழறிஞர் போய் தனது மொழிப் பெயர்ப்பை ஆங்கில கவிதை நடையில் பாய்த்துள்ளார் பின்பு வந்த பல அறிஞர்கள் ஆங்கில மொழிக்குத் திருக்குறளை மாற்றியுள்ளனர்.

எமது காலத்தில் வாழும் கஸ்தூரி சிறினிவாசன் தவிர்ந்த பிறிதொருவராவது குறளை ஆங்கில கவிதை நடையில் மொழியாக்கம் செய்யவில்லை.

ஜீ.யூ.போப் அவர்கள் திருக்குறளின் மூன்றாம் பாகமான காமத்துப்பாலை மொழியாக்கம் செய்யாமல் விடுத்துள்ளார் கஸ்தூரி சிறினிவாசன் மூன்று பாகங்களையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலச்சாரியார் குறளின் முதலாம் இரண்டாம் பாகங்களில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட பல குறட்பாக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக்கியுள்ளார்.

இந்த ஆக்கம் வித்தியாசமானது தத்துவ விளக்கங்கள் பிற இலக்கிய ஒப்பீடுகள் போன்றவற்றையும் குறள் ஒவ்வொன்றின் மொழிப் பெயர்ப்போடு ராஜாஜி இணைத்துள்ளார்.

மிக நீளமானதொரு முகவரையைப் போப் ஜயர் என்று மரியாதைகாரணமாக அழைக்கப்படும் ஜீ. யூ. போப் தனது குறள் மொழிபெயர்ப்புக்கு எழுதியுள்ளார்.

தமிழை வளப்படுத்திய பிற நாட்டு அறிஞர்களுள் வீரமா முனிவர் என்று தமிழிலும் தைரியநாத சுவாமி என்று வடமொழியிலும் இஸ்மதிசந்யாசி என்று உருதுவிலும் அழைக்கப்படும்.

கிறிஸ்தவ அருட்தந்தை கொன்ஸ்ரன்ரைன் பெஸ்சி என்பார்தான் முதன்மையானவர் என்று போப் குறிப்பிட்டுள்ளார் பெஸ்சி அவர்கள் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களையும் தமிழ் அகராதிகளையும் எழுதியதோடு தமிழ் எழுத்ததுச் சீர்திருத்தத்தையும் மேற்கொண்டார்.

திருக்குறளை இலத்தீன் மொழிக்கு மாற்றிய சிறப்பு பெஸ்சிக் உண்டு. இத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டாலும் அதில் மாற்றங்களோ இடைச்செருகல்களோ அகற்றுதல்களோ செய்யப்படாமல் அன்று போல் இன்றும் இருக்கும் சிறப்புக் குறளுடையாதகும்.

திருக்குறளுக்குப் பரிலேழகர் செய்த உரைநூலில் குறளில் வரும் அச்சம் என்ற சொல்லிற்கு மக்கள் என்று பொருள் கூறியுள்ளார்.

தமிழ் ஆர்வலரான எலிஸ் என்ற ஆங்கிலேயர் அச்சம் என்ற சொல்லை அகற்றிவிட்டுக் குறளில் மக்கள் என்று திருத்தம் செய்யலாமே என்று கூறியதோடு அதற்கான முயற்றிகளையும் மேற்கொண்டார்.

மூல நூல்களில் திருத்தம் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் எலிஸ் அவர்களின் முயற்றிக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் அதைக் கைவிட நேர்ந்தது.

தமிழ் எழுத்தக்கள் தொடர்பான ஆய்வாளர்கள் திருக்குறளில் இன்று உயிர் எழுத்தாக கருதப்படும் (ஒள) இல்லையென்பதையும் குறளாசிரியர் (அவ்) என்ற உயிர்மெய் எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதையும் அவதானித்துள்ளார்.

தமிழ் அரிச்சுவடியில் (ஒய) (ஐ) என்பன திருவள்ளுவருக்குப் பிந்திய காலத்தில் உய்ர் எழுத்துக்களாக இணைக்கப்பட்டுள்ளன இரண்டையும் அகற்றவேண்டும் என்ற அயக்கம் வலுப்பெற்று வரும் நிலையயில் திருக்குறளில் உள்ள ஆதாரம் அதற்கு உரமூட்டுவதாக அமைகிறது.

திருக்குறள் மொழிபெயர்ப்பை விட நாலடியார் 51 மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்களையும் ஜி. யூ. போப் ஆங்கிலத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் நாலடியார் நூல் நாலடி நானூறு என்றும் அழைக்கப்படுவதுண்டு.

நாலடி வெண்பாக்கள் நானூறைக் கொண்ட நூல் என்பது பொருள் தமிழ் நீதி நூல்களைப் பொறுத்தளவில் குறளுக்கு அடுத்த இடத்தில் நாலடியார் இருக்கிறது.

இனிமையும் கருத்தாழமும் இருந்தாலும் குறளின் சொற்களால் சுருங்கக்கூறி நயமாய் உரைக்கும் சிறப்பை நாலடியாரில் காணமுடியவில்லை.

குறளின் தனித்துவம் சொற் சிக்கனம் ஒவ்வொறு குறளிலும் வேறுபட்ட கருத்துக்களைத் தூயதமிழில் கூறும் திறமை என்பன வற்றில் பெருமளவில் தங்கியுள்ளது.

திருக்குறளைத் தன்னகத்தே மொழியாக்க வடிவில் கொண்டிராத உலக மொழியொன்றும் இல்லை என்று துணிந்து கூறலாம்மிகக் கூடுதலான மொழிபெயர்ப்புக்கள் ஆங்கில மொழியில் காணப்படுகின்றன.

தமிழர்களில் மிகச் சிறந்ததொரு ஆங்கில மொழி பெயர்ப்பைச் செய்த புகழ் வ.வே. சு ஜயர் எனப்படும்வரகனேரி வேங்கட சப்பிரமணியம் என்பாருக்கு உண்டு.

தமிழ் சிறுகதை முன்னோடிகளில் ஒருவர் என்று வ.சு.வே ஐயர் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

தமிழ் மொழி ஆராய்ச்சி படைப்பிலக்கியம் கம்பராமாயண ஆய்வு மொழி பெயர்ப்புத்துறை பத்திரிக்கை துறை என்ற பல திசைகளில் அவர் ஆர்வம் காட்டினார் சங்க இலக்கியப் புலமையுடன் திருக்குறள் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கினார்.

தனது கட்டுரைகள் பலவற்றில் திருக்குறள் பாக்களை மேற்கோள்காட்டியும் விரிவாக விளக்கியும் உள்ளார். ஆங்கிலம் பிரெஞ்சு ஜேர்மன் இலத்தீன் தமிழ் மொழிகளில் 1820-1886காலப்பகுதிகளில் வெளிவந்த மொழிபெயர்ப்புக்களை ஆய்வு செய்த பின் தனது திருக்கறள் ஆங்கில மொழி பெயர்ப்பை 1914இல் வெளியிட்டார்.

இந்த நூலுக்கு மிக நீண்ட அரிய ஆய்வுரையை அவர் எழுதினார் திருக்குறள் ஆராய்ச்சிக்கு இந்த ஆய்வுரை அடித்தளமாக அமைகிறது. தமிழனத்தின் நாகரீக வளர்ச்சியின் உயர்வை கூறுவதோடு தமிழ் மொழியின் அன்றைய உன்னத நிலையையும் திருக்குறள் கூறி நிற்கிறது.

வட மொழியின் தாக்கத்தால் உயர்ந்த தமிழ் மொழி என்ற பொய்யுரையை மறுக்கும் சான்றாதாரமாகத் திருக்குறள் விளங்குகிறது.

சொல் வளமிக்க தனித்தியங்கும் திறன்மிக்க திராவிட மொழிக் குடும்பத்தின் தாயகத் தமிழ் துலங்குகிறது.

தமிழ் மொழி எல்லாவகையிலும் வட மொழிக்கு நிகரானது அல்லது உயர்வானது என்று போப் ஐயர் கூறியதை ஒவ்வொரு தமிழனும் தனது சிந்தையில் பதிவு செய்து வைத்திருக்கவேண்டும் இதற்குத் திருக்கறள் துணைநிற்கும்.

ஆய்வாளர் க. வீமன்.

நன்றிகள்.