Thursday 27 February 2014

காலத்தில் அழியாத தமிழர் கலைவண்ணம்.....!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம். இந்தப் பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனைத் திறமையா? இல்லை தெருகூத்தாடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை.

அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகம் பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள். அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் உண்மையானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்.

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டுசெல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால்குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?


மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித்தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.

தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்கவேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும், திறமையும் அற்பனிப்பையும் சொல்லவேண்டும். சிற்பங்களை நாம் பாதுக்கவேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது , குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண்முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டிகேட்கவேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்து சொல்ல வெண்டும் .
நன்றிகள்.

Tuesday 25 February 2014

ஆசியாவிலேயே மிக பலமான கோட்டை.....!


தமிழ் நாட்டில், தமிழனின் பெருமைக்கு சான்றாக இருக்கும் ஆசியாவிலேயே மிக பலமான கோட்டை என்று புகழப்படும் செஞ்சிக்கோட்டையின் வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்?

எத்தனையோ நூறு போர்களை சந்தித்து இன்றும் கம்பீரமாக இருக்கும் தமிழ் வீரத்தின் அடையாளம் இது. தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. மராட்டிய மன்னரான சிவாசி(ஜி), "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. 

பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுசா(ஷா)பாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் பெயர்வாங்கியது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று. செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். 

அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விச(ஜ)யநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.

இந்த கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

செஞ்சிக் கோட்டை அமைப்புசெஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர்மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மகா(ஹா)ல், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது.

இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருசு(ஷ்)ணகிரி, சக்கிலிதுர்க், ராச(ஜ)கிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது.

செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராசா(ஜா) தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் உண்டு. மராத்தியர்கள் சிவாசி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராச்சியத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாசி மறைந்து விட அவரது மகன் ராசா(ஜா)ராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். 

அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினார். முகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப்.

இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய சா(ஷா)ஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு. சாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராசா(ஜா)தேசிங்கும் சென்றான்.

தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராச(ஜ)புத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார்.

தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை). செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதசுவாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராசாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.

தேசிங்கு ராசன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம். செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராசன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த சிறீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம்.

தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.

போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராசனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது. 
நன்றிகள்.

Monday 24 February 2014

கோபத்தை குறைக்க வழி.....!

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடந்தது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பதில் தந்திருந்தார்கள். ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொல்ல, அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.

இதனால் கோபம் உடனே வந்துவிடுகிறது என்றார். மற்றொருவர், யாராவது என்னை தவறாகச் சொல்லி விட்டார்கள் என்று உடனே கோபம் வந்துவிடும் என்றார். அடுத்தவர், நான் செயாத்தைச் செய்த மாதிரி சொல்லி விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அவர்கள் என்கிறார்.

இன்னொருவர், சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொன்னால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்லுகின்றார். வேறோருவரோ, நினைத்தது கிடைக்கவில்லை என்றால் சும்மா விடமாட்டேன் என்றார்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் எதாவது செய்தால் இவர்களுக்குக் கோபம் ஏற்படுமாம். அது சரி நீங்களே எதாவாது தவறு செய்தால் உங்கள் மீது கொபப்படுவீர்களா? என்பதற்கு, அது எப்படி நீங்கள் எங்கள் மேலேயே நாங்கள் கோபப்படுவோமா என்றனர். 

கோபம் என்றால் என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனைக்குப் பெயர்தான் கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயற்பட்டால் நட்பு நசுங்கி விடும். உறவு அறுந்து போகும். உரிமை ஊஞ்சலாடும்.

நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனை என்ன? சவுக்கு எடுத்து சுளீர் சுளீர் என்று எங்களையே அடித்துக் கொண்டால் மட்டும் அதற்குப் பெயர் தண்டனை இல்லை. கோபம் ஏற்படுவதால் பதட்டம் உண்டாகின்றது. இதனால் எங்கள் உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகின்றது.

இந்தப்பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, இரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகின்றது. இதைத் தடுக்க வைத்தியரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்ப்பிடுவோம். இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம்.

இது பொய்யல்ல சத்தியமான உண்மை இது. இதெல்லாம் நீங்க சொன்னீர்கள் உண்மை மாதிரி தான் தெரிகிறது என்று நீங்கள் சொல்வதும். அப்படியே கோபத்தை குறைக்கிறதுக்கும் வழி சொல்வீர்கள் என்றால் நன்றாக இருக்கும் என்று புலம்புறதும் புரிகிறது.

அப்படி வாங்க வழிக்கு. அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம். முதலில் அடுத்தவர்களிற்குக் கோபம் வருகின்ற மாதிரி நீங்கள் நடக்காதீர்கள். அடுத்தவர்களை குறை சொல்லாதீர்கள். எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்கள்.

அவர்கள் உங்கள் மேல் கோபப்பட்டால் முதலில் மன்னிப்புக் கேளுங்கள். ஈகோ பார்க்காதீர்கள். நீங்கள் கோபப் படுகின்ற மாதிரி அடுத்தவர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். முதலில் மன்னிப்புக் கேட்டு என்னைக் கொஞ்சம் யோசிக்க விடுங்கள் அமைதியாகி விடுங்கள். எவர்மேல் தவறு என்று சிந்தியுங்கள்.

கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகி விடும். அப்படி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள். தனிமையாக உட்கார்ந்து யோசியுங்கள். அடிக்கடி யாரிடம் கொபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு இன்பமாக சிரித்து பேசுங்கள். அடுத்தவர்களே தவறு    செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க.

அடுத்தவங்க என்ன செய்து விட்டார்கள் என்று கோபப்படுகிறோம். என்ன நடந்துவிட்டது பெரிதாக. என்னத்தை இழந்துட்டோம். மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளித்து விடலாம் என்னும் முடிவுக்கு வாங்கள்.

வீட்டு பெரியவர்கள்  திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிதாகச் சாதித்து விட்டீர்கள் என்று. நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரை கிழித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்க செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதித்தோம் என்று யோசித்து விட்டு தூங்குங்க.

அடுத்தவர்களுக்கு நல்லது செய்யாவிடினும் கோபம் என்கிற கொடிய நோயை பரப்பாமல் இருந்தாலே நீங்க அவங்களுக்கு நல்லது செய்த மாதரி தான். தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்பவன் கூட. ஒரு வினாடி யோசித்தானால் தனது முடிவை மாற்றிக்கொள்வான்.

நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிப்பதற்கு உபயோகம்  பண்ணுவீர்கலானால்... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள்.

கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.
நன்றிகள்.

Saturday 22 February 2014

தமிழர் கட்டிடக்கலை என்பது.....!.

தமிழர் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலத் தமிழர்களின் கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும் அறிவியலும் ஆகும்.

தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிசுத்(ஸ்)துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள்.

இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டிடங்கள் பலவும் உருவாக்கப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.


ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நாட்டில் கற்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டிடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின்உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டிடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது.

ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டிட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டிடக்கலை எனப்படுகின்ற கட்டிடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இத்தகைய எல்லாவகைக் கட்டிடக்கலைகளினதும் கூட்டுமொத்தம் தமிழர் கட்டிடக்கலை எனப்படலாம்.

தமிழர் கட்டிடக்கலையில்பொதுவாக மூன்று உறுப்புகள் காணப்படுகின்றன . அவை தாங்குதளம் , சுவர் மற்றும் விமானம் (அல்லது கோபுரம்)ஆகும். 
நன்றிகள்.

Thursday 20 February 2014

துளிர்ந்த , பட்டுப்போன பெண்களும் உள்ளனர்.....!

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான். அவள் பெற்றோரும் அப்படித் தான்.

மாப்பிள்ளைப் பார்க்க தொடங்கினர், படித்த மாப்பிளை, நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன், நல்ல குடும்பம், இருவருக்கும் இருவரையும் பிடித்தும் போனது, உடனே நிச்சயம் செய்துவிட்டனர்.

தினமும் அழை பேசியில் இருவரும் தங்களைப் பற்றி பேச தொடங்கினர், இருவருக்கும் ஏற தாழ ஒரே மனப்பான்மை தான், இருவருக்கும் பொருந்தி போனது, திருமண நாள் நெருங்க நெருங்க வீட்டில் ஒரே பதட்டம், வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது, இருவர் வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தேறியது.

நாளை திருமணம், அவள் லேசாக அவள் வீட்டை சுற்றிப் பார்த்தாள், தினமும் அவருடன் பேசியதில் தான் இந்த வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று தெரியவில்லை, ஆனால் அன்று ஏதோ ஒன்றை இழக்க போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது.

தாயையும், தந்தையையும் பார்த்தாள் எல்லோரும் வேலையில் இருந்தனர், அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள், விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள், கண்கள் சுருங்கிய பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது.

தங்கையின் புது துணி பரவசத்தில் அக்கா என்று ஓடி வந்தாள். அவளை பார்த்ததும் என்ன ஆச்சு அக்கா என்றாள், பூ வாங்கினால் கூட சமமாய் வெட்ட சொல்லி சண்டை போடும் அக்கா , இனி நான் யாருடன் சண்டை போடுவேன், இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை விட்டுக் கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே என்று எண்ணினாள்.


அடுப்படியில் பால் கொதித்து கொண்டிருந்தது, ஓடி சென்று அடுப்பை அனைத்து அம்மா பால் வெச்சிட்டு எங்க போனே என்று திட்டினால், அவளை பெற்றவள், அவளை வளர்த்தவள் என்றாலும், அம்மா வை அடிக்கடி திட்டி விடுவதும், பின் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா?

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார், அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தாள், பேசிக் கொண்டே அப்பா இவளைப் பார்த்தார், அம்மா வை கொஞ்சம் கூப்பிடுமா என்று சொல்லி விட்டு மறுபடியும் பேச தொடங்கினர், இவள் எச்சிலையும் சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு எழுந்து அம்மா வை அழைத்து விட்டு, வீட்டின் வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்.

எங்கிருந்தோ, அடியே உள்ள போ, கருத்துர போற நாளைக்கு கல்யாணத்த வெச்சிக்கிட்டு இங்க வந்து உட்காரா பாரு என்று எப்பொழுதும் எதையாவது சொல்லி கொண்டிருக்கும் பாட்டி, எரிச்சலுடன் பாட்டியிடம் எப்பொழுதும் பேசும் அவள் அன்று பாட்டி சொன்னதை கேட்காமல் பாட்டியை முறைத்துப் பார்த்தாள், முகம் அப்படியே அழுவது போல மாறியது, பாட்டி உடனே என்னடி என்ன ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டாள், அழுகை அருவிப் போல் பொங்கியது உள்ளே ஓடி சென்று விரக்தியுடன் அம்மா அப்பா என்று கத்தினால் எல்லோரும் ஏதோ என்று பயந்துக்கொண்டு ஓடி வந்தனர்.

உடனே, அம்மா நான் போகமாட்டேன், இங்கேயே இருந்துடுறேன், உங்களை விட்டு நான் எப்படி செல்வேன், அங்க எப்டி இருக்குமோ, எனக்கு பயமா இருக்கு, நான் போகலை என்று மெல்லிதாய் அழுதாள், உடனே அப்பாவின் மனம் அழுதது, அம்மா சமாதனம் சொன்னாள், அப்பாவுடன் அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் பெண்ணிற்கும் உள்ள அந்த பாசம் வார்த்தையில் வருணிக்க முடியாதது, தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள், அக்கா அழாதே மாமா உன்ன நல்லா பார்த்துபாறு என்று வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்.

அன்றிரவு அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்தாள் அம்மா, ஆனால் அவள் புண்பட்டு போயிருந்தாள். நாளை திருமணம். போகும் இடம் சொர்கமோ, இல்லையோ என்றெல்லாம் தெரியாது.

ஆனால் அவள் வாழ்ந்த ஒரு சொர்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள்... திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்.

அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடிங்கு எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழா தான் திருமணம், துளிர்ந்த பெண்களும் உள்ளனர், பட்டுப்போன பெண்களும் உள்ளனர். 
நன்றிகள்.

Monday 17 February 2014

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் 
பொறியியல் அதிசயமான இசைத்தூண்கள் ..!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தசு(ஸ்)வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது. சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கின்றது.

இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும், அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது.


ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும். இதைத் தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படுவதில்லை. உண்மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதைத் தட்டினால் இசைக்கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லியமாக இது இசைக்கின்றது.

படத்தில் உள்ளது நெல்லையப்பர் கோவிலின் இசைத்தூண். ஆனால், இதைப் போன்ற இசைத்தூண்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ஆழ்வார் திருநகரி பெருமாள் கோவில், சுசீந்திரம் கோவில் போன்ற பல தமிழக மற்றும் தென் இந்திய கோவில்களில் காணலாம்.

இசைத்தூண்கள் உள்ள கோவில்கள்:

அழகர் கோவில்
ஆழ்வார் திருநகர்
களக்காடு
குற்றாலம்
சுசீந்திரம்
செண்பக நல்லூர் (துளை இசை)
தட்புத்திரி
தாடிக் கொம்பு (வேத ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில்
கருவரைக்கு செல்லும் வழியில் உள்ள
மண்டபம்

திருப்பதி
திருவனந்தபுரம்
திருநெல்வேலி
தென்காசி
பெங்களூர் ராமராசன் பேட்டை
மதுரை
வெப்பாச்சி
க(ஹ)ம்பி (இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)
நன்றிகள். 

Sunday 16 February 2014

தமிழர் இசையே உலகத்திலேயே மிகவும் பழமை.....!.

குமரிக்கண்டத்து இசை!

உலகத்திலேயே மிகவும் பழமையுடைய இசைத் தமிழர் இசையே. உலகில் சிறந்த இசை இந்திய இசையே. அதிற்சிறந்தது தமிழிசையே. தமிழிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்பண்களையும், கிளைப்பண்களையும் வகுத்தும், பழந்தமிழ் குறியீடுகளையும் பண் பெயர்களை வடச்சொல்லாக மாற்றியும் ”கருநாடக சங்கீதம்” எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றனர். கேள்வியைச் சுருதி என்றும், நிலையை ஸ்தாய் என்றும் மொழி பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப் படுகிறது.


குமரிக்கண்டத்துத் தமிழர் நுண்மாண் நுழை புலத்தராயும் , தலைசிறந்த நாகரிகமுடையராயும், எஃகுச் செவியராயும் இருந்தமையால், ஏழு பேரிசையும், ஐந்து சிற்றிசையும் ஆகிய பன்னீரிசையை (சுரத்தை) யும் கண்டு ஆயப்பாலை என்னும் முறையில் எழு பாலைப்பண்களைத் திரிந்ததும் அன்றி, அப்பன்னீரிசையும் வட்டப்பாலை என்னும் முறையில் 24 ஆகவும், திரிகோணப்பாலை என்னும் முறையில் 48 ஆகவும், சதுரப்பாலை என்னும் முறையில் 96 ஆகவும் நுட்பமாகப் பகுத்து எல்லையற்ற இசைப் பேரின்பத்தை நுகர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டுணர்த்துயுள்ளனர்.

பேரிசை ஏழு (ஸ்வரங்கள் 7): குரல் (ஸட்ஜம்; ஸ), துத்தம் (ரிஷபம்; ரி), கைக்கிள்ளை (காந்தாரம்; க), உழை (மத்தியமம்; ம) இளி (பஞ்சமம்; ப), விளரி (தைவதம்; த), தாரம் (நிஷாதம்; நி) என்பவையாகும். சிற்றிசையை (ரி,க,ம,த,நி) ஆகணம் என்று, குரலும் (ஸ) இளியும் (ப) அல்லாத பேரிசையை அந்தரம் என்றும் வழங்கினர். 
நன்றிகள்.

Friday 14 February 2014

திருமாங்கல்யம் கட்டும் வேளையில்.....!

தாலி கட்டும்போது உபயோகிக்கும் மந்திரத்தின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டும் வேளையில் உபயோகிக்கும் சமசுக்கிரத மந்திரம் சொல்கின்றார்களே.


அதனுடைய அர்த்தம் 

"மங்கலமான பெண்ணே!, உன்னோடு இன்று நான் தொடங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்தத் திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிகின்றேன்.

என் இல்லத் துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக". 
நன்றிகள்.   

இளைஞர்கள் என்பவர்கள் ஒவ்வோரு ஊரின்.....!.

"மாறி வரும் நாகரிகத்தால் மறைந்து வரும் பாரம்பரியம்"

மாறி வரும் நாகரிகத்தால் நாம் வளர்ந்து வருகிறோம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் நாம் நமது பாரம்பரியங்களை மறந்து வருகின்றோம். முன்பெல்லாம் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் காணப்பட்டோம் ஆனால் தற்பொழுது நம்மில் ஒற்றுமை குறைந்து கொண்டே வருகின்றது. பக்கத்து வீட்டில் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதனால் நமது துன்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்குகின்றோம் . மற்றவர்களுடன் நமது துன்பங்களை பகிர்ந்து கொள்ளாத காரணத்தினால் நாம் மேலும் சிரமத்திற்கு உள்ளகின்றோம். ஆகவே நாம் அனைவரும் நமது பக்கதிலுள்ளவர்களுடன் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.


நாம் சிறு வயதாகயிருக்கும் போது பல வீடுகளுக்கு சென்று விளையாடி இருக்கின்றோம். ஆனால் நமது குழந்தைகள் பக்கத்துக்கு வீட்டிற்கு சென்று விளையாட நாம் அனுமதிப்பதில்லை. இதனால் நமது குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பழகுவதில்லை. இதனால் குழந்தைகள் சமுதாயத்துடன் இணையாமல் காணப்படுவார்கள். ஆகவே குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட அனுமதித்து அவர்களுக்கு ஓரளவிற்கு வெளி உலகம் தெரியுமாறு பார்த்து கொள்ளவேண்டும்.

நாம் சிறு வயதாகயிருக்கும் போது நமது ஊரில் எந்த ஒரு விசேச நிகழ்ச்சி நடைபெற்றாலும் ஊரிலுள்ள அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். ஆனால் தற்பொழுது நமது ஊரில் எந்த ஒரு விசேச நிகழ்ச்சி நடைபெற்றாலும் நாம் அதனை கண்டுகொள்ளது தொலைகாட்சியில் நிகழ்சிகளை கண்டுகளித்து கொண்டிருக்கிறோம். இது நமது ஊரின் மீது நாம் கொண்டுள்ள மதிப்பு குறைந்துள்ளது என்பதனை குறிகின்றது. ஆதலால் நமது ஊரில் எந்த நிகழ்ச்சி நடைபெற்றாலும் அது நம்ம வீட்டு நிகழ்ச்சி என்பது போல உரிமையுடன் பங்கெடுக்க வேண்டும்.

முன்பெல்லாம் நமது ஊரில் திருமணங்கள் இரண்டு நாட்கள் நடைபெறும். ஆனால் தற்பொழுது ஒரு நாட்கள் கூட நடைபெறுவதில்லை அரை நாட்கள் மட்டுமே நடைபெறுகின்றது. அந்த அளவிற்கு நமக்கு நேரம் இருப்பதில்லை நாம் இயந்திரமாக மாறிவருகின்றோம். அதே போன்று நமது ஊரில் திருமண நிகழ்ச்சியில் முன்பெல்லாம் சாப்பாடு வழங்குவார்கள் ஆனால் தற்பொழுது மாறி வரும் நாகரிகத்தால் பிரியாணி வழங்குகின்றோம்.

திருமண நிகழ்ச்சியில் சாப்பாடு தயார் பண்ணும் பொழுது காய் கறி வெட்டுதல் என்பதை நாம் பாரம்பரியமாக கடை பிடித்து வந்தோம். ஆனால் தற்பொழுது பிரியாணி வைப்பதனால் காய் கறி வெட்டுதல் என்னும் பாரம்பரியம் நமது ஊரில் மறைந்து வருகின்றது. இந்த காய் கறி வெட்டுதல் நிகழ்ச்சியில் நமது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் வீட்டு நிகழ்ச்சியை போல சிறப்பிப்பார்கள்.

மேலும் உணவு பரிமாறும் போது நமது உறவினர்கள் பரிமாறுவார்கள். நமது உறவினர்கள் இந்த நிகழ்ச்சியில் பேசி,பழகி சந்தோசமாக காணப்படுவார்கள். இதனால் நமது உறவுகள் மேலும் மேலும் மேம்படுகின்றது.ஆனால் பிரியாணி தயார் பண்ணும் பொழுது நமது உறவினர்களுக்கு பங்களிப்பிருப்பதில்லை. இதனால் நமது உறவுகள் மேலும் மேலும் குறைகின்றது. இன்னும் எவரேனும் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நடத்தினால் கூட பக்கத்திலுள்ளவர்கள் பங்களிக்காத நிலையும் காணப்படுகின்றது.

இது அவர்களுடன் தொடர்பில்லாத நிலையை குறிகின்றது. இதனால் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு பக்கத்திலுள்ளவர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்களோ மாட்டார்களோ என்னும் அச்சம் ஏற்படுகின்றது. ஆகவே நமது பக்கத்திலுள்ளவர்களின் விசேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நமது ஊரின் இளைஞர்கள் முற்றிலும் மாறி கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் நமது ஊரில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் இளைஞர்களின் பங்களிப்பு முழுவதுமாக இருக்கும். ஆனால் தற்பொழுது அவர்கள் ஊரில் எந்த நிகழ்ச்சிகள் இருந்தாலும் பங்களிப்பதில்லை. ஏதோ ஒரு ஊரில் நிகழ்சிகள் நடப்பது போன்று பங்களிக்கிறார்கள். இளைஞர்கள் என்பவர்கள் ஒவ்வோரு ஊரின் தூண்கள் அவர்களால் மட்டுமே ஒவ்வோரு ஊரை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல இயலும் என்பதை உணர்ந்து நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
நன்றிகள்.

Wednesday 12 February 2014

உணவு செரியா நிலை.....!

உணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது?

முப்பது முதல் 32 அடி நீளமுள்ள தொடர்ந்து குழாயாய் அமைந்துள்ள செரிமானப்பாதை (alimentary canal) என அழைக்கப் படும், அற்புதமான திகைக்கச் செய்யும் பொறிவல்லாளராகச் செயலாற்றி வரும் ஒழுங்கில், குறுக்கீடு செய்வது உணவு செரியா நிலையைக் கொண்டு வருகிறது.

இந்த முறை ஒழுங்கில், உணவு சிதைக்கப்பட்டு, கடையப்பட்டு, குழம்பாக்கப்பட்டு, கரைந்து, வேதியியல் செயலால் எளிய கலவையாகப் பிரிக்கப்பட்டு, குருதியில் ஏற்றுக்கொள்ளும் நிலைபெற்ற பின் குருதி உறிஞ்சிக் கொள்கிறது.

செரிமானப்பாதை மெல்லிய படலத்தால் (membrance) ஆனது. எலும்பு, குருத்தெலும்பு, விலங்கு, காய்கறிப் பொருள்கள், ஆகியவை இந்த மெல்லிய படலத்தைவிட வலுவாயுள்ளவை கரடுமுரடானவை. ஆனால் இவற்றைக் கரைக்கும் வேதியியற் பொருளைத் தடுத்து நிறுத்தும் தன்மையை இம்மெல்லிய படலம் கொண்டிருக்கிறது.

உணவுச் செரித்தலைச் செய்யும் தலையாய பொருள்களுள் ஒன்றான இரைப்பை நீர் (gastric juice) செறிவான நீரகமும் பாசிகமும் உள்ளடங்கிய (hydrochloric) அமிலத்தை (concentrated hydrochloric acid) உடையது. இது சில நிமிடங்களில் வேகவைத்த முட்டையைக் கரைத்து ஈர்த்துக் கொள்ள வல்லது.


இது ஏன் இரைப்பையைக் கரைப்பதில்லை? இரைப்பை அமிலத்தை மட்டும் கசியச் செய்யாமல் கடினத்தன்மையை எதிர்த்து நின்று சமப்படுத்தும் காரப் பொருளான (alkali) அமோனியா (ammonia)வையும் தரும்போது, சரிக்கட்டு இயக்கியாக (neutrazling agent) அமைவதால், அந்த அமிலம் இரைப்பையைக் கரைப்பதில்லை.

இந்தச் சக்தி வாய்ந்த இரைப்பை நீர் தடங்கல் செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவ்வாறு முட்டுக்கட்டையிடப்படும்போது இரைப்பையில் வலி விளைகிறது. இதனையே உணவு செரியா நிலை என அறிகிறோம்.

உணவூட்டக் கால்வாய்க் குழாய் உணவு பெறுவதற்காக தயாரிப்பை உணவுக்கு முன்பே முன்னேற்பாடு செய்து வைத்துக் கொள்கிறது. உணவுப் பொருளின் தோற்றம், மணம், உணவைப் பற்றிய எண்ணம் ஆகியவை வாயூறலையும், இரைப்பை நீர் சுரப்புத் தூண்டலையும் செய்யத் தொடங்கி விடுகின்றன.

அதே சமயத்தில் உணவை நோக்கி இரைப்பை, சுரப்பிகளை (glands)த் தொழில் செய்வதற்கேற்ப நுண்புழை நாளங்களை (capillaries) அகலப்படுத்தி உணவு செரிப்பதற்கான செய்கைகளைச் செய்வதற்குத் தேவையான அதிகக் குருதியைக் கொண்டு வருவதற்கு வழி வகுக்கிறது.

ஆனால் பசியில்லாமல் உண்ணல், ஏற்றுக்கொள்ள இயலாத கூட்டு, கவலை, கோபம், பயம், நமைச்சலூட்டல் போன்ற உணர்ச்சிகள் இரைப்பையில் தயாரிப்பை நிறுத்தக்கூடும். இவை இரைப்பையை வெளிறச் செய்ய (pale)வும் கூடும். அதன் விளைவு உணவு செரியாமல் போகும்.

மிக விரைவாக உணவை வாயிலிட்டு அரைக்காமல் உண்பதும் செரிமானமாவதற்குத் துன்பமாக அதிக உணவை உண்பதும் பெருஞ்சுமையாகவும் ஒழுங்கைக் கெடுக்கும் தன்மையுடையதாகவும் செய்து நமக்கு உணவு செரியாத் தன்மையைக் கொடுக்கும்.
நன்றிகள்.

Monday 10 February 2014

உணவே மருந்து....!

அறுசுவையில் ஆரோக்கியம் - உணவே மருந்து!!

நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்போ, சுரப்பியோ சரியாக வேலை செய்யவில்லை என்றால் அதனை உடல் ஒரு நோயாக வெளிப்படுத்தும்.....இது தான் உடலின் சங்கேத பாசை. ருசிக்கு மட்டும் உண்ணாமல், பசிக்கு தேவையான சுவைகளுடன் உணவு உண்டாலே வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனலாம். 

ஒரு மனிதனின் ஆரோக்கியமே அவனுடைய செயல்பாட்டை நிர்ணயம் செய்யும். ஆரோக்கியமற்ற ஒருவனால் தெளிவான வாழ்க்கையே வாழ முடியாது. மற்றவரையும் வாழ்விக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட..

ஒருவரின் வாழ்வு சிறக்க உடலை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலுக்கு தேவையான சத்துப்பொருட்களும், உணவுப் பொருட்களும் எந்த அளவிற்கு தேவை, அறுசுவையில் எந்த சுவை குறைவாக இருக்கிறது என்ற விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். 

துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என அறுசுவையுடன் கூடிய உணவு மட்டுமே நம்மை நோயில்லாமல் வாழ வைக்கும் என்பதை எப்போது புரிந்து கொள்கிறோமோ அப்போது தான் நாம் நோயிலிருந்து விடுபட முடியும். ஒவ்வொரு உணவுப் பண்டங்களும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் சுவைகளையும் கொண்டுள்ளது... 

நமது ஆரோக்கியத்திற்கு, இந்த அறுசுவைகளை சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொண்டாலே , அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் எந்த வித ஆய்வு கூடமும் இல்லாமல் , நவீன உபகரணங்களும் இல்லாமல் கண்டறிந்திருக்கிறார்கள் . சுவைகளை வைத்தே அதில் இருக்கும் சத்துக்களையும், அவற்றின் விகிதாச்சாரத்தையும் கண்டறிந்ததே ஒரு மாபெரும் நுண்ணறிவுதான் .


இன்றைய மருத்துவ முறையில் எத்தனை நவீன உபகரணிகள் கொண்டும் அறிய முடியாத சில நோய்களை அவர்கள் வாதம், பித்தம், கபம் எனப் பிரித்து எந்த நாடி மிகுந்தோ/குறைந்தோ உள்ளது என்று கைகளில் உள்ள நாடியைத் தொட்டே கண்டறிந்தார்கள். அதற்கு உணவுமுறை மாற்றம், மூலிகைகள் என தகுந்த தீர்வையும் இயற்கையான முறையில் நமக்கு அளித்து விட்டு தான் சென்றார்கள். 

நவீன மருத்துவம் தான் இன்று நம்மில் பல பேர் கொண்டாடும் வைத்திய முறை. ஆனால்....நவீன வைத்தியம் என்ன என்பதை சற்றும் அறியாத நம் முன்னோர்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வந்தார்கள். வெளிநாடுகளில் படித்து தேர்ந்த மருத்துவர்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள், உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவற்றை காட்டும் நவீன கருவிகள், எல்லாம் இருந்தும் நவீன மருத்துவம் சாதித்தது என்ன?

இந்த உறுப்பில் இந்த நோய் வந்திருக்கிறது என்று எல்லாவற்றையும் தனித்தனியாய்ப் பிரித்து கண்டுபிடித்த நவீன மருத்துவமுறை பல லட்சங்களை விழுங்கிவிட்டு நம்மில் பலரை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.. அல்லது.... லகரங்களில் கடன் வாங்கி உயிர்பிழைக்க வைத்து அவர்களை கடன்காரர்களாக்கி நிம்மதி இல்லாமல் சாகடித்திருக்கிறது.... 


நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது இரும்பு,சுண்ணாம்புச்சத்து,பல உயிர்ச்சத்து கலந்த பலவிருத்தியோ அல்லது மருந்து-மாத்திரைகளோ இல்லை. உதாரணமாக உப்பில் சோடியம் குளோரைடு அடங்கி உள்ளது.. இது நமது உடலுக்கு அத்தியாவசிய தேவையானது..

ஆனால் இது அதிக அளவில் தேவை இல்லாதது. மிளகில் (100Gms ) 240% வைட்டமின் "c ", 39 % உயிர்ச்சத்து B -6 , 13 % இரும்பு சத்து, 14 % தாமிர சத்து, 7% பொட்டாசியம் அடங்கி இருப்பதை நவீன ஆய்வுகள் கண்டறிந்துள்ளன... இந்த கனிம சத்துக்கள், செரிமான சக்திக்கும், உடலில் தேவை இல்லாமல் சேரும் கொழுப்பை கரைக்கவும் , தொற்றுக்களை தடுக்கவும் பயன்படும்.....

அதனால் தான் நம் முன்னோர்கள் பத்து மிளகோடு பகையாளி வீட்டில் கூட உணவு உண்ணலாம் (மிளகு விசத்தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது) என்று இந்த மிளகின் சிறப்பைப் பற்றி அன்றே தெளிவாக உரைத்திருக்கிறார்கள். 

ஆண்களை விட பெண்களுக்குத்தான் வியாதிகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.. இதற்கான காரணம் என்னவென்று யோசித்தால்...உணவு ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.

தேவையறிந்து சமைக்காமல் தேவைக்கு அதிகமாக சமைத்து, பின் அது வீணாகி விடக் கூடாதென்பதற்காக பசி இல்லாமல் சாப்பிட்டோ, அல்லது அதனை அடுத்தவேளைக்கு சாப்பிட்டோ வியாதிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகி விடுகிறார்கள்... .

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு.
நன்றிகள்.

Wednesday 5 February 2014

சம்மணமிட்டு அமர்ந்து.....!

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்.?? 

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது உணவு உண்ணும் மேசை (dining table)....இது சரியா தவறா ?!! முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன? 


சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது.

எனவே செரிமானம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு செரிமானமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு செரிமானம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.

நன்றிகள்.

Tuesday 4 February 2014

எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை.....!

எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள 


பூச்சியத்தை கண்டுபிடித்த‍தோடு அல்லாமல் அதை உலக நாடுகளும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்த‍து எந்த நாடு தெரியுமா? நமது இந்தியாதான்.

சரி, நமது தாய்மொழியான தமிழில் எண்களின் ஒளி வடிவம் என்ன வென்று உங்களுக்குத் தெரியு மா? 

1 – க
2 – உ 
3 – ங 
4 – ச 
5 – ரு
6 – சா
7 – எ
8 – அ
9 – கூ
0 – 0

அப்பப்பா இதை எப்ப‍டியப்பா நினைவில் வைத்துக்கொள்வது என்றுதானே அச்ச‍ம் கொள்கிறீர்கள்.

அச்ச‍ம் எதற்கு?, 

கடுகு, உளுந்து, ஙனைத்து, சமைச்சு, ருசிச்சு, சாப்பிட்டேன், என, அவன், கூறினான், ஓ, என்ற இந்த வாக்கியத்தை நீங்கள் எளிதாக நினைவில் வைத்துக் கொ ள்ள‍ முடியும் அல்ல‍வா?

என்ன‍ இது அதெப்படி இதில் தமிழ் எண்கள் ஒலி வடிவம் வருகிற து என்று நீங்கள் ஐயப்படுவது எனக் குத் தெரிகிறது. மேற்கூறி ய அதே வரியை கீழேயும் குறிப்பிட்டுள்ளேன்.

அதை நீங்கள் படியுங்கள் ஆனால் ஒரே ஒரு நிபந்தனை கீழே உள்ள‍ வரியில் வரும் அத்த‍னை வார்த் தைகளின் முதல் எழுத்துக்களை மட்டுமே படித்துப்பாருங்க ள். எண்களில் தமிழ் மொழி வடிவம் வருகிறது அல்ல‍வா?

“க“டுகு, “உ“ளுந்து, “ங“னைத்து, “ச“மைச்சு, “ரு“சிச்சு, “சா“ப்பிட்டேன். “எ“ன, “அ“வன், “கூ” றினான், “ஓ“

என்ன‍ இப்ப உங்களுக்கு எளிமையாக இருக்குமே!
நன்றிகள்.