Saturday 28 September 2013

உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த.....!

உதடுகள் அழகாக சிவப்பாக இருக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள். அழகாக இருக்க விருப்பம். ஆனா அவைகளை பராமரிப்பதில்லை. உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. 

வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும்......


உதடு வெடிப்புக்கு... 

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். இன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.

இப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

ரோஜாப்பூவின் இதழ்களை எடுத்து காய்க்காத பசும்பாலில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து நன்றாக பிசைந்து அதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் வறட்சி, உதடு வெடிப்பு குறைந்து உதடு சிவப்பாகும்.
நன்றிகள்.

Friday 27 September 2013

விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள.....!

தமிழர்களின் வீரத்தின் அடையாளம், கலாசார புதையல் – சிலம்பு (வீர விளையாட்டு)

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத் துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலை யாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர்.

தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம் புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண் டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.

அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் ‘சிலம்பு’ ஆகும். முற்காலத்தில் இக்கலை யை வீர மறவர்கள் பயன்படுத்தி னர். தற்போது இது ஒருசில பள்ளி களிலும், தனியார் அமைப்புகளாலு ம் கற்றுத் தரப்படுகிறது. விளையா ட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது.

சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. “சிலம்பம்’ என்ற சொல் “சிலம்பல்’ என்ற வினையின் அடியாகப் பிறந்தது.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர் களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்ற த்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்ற மடைந்தன.

வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என் ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப் பட்டு வருகின்றன.

சிலம்பம் பற்றிய ஆய்வுகள்-

சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்று கள் மிகத் தொன்மை யானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய் வில், 32வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்க ப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சிய கத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அந்த கம்பினை ப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப் பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத் தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

பெயர் தோற்றம்-

சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவா னது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது.

“சிலம்பம்’ என்ற சொல் “சிலம்பல்’ என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப்பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்தால் மலைக்கு, “சிலம்பம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

எனவே, மலை நிலக்(குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், “சிலம்பன்’ என்ற பெய ருண்டு. கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோ டொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு “சிலம்பம்’ என்ற பெயர் ஏற்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் கடைய நல் லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகு திகளில் வாழும் பழங்குடியினருள் “சிலம்பரம்’ என்ற பெயரும் வழக்கில் உள்ளது.


சிலம்பத்தடி-

சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறு வாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.

சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடு வதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவ தாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன.

திருக்குறளில் “கோல்’ என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், “வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே’ என்ற வரிகள் மூலம், “தண்டு’ என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளை யாட்டு பற்றிய குறிப்புகள் காண ப்படுகின்றன.

சிலம்பம் பிறநாடுகள் வரை பரவி, அந்நாடுகளில் மெருகேற்ற பட்டு காரத்தே ஆனது என்று சொல்பவர்களும், அதன் காரணமாக தான் “கராத்தே” என்ற பெயர் கரம் என்ற பொருள் தருவதாக உள்ளது என்று வாதிடுவோரும் உள்ளனர்”

கராத்தே கலையின் முன்னோடி குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர்மன், (போதி தர்மன்) புத்த துறவிகளுக்கு கற்றுக் கொடுத்தார் . எனவே கராத்தே கலையின் முன்னோடி சிலம்பம் என்ற கருத்தும் உள்ளது.

சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கடுபடுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும் குறிப்பு ஒன்று உள்ளது.

பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினை பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் .தமிழக எகிப்திய கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன,

துடுக்காண்டம்
குறவஞ்சி
மறக்காணம்
அலங்காரச் சிலம்பம்
போர்ச் சிலம்பம்
பனையேறி மல்லு
நாகதாளி,
நாகசீறல்,
கள்ளன்கம்பு
ஆகியனவாகும்.
சிலம்பத்தின் வகைகள் :
சுவடு
தெக்கன் சுவடு
வடக்கன் சுவடு
பொன்னுச் சுவடு
தேங்காய் சுவடு
ஒத்தைச் சுவடு
குதிரைச்சுவடு
கருப்பட்டிச் சுவடு
முக்கோணச் சுவடு
வட்டச் சுவடு
மிச்சைச் சுவடு
சர்சைச் சுவடு
கள்ளர் விளையாட்டு
சக்கர கிண்டி
கிளவி வரிசை
சித்திரச் சிலம்பம்
கதம்ப வரிசை
கருநாடக வரிசை

கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் சிலம்பம் விளையாடு வதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நட சாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச் சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.


சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற் பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக் கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒரு வேலி போன்ற அமைப்பை உரு வாக்கிட முடியும்.

ஒரே ஒரு கலத்தைக் ( தடியை) கொண்டு அமைக்கும் இதுபோன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை (flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.

இன்னைக்கு வெகு சிலரே சிலம்பக் கலையை கற்கின்றனர். இந்தியாவில் தமிழ்நாடு , கேரளா மற்றும் மலேசியா, பிரான்சு போன்ற இடங்களில் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழகரசு சில ம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீ கரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத் துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டய படிப்பாக சிலம்பம் நடத்தப்படுகிறது.
நன்றிகள்.

Thursday 26 September 2013

விவசாயிகள் எளிய முறையில் பஞ்சகவ்யம்.....!

விவசாயிகள் எளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல்

இயற்கை முறையில் பஞ்சகவ்யம், கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நாமே தயார் செய்துகொள்ளக்கூடிய ஒரு அடர் கலவை ஆகும். இதை பயன்படுத்தி குறைந்த செலவில் பயிர்களை ஊக்குவித்து, ரசாயன உரங்களை, பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் அதிகப்படியான மகசூலைப் பெறலாம். நிலம் செழிப்படையும். விளைச்சல் பெருகும். செலவு குறைக்கப்படும்.


பஞ்சகவ்யம் - நன்மைகள்:

1.ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது முழுமையாக தவிர்க்கப்படுகிறது.
2. செடியின் வளர்ச்சியை தூண்டி நல்ல வளர்ச்சி அடையச் செய்கிறது.
3. நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது.
4. பூச்சிகளை விரட்டியடிக்கிறது.
5. பயிரின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.

பஞ்சகவ்யம் தயாரித்தல்: தேவைப்படும் பொருட்கள்:

பசு சாணம் - 5 கிலோ, நெய் - அரை காலன் கொண்ட அளவு, 5 நாள் புளித்த தயிர் - 2 காலன் கொண்ட அளவு (Liter), பால் - 2 காலன் கொண்ட அளவு, மாட்டு மூத்திரம் - 3 காலன் கொண்ட அளவு, கரும்பு வெல்லம் - கால் காலன் கொண்ட அளவு, இளநீர் - 2, தண்ணீர் - 3 காலன் கொண்ட அளவு, ஒரு கை அளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கை அளவு சுண்ணாம்பு

குறிப்பு: தயாரிக்கும் கலனை / நெகிழி பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும்.

தயாரிக்கும் முறை:

1. முதல் நாள் - சாணம் 5 கிலோ, நெய் அரை காலன் கொண்ட அளவு, ஒரு கையளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கையளவு சுண்ணாம்பு இந்த மூன்றையும் நன்கு பிசைந்து 5 நாள், கலன் / நெகிழி பாத்திரத்தின் வாயை ஈரத்துணியால் மூடவேண்டும்.

2. 6ம் நாள் - 2 காலன் கொண்ட அளவு பாலில் மோர் கலந்து 2 காலன் கொண்ட அளவு தயிராக புளிக்க வைக்க வேண்டும்.

3. 10ம் நாள் தனியாக வேறொரு வாளியில், கீழ்கண்டவைகளை ஊறவைக்க வேண்டும்.

2ல் உள்ள புளித்த தயிர்-2 காலன் கொண்ட அளவு, பால் -2 காலன் கொண்ட அளவு, மாட்டு மூத்திரம்-3 காலன் கொண்ட அளவு, கரும்புவெல்லம்-கால் காலன் கொண்ட அளவு, இளநீர்-2, தண்ணீர்-3 காலன் கொண்ட அளவு. இவற்றையெல்லாம் வேப்பம் குச்சியைக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டுதரம் 3 நிமிடங்கள் வரை (6 நாட்கள்) கலக்கிவிட வேண்டும்.

4. 10ம் நாளில் இந்த கலவையுடன் வாழைப்பழங்கள் (சுமார் 5 எண்ணிக்கை அழுகிய பழங்கள்) இதனுடன் கிடைத்தால் வேப்பம்பழங்கள், பலாப்பழம் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் கட்டி இந்த கலவையினுள் தொங்கவிட வேண்டும். வேப்பம்பழம் கிடைக்கவில்லையென்றால் வேப்பங்கொட்டையை இடித்து சேர்த்துக்கொள்ளலாம்.

ஆ) தொங்கவிட்டிருந்த பழங்கள் கொண்ட துணியை திறந்து பழங்களை கலவையில் நன்கு கலந்திட வேண்டும்.

21ம் நாள் முடிவில் கிடைப்பது பஞ்சகவ்ய கரைசல் ஆகும். பயன்படுத்தும் அளவு - ஒரு காலன் கொண்ட அளவு பஞ்சகவ்ய கரைசலை 30 முதல் 50 காலன் கொண்ட அளவு நீரில் கலந்து பஞ்சகவ்யமாக பயன்படுத்தலாம்.

பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை:

1. தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் கலன்கள், பாத்திரங்கள் கண்டிப்பாக மண் /நெகிழி (Plastic) பாத்திரங்களாகவோ அல்லது சிமிட்டி (cement) தொட்டியாகவோதான் இருக்க வேண்டும். முக்கிய குறிப்பு: பாத்திரங்களை நன்கு கழவி பயன்படுத்த வேண்டும்.

2. பாத்திரங்களின் வாய்பகுதி எப்பொழுதும் திறந்து துணியால் மூடியதாக இருக்க வேண்டும். தயாரிக்கும் வேளையில், காற்றிலுள்ள பிராணவாயு தேவைப்படுகிறது. கரைசலில் இருந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது. இவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உகந்தவையல்ல. எனவே இவைகள் வெளியேற தடைகள் ஏதும் இருக்கக்கூடாது. 

3. மூலப்பொருட்கள் நன்கு கலக்கப்பட வேண்டும். தினம் காலை, மாலை 2 வேளை3 நிமிடங்கள் வேப்பம் குச்சியைக் கொண்டு கலக்க வேண்டும். இதன்மூலம் நுண்ணுயிர்கள் அதிகரிக்கின்றன.

4. மூலப்பொருட்கள் கலந்த பாத்திரத்தை நிழலில் வைக்க வேண்டும். இது மிக முக்கியமானது.

5.சாணம் பயன்படுத்துவதால் தெளிப்பானில் அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.ஆகையால் வடிகட்டி பயன்படுத்த வேண்டும். மற்றும் விசைத்தெளிப்பான் பயன்படுத்தும்போது வால்வின் துளையினை பெரிதாக மாற்றி அமைக்க வேண்டும.

6. பயன்படுத்துவதற்கு முன் தெளிப்பானை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

7. பஞ்சகவ்யத்தினை காலை அல்லது மாலை நேரங்களில் பயிருக்கு தெளிப்பது சிறந்தது.
நன்றிகள்.

Wednesday 25 September 2013

தண்ணியடிப்பவர்களுக்கு இது பொருந்தாது....!

முதுமையை தடுக்கும் தண்ணீர்..! தண்ணியடிப்பவர்களுக்கு இது பொருந்தாது! 

உலகிலேயே மிகவும் சிறப்பான ஒரு அழகு பொருள் என்று சொன்னால், அது தண்ணீர் தான். தண்ணீர் குடிப்பதால், உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் தண்ணீரைக் குடிப்பதால், உடலில் உள்ள ஒவ்வொரு கலங்களும் நன்கு ஆரோக்கியமாக செயல்படும். 

இத்தகைய தண்ணீரை தினமும் தவறாமல் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல், சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். ஒரு தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால், ஆரோக்கியமான உடல், பொலிவான சருமம் மற்றும் பட்டுப்போன்ற கூந்தலைப் பெற முடியும்.


ஏனெனில் தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதால், நச்சுக்களால் உடல் மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கிறது. சரி, இப்போது அந்த தண்ணீரினால் கிடைக்கும் சில அழகு நன்மைகளைப் பற்றி பார்ப்போமா!!!

நல்ல மாய்ஸ்சுரைசர்

தினமும் தண்ணீரை போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் சருமமும் வறட்சியின்றி, மென்மையாக இருக்கும்.

சரும சுருக்கத்தை

தடுக்கும் தண்ணீர் குடித்தால், இளமையிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்கலாம்.

பொலிவான கண்கள்

நீர்ச்சத்து உடலில் குறைவாக இருந்தால், கண்கள் பொலிவிழந்து காணப்படும். எனவே தண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வந்தால், நீர்ச்சத்து அதிகரித்து கண்கள் பளிச்சென்று காணப்படும். மேலும் தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களை கழுவினாலும், கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் அழகாக இருக்கும்.

நல்ல க்ளின்சிங்

முகத்தை தண்ணீரால் கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

பருக்களைக் குறைக்கும்

வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை நனைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்துளைகளில் தங்கியிருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, பிம்பிள் வருவதைத் தடுக்கும். குறிப்பாக இதனை தினமும் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

பொலிவான சருமம்

தண்ணீர் பிணி நீக்கல் (therapy) எடுக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தினால், இறுதியில் குளிர்ந்த நீரை ஒரு முறை பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் வெதுவெதுப்பான தண்ணீர் சருமத்துளைகளை திறக்கவும், குளிர்ந்த நீர் திறந்த சருமத்துளைகளை மூடவும் உதிவியாக இருக்கும். இதனால் தேவையற்ற மாசுக்கள் சருமத் துளைகளில் தங்குவதை தவிர்த்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.

முதுமையை தடுக்கும்

இளமையை தக்க வைக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. ஏனெனில் இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை சீராக பராமரித்து, சுருக்கம், சரும வறட்சி போன்றவற்றை தடுத்து, எப்போதும் இளமையான தோற்றத்தை தக்க வைக்கும்.

அழகான உதடுகள்

உதடுகளின் அழகைக் கெடுப்பதே வறட்சி தான். ஆகவே அத்தகைய வறட்சியை போக்க, தண்ணீர் அதிகம் பருகினால், போதிய நீர்ச்சத்து கிடைத்து, உதடுகள் எப்போதும் அழகாக வெடிப்புக்களின்றி இருக்கும்.

மென்மையான சருமம்

சரும வறட்சி ஏற்பட்டால், சருமம் கடினமாகி மென்மையிழந்து காணப்படும். எனவே தண்ணீர் அதிகம் குடித்து வந்தால், வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

எடை குறைய

தண்ணீர் அதிகம் குடித்தால், சாப்பிடும் அளவு குறைந்து, செரிமான மண்டலம் சீராக இயங்கி, உடல் எடை குறைவிற்கு பெரிதும் துணையாக உள்ளது.

சரும தொற்றுகள்

ச(ஷ)வரில் குளிக்கும் போது, சருமத்தில் தங்கியிருக்கும் நோய்த்தொற்றுகள் நீக்கப்படுவதோடு, சருமத் துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களும் வெளியேற்றப்பட்டு, உடலை நன்கு புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்கிறது.

உடல் முழுவதற்கும் நல்லது

உடல் ஆரோக்கியத்தை சருமத்தை வைத்து சொல்லலாம். இத்தகைய சருமம் அழகாக இருக்க வேண்டுமெனில், தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.

உடல் வெப்பத்தை சீராக வைக்கும்

தண்ணீரை தினமும் போதுமான அளவில் பருகினால், உடலின் வெப்பநிலையானது சீராக பராமரிக்கப்பட்டு, உடலை மற்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

உடல் துர்நாற்றத்தைப் போக்கும்

குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால், உடல் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். எப்படியெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வாயிலாக வெளியேறுவதால், அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறுவதைத் தவிர்க்கலாம்.
நன்றிகள்.

Tuesday 24 September 2013

இக்கோயிலுக்கு வெட்டுவான் கோயில்.....!


வெட்டுவான் கோயில் இருக்கும் மலை, அரைமலை என்னும் பெயரால் முன்பு அழைக்கப்பட்டுள்ளது. மலைமீது ஒற்றைக் கற்கோயிலாக வெட்டுவான் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது செதுக்கப்பட்டுள்ளது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுமையாக செதுக்கப் படவில்லை.

கோயில் பணி நிறைவடையாமல் விடுபட்ட நிலையில், தற்போது பிள்ளையார் சிலை ஒன்று பிரதிட்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறது. ஒரு பாறையின் மேல், உட் பகுதியை வெட்டி, நடுவில் உள்ள பகுதியைக் குடைந்து இக்கோயில் உருவாக்கப்பட்டதால் இக்கோயிலுக்கு வெட்டுவான் கோயில் என்று பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கோயிலை வெளியில் இருந்து பார்க்கும் போது வெறும் பாறை போல் தான் தெரியும். அதற்குள் இருக்கும் அழகான கோயிலை உள்ளே சென்றுதான் பார்க்க முடியும்.


வெட்டுவான் கோயிலில் இருக்கும் சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவையாக உள்ளன. இங்குள்ள பிரம்மா, திருமால், சிவன், தேவகன்னியர், பூத கணங்களின் சிலைகள் அனைத்தும் மிகவும் நுட்பத்தோடு, கலை உணர்வோடு செதுக்கப்பட்டுள்ளன.

இங்கு அமர்ந்திருப்பது வெறும் சிலைகள் என்று தோன்றவில்லை. உண்மையாகவே இறைவன் மனித உருவில் தோன்றி அமர்ந்து கொண்டிருப்பது போன்றே எண்ண தோன்றும்.

ஆங்காங்கே சில இடங்கள் முழுமை பெறாமல் இருக்கின்றன. முழுமை பெறாமல் இருக்கும் சிற்பங்களும், நம்மைப் பார்த்து ஏதோ ஒரு செய்தியை சொல்ல நினைப்பது போலவே இருக்கிறது. சிறிய சிறிய சிலைகள் கூட கலை நயத்தோடு, அழகு சொட்ட சொட்ட அமர்ந்திருக்கின்றன.
நன்றிகள்.

Monday 23 September 2013

கடல் நீரை குடிநீராக .....!

கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!


நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக் கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் . 
  
ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா ?

கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுப்படலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கையாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான் . இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி. 

ஒரு நதியின் நீர் பாய்ந்தா கடல் நல்ல நீராக மாறுகிறது என்பது அனைவருக்கும் ஏற்படும் சந்தேகம்தான் எனலாம். ஆனால் இந்த நிகழ்வு உண்மையான ஒன்றுதான் என்று சொல்கிறது பல ஆய்வுகள்.

அந்த நதிதான் அமேசான் நதி 6000 கி. மீ நீளம் விரிந்து பல அதிசயங்களையும் பல மர்மங்களையும் கொண்டு உலகத்தில் மிகப்பெரும் நதியாக ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த நதியில் மட்டும்தான் உலகத்தில் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு நீர் ஓடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் கலந்த பின்பும் இதன் தன்மை மாறாமல் 280 கி. மீ தொலைவிற்கு மொத்த கடல் நீரையும் தூய்மையான நீராக மாற்றிக்கொண்டு இருக்கிறதாம்.

இந்த நதி அட்லாண்டிக் கடலுக்குள் 280 கி.மீ தொலைவைக் கடந்தபிறகுதான் உப்பு நீரிடம் போராடி தோற்றுப்போவதாக ஆய்வு கூறுகிறது. அமேசான் அமேசு(ஸ்) என்றாலே ஆச்சர்யம் என்று அர்த்தம் . இப்பொழுதுதான் தெரிகிறது இந்த நதிக்கு அப்படி ஒரு பெயர் வைத்தது பொருத்தமான ஒன்றுதான்.
நன்றிகள்.

Friday 20 September 2013

விருந்தும் கூடாது விரதமும் கூடாது.....!

வாட்டி வதைக்கும் குடலில் சீழ் வடியும் புண் நோய்க்கான தீர்வு! 

வயதில் பெரியவர்களாக இருப்பார்கள். சின்னக் குழந்தைகள் மாதிரி கையில் எப்போதும் ஈரட்டிகள் (Biscuits) மாதிரி ஏதாவது வைத்து, சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். கேட்டா குடலில் சீழ் வடியும் புண் என்று சொல்வார்கள்.

குடலில் சீழ் வடியும் புண் வந்தவர்கள் வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும். அதென்ன குடலில் சீழ் வடியும் புண்?

நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. செரிமான நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும்.

சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். இலகுவாக கிழிஞ்சால்கூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு.

இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காது அப்படியே தொண்டைலயே நிக்கிறது மாதிரி உணர்வு இதெல்லாம் இருக்கும். இதுதான் குடலில் சீழ் வடியும் புண்.

  
குடலில் சீழ் வடியும் புண் ஏன் வருது? முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி கோப்பி, தேநீர் குடிச்சு வயிற்றை நிரப்பறது.

சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவர்களுக்கும் கட்டாயம் குடலில் சீழ் வடியும் புண் வரும். ரொம்ப சக்தி வாய்ந்த நுண்ணுயிர் எதிரிகள் (Antibiotics) சாப்பிடறதும் காரணம்.

ஏதோ சுகமின்மைக்காக வைத்தியரை பார்க்கறோம். வைத்தியர் நுண்ணுயிர் எதிரிகள் எழுதிக் கொடுப்பார். நுண்ணுயிர் எதிரிகள் கொடுக்கின்றபோது, பி-காம்ப்ளக்சு(ஸூ)ம், லேக்டோ பேசிலசு(ஸூ)ம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும்.

இதை சில வைத்தியர் செய்யறதில்லை. வைத்தியர் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி நுண்ணுயிர் எதிரிகள் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் உணர்ந்திருப்பார்கள் காரணம் இதுதான்.

அதிக கோப்பி, தேநீர், துரித உணவு பொருள்கள், சிகரெட், செயற்கையான பழச்சுவைகளைக் கொண்ட பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் குடலில் சீழ் வடியும் புண்ணிற்கு காரணம்!

மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் வலுவானதாக இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும்.

தவறினா, குடலில் சீழ் வடியும் புண் போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் குடலில் சீழ் வடியும் புண் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சி வசப்படறவங்களுக்கு குடலில் சீழ் வடியும் புண் இருக்கும்.

எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட குடலில் சீழ் வடியும் புண்ணின் அறிகுறிகளாக இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தால் உடனே வைத்தியரை பார்க்கவேண்டும். குடலில் சீழ் வடியும் புண்ணை முழுமையா குணப்படுத்திடலாம்.

வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராமல் இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு இரண்டும் முக்கியம். கோபத்தைக் குறைக்கவேண்டும். குடலில் சீழ் வடியும் புண் வந்தவங்களுக்கான உதவிக்குறிப்புகள்... நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வைத்த அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம்.

கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். வலுவான கோப்பி, தேநீர் வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரித்த உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இதெல்லாம் அறவே தவிர்க்கணும்.

மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடித்து, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும். நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் குடலில் சீழ் வடியும் புண் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது.
நன்றிகள்.

Thursday 19 September 2013

தற்காலத் தமிழ் இலக்கண விளக்கம்.....!

அகராதியின் புதிய பதிப்பில் தற்காலத் தமிழ் இலக்கண விளக்கம்

சொல் தேர்வு

இந்த அகராதி தற்காலப் பொது எழுத்துத் தமிழுக்கு உரியது. பொது எழுத்துத் தமிழ் என்ன என்பதுபற்றித் தமிழை எழுதுவோரிடையே ஒரு தெளிவின்மை நிலவுகிறது. இக்காலத் தமிழில், தமிழ் வல்லுநர்களுக்கு மட்டும் அல்லாமல் மக்களுக்காகவும் எழுதப்படுபவற்றில் பயன்படுத்தப்படும் தமிழ் பொது எழுத்துத் தமிழாகும். பண்டிதரின் கட்டுரையும் பாமரரின் பேச்சும் இதன் எல்லைக்கு அப்பாற்பட்டவை.

மொழியைப் பற்றிச் சமூகத்தின் கண்ணோட்டம் எதிர்காலத்தில் மாறும்போது இவையும் இதன் எல்லைக்குள் வரலாம். பேச்சுத் தமிழை எழுத்துப்பெயர்ப்பு செய்து எழுதுவது பொது எழுத்துத் தமிழில் அடங்காது. புனைகதைகளில் பாத்திரங்களின் உரையாடலை அப்படியே எழுதுவதும், அண்மைக் காலக் கதைகளில் பேச்சுத் தமிழில் எழுதப்படும் ஆசிரியர் விவரணையும் (narrative) எழுத்துப்பெயர்ப்பில் அடங்கும்.

பொதுப் பேச்சுத் தமிழ் என்பது எல்லா வட்டாரங்களிலும் எல்லாச் சமூகங்களிலும் உள்ளவர்களுக்குப் பொதுவாக இருப்பது, பொது எழுத்துத் தமிழ் என்பது எல்லா வாசகர்களும் படித்துப் புரிந்துகொள்ளக்கூடியது. இதில் நடை வேறுபாடுகள் உண்டு, உரையாடலின் கருத்தோட்டத்தை ஒட்டிய நடையும் உண்டு, புலமைச் செறிவைக் காட்டும் நடையும் உண்டு.

பேச்சு நடை, புலமை நடை ஆகிய இரு துருவங்களையும் ஒட்டி அமைந்த சிறுபான்மை நடைகள் தவிர்ந்த மற்ற நடைகளில் அமைந்த தமிழையே பொதுத் தமிழ் என்கிறோம். வழக்கில் அருகிவரும் சொற்களும் பெருகிவரும் சொற்களும் தற்காலத் தமிழின் மாறிவரும் போக்கைக் காட்டுவதால் அவையும் இந்த அகராதியில் இடம்பெற்றிருக்கின்றன.

எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் நெருங்கிவரும் போக்கைக் காட்டும் வகையில், எழுத்துத் தமிழில் படிப்படியாக இடம்பெற்றுவரும் பேச்சுத் தமிழுக்கு உரிய சில சொற்களும் இருக்கின்றன. இதுபோலவே வட்டார வழக்குச் சொற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வட்டாரங்களில் வழங்கி, ஊடகங்கள்மூலம் பிற வட்டாரத்தினரும் புரிந்துகொள்ளும் சொற்களும் இந்த அகராதியில் இடம்பெற்றுள்ளன.

பொதுத் தமிழ் வழக்கில் உள்ள ஆங்கிலச் சொற்களைப் பொறுத்தவரை, தமிழில் பொருளிலும் வடிவத்திலும் அல்லது இரண்டிலும் மாறுபடும் சில சொற்கள் மட்டும் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த அகராதியின் முதல் பதிப்பைவிட அதிகமாக இப்பதிப்பில் பொது எழுத்துத் தமிழில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பேச்சுத் தமிழ்ச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணம், இந்தப் பதிப்பில் பயன்படுத்தப் பட்டுள்ள தற்காலத் தமிழ் என்னும் கருத்தாக்கத்தின் விரிவு. நவீனத்துவத்தின் வெளிப்பாட்டுக் கருவி தற்காலத் தமிழ்.

இந்த விரிவு நகர்ப்புற நடுத்தர வகுப்பினர் பயன்படுத்தும் தமிழோடு அமைந்துவிடாமல் கிராமப்புறத்தில் வாழும் மக்களும் நவீனத் தமிழ்ச் சமூகத்தின் அங்கம் என்ற உண்மையை உள்ளடக்கியிருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை முறையில் பயன்படுத்தப்படும் முக்கியமான சொற்கள் குறிப்பிட்ட ஒரு வட்டாரத்துக்கோ ஒரு சமூகத்துக்கோ உரியவையாக இல்லாமல் இருந்தால் அவையும் தேர்வு செய்யப் பட்டிருக்கின்றன.

புனைகதைகளின் சமூகப் பரப்பு விரிந்துவரும் இந்தக் காலகட்டத்தில், இத்தகைய சொற்கள் எழுதப்பட்டு, எழுத்துத் தமிழில் இடம்பெறும் வாய்ப்பு அதிகரித்துவருகிறது. குறிப்பிட்ட ஒரு கருத்து தற்கால வாழ்க்கையின் கூறாக இருந்தாலும், பொதுத் தமிழ் வழக்கில் அதற்குச் சொல் இல்லாமல் கிராம, நகர்ப்புறப் பேச்சு வழக்கில் அதற்கேற்ற சொல் இருக்கலாம்.

அத்தகைய சொற்களும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக உயிர்க்கோழி, உள்காயம், கல் தச்சர், கானா, குழாய் மாத்திரை, சவ்வுத்தாள், தெருக்குத்து, பெரிய எழுத்து, மீன்பாடி வண்டி போன்ற சொற்களைக் குறிப்பிடலாம்.

பொது எழுத்துத் தமிழின் வட்டார, சமூகப் பரப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இலங்கைத் தமிழ்ச் சொற்களும் இந்தப் பதிப்பில் இடம்பெற்றுள்ளன. இச் சொற்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பேசப்படும் தமிழிலும் வழங்கி வருவன. தாயகத் தமிழின் சொல்தேர்வு போலவே, இலங்கைப் பேச்சு வழக்குகளில் மட்டுமே உள்ள சொற்கள் தேர்வு செய்யப்படவில்லை.

தேர்வு செய்துள்ள சொற்கள் இலங்கைப் பொதுத் தமிழ் வழக்கில் இருப்பவை. சில இலங்கையிலும் தமிழகத்திலும் வழங்கினாலும் எழுத்து வடிவத்தில் வேறுபட்டவை, இரண்டு பகுதிகளிலும் ஒரே சொல்லாக இருந்தாலும் அது பொருளில் வேறுபடுவதும் உண்டு. இவையெல்லாம் இலங்கை வழக்குச் சொற்களாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இலங்கை எழுத்துகள் தமிழ்நாட்டில் பரவலாகப் படிக்கப்படும்போது இந்தச் சொற்கள் பொது எழுத்துத் தமிழுக்கு வந்து சேரக்கூடிய வாய்ப்பு உண்டு. இதனால் இவை பின்னிணைப்பாகக் கொடுக்கப்படாமல் அகரவரிசைப்படி அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

தற்காலத் தமிழின் ஒரு முக்கிய அம்சம் கலைச்சொல் உருவாக்கம். அறிவியல் துறைகளிலும், தொழில் துறைகளிலும், அரசுத் துறைகளிலும், பொழுதுபோக்குத் துறைகளிலும் இக்கலைச்சொற்கள் நாளும் உருவாக்கப்படுகின்றன. இக்கலைச்சொற்களில் துறை வல்லுநர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்தும் சொற்கள் இருப்பதால் அவையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

அரசு நிர்வாகம், விளையாட்டு முதலிய துறைகள் பொதுமக்களின் வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடையன. ஆகவே, இத்துறைச் சொற்கள் கணிசமான அளவில் இப்பதிப்பில் இடம்பெற்றிருக்கின்றன. இலக்கணக் கலைச்சொற்கள் மொழியின் ஒரு பகுதியாகும். அதனால் இவையும் இடம்பெற்றுள்ளன. புதிய கலைச்சொற்களில் பல மொழிபெயர்ப்புச் சொற்கள். 

சில துறைகளில், ஒரு பொருளையோ கருத்தையோ குறிக்க ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் வழங்கிவருகின்றன. இவற்றில் பெருவழக்குடையவை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மை வழக்கில் இரண்டு சொற்கள் இருந்தால் அவை இரண்டுமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. பல துறைகளில் மரபுக் கலைச்சொற்களோடு புதிய கலைச்சொற்களும் வழக்கில் இருக்கின்றன.

இரண்டிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட சொற்கள் அகராதியில் இடம்பெற்றிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அலையாத்திக் காடு, ஓதம் முதலான மரபுக் கலைச்சொற்களையும் பயிர் ஊக்கி, மண்புழு உரம், சமூகக் காடு முதலான புதிய கலைச்சொற்களையும் குறிப்பிடலாம்.

பொதுத் தமிழில் ஒரே பொருளைக் குறிப்பதற்குப் பல சொற்கள் வழங்கும்போது பெருவழக்காக இருக்கும் சொல்லின் கீழே விளக்கம் தரப்பட்டிருக்கும்; பிற சொற்களுக்குக் கீழே பெருவழக்குச் சொல் மட்டும் பொருளாகத் தரப்பட்டிருக்கும்.

உவகை, களிப்பு, சந்தோசம், மகிழ்ச்சி முதலியன இதற்கு நல்ல உதாரணங்கள். இவற்றில் மகிழ்ச்சி என்ற சொல் பெருவழக்கில் இருப்பதால், இந்தச் சொல்லின் கீழ் மட்டும் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதே சமயம், இந்தச் சொற்கள் அனைத்துக்கும் ஆங்கிலப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் இருந்தால் பெருவழக்கில் உள்ள வடிவத்தின் கீழ் விளக்கம் தரப்பட்டிருக்கும்; வழக்குக் குறைவான வடிவத்தில் ‘காண்க’ என்னும் குறிப்பின் கீழ் பெருவழக்கு வடிவம் தரப்பட் டிருக்கும்.

வடிவ வேறுபாடு எழுத்து வேறுபாடாக இருக்கலாம்.

(எ-டு) அந்நியன்; அன்னியன்
கட்டடம்; கட்டிடம்
உடைமை; உடமை
நிலைமை; நிலை
அல்லது, உருபு வேறுபாடாக இருக்கலாம்.
(எ-டு) சகிதம்; சகிதமாக
மிக; மிகவும்
வரை2; வரையில்
அல்லது, கூட்டுச்சொற்களில் சொல் வேறுபாடாக இருக்கலாம்.
(எ-டு) கருணைக் கொடை; கருணைத்தொகை
சதைப்பற்று; சதைப்பிடிப்பு
சில வினைச்சொற்கள் காலம் காட்டாதவை. இவற்றுக்குத் தலைச்சொல் தனிப் பதிவாகவும் அது ஏற்கும் மற்ற வடிவங்கள் தனித்தனிப் பதிவுகளாகவும் தரப்பட்டிருக்கும். ஒவ்வொரு பதிவிலும் ‘பார்க்க’ என்ற குறிப்புக்குப் பின் தலைச்சொல் தரப்பட்டிருக்கும்.

(எ-டு) அன்று3 வி.மு. (உ.வ.) பார்க்க: அல்; see அல்.
உள்ள பெ.அ. பார்க்க: உள்1; see உள்1.
சில வினைச்சொற்களுக்கு மாற்று அடிச்சொல் உண்டு. இத்தகைய சொற்களுக்கு மாற்று அடிச்சொற்கள் தரப்படவில்லை. எடுத்துக்காட்டு: ‘ஆகு’ தரப்பட்டிருக்கும்; அதன் மாற்று அடிச்சொல்லான ‘ஆ’ தரப்பட்டிருக்காது.

தனித்து வராத ஐ, மின், மு போன்ற பெயரடைகள் தனிப் பதிவுகளாகவும், இவற்றின் சிறப்புப் பொருளைக் கொண்டிருக்கும் கூட்டுச்சொற்கள் தனித்தனிப் பதிவுகளாகவும் தரப்பட்டிருக்கும்.

(எ-டு) ஐ; ஐம்பொன்
மின்; மின்னணு
மு; முத்தமிழ்; முப்பரிமாணம்
சில பெயர்ச்சொற்களுக்கு முழு வடிவமும் குறு வடிவமும் தனித்தனிச் சொற்களாக இருக்கலாம். இவற்றுக்குப் பொருள் விளக்கம் முழு வடிவத்தில் தரப்பட்டிருக்கும். குறு வடிவத்தில் ‘காண்க’ என்ற குறிப்புடன் முழு வடிவம் தரப்பட்டிருக்கும்.

(எ-டு) கண்டத்தட்டு; தட்டு4
திரைப்படம்; படம்1
மூட்டைப்பூச்சி; மூட்டை2
பிற சொற்களோடு சேர்ந்து தொகையாக்கும் சில பெயர்ச்சொற்களின் வடிவத்துக்குப் பருப்பொருள் அல்லாத ஒரு பொதுப்பொருள் இருக்கும். இவற்றில் சேர்ந்து வரும் சொல்வடிவத்துக்கு மட்டும் பொருள் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. சேர்ந்துவரும் தொகைச்சொற்கள் தனிச் சொல்லாக உருப்பெற்றிருந்தாலன்றித் தனிப் பதிவுகளாகத் தரப்படவில்லை. 

எடுத்துக்காட்டு, வேப்பங்காய்.‘வேப்பம்’ என்பது பதிவு அல்ல. இது போன்ற பிற எடுத்துக்காட்டுகள்: பனம்பழம், இருப்புப்பாதை, குக்கிராமம். ‘அசுரன்’ என்ற பெயர்ச்சொல்லிலிருந்து பெறப்படும் ‘அசுர’ என்ற பெயரடை சில கூட்டுச்சொற்களில் மட்டுமே இணைந்துவந்தாலும் அது தனிப் பதிவாகத் தரப்பட்டிருக்கும்.

ஒரு சொல்லைத் தலைச்சொல்லாக அகராதியில் சேர்க்கச் சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதுபோல, சொற்களைச் சேர்க்காமல் விடவும் சில விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சிறப்புப் பெயர்கள் அகராதியில் இடம்பெறவில்லை. சாதிப் பெயர்கள் இருக்காது, ஆனால் தொழில் செய்வோர் பெயர்கள் இருக்கும்.

(எ-டு) ஆசாரி, கருமான், தச்சர், வண்ணான். பொதுப் பொருளில் வழங்கும் புராணப் பாத்திரங்களின் பெயர்களைத் தவிர (சகுனி, கும்பகர்ணன், துர்வாசர், ரம்பை), தனிநபர்களின் பெயர்கள் இருக்காது. பெரும்பாலோரால் வணங்கப்படும் கடவுளரின் பெயர்களைத் தவிர (சிவன், காளி, முருகன், பிள்ளையார்), மற்ற கடவுளரின் பெயர்கள் இருக்காது. தமிழர் வாழ்க்கையோடு வரலாற்றுத் தொடர்புடைய பெயர்களைத் தவிர (தோடர், குறவர், மலையாளம், ஆங்கிலம்), மற்ற இனப் பெயர்கள், மொழிப் பெயர்கள் இருக்காது.

தமிழர் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வுகளையும் (உப்புச் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம்), தேசிய அடையாளங்களாக உள்ள பொருள்களின் பெயர்களையும் தவிர (அசோகச் சக்கரம், மூவர்ணக் கொடி), மற்ற அடையாளப் பெயர்கள் இருக்காது. இவற்றின் தேர்வுக்குப் புறவயமான அடிப்படைகளைக் காண்பது கடினம். முக்கியத்துவம் கருதிச் சில சொற்கள் சேர்க்கப்பட்டன, சில விடப்பட்டன.

பெரும்பாலான தலைச்சொற்கள் தனித்து நிற்கும் சொற்களே. இவை பெரும்பாலும் ஒரு சொல்லாக இருக்கும். சில இரண்டு சொற்கள் இணைந்த கூட்டுச்சொல்லாக இருக்கும். இவை இரண்டுக்கும் புறம்பாக, ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட சில தொடர்களும் மரபுத்தொடர்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

(எ-டு) அக்குவேறு ஆணிவேறாக
அப்படி இப்படி-என்று
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று
கழுத்தில் துண்டு போட்டு
குற்றுயிரும் குலையுயிருமாக
கூட்டுச்சொற்களும் தொடர்களும் குறிப்பிடும் பொருள், அவற்றில் உள்ள தனிச்தனிச் சொற்களின் மொத்தப் பொருள் அல்ல. இடுகுறித் தன்மையால் கொண்ட புதிய பொருள் காரணமாக இவை அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

கூட்டுச்சொற்கள் அல்லாத தனிச்சொற்களில் ‘கூட’ போன்ற சொல்லுருபுகளும், ‘நோக்கி’, ‘கணக்காக’ போன்று மூலச்சொல்லிலிருந்து பொருள் வேறுபட்ட வினையடைகளும் ‘-உம்’, ‘-ஏ’ போன்று ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சேரக்கூடிய இடைச்சொற்களும் அடங்கும், ‘-காரன்’, ‘-தனம்’ போன்று பிற சொற்களோடு சேர்ந்து புதிய சொற்களை உருவாக்கும் விகுதிகளும் அடங்கும்.

இந்த விகுதிகள் சேர்ந்த எல்லாப் பெயர்களையும், பெயர்களோடு வினைப்படுத்தும் வினை சேர்ந்து உருவாகும் அனைத்துக் கூட்டுவினைகளையும் தனித்தனிப் பதிவுகளாக அகராதியில் கொடுத்திருந்தால் சொற்களின் எண்ணிக்கை அகராதியில் பல மடங்காகக் கூடியிருக்கும்.

வழக்கு நிலை

அகராதியில் உள்ள சொற்கள் பயன்பாட்டில் ஒரே வழக்குநிலை கொண்டவை அல்ல. சில சொற்கள் வழக்கில் அருகிவருவன (எ-டு) ஆக்ஞை, உத்தரீயம், கேந்திரம்; சில பெருகிவரும் சொற்கள் (எ-டு) அடுமனை, அமர்வு, கட்டளைநிரல், கடல் உணவு, கருத்தியல், காலகட்டம், பயனாளி, பயிலரங்கம், மண்வாரி. அருகிவரும் சொற்கள் சில பத்தாண்டுகளுக்கு முந்தைய தமிழில் வழங்கி, இக்கால வழக்கில் குறைந்து வருவன.

பெருகிவரும் சொற்கள் புதிதாகப் படைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் சொற்கள். சில சொற்கள் சுட்டும் பொருள் (object) வழக்கில் இல்லாமல் போனாலும், அந்தப் பொருளைக் குறிக்கும் சொல் தற்காலத் தமிழ் வழக்கில் இருந்தால், அது தரப்பட்டிருக்கும் (எ-டு) தம்பிடி, காதம், சல்லி. துறை சார்ந்த கலைச்சொற்களும் இந்த அகராதியில் இடம்பெறும்போது [(எ-டு) அதிர்வெண், கணம்3, கமகம், சேர்மம், நிறப்பிரிகை, சவ்வூடு பரவல்] இவை வழங்கும் துறைகளின் பெயரும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருக்கின்றன. இவை ஒரு துறையைச் சார்ந்த சொற்களாக இருந்தாலும், துறை சார்ந்தவர்களே அல்லாமல் பொதுமக்களுக்கும் பரவலாக இவை தெரிந்திருப்பதால் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இலக்கண விளக்கம்

தற்காலப் பொது எழுத்துத் தமிழின் இலக்கணம் இன்னும் முறையாக விவரிக்கப்படவில்லை. மொழியியல் ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் மொழியைக் கற்பிப்பதற்காக எழுதப்பட்ட இலக்கணக் குறிப்புகளும் விளக்கங்களும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக எழுதப்பட்டவை. இவை தற்காலத் தமிழ் இலக்கணச் சிக்கல்களிலும் மாற்றங்களிலும் அதிகக் கவனம் செலுத்தவில்லை.

விரிவான தரவுகளின் அடிப்படையில் இவை எழுதப்படவும் இல்லை. எனவே, அகராதியைத் தொகுப்பவர்களே தற்காலத் தமிழின் இலக்கணம் தொடர்பான வினாக்களுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது. தமிழுக்கு மரபிலக்கணமும் இருக்கிறது; மொழியியல் பார்வையில், பெரும்பாலும் ஆங்கிலத்தில், எழுதப்பட்ட விவரணை இலக்கணமும் இருக்கிறது. இரண்டும் பயன்படுத்தும் வெவ்வேறான இலக்கணக் கலைச்சொற்களும் இருக்கின்றன.

இவற்றில் எந்த ஆராய்ச்சி முடிவுகளை ஏற்றுக்கொள்ளலாம், எந்தக் கலைச்சொற்களைக் கையாளலாம் என்பதெல்லாம் பிரச்சினைக்கு உரியவை. இரண்டுமே தற்காலத் தமிழ் இலக்கணத்தை முழுமையாக, முரண்பாடில்லாமல் விளக்கப் போதுமானவையாக இல்லை. இந்த அகராதியில், சொற்களுக்குப் பொருத்தமான இலக்கண விளக்கம் இரண்டு இலக்கண நெறிகளிலிருந்தும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அகராதியின் ஒரு முக்கியமான அம்சம் தலைச்சொற்களின் இலக்கண வகையைக் குறிப்பது. தலைச்சொல்லின் இலக்கண வகையை வரையறுக்க, சொல்லின் வடிவக் கூறுகளும் பயன்பாட்டுக் கூறுகளும் இந்த அகராதியில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஐந்து அடிப்படைச் சொல்வகைகள் வருமாறு: பெயர், வினை, பெயரடை, வினையடை, இடைச்சொல். பெயர்களில் பிரதிப்பெயர் என்ற துணை வகையும் வினைகளில் துணை வினை என்ற துணை வகையும் தரப்பட்டிருக்கின்றன.

பெயர்

மரபிலக்கணத்திலும் மொழியியலிலும் வழங்கும் ஒரு கலைச்சொல் பெயர்ச்சொல் ஆகும். வடிவ அடிப்படையில் வேற்றுமை உருபு ஏற்பது பெயர்ச்சொல். சில பெயர்கள் குறிப்பிட்ட சில வேற்றுமை உருபுகளை மட்டும் [(எ-டு) இடம்3 ‘இடது புறம்’ என்ற பொருளில்] ஏற்கும். சில பெயர்கள் மற்றொரு பெயருக்கு அடையாக வரும்போது -ஆன என்ற உருபையும் (அழகான, பிரமாதமான, கச்சிதமான) வினைக்கு அடையாக வரும்போது -ஆக என்ற உருபையும் (சுருக்கமாக, விரிவாக, வேகமாக) ஏற்கும்.

ஆனால் எல்லாப் பெயர்களும் -ஆக, -ஆன என்னும் இரண்டு உருபுகளையும் ஏற்பதில்லை. சில -ஆன மட்டும் ஏற்கலாம் (எ-டு) அபாயம், நடுத்தரம்; சில -ஆக மட்டும் ஏற்கலாம் (எ-டு) பக்கபலம், பயன், சான்று, சின்னாபின்னம். சொல்லின் வகையைத் தொடர்ந்து அடைப்புக்குறிக்குள் இத்தகவல் தரப்பட்டிருக்கிறது. பல பொருள் கொண்ட பெயர்களில் சில, ஒரு பொருளில் மட்டும் -ஆக, -ஆன இரண்டையும் ஏற்கலாம் (எ-டு) கட்டுப்பாடு (1), கதம்பம் (2), பக்குவம் (1, 3), பட்டை1(1). மற்ற பொருளில் ‘-ஆன’ மட்டுமோ ‘-ஆக’ மட்டுமோ ஏற்கலாம்.

அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள -ஆக, -ஆன என்பன பெயரிலிருந்து பிறக்கும் வினையடையையும் பெயரடையையும் இனம்காண உதவும். இருப்பினும், இந்த வடிவங்கள் பெயருடன் வருவதைப் பார்த்து மட்டும் அதன் பெயரடை வடிவத்தையோ வினையடை வடிவத்தையோ பெற முடியாது. 

‘இரு’ போன்ற வினையோடு வந்து இயல்பை விளக்கும் பொருளிலும், சிறப்புப் பெயருக்கு முன் இரண்டு பெயர்களின் சமன்பாட்டை விளக்கும் பொருளிலும் -ஆக, -ஆன எல்லாப் பெயரோடும் வரும். ‘ஆசிரியராக இருக்கிறார்’, ‘ஆசிரியராக நடிக்கிறார்’ என்பனவற்றில் ‘ஆசிரியராக’ வினையடை அல்ல. இந்த மாதிரியான அமைப்பில் பெரும்பாலான பெயர்கள் வரும்.

அதனால், இவற்றில் ‘ஆக’ என்பதை வினையடையை இனம்காட்டும் உருபாகக் கொள்ள முடியாது. இதே போல, ‘ஆசிரியரான நான்’ என்பதில் ‘ஆசிரியரான’ பெயரடை அல்ல. இந்தப் பொருள்களில் வினையடை போலவும் பெயரடை போலவும் வரும் பெயர்களை -ஆக, -ஆன இனம்காட்டும் என்று கொள்ள முடியாது. பெயரல்லாத சொற்களும் -ஆன வடிவத்தோடு சேர்ந்து வரலாம். எடுத்துக்காட்டு: மீதான, போதுமான.

சில பெயர்கள் எப்போதும் அல்லது பெரும்பாலும் -ஆக, -ஆன என்ற வடிவத்தோடு மட்டும் வினையடையாகவோ பெயரடையாகவோ வரும். அத்தகைய பெயர்கள் இந்த வடிவங்களோடு தனிப் பதிவுகளாகத் தரப்பட்டிருக்கின்றன. (எ-டு) குண்டுக்கட்டாக; கைத்தாங்கலாக; செம்மையாக; தங்கமான.

பெயர்களில் உட்பிரிவுகள் (sub-categories) உண்டு. இலக்கணத்தின் நோக்கத்தைப் பொறுத்து உட்பிரிவுகளின் எண்ணிக்கை வேறுபடும். இந்த அகராதியைப் பொறுத்தவரை, ஒரே ஒரு உட்பிரிவுதான் தரப்பட்டிருக்கிறது. அது பிரதிப்பெயர். பெயரைப் போல் தனித்து நின்று, அது சுட்டும் நிலைத்த பொருள் அல்லாமல், இன்னொரு பெயரோடு இயைபுபடுத்தி (anaphoric) வரும், அல்லது பேசப்படும் பொருள் இருக்கும் இடத்தோடு இயைபுபடுத்தி (demonstrative) வரும், அல்லது பேச்சில் சம்பந்தப்பட்டவர்களோடு இயைபுபடுத்தி (personal) வரும், அல்லது சுட்டும் பொருளை அறிவதற்காகக் கேள்வியாகக் கேட்டு (interrogative) வரும்.

மரபிலக்கணம் கூறும் சுட்டுப்பெயர், மூவிடப்பெயர், வினாப்பெயர் ஆகிய மூன்றும் பிரதிப்பெயரில் அடங்கும். இவற்றில் வேற்றுமை உருபு ஏற்கும் வடிவங்களும் [(எ-டு) என், உங்கள்] அடங்கும். சுட்டு, வினாப் பெயரடைகளைக் கொண்ட எல்லாப் பெயர்களும் பிரதிப்பெயர் ஆவதில்லை. ஏனென்றால், இவற்றில் சில பேசுபவரின் கருத்தில் உள்ள ஒன்றைக் குறிப்பவை; (எ-டு) அன்னது, அன்னார், இத்தனை (பேர்), இவ்வளவு (விலை).

பொதுப் பெயர்கள் எல்லாம் மற்றொரு பெயருக்கு அடையாக வரலாம் என்றாலும் [(எ-டு) சத்துணவு, பணிக்கொடை, பனிப்பொழிவு, இயற்கை உரம்] சில பெயர் வடிவங்கள் பெரும்பாலும் பெயரடையாகவோ [(எ-டு) ஆட்கொல்லி; இடது; களர்] அல்லது பெயரடையாக மட்டுமோ [(எ-டு) கீழை, மீன்பிடி, முழுமுதல்] வரும். சில பெயர்களுக்கு அவையே பெயரடையாக வருவதல்லாமல், தனிப் பெயரடை வடிவங்களும் உண்டு [(எ-டு) மின்னணு, மின்; வேளாண்மை, வேளாண்; மூன்று பரிமாணம், முப்பரிமாணம்].

இரட்டைப்பெயர்களில் உள்ள இரண்டு பெயர்களும் பொதுவாகத் தனித்தும் நிற்கும். சிலவற்றில் முதல் பெயர் தனித்து வராததுபோல் [(எ-டு) அக்கம்பக்கம்] இரண்டாவது பெயரும் தனித்து வராமல் இருக்கலாம். ‘நெளிவுசுளிவு’ என்னும் கூட்டுச்சொல்லில் வரும் ‘சுளிவு’ என்ற இரண்டாவது பெயர் தற்காலத் தமிழில் தனிப்பெயராக வழங்குவதில்லை. இரட்டைப்பெயர்களில் தனித்து வராத பெயர்கள் தலைச்சொற்களாகத் தரப்படவில்லை.

வினை

வினைகள் கால இடைநிலை ஏற்பவை. கால இடைநிலைகளுக்கு மாற்று வடிவங்கள் உண்டு. வினைகள் வெவ்வேறு மாற்று வடிவங்களை ஏற்கும். வினைகள் ஏற்கும் மாற்று வடிவத்தை அறிந்துகொள்ள அவற்றின் ‘செய’ என்ற எச்ச வடிவமும் ‘செய்து’ என்ற எச்ச வடிவமும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன. சில வினைகள் இரண்டு எச்ச வடிவங்களையுமே ஏற்காமல் போகலாம். அப்போது வேறு எச்ச வடிவங்கள் தரப்பட்டிருக்கின்றன.

(எ-டு) மாட்டு2 வி. (மாட்டேன், மாட்டாய், மாட்டான், மாட்டாது, மாட்டாமல் போன்ற வடிவங்களில் மட்டும்)
பத்து1 வி. (பத்த, பத்தும், பத்தாது, பத்தாமல், பத்தாத ஆகிய வடிவங்களில் மட்டும்)
போது1 வி. (போத, போதும், போதாது, போதிய, போதாத, போதாமல் முதலிய வடிவங்களில்)
சில வினைகள் இறந்தகாலம் போன்று ஒரு கால இடைநிலை மட்டுமே ஏற்கலாம் (எ-டு) பய1, மோ. இந்தத் தகவலும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது. ஒன்றிரண்டு வினைகள் ஒன்றுக்கு மேற்பட்ட கால இடைநிலையை ஏற்கலாம் (எ-டு) விடு1 (விட, விட்டு), விடு3 (விடுக்க, விடுத்து). சில வினைகள், எதிர்மறைப் பொருள் போன்ற சில குறிப்பிட்ட பொருளைத் தரும் வாக்கியங்களில் மட்டும் வரலாம். இந்தத் தகவல் சொல்லின் பொருளை விளக்கும் பகுதியில் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருக்கிறது (எ-டு) இட்டு நிரப்பு, ஊர்வாயை மூடு, பிடிகொடு, வாயில் நுழை.

மரபிலக்கணத்தில் சொல்லப்படும் தன்வினை, பிறவினை என்ற வினைப் பாகுபாடு இந்த அகராதியில் தரப்படவில்லை. இந்தப் பாகுபாடு அதன் வடிவத்தையோ [(எ-டு) அடங்கு, அடக்கு, மிரள், மிரட்டு] வினை எடுக்கும் கால இடைநிலையையோ [(எ-டு) மறைந்து, மறைத்து] சார்ந்தது. ஒரு வினையின் வகையை அதன் வடிவத்தையோ பொருளையோ வைத்துத் தெரிந்துகொள்ளலாம். ஆங்கில அகராதிகளில் செயப்படுபொருள் குன்றிய வினை, குன்றா வினை என்று பாகுபடுத்தித் தந்திருப்பதை இந்த அகராதி பின்பற்றவில்லை.

ஏனென்றால், தமிழில் செயப்படுபொருள் குன்றாவினை அமைந்துள்ள ஒரு வாக்கியத்தைச் செயப்படுபொருள் இல்லாமல் எழுதினால் அது பிழை வாக்கியம் ஆகாது (நான் அவனிடம் சொல்கிறேன்./ நான் பார்க்கிறேன்.). ஒரே வினை, செயப்படுபொருள் குன்றியவினை, செயப்படுபொருள் குன்றாவினை என்னும் இரண்டு நிலைகளிலும் வரும் (இவருடைய நூலை இங்கே விற்கிறார்கள்; இவருடைய நூல் நன்றாக விற்கிறது./ என் சட்டையைப் பிடித்தான்; என் சட்டை பிடிக்கிறது.). மேலும், குன்றாவினையின் பொருள் விளக்கம் ஒரு வினை செயப்படுபொருளை ஏற்பது என்பதைக் காட்டும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. (எ-டு) பார்1 வி. (பார்க்க, பார்த்து) அ. (கண்களால்...) 1: (உருவம் உடையவற்றை) கண்கள்மூலம் அறிதல் அல்லது உணர்தல்; காணுதல்;...

வினைகளின் பதிவு அவற்றின் அடிப்படை வடிவத்தில், அதாவது, ஏவல் வடிவத்தில், தரப்பட்டிருக்கும். சில வினைகள் அடிப்படை வடிவத்தில் தனித்து வருவதில்லை; ஒரு துணை வினையோடு சேர்ந்தே வரும். அவை துணை வினையோடு சேர்த்தே தரப்பட்டிருக்கின்றன (எ-டு) காத்திரு. சில வினைகள், துணை வினையோடு சேர்ந்து புதுச் சொல்போலத் தனிப்பொருளில் வரும். அவையும் துணை வினையோடு சேர்த்தே தரப்பட்டிருக்கின்றன (எ-டு) தட்டிக்கொடு, பார்த்துக்கொள், விட்டுக்கொடு.

வினைகளின் உட்பிரிவுகளில் துணை வினை மட்டுமே இந்த அகராதியில் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. துணை வினை என்பது வினை போலவே கால இடைநிலை ஏற்கும்; பால், இட விகுதிகளை ஏற்கும். துணை வினைகள் வினையின் எச்ச வடிவங்களோடு அல்லது பெயர்களோடு சேர்ந்தே வரும். அவை பெயரை வினையாக்குவது, செயல் முற்றுப்பெற்றதைக் காட்டுவது 

போன்ற இலக்கணப் பொருள்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வினை இலக்கணப் பொருளில் துணை வினையாக வருகிறதா அல்லது முதன்மை வினையாக வருகிறதா என்று எல்லா வாக்கியங்களிலும் ஐயமின்றிச் சொல்ல முடியாது. ‘கண்ணீர்விடு’, ‘விற்றுக்கொடு’, ‘சாப்பிட்டுப்பார்’ என்பனவற்றில் இரண்டாவது வரும் வினை துணை வினை. ‘தண்ணீர் எடு’, ‘வாங்கிக் கொடு’ போன்ற எடுத்துக்காட்டுகளில் இரண்டாவதாக வரும் வினை முதன்மை வினை.

சார்புப் பொருளைக் குறிப்பதன் அடிப்படையிலும் தொடரின் நெகிழ்வுத் தன்மையின் அடிப்படையிலும் துணை வினைகள் இனம்காணப்பட்டுள்ளன. இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சொல்ல முடியாது. முதன்மை வினைபோல் துணை வினையிலும் பலபொருள் ஒருசொல்லும் ஒருபொருள் பலசொல்லும் உண்டு. வினைகளின் பதிவைப் போலவே இவற்றின் பதிவும் அமைந்திருக்கும்.

பெயரோடு இணைந்து வரும் சில துணை வினைகள் பெயரிலிருந்து பிரித்துப் பொருள் தர முடியாதபடி ஒரே வினைவடிவமாக இருக்கும். இவை கூட்டு வினைகளாக அகராதியில் இடம்பெறுகின்றன (எ-டு) காயடி.

துணை வினைகளுக்கு இலக்கணப் பொருள் இருப்பதாலும் அவை சேரும் வினைகளின், பெயர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதாலும் துணை வினைகள் சேர்ந்த வினைகள் தனிப்பதிவுகளாகத் தரப்படவில்லை. கூட்டுச் சொல்லாகிப் பொருள் வேறுபாடு கொண்டவை மட்டும் தனிப் பதிவுகளாகத் தரப்பட்டுள்ளன (எ-டு) தட்டிக்கொடு. ‘படு’, ‘படுத்து’ என்பன பெயரை வினையாக்கும் ஒரு துணை வினையின் இணை. இவை இரண்டுமே எல்லா பெயர்ச்சொற்களோடும் சேர்ந்து வராது.

சில பெயர்களோடு ‘படு’ சேரும், ‘படுத்து’ சேராது (எ-டு) ஆசைப்படு. சில பெயர்களோடு ‘படுத்து’ சேரும், ‘படு’ சேராது (எ-டு) அகலப்படுத்து. சில பெயர்ச்சொற்கள் மட்டுமே இரண்டையும் ஏற்கும். அவை பதிவுகளாகத் தரப்பட்டிருக்கும் (எ-டு) கஷ்டப்படு, கஷ்டப்படுத்து; சந்தோஷப்படு, சந்தோஷப்படுத்து. இவற்றைத் தவிர ‘படு’, ‘படுத்து’ என்ற துணைகளோடு சேர்ந்த கூட்டுவினைகள் தனிப் பொருள் பெற்றிருந்தால் அவையும் தனிப் பதிவுகளாக இருக்கும் (எ-டு) ஆட்படு, கட்டுப்படு, கட்டுப்படுத்து, வெளிப்படு, வெளிப்படுத்து.

பெயரடை

பெயரடை என்பது பெயரெச்சம் என்ற மரபிலக்கணச் சொல்லிலிருந்து வேறுபட்டது. கால இடைநிலை இல்லாமலோ கால இடைநிலை காலத்தைக் காட்டாமலோ பெயரடை வரும். பல பெயரடைகள் அ, -ஆன போன்ற உருபுகள் ஏற்று நின்றும் [(எ--டு) ஆழ்ந்த, இத்தகைய, இப்படியான], உருபு எதுவும் இல்லாமலும் வரலாம்: -அம் என்ற ஈற்றில் முடியும் பெயர்களைப் போல -இயம் என்ற உருபில் முடியும் பெயர்கள் மகரம் கெட்டு [(எ-டு) கரிம, தேசிய] பெயரடையாக வரும்.

அன் என்ற விகுதியில் முடியும் பெயர்களும் னகரம் கெட்டு [(எ-டு) அசுர, ராட்சச] பெயரடையாக வரும். -ஆ என்னும் ஈற்றில் முடியும் பெயர்களின் உயிரெழுத்து அ- என்று குறுகி [(எ-டு) அமெரிக்க] பெயரடை ஆகும். இவைபோலப் பெயர் வடிவங்களிலிருந்து எளிதில் அனுமானிக்கக்கூடிய மாற்றங்களோடு அமையும் பெயரடைகள் இந்த அகராதியில் தனிப் பதிவு பெறவில்லை.

பெயரடைகள் பொதுவாகத் தனித்து நிற்கும். சில [(எ-டு) மின், வேளாண்] சார்ந்து நிற்பதும் உண்டு. வினையின் அடிச்சொற்கள் பெயரடையாக வருவது தற்காலத் தமிழில் கூட்டுச்சொற்களிலும் [(எ-டு) வளர்பிறை, மூடுபனி] கலைச்சொற்களிலும் [(எ-டு) கரைபொருள், ஊடுகதிர், வினைவிளைபொருள், வினைபடுபொருள்] காணப்படுகிறது. இவை தனித்து நின்று பெயரடையாகும் வழக்கு தற்காலத் தமிழில் இல்லை. அதனால் வினையடிகள் எதுவும் பெயரடையாக இந்த அகராதியில் பதிவு பெறவில்லை.

பெயர்கள் பெயரடையாக வரும் வழக்கு தற்காலத் தமிழிலும் தொடர்கிறது. இது பொது விதியாதலால் இவ்வாறு வரும் பெயர்களுக்குத் தனியே பெயரடை என்ற இலக்கணக் குறியீடு தரப்படவில்லை. காலம் காட்டாத குறிப்புப் பெயரெச்சங்கள் தற்காலத்தில் பெயர்களோடு சேர்ந்து அவற்றைப் பெயரடைகளாக ஆக்குகின்றன (எ-டு) அன்புள்ள.

இந்தக் கூட்டுச்சொற்கள் பெயரடை என்ற குறியீடு பெறுகின்றன. குறிப்புப் பெயரெச்சங்கள் வேற்றுமை உருபு ஏற்ற பெயரோடு ‘அன்புக்குரிய’ என்பதுபோல நிற்கும்போது, அந்த குறிப்புப் பெயரெச்சங்கள் மட்டும் பெயரடை என்ற இலக்கணக் குறியீடு பெறுகின்றன. இங்கு ‘உரிய’ என்பது பெயரடை. ஆகவே, ‘அன்புக்குரிய’ என்பது பதிவாக இருக்காது.

கால இடைநிலை ஏற்ற -ஆன, -ஆகும் என்ற வடிவங்கள், ஆகு என்ற வினைச்சொல் பதிவிலிருந்து பெறப்படும். தெரிநிலைப் பெயரெச்சமான -ஆன என்ற வடிவம் ‘எனக்கான செலவு’ என்று வரும்போது பெயரெச்சமாகவே கொள்ளப்படும். பண்புப் பெயர்களோடு சேர்ந்து பெயரடையாக்கும் -ஆன என்ற உருபு, தற்காலத்தில் இரண்டு பெயர்களை அல்லது உருபு ஏற்ற பெயர்களை இணைத்து ஒரே பெயர்த்தொடராகப் பயன்படுத்தும் வழக்கு பெருகி வருகிறது (எ-டு) கல்லும் முள்ளுமான பாதை, நல்லதும் கெட்டதுமான கதைகள், உன்னோடும் உன் மனைவியோடுமான சண்டையில்.

பெயரடையில் சுட்டுப் பெயரடை, எண்ணுப் பெயரடை, பண்புப் பெயரடை போன்ற உட்பிரிவுகள் தரப்படவில்லை.

வினையடை

சில வினையடைகளுக்கு (பெயரடைகளுக்கும்கூட) அடிப்படையாக இருக்கும் இரட்டித்து வரும் பெயர் தனித்து நிற்பதில்லை (எ-டு) முத்துமுத்தாக, முத்து முத்தான.

சில வினையடைகள் இடத்தைக் குறிக்கும் பெயர்களோடு -ஏ சேர்ந்து ‘மேலே, கிழக்கே’ என்று வரும். சில வினையடைகள் நடுவில், சுற்றிலும் என்று இட வேற்றுமை உருபோடு சேர்ந்து வரும். எந்த உருபும் இல்லாமலும் சில வினையடைகள் வரும் (எ-டு) கொஞ்சம்2, பெரும்பாலும், சீக்கிரம்/-ஆக, நேற்று2. சில வினையடைகள் கால இடைநிலை ஏற்ற எச்ச வடிவில் இருக்கும் (எ-டு) பார்த்து1, மூக்குமுட்ட.

ஒரு வாக்கியத்தில் ‘சற்று’ , ‘படு’ , ‘மிகவும்’ போன்ற சொற்கள், வினையடை அல்லது பெயரடைக்கு முன்பு வந்து, வினையடை அல்லது பெயரடை குறிக்கும் தன்மையை மிகுவிக்கின்றன. தனித்த பொருள் எதுவும் இல்லாமல், மிகுவிக்க மட்டுமே ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தப்படுவதால், இந்த வகைச் சொற்கள் அகராதியில் இடைச்சொற்களாகத் தரப்பட்டுள்ளன.

வினையடை வினையோடு சேர்ந்து ஒரு சொல்லாக வழங்குவது உண்டு. அவை கூட்டுவினையாகக் கொள்ளப்பட்டு பிரிக்கப்படாத பதிவுகளாக இந்த அகராதியில் தரப்பட்டிருக்கின்றன (எ-டு) மேற்கொள், உட்செலுத்து, உட்கொள், கீழ்ப்படு.

ஒரே சொல் எந்த வடிவ வேறுபாடும் இல்லாமல் பெயரடையாகவும் வினையடையாகவும் வரலாம். அதனுடைய செயல்பாட்டை வைத்தே பெயரடை என்றோ வினையடை என்றோ கணிக்கலாம் (எ-டு) நிறைய2(பேர்), நிறைய1 (ஊற்று). இந்த மாதிரிச் சொற்கள் தனித்தனிப் பதிவுகளாகத் தரப்பட்டிருக்கின்றன.

ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட சொல் வகையில் சேர்வது தமிழில் பரவலாகக் காணப்படும் ஒரு கூறு. ‘மேல்’ என்ற சொல் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்தச் சொல் இந்த அகராதியில் பெயராகவும், பெயரடையாகவும் (பெரும்பாலும் பெயரடையாக வரும் பெயர்), (-ஏ சேர்ந்து) வினையடையாகவும் இடைச்சொல்லாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதே மாதிரியான பல இலக்கணச் செயல்பாடுகளைக் கொண்ட சொற்கள் (multifunctional word) இந்த அகராதியில் தரப்பட்டுள்ளன.

ஒரு வடிவம் தனியாக நின்று வினையடையாகவும் ஒரு வினையெச்சம் வேற்றுமை உருபு ஏற்ற பெயரோடு சேர்ந்து இடைச்சொல்லாகவும் வருவதுண்டு. வினையடையையும் இடைச்சொல்லையும் இனங்காண தொடரமைப்பு மட்டுமல்ல, பொருளும் உதவும். வினையடியிலிருந்து பிறக்கும் இடைச்சொல் அதன் வினைப் பொருளை இழந்து நிற்கும். ‘என்னை நோக்கி இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும்’ என்ற வாக்கியத்தில் உள்ள ‘நோக்கி’ என்னும் வினையெச்சத்தில் வினையின் பொருள் இல்லை; அதனால் அது இடைச்சொல். ‘என்னை மீறி’ என்பதில் உள்ள வினையெச்சத்தில் ‘மீறு’ என்ற வினையின் பொருள் இருக்கிறது; அதனால் அது வினையடை.

இடைச்சொல்

பெயர், வினை, பெயரடை, வினையடை என்ற நான்கு சொல் வகைகளுக்குப் பிறகு முழுச் சொல்லாகக் கருத முடியாத, மற்றொரு சொல்லோடு சார்ந்தே பொருள்படுகிற சொற்கள் உண்டு. அவை இந்த அகராதியில் இடைச்சொல் என்று பெயரிடப்பட்டிருக்கின்றன. இங்கே இடைச்சொல் என்பதன் பொருள் மரபிலக்கணத்தில் உள்ள இடைச்சொல் என்பதன் பொருளிலிருந்து வேறுபட்டது. எனவே, இந்த அகராதியில் இடைச்சொல்லுக்குப் புதிய வரையறையும் விளக்கமும் தரப்பட்டிருக்கின்றன.

இடைச்சொல் என்பது ஒரு தொடரின் அல்லது சொல்லின் அமைப்பில் தன்னளவில் பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரடை, வினையடை ஆகிய அடிப்படைச் சொல் வகைகளாக இல்லாமல் வேறு சொல்லையோ தொடரையோ சார்ந்து, இலக்கண அடிப்படையில் மட்டுமே பொருள் தரும் சொல். இலக்கணச் செயல்பாட்டின் அடிப்படையில், இடைச்சொற்களை ஐந்து பிரிவுகளாகப் பாகுபடுத்தலாம். அவையாவன:

தொடராக்கும் இடைச்சொல்
வாக்கியத்தின் ஒரு பகுதி இலக்கண அமைதியோடு பொருள்படுவதற் காக அந்தப் பகுதியுடன் இணைக்கப்படும் சொல்.
மேல்5 (பேனா மேசையின் மேல் இருக்கிறது.)
அளவில் (அவன் பத்து மணி அளவில் வந்தான்.)
சொல்லாக்க இடைச்சொல்
ஒரு பெயர்ச்சொல்லோடு சேர்ந்து மற்றொரு சொல்லை உருவாக்கும் சொல்.
-அகம்2 (தையலகம்)
-ஆக1 (அழகாக)
-ஆர்ந்த (அன்பார்ந்த)
கூடுதல் பொருள் தரும் இடைச்சொல்
வலியுறுத்துதல், ஒப்பிடுதல், பிறர்மூலம் கிடைத்த தகவல் போன்ற கூடுதல் பொருளை உணர்த்த ஒரு சொல்லோடு சேர்ந்து வரும் சொல்.
-தான்3 (நான்தான் அவனுக்குப் பணம் கொடுத்தேன்.)
போல (அவன் புலிபோலப் பாய்ந்தான்.)
-ஆம்2 (அவன் நேற்று வீட்டுக்கு வந்தானாம்.)
இயைபு இடைச்சொல்
எதிர்மறை, காரணம், நிபந்தனை, சுட்டு போன்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்த அல்லது இணைக்கப் பயன்படுத்தும் சொல்.
ஆனால் (அவர் நேற்று வந்தார். ஆனால் என்னைப் பார்க்கவில்லை.)
ஆதலால் (அவர் வரவில்லை. ஆதலால் கூட்டம் நடக்கவில்லை.)
ஆனால் (நீ வந்தாயானால் பணம் தருவேன்.)
அதற்குள்(ளே) (இப்போதுதான் வந்தாய்; அதற்குள் புறப்படுகிறாயே.)
உணர்ச்சி இடைச்சொல்
வியப்பு போன்ற உணர்ச்சிகளைக் குறிக்கவோ ஒருவரை விளிக்கவோ ஒருவரை அல்லது ஒன்றைச் சுட்டவோ வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தப்படும் சொல்.
ஆகா (ஆகா! என்ன அற்புதமான பாட்டு.)
இதோ (இதோ இருக்கிறது பணம்.)
இந்தா (‘இந்தா இங்கே வா’ என்று பையனைக் கூப்பிட்டார்.)
இடைச்சொல்லின் இந்த உட்பிரிவுகள் அவற்றின் புதுமை கருதி இந்த அகராதியில் தனித்துக் காட்டப்படவில்லை.

மற்ற சொற்களுக்கு இருப்பது போலவே, இடைச்சொற்களுக்கும் பல பொருள் இருக்கலாம்; ஒரே பொருளை உணர்த்தும் பல இடைச்சொற்கள் இருக்கலாம். ஒரு இடைச்சொல்லுக்குப் பல பொருள் இருந்தாலும், அவை ஒரே தலைச்சொல்லின் கீழ்த் தரப்பட்டிருக்கும். ஏனென்றால், இடைச்சொல் என்பது இலக்கணப் பொருளை அல்லது ஒரு வாக்கியத்தில் இலக்கணச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், எப்போதும் தனித்து வரும் இடைச்சொல்லும், வேறொரு சொல்லுடன் இணைந்தே வரும் இடைச்சொல்லும் தனித்தனிப் பதிவுகளாகத் தரப்பட்டிருக்கும்.

(எ-டு) தனித்து வருபவை சேர்ந்து வருபவை
ஆ2 -ஆ1
ஆம்3 -ஆம்2
-ஓ2 --ஓ1
தலைச்சொற்கள் பெரும்பாலும் தனித்து நிற்பவை. இடைச்சொற்களைப் பொறுத்தவரை தனித்து நிற்காத வடிவங்களும் பதிவுகளாகத் தரப்பட்டிருக்கின்றன.

பொருள் விளக்கம்

தற்காலத் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள் விளக்கம் செய்திருக்கும் முதல் அகராதி இதுவே. இது அரும்பதங்களுக்கு மட்டும் பொருள் தரும் அகராதி அல்ல. தற்காலத் தமிழில் உள்ள எல்லாச் சொற்களுக்கும் பொருள் விளக்கத்தை இந்த அகராதியில் காணலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு, தெரிந்த சொல்லுக்குப் பொருள் விளக்கம் தரத் தேவையில்லையே என்ற எண்ணம் எழலாம்.

ஆனால், விரைவான மாற்றங்களுக்கு உள்ளாகிவருகிற தமிழில் இருக்கும் எல்லாச் சொற்களும் எல்லோருக்கும் தெரிந்திருக்காது, ஒரு சொல்லின் எல்லாப் பொருளுமே எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றும் சொல்ல முடியாது. பொருள் அறிந்துகொள்ள மட்டுமின்றித் தெரிந்த பொருளை எழுத்தில் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த அகராதி உதவும். தற்காலத் தமிழில் சொற்களின் பொருள் அமைந்துள்ள வகையையும் அவற்றின் பொருள் பரப்பையும் விளங்கிக்கொள்ளவும் இந்த அகராதி உதவும்.

ஒரு சொல்லின் பொருள் பரந்த எல்லை உடையது. சில சொற்களுக்கு அவற்றின் அடிப்படைப் பொருளுக்கு மேலாக உருவகப் பொருள்களும் வழக்கில் உண்டு. உருவகப் பொருளில் வரும் எடுத்துக்காட்டு வாக்கியங்கள் (உரு வ.) என்ற அடைப்புக்குறிக்குப் பின் தரப்பட்டிருக்கின்றன. பல சொற்களுக்குப் பண்பாட்டுப் பொருளும், உணர்ச்சிப் பொருளும் உண்டு. அகராதிப் பொருள் ஒரு சொல்லின் அடிப்படைப் பொருளே. அது பொருளின் உண்மை இயல்பை முன்னிலைப்படுத்தும். இந்த அகராதியிலும் இம்முறையே பின்பற்றப்பட் டிருக்கிறது.

ஒரு சொல்லின் அல்லது தொடரின் அடிப்படைப் பொருளிலிருந்து ஊகித்தறியும் பொருளும் (inferential meaning) உண்டு. முன்னதைப் பின்னதிலிருந்து பிரித்துக்காட்டுவது எளிது அல்ல. ‘கைகட்டி நில்’ என்ற தொடர், அதன் வெளிப்படைப் பொருளோடு ‘மரியாதையைக் காட்டி’ என்ற பொருளையும் தருகிறது. இந்தப் பொருள் ஊகப் பொருளா, அடிப்படைப் பொருளின் அங்கமா என்ற கேள்விக்கு ஊகப் பொருள் என்பது விடை. 

ஏனென்றால், இத்தொடர் சுட்டும் செயல் இல்லாமல் ‘மரியாதையைக் காட்டி’ என்ற பொருள் வராது. ‘வெற்றிலைபாக்கு வை’ என்ற தொடர் அதன் வெளிப்படைப் பொருளோடு ‘அழை’ என்ற பொருளையும் தருகிறது. இது ஊகப் பொருள்அல்ல. ஏனென்றால், இத்தொடர் சுட்டும் செயல் இல்லாமலேயே ‘அழை’ என்ற பொருள் வரும் (எ-டு) உனக்குத் தனியாக வெற்றிலைபாக்கு வைக்க வேண்டுமா?. ஊகப் பொருளை அடிப்படைப் பொருளின் பகுதியாகத் தருவது இந்த அகராதியில் முடிந்த அளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்கும்போது வழக்கு மிகுதியை அடிப்படையாக வைத்துப் பொருள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிறது. வழக்கு மிகுதி இந்த அகராதிக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தரவுமூலங்களின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த அடிப்படையில் ஒரு துறைக்கே உரிய பொருள், பொதுப் பொருளுக்குப் பின்னால் வரும். இப்படி வழக்கின் அடிப்படையில் வரிசையை முடிவு செய்ய இயலாமல் இருக்கும்போது, ஒரு சொல்லை நினைத்தவுடன் மனத்தில் தோன்றும் பொருள் முதலாவதாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.

சில சொற்களில், இந்த அடிப்படையிலிருந்து மாறுபட்டு, மற்ற பொருள்களுக்குக் காரணமாக இருக்கும் பொருள் முதலாவதாகத் தரப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ‘ஞாயிறு’ என்ற சொல்லுக்கு ‘சூரியன்’ என்ற பொருளைவிட ‘வாரத்தின் முதல் நாள்’ என்ற பொருளே வழக்கு மிகுதியாக இருந்தாலும் ‘சூரியன்’ என்ற பொருளே முதலாவதாகத் தரப்பட்டிருக்கிறது. ஏனென்றால் சூரியனை அடிப்படையாகக் கொண்டே வாரத்தின் முதல் நாள் அமைகிறது.

ஒரு சொல்லுக்கு அதிக எண்ணிக்கையில் பொருள்கள் இருக்கும்போது அவற்றைச் சில பொதுக் கூறுகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, ‘போடு’ என்ற வினைச்சொல்லுக்கு உள்ள 54 பொருள்கள் 7 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வகைப்படுத்துவது பொருள்களுக்கு இடையே உள்ள தொடர்பைக் காட்டுவதோடு, அகராதியைப் பயன்படுத்துவோரின் பொருள் தேடும் பணியை எளிதாக்குகிறது. ஒரு சொல்லின் பொருளைத் தேடுபவர் பொருள் பிரிவை முதலில் படித்துப்பார்த்து, தான் தேடும் பொருள் இந்தப் பிரிவுகளில் இருக்கலாம் என ஊகம் செய்து அந்தப் பிரிவின் கீழ் அதைக் கண்டுகொள்வது எளிதாகிறது.

ஒரு சொல்லின் பொருள் விளக்கம் என்பது பொருளின் முக்கியக் கூறுகளைக் கொண்டிருக்கும். ஆனால் அந்த விளக்கத்தை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடுதல் தகவல் தேவைப்படும். இந்தக் கூடுதல் தகவல்கள் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கொடுக்கப்பட்ட பொருள் சில இலக்கண வடிவங்களில் மட்டுமே வந்தால் அந்தச் செய்தியும் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும்.

(எ-டு) கருத்து பெ. 5: (பெரும்பாலும் கருத்தில் என்னும் வடிவத்தில் மட்டும்) கவனத்தில் (கொள்ளுதல்); (bear in) mind.
சொல்லின் பொருள் அந்தச் சொல்லின் இலக்கண வகையைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதாவது, பெயர்ச்சொல்லின் பொருள் பெயராகவும் வினையடையின் பொருள் வினைக்கு அடையாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.

(எ-டு) அக்கம்பக்கம்1 பெ. (குறிப்பிட்ட இடத்தை) சுற்றி உள்ள பகுதி;
அக்கம்பக்கம்2 வி.அ. (‘பார்’, ‘திரும்பு’ ஆகிய வினைகளோடு) சுற்றுமுற்றும்;

இன்று1 பெ. இந்த நாள்;
இன்று2 வி.அ. இந்த நாளில்;

தினசரி1 பெ. நாளிதழ்; நாளேடு;
தினசரி2 வி.அ. ஒவ்வொரு நாளும்; தினந்தோறும்;
தினசரி3 பெ.அ. அன்றாட;

பரஸ்பரம்1 பெ. ... ஓர் உணர்வு, நடவடிக்கை, விளைவு போன்றவை சம்பந்தப்பட்ட இருவருக்கு அல்லது இரண்டுக்குப் பொதுவானதாக அமைவது;

பரஸ்பரம்2 வி.அ. ஒன்றின் விளைவு சம்பந்தப்பட்ட இருவரிடம் அல்லது அனைவரிடமும் சேரும்படி; (நாடு, நிறுவனம் முதலியவை) தங்களுக்காக;

பிறகு1 வி.அ. 1: தொடர்ந்து அடுத்ததாக; பின்பு;
பிறகு2 இ.சொ. 1: ‘குறிப்பிட்ட செயல் நிகழ்ந்ததும் அல்லது குறிப்பிட்ட நேரம் கழிந்ததும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; இதனால், சொல் வரும் இடத்தில் இலக்கணம் பிறழாமல் பொருளை வாக்கியத்தில் பொருத்திப் பார்க்கலாம். ஆனால், எல்லாச் சொற்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பாக, இடைச்சொற்களுக்கு இது கடினம்.

மேலும், சில சொற்களுக்கு இந்த விதியின்படி பொருள் தரும்போது பொருளை விளக்கும் வாக்கிய அமைப்பு இயல்பாக இல்லாமல் போகலாம். இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வினைச்சொற்களுக்குப் பொருள் ‘தல்’ விகுதி சேர்த்துத் தரப்பட்டிருக்கிறது. பொருளை விவரிக்க தேவை இருக்கும்போது இந்த விதிமுறை பொருந்திவராது. ஆங்கிலப் பொருள் தரும்போது மொழிபெயர்ப்பு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விதிமுறை அதிக அளவில் தளர்த்தப்பட் டிருக்கிறது.

இடுகுறிப் பொருள் தன்மை கருதியே கூட்டுச்சொற்கள் தரப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குக் காரணப் பொருளும் இருக்கலாம். இந்தப் பொருள் அகராதியில் தரப்பட்டிருக்காது. ‘மாலைபோடு’ என்ற கூட்டுவினைக்கு ‘மாலை அணிவித்தல்’ என்ற பொருள் மாலை, போடு என்ற சொற்களின் பொருள்களிலிருந்து புரிந்துகொள்ளலாம் என்பதால் தரப்படவில்லை. 

ஆனால் ‘விரதம் மேற்கொள்ளுதல்’ என்ற பொருள் தரப்பட்டுள்ளது. ‘காதில் ஏறு’, ‘மண்டையில் ஏறு’ என்ற தொடர்களில் ‘ஏறு’ என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ள பொருளுக்கு அதிகப்படியாக மரபுப் பொருளும் உண்டு. மரபுப் பொருள் மட்டுமே இந்த அகராதியில் தரப்பட்டிருக்கும். அந்த வினைச்சொல்லின் எல்லாப் பொருளையும் கொண்டிருக்காமல் வினையிலிருந்து வரும் ஒரு பெயர்ச்சொல் ஒன்றிரண்டு பொருளை மட்டுமே கொண்டிருந்தால் அந்த ஒன்றிரண்டு பொருள் மட்டும் பெயர்ச்சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக, ‘அதட்டல்’ என்ற பெயர்ச்சொல் ‘அதட்டு’ என்னும் வினைக்கு உள்ள இரண்டு பொருளிலும் வராமல் அதன் ஒரு பொருளில் மட்டும் வருவதால் அந்தப் பொருள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வினைக்கு இருக்கிற எல்லாப் பொருளும் அந்த வினைப்பெயருக்கும் இருக்குமானால் அவற்றுள் பெயருக்கு எந்தப் பொருள் மிகுதியாக வழங்குகிறதோ அந்தப் பொருள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, ‘உறுமு’ என்னும் வினையின் மூன்று பொருளும் ‘உறுமல்’ என்னும் வினைப்பெயருக்கு உண்டு என்றாலும் மிகுதியாக வழங்கும் ஒரு பொருள் மட்டுமே தரப்பட்டிருக்கிறது. வினைக்குரிய பொருள் எதுவும் இல்லாமல் பெயருக்கு வேறு பொருள் இருந்தால் அந்தப் பொருள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.

-அன் விகுதியில் முடியும் பெயர்கள் ஆண்பாலைக் குறிக்கும். சில பெயர்களில் பெண்பாலைக் குறிக்கத் தனி விகுதிகள் உண்டு (எ-டு) தலைவன், தலைவி, வாசகன், வாசகி. சில பெயர்களில் பெண்பாலைக் குறிக்கும் வடிவங்கள் இல்லை (எ-டு) அந்நியன், நாத்திகன். இப்பெயர்கள் -அர் விகுதியில் முடியும்போது வழக்கில் ஆண்பாலையே குறிக்கும்; ஆனால் அவை அடையாக வரும்போது இருபாலாரையும் குறிக்கும் (எ-டு) தச்சர் சங்கத் தலைவி.

ஆனால் தற்காலத் தமிழின் -அர் விகுதி ஏற்ற சில பெயர்கள் பெண்பாலைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. ‘சரோஜா என் நீண்ட நாள் நண்பர்’ என்பதும் ‘திருப்பதி திருக்கோயில் (தேவஸ்தானம்) ஐம்பது பெண் நாவிதர்களை நியமித்திருக்கிறது’ என்பதும் தற்காலத் தமிழின் போக்கைக் காட்டுகின்றன. இந்தப் போக்கையும் இந்தப் பதிப்புச் சுட்டிக்காட்டுகிறது. ஆண்பாலையும் பெண்பாலையும் குறிக்கத் தனி விகுதிகளை உடைய பெயர்கள் இருக்கும்போது ஆணை முதன்மைப்படுத்திப் பொருள் தருவது தவிர்க்கப்படுகிறது.

தொடர்புள்ள பல பொருள் உடையதும் மிகுதியாகப் பயன்படுத்துவதுமான சொற்களுக்கு அதிகப்படியான பொருள்கள் சுட்டப்பட்டிருக்கின்றன (காண்க: போ1, பார்1).

எடுத்துக்காட்டு வாக்கியங்கள்

எடுத்துக்காட்டு வாக்கியங்கள் சொல்லைப் பயன்படுத்தும் மொழிச்சூழலை அறிந்துகொள்ளவும் சொல்லின் பொருள் வீச்சை உணர்ந்துகொள்ளவும் உதவும். இந்த எடுத்துக்காட்டு வாக்கியங்கள் தரவுமூலங்களில் உள்ளபடியே எடுக்கப்பட்ட மேற்கோள்கள் அல்ல. விரிவாக்கப்பட்ட இந்தப் புதிய பதிப்பில் கூடுதலாக எடுத்துக்காட்டு வாக்கியங்கள் தரப்பட்டிருக்கின்றன.

இதற்கு முதல் காரணம், குறிப்பிட்ட பொருளின் வீச்சைத் தெரிந்துகொள்ளக் கூடுதல் வாக்கியங்கள் உதவுகின்றன. இரண்டாவது, சொல்வங்கியின் அளவு அதிகரித்திருப்பதால் அதிக எண்ணிக்கையில் எடுத்துக்காட்டு வாக்கியங்களைச் சொல்வங்கியிலிருந்து பெற முடிந்திருக்கிறது. ஆனால் பதிவின் தேவைக்கு ஏற்ப வாக்கியங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. சில எடுத்துக்காட்டுகளும் தொடர்களாகவே தரப்பட்டிருக்கின்றன.

ஆங்கிலப் பொருள்

இது தமிழ்-தமிழ் அகராதி என்றாலும் தமிழை இரண்டாவது மொழியாகப் பயில்வோருக்கும் உதவும்பொருட்டு, ஆங்கிலத்திலும் பொருள் தரப்பட்டிருக்கிறது. ஆங்கிலப் பொருள் சில முறைகளைப் பின்பற்றித் தரப்பட்டுள்ளது. தமிழ்ச் சொல்லுக்குத் தரப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்குமானால் தமிழ்ச் சொல்லின் பொருளைக் குறிக்கும் தகவல் ஆங்கிலப் பொருளில் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டிருக்கும். எடுத்துக் காட்டாக, ‘நகம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் (finger or toe) nail என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது; அடைப்புக்குறிக்குள் உள்ள செய்தி, nail என்பது ‘ஆணி’ என்பதைக் குறிக்காமல் விரல் நகத்தைக் குறிக்கும் என்று அறிந்து கொள்ள உதவும்.

தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் சொற்களுக்கு ஆங்கிலத்தில் அதிகப்படியான தகவல்கள் இருக்கும். இந்த அதிகப்படியான பொருள் கூறுகள் பெரும்பாலும் அடைப்புக்குறிக்குள் இருக்கும். சில பதிவுகளில் ஆங்கிலச் சொற்கள் இந்தியாவில் மட்டும் வழங்கப்படுபவையாக இருந்தால், முதலில் ஆங்கிலப் பொருள் விரித்துக் கூறப்பட்டு, அதைத் தொடர்ந்து இந்திய ஆங்கிலச் சொல் தரப்பட்டிருக்கும். (எ-டு) ஆட்சியர் பெ. ... ; highest official in the district for revenue collection, law and order, development programmes, etc.; (in South India) District Collector.

இடைச்சொல்லுக்கு இணையான ஆங்கில இலக்கணச் சொல் இல்லை. பொருத்தமான சொல் இல்லை என்றாலும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியைப் பின்பற்றி, இடைச்சொல் ஆங்கிலத்தில் particle என்று குறிக்கப்பட்டுள்ளது.

அகராதியின் நோக்கமும் தாக்கமும்

பொருள் விளக்கத்திலும் எடுத்துக்காட்டு வாக்கியங்களிலும் பயன்படுத்திய எல்லாச் சொற்களும் அகராதியில் தலைச்சொல்லாக இருக்கும். இந்த அகராதியில் பொருள் விளக்கத்திலும் எடுத்துக்காட்டுகளிலும் பயன்படுத்தியுள்ள எந்தச் சொல்லுக்கான பொருளுக்கும் வேறு அகராதியை நாட வேண்டியதில்லை.

தற்காலத் தமிழின் சொற்கள் பற்றித் தேவையான செய்திகளை இந்த அகராதி தர முயல்கிறது. இந்தச் செய்திகள் தமிழைத் துல்லியமாகப் பயன்படுத்த உதவும் என்று நம்புகிறோம். இந்த அகராதியின் முதல் பதிப்பு வெளிவந்தபின் அதைப் பயன்படுத்திச் சில அகராதிகள் வழிநூல்களாக வெளிவந்தன. இது தமிழைப் பயன்படுத்துவதில் அகராதியை நாடும் பழக்கம் தமிழரிடையே பரவுவதைக் காட்டுகிறது என்று நம்புகிறோம்.

முதல் பதிப்புக்குப் பின் சில வட்டார அகராதிகள் வெளிவந்துள்ளன. அவை முறையான அகராதிக்கலைக் கொள்கைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றவில்லை என்றாலும் அகராதிகளில் தமிழருக்கு ஏற்பட்டுவரும் ஆர்வத்தைக் காட்டுகிறது என்று நம்புகிறோம். அகராதியின் இந்தப் புதிய பதிப்பு, தமிழ்ச் சொற்களைப் பற்றிய—அதாவது சொற்களின் இலக்கண இயல்புகள், பொருள் அமைப்பு, மொழி வளர்ச்சியின் போக்கு ஆகியவை பற்றிய—ஆய்வுகளை மேற்கொள்ளத் தமிழ் மாணவர்களைத் தூண்டும் என்று நம்புகிறோம்.

இந்தப் பதிப்பைத் தயாரிக்கும்போது சொல்லின் வடிவம், சொல்லின் இலக்கண வகை போன்றவை குறித்த பிரச்சினைகளையும் அவற்றுக்குக் காணப்பட்ட தீர்வுகளையும் இந்த முன்னுரை பேசுகிறது. தற்காலத் தமிழில் உள்ள எல்லாப் பிரச்சினைகளையும் இந்த முன்னுரை சொல்லிவிட்டது என்று கூற முடியாது. இங்கு சுட்டிக்காட்டப்பட்ட சொல், இலக்கணம் பற்றிய பிரச்சினைக்குரிய தகவல்கள் இந்த அகராதியைப் பயன்படுத்துவோர்க்கு மட்டுமல்லாமல் தமிழ்மொழி ஆய்வாளர்களுக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.
நன்றிகள்.

Tuesday 17 September 2013

பார்வையைப் பறிக்கும் ஒளி உமிழும் இருமுனையம் .....!


கண் பார்வையைப் பறிக்கும் ஒளி உமிழும் இருமுனையம் விளக்குகள்!’ -ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் தகவல் !!


தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் ஒளி உமிழும் இருமுனையம் (Light emitting diode) விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக ஒளி உமிழும் இருமுனையம் (Light emitting diode) எனப்படும், ‘ஒளி உமிழும் இருமுனையம்’ விளக்குகள் அறிமுகம் ஆனது.

இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்கள் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கைப்பேசி, தொலைக்காட்சி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் ஒளி உமிழும் இருமுனையம் பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
நன்றிகள்.

Monday 16 September 2013

தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக.....!

திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு.

ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம்.


கிராமபுறங்களில் பல பேர் வீட்டில் மதிய நிசப்தத்தை கெடுக்கும் இந்த அரைவைக்கல்லில் நடுவில், வெயிலில் காய வைத்த அரிசியை போட்டு சுத்தினால் கர கர கர சத்தத்தை ஏற்ப்படுத்தி மாவை கொடுக்கும்.

சமாச்சாரம் இது...இதை அரைக்கின்றார்கள் என்றால் வீட்டுக்கு வெளியே கூட இதன் சத்தம் கேட்கும்... ஆனால் இன்று பல வீடுகளில் சீரியல் சத்தம் மட்டுமே கேட்கின்றது.. இந்த சத்தம் கேட்டு வெகுநாள் ஆகி விட்டது...

இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப் பட்டிருக்கும்.

மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.

இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும்.

சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்.
நன்றிகள்.

Sunday 15 September 2013

வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன.....!

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விசயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விசயங்களை தவறவிட்டு விட்டோம்.

அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.


அதாவது நல்ல கிருமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.

இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.

ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.

ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள். 
நன்றிகள்.