Monday 12 August 2013

காது கேளாதவர்களும் கைத்தொலை பேசியை..........!

காது கேளாதவர்களும் கைத்தொலை பேசியைப் பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்.காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம்.

அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேசு(ஷ்), வேலரசன் மற்றும் செல்வராச்(ஜ்) ஆகியோர். இவர்கள் பொறியியல், மின் ஆற்றலுக்குரிய (electrical) மற்றும் மின்னணுவியல் (electronics) இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு செயற்திட்டமாக (The Project) இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர்கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

தலையணி கேட்பொறி போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் இயக்கும் இயந்திரத்தில்தான் (In motor) இருக்கிறது சங்கதி. தலையணி கேட்பொறியை கைத்தொலை பேசியோடு இணைத்துப் பேசும்போது இயக்கும் இயந்திரத்தின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.

"பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது.தலையணி கேட்பொறியில் (In headphone) இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது.

இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல்லாமல் பாடலையும் கேட்க முடியும்" என்று சிவனேசு(ஷ்) தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

மின்கலம் மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த கைத்தொலைபேசியோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது காப்புரிமையை வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள்.
நன்றிகள்.