Friday 3 January 2014

வலிப்பு நோய் என்றால் என்ன......?

மூளையில் உள்ள நரம்பு கலங்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து கலங்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு கலங்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ச(ஜ)ன்னி, பிட்சு(ஸ்) மற்றும் காக்கை வலி (epilepsy) என்றும் அழைக்கப்படுகிறது. வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?



யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.

கை, கால் இழுத்தல்.
வாயில் நுரை தள்ளுதல்.
சுய நினைவு மாறுதல்.
உடலில் உள்ள பாகம் துடித்தல் (வெட்டுதல்).
கண் மேலே சொருகுதல்.
சில சமயம் சுய நினைவின்றி சிறுநீர் கழித்தல்.
திடீரென மயக்கமடைந்து விழுதல்.
கண் சிமிட்டல்.
நினைவின்றி சப்பு கொட்டுதல் (வாய் அசைத்தல்).

மற்றும் சில நிமிடங்கள் தன் சுய நினைவின்றி பேசுதல் போன்றவை வலிப்பு நோயின் அறிகுறிகள். வலிப்பு நோய் எதனால் வருகிறது?

மூளையில் பூச்சிக்கட்டி.
மூளையில் காச நோய்.
தலைக் காயம்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் (fever) ஏற்படும் போது.
மூளை காய்ச்சல்.
மூளையில் ரத்த ஓட்டம் பாதிக்கும் போது.
மூளையில் புற்று நோய்.
உறக்கமின்மை.
போதைப் பொருள் உபயோகித்தல்.

மற்றும் சிலருக்கு எக்காரணமும் இன்றி வரலாம். பெரும்பாலும் 100க்கு 90 பேருக்கு இது பரம்பரை வியாதி இல்லை. மிக குறைந்த பேருக்கே இது பரம்பரையின் பாதிப்பாகும்.

இந்த நோய்க்கு வயது வரம்பு கிடையாது. குழந்தை முதல் முதியோர் வரை எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். முதலில் நோய்க்கான அறிகுறிகளை கேட்டறிந்து அதன்பின் வலிப்பு நோயினை வகைப்படுத்தி பின்னர் வியாதிக்கு ஏற்ப, இ.இ.ஜி., சி.டி.கேன், எம்.ஆர்.ஐ. நுட்பமாய்ச் சோதித்தல் (scan), ஆகியவை மூலம் மூளையின் பாகங்களை படம் எடுத்து பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் மருத்துவர் ஆலோசனைப்படி மருத்தினை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும்.

ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும் போலிக் ஆசிட் என்ற சத்து மாத்திரையும் சாப்பிடும் போது சுகப்பிரசவம் காணலாம். வலிப்பு இல்லாமல் குறைந்தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.

வலிப்பு நோய் உள்ளவர்கள் தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.
பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம்.
விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.
திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம், சாதாரணமாக குழந்தைகளைப் பெறலாம்.
குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.
நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை நல்வழிப்படுத்தும்.

மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம். ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்பு அடைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக்கும், எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
நன்றிகள்.