Wednesday 12 September 2012

பண்டைய தமிழனின் காலநீட்டிப்பு கணிதம்..!

பண்டைய தமிழனின் அரும்பெருஞ்சாதனை காலநீட்டிப்பு கணிதம்..! 

செயற்கைகோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர்.


பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர் . ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாளிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும் . நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும்.

வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் செயற்கைகோள் உதவியில்லாமலும் தொலைக்காட்சிகளின் துணையுமில்லாமலும் 12 மாதங்களையும் பிரித்து எவற்றில் பகல் நீடிக்கும் எவற்றில் இரவு நீடிக்கும் என அறிதியிட்டு கூறியுள்ளனர் ஆகவே தமிழன்தான் பகல் – இரவு நீட்டிப்பு அறிவியலை முதன் முதலில் உலகிற்கு கூறினான்.

சரி நமது முன்னோர்கள் பன்னிரு மாதங்களின் பகல் – இரவு நாழிகையை எவ்வாறு பிரித்துள்ளனர் என்பதை அறிவோம்.

“சித்திரையும் ஐப்பசியும் சீரொக்கும் சித்திரைவிட்டு
ஐப்பசிமுன் னைந்தும் அருக்கேறும் – ஐப்பசிக்குப்
பின்னைந்து மாதம் பிசகாமல் இரவேறும்
மின்னே விடுபூ முடி“

சித்திரை மாதமும் ஐப்பசி மாதமும் சீரொக்கும் அதாவது பகல் – இரவு நாழிகைகள் சமமாக(பகல்=30, இரவு =30) இருக்கும் ஐப்பசிக்கு முன் ஐந்தும் அருகேறும் அதாவது ஐப்பசிக்கு முன் உள்ள வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய ஐந்து மாதங்களில் பகல் நீடிக்கும் ஐப்பசிக்கு பின் ஐந்து மாதம் பிசகாமல் இரா ஏறும் அதாவது ஐப்பசிக்கு பின் உள்ள கார்த்திகை, மார்கழி, தை, மாசி , பங்குனி ஆகிய மாதங்களில் இரவு நீடிக்கும் பாடலின் கடைசி வரி " விடுபூ முடி" மிக மிக முக்கியமான வரியாகும் இந்த வரியினை அடிப்படையாக கொண்டு வாக்கிய கணித முறை என்னும் புதிய முறை தோன்றியது இந்த வாக்கிய கணித முறை தான் சோதிடவியலுக்கு அடிப்படையானதாகும்.

வாக்கிய கணித முறை என்பது வாக்கியத்தின் முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை கணக்கிட வேண்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் 1/4 கால அளவு கொடுக்க வேண்டும்.

பகல் நீட்டிப்பை காண வி - டு - பூ – மு – டி எனும் ஐந்து வார்தைகளை எடுத்துக்கொள்வோம்

வி என்பது வைகாசி
டு என்பது ஆனி
பூ என்பது ஆடி
மு என்பது ஆவணி
டி என்பது புரட்டாசி

இது போலவே வி - டு - பூ – மு – டி எனும் அதே ஐந்து வார்தைகளை கொண்டு இரவு நீட்டிப்பு மாதங்களுக்கு கொடுத்து இரவு நீட்டிப்பும் அறியலாம் 

மாதிரிக்காக வைகாசி மாதத்தின் பகல் நீட்டிப்பை காணும் முறை வி என்ற எழுத்தின் தொடக்கம் வ ஆகும் எனவே
வ = 1/4 நாழிகை
வா= 1/4 நாழிகை
வி=1/4 நாழிகை ஆக மொத்தம் கிடைப்பத ¾ நாழிகை
பகல் நீடிக்கும் 3/4 நாழிகை என்பது 18 நிமிடத்திற்கு சமம்.

இது போல வி - டு - பூ – மு – டி ஆகிய வாக்கியங்களின் முதல் எழுத்து முதல் கடைசி எழுத்து வரை கணக்கிட்டால் கிடைப்பது.

பகல் நீட்டிப்பு

வைகாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்
ஆனி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
ஆடி 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
ஆவணி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
புரட்டாசி 3/4 நாழிகை = 18 நிமிடம்

இரவு நீடிப்பு

கார்திகை 3/4 நாழிகை = 18 நிமிடம்
மார்கழி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
தை 1 1/2 நாழிகை = 36 நிமிடம்
மாசி 1 1/4 நாழிகை = 30 நிமிடம்
பங்குனி 3/4 நாழிகை = 18 நிமிடம்

நன்றிகள்.