Friday 14 June 2013

அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி...............!

ஒட்டியாணம் என்பது பெண்கள் இடுப்பில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக, திருமணம் போன்ற விழாக்களின் போது அணியப்படுகிறது.

இந்த அணியின் பழங்காலப் பெயர் காஞ்சி. அத்துடன், பரத நாட்டியம் முதலான மரபுவழி நடனங்களுக்கான உடையலங்காரத்திலும் ஒட்டியாணம் இடம்பெறுவதோடு, வரலாற்று நாடகங்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் முற்காலக் கதை மாந்தர்களின் அணி வகைகளிலும் ஒட்டியாணம் இடம் பெறுவதைக் காண முடியும்.


ஒட்டியாணம் பெரும்பாலும் தங்கத்தில் செய்யப்படுகிறது. தங்க முலாம் பூசிய ஒட்டியாணங்கள் விலைக்கு கிடைக்கின்றன. தனி உலோகங்களால் மட்டுமன்றி கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணங்களும் செய்யப்படுகின்றன.

ஒட்டியாணம் பொதுவாக உடைக்கு வெளியிலேயே அணியப்படுகின்றது. எனினும் பண்டைத் தமிழர்கள் இடையணிகளை உடைக்குள்ளும் அணிந்ததாகத் தெரிகிறது.

இத்தகைய இடையணிகள் நுண்ணிய உடையினூடாகத் தெரிவது பற்றியும் இலக்கியங்கள் கூறுகின்றன. இடையணிகளை ஆடைகளின் மேல் அணிந்து கொள்வது பற்றிய தகவல்களையும் இலக்கியங்கள் தருகின்றன.
நன்றிகள்.