Saturday 1 September 2018

பெண்கள் எதிர் பார்ப்பது இதைத்தான்.............!


மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?.

வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.

நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பங்காளர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.

சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.

இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும். வாழ்க்கையில் பிரிக்க முடியாதது – திருணம் செய்தவர்களுக்கு. அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம்.

உடல் உறவின்போது மட்டும்தான் பெண்கள் இன்பமடைவார்கள் என்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன காதல்கதை என நிறைய விடயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. இதுபோல நிறைய விடயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், மிதமான உருவுதல் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்…இப்படி நிறைய இருக்கிறது.

மனைவி சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடக் கூடாது. மனைவி சொல்லை மதிக்காதவனாகவும் இருக்கக் கூடாது. கலந்து பேசி முடிவெடுக்கணும்.

*வேலை முக்கியம் என்றாலும் குடும்பத்துக்கும் நேரம் செலவழிக்கணும். அது வெறும் "அளவு நேரம்" ஆக இல்லம "தரமான நேரம்" ஆக இருக்கணும் கிடைப்பது இரண்டு நிமிடங்கள் என்றாலும் அந்த இரண்டு நிமடங்களும் குடும்பத்தினருடன் மனம் விட்டு பழகினால் போதும். சும்மா நானும் வீட்டில் செலவிடும் நேரம் தொலைகாட்சி முன்னாடியோ கணனி முன்னாடியோ தவம் கிடக்கக் கூடாது.நகைச்சுவை உணர்வு இருக்கணும்.

*மனைவி தன் வீட்டினரிடம் பாசமாக நெருங்கிப் பழகணும்னு எதிர் பார்ப்பது போல் ஆண்களும் மனைவி வீட்டாருடன் நெருக்கமாக இருக்கணும்.

* பெண்ணுக்கே உரிய உடல் பிரச்சினைகளை புரிந்து நடந்து கொள்பவனாக இருக்கணும்.

*பெண்களின் அகராதி குறிப்பாக மனைவியின் அகராதியை தெரிஞ்சு வச்சுக்கணும். இல்லேன்னா பெண்களிடம் தரமான பெறுபேறுகளை வாங்குவது கடினம்தான் .

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் ‘அதை’ மட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல கோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதெல்லாம் சரியாக இருந்தால் நீதிமன்றப் பக்கம் யாருமே போகத் தேவையில்லை-விவாகரத்து கோரி.

                                                                                                                            நன்றிகள்.