Thursday 27 September 2018

அந்தக் காலத்தில் மழைமானி.....................!.

அந்தக் காலத்தில் மழைமானி பற்றி தெரியாத தகவல்.

உரல் உணர்த்தும் உண்மை.ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். . 

முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர். 

மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும். .இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். 

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள். மழை என்பது மழைத்துளிகளின் தொகுப்பு என்பதை அறிவோம். 

அதன் அடிப்படையில் அதன் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அவற்றைக் காண்போம் 

தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும். 

சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும். 

மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும். 

பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும். 

அடைமழை – ஐப்பசியில் பெய்வது 

கனமழை – கார்த்திகையில் பெய்வது 

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது. 

மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல். 

அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை. 

4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால் அது கனமழை.யாகும். 

மழையைப் பற்றித் திருவள்ளுவர் நிறையப் பேசியிருப்பதை நாம் அறிவோம்.அவற்றில் வியக்க வைக்கும் செய்தி 20ம் நூற்றாண்டின் அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர் பேசியிருப்பது. 

இந்த உலகம் தோன்றிய போது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். 

திருவள்ளுவர் இதை ‘மாறா நீர்’ என்று உரைத்திருக்கிறார். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார். கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி - (குறள் 701) இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்.

பழ. கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு (குறள் 452) எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

                                                                                                                               நன்றிகள்.