Thursday 6 September 2018

கத்தி கத்தி யாரும் தன் பலத்தை....................!.

கத்திப்பேசுவது ஒரு இயலாமை.

நாம் சொல்லப்போகும் கருத்து நியாயமானதாக இருந்தாலும் கத்திப் பேசும்போது யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கத்துவது நமக்கொரு தவறான உருவத்தை தந்துவிடும். கத்திப் பேசுவது நல்லதா ? என்று யாரைக் கேட்டாலும் நல்லதில்லை என்றுதான் சொல்லுவார்கள்.

ஆனால் கோபம் வரும்போதும், நாம் சொன்ன கருத்தை மறுத்துப் பேசும்போதும் கத்திப் பேச வேண்டிய அவசியம் வருகிறது...

அந்த நேரம் பதற்றம் அதிகமாகி இதயத்துடிப்பு எகிறி, ரத்தநாளங்கள் சூடேறி, கண்கள் சிவந்து கோபத்தின் உச்சிக்கே என்று விடுகின்றோம்..

இப்படி அடிக்கடி நடந்தால் பல வேண்டாத விளைவுகள் ஏற்படும். இதெல்லாம் அமைதியாக இருக்கும்போது புரியும்.

ஆனால் பதற்றம் தலைக்கேறும்போது யாருக்கும் புரிவதில்லை. கத்தும்போது மனிதன் என்ற நிலையை மீறி ஒருபடி கீழே இறங்கிப்போய் விடுகிறோம். அப்போது நம் மீது நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது.

கத்துவது மரியாதைக் குறைவான செயல். அமைதியின் சக்தியை யாரும் புரிந்துகொள்வதில்லை என்பதே கத்திப்பேச காரணமாக இருக்கிறது.

அமைதியானவர்களால்தான் எதையும் சாதிக்க முடியும். ‘பொறுத்தவர் பூமியாள்வார்’ என்பார்கள்.

கத்துபவர்களால் எதையுமே சாதிக்க முடியாது.

நம் உயிரின் சக்தியை சேமித்து வைத்துக்கொண்டால் தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும்.

ஆம்.,நண்பர்களே..,

உளவியல் ரீதியாக பார்க்கும்போது கத்துவது ஒரு இயலாமை. கத்தும் பழக்கம் இடம் பொருள் பார்க்காது.

கத்தி கத்தி யாரும் தன் பலத்தை நிரூபிக்க முடியாது.

கத்தாமல் வாழ்க்கை நடத்த முடியும்.

முயற்சித்துப் பார்த்தால் அந்த வாழ்க்கை ஆரோக்கியமான தாகவும், மகிழ்ச்சியான தாகவும் இருக்கும்....

                                                                                                                               நன்றிகள்.