Tuesday 13 November 2012

சாக்குக்கணவாய்....................!


சாக்குக்கணவாய் ( தமிழில் பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்திமீன், நீராளி எனவோ அல்லது ஆங்கிலப் பெயரை ஒலிப்பெயர்த்து ஒக்டோபஸ் என்றோ அல்லது தமிழக வழக்குப்படி ஆக்டோபசு என்றோ வழங்கலாம்) என்னும் கடல்வாழ் விலங்கு எட்டுக்கைகள் கொண்ட எலும்புகள் ஏதும் அற்ற ஒரு விலங்கு.

சாக்குக்கணவாய் என்னும் இவ்விலங்கு மெல்லுடலிகள் (Mollusca) என்னும் தொகுப்பில் இதலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் எட்டுக்காலிகள் அல்லது (Octopoda) எண்காலிகள் என்னும் உயிரின வரிசையில் உள்ள ஒரு விலங்கு.

தலைக்காலிகள் (cephalopod) என்னும் வகுப்பில் 300 வகையான சாக்குக்கணவாய் உள்ளன என்று கண்டிருக்கின்றார்கள்.இவை மொத்த தலைக்காலிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

சாக்குக்கணவாய் உடலில் எலும்பு இல்லாததால் மிகச் சிறிய இடுக்குகளிலும் நுழைந்து வெளிவர இயலும். இவை பொதுவாக 5 செ.மீ முதல் 5 மீ வரையான அளவுகளில் உண்டு.

கணவாய்க்கு மூன்று இதயங்கள்உண்டு. கணவாயின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். கணவாய் இரத்தத்தில் செப்பு உள்ள ஈமோசயனின் (hemocyanin) என்னும் புரதப்பொருள் உள்ளதால் உயிர்வளி (ஆக்சிசன்) ஏற்றவுடன் அது நீல நிறமாக மாறுகின்றது (ஆக்சிசன் ஏற்காத நிலையில் நிறமற்றதாக இருக்கும்). 

சாக்குக்கணவாயின் இந்த மூன்று இதயங்களில் இரண்டு இதயங்கள் கணவாயின்செதிள் அல்லது பூ (அல்லது இணாட்டு ) எனப்படும் மூச்சுவிடும் பகுதிக்கு நீல இரத்தத்தை இரைக்கப் பயன் படுகின்றது.

மூன்றாவது இதயம் உடலுக்குத் தேவையான இரத்தத்தை செலுத்தப் பயன்படுகின்றது.

முதுகெலும்பிகளில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுவில் உள்ள ஈமோகுளோபின் என்னும் இரும்புச்சத்து உள்ள இரத்தம் உயிர்வளியை எடுத்துச் செல்ல சிறந்தது என்றாலும் குளிரான கடல் பகுதிகளில் ஆக்சிசன் குறைவாக உள்ள பகுதிகளில் ஆக்சிசனை எடுத்துச்செல்ல இந்த செப்பு உள்ள ஈமோசயனின் சிறந்ததாக உள்ளது.

சாக்குக்கணவாய்கள் அதிக காலம் வாழ்வதில்லை. பெரும்பாலும் சில மாதங்களே வாழ்கின்றன. வட பசிபிக் பெருங்கடல்களில் வாழும் சில மிகப்ப்பெரிய சாக்குக்கணவாய்கள் 4-5 ஆண்டுகள் வாழலாம். 

இனப்பெருக்கத்திற்கான புணர்ந்தபின் ஆண் சாக்குக்கணவாய்கள் சில மாதங்களில் இறந்து விடுகின்றன. பெண் சாக்குக்கணவாய்கள் முட்டையிட்டவுடன் இறந்து விடுகின்றன.
நன்றிகள்.