Thursday 18 July 2013

மாப்பிள்ளைகல் எனப்படும் இளவட்டக்கல்.................!

நண்பர்களே தமிழனின் பாரம்பரிய விளையாட்டை (இளவட்டக்கல்) இன்றும் தொன்றுதொட்டு கடைபிடிக்கும் கிராமம், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அயன்வடமலாபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் மற்றும் புது அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத திருவிழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் மாப்பிள்ளைகல் எனப்படும் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சிநடைபெற்றுவருகிறது.


இந்த ஆண்டுக்காக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. போட்டி ஆரம்பத்தில் சுமார் 110 கிலோ எடையுடைய உருண்டை வடிவத்தில் உள்ள வழுவழுப்பான கல்லினை தண்ணீரால் நனைத்து மஞ்சள்பொடி, குங்குமம் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து 18 வயது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இளவட்டகல்லை தூக்கும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கல்லை தூக்கினர். இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பங்கேற்று கல்லை தூக்க முயற்சி செய்தனர்.

பண்டைய காலம் தொட்டே வீரத்திற்கும், விவேகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்கள் தமிழர்கள். அதனை நம்முடைய பண்டைய விளையாட்டுகளில் இருந்து நாம் காணலாம். குறிப்பாக சிலம்பாட்டம், கபடி, இளவட்டக்கல் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றைக்கு திருமணம் என்றால் மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க மாப்பிள்ளை பார்க்கும் வேலை, அவருடை குணம், சொத்து மதிப்பு இவற்றினை பார்க்கும் சூழ்நிலை நிலவுகிறது.

ஆனால் அன்றைக்கு நம்முடைய தமிழர்களோ வீரமுள்ள ஆண்மகனை பெண்ணிற்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுத்தனர். அதற்காக வைக்கப்பட்ட போட்டி இளவட்டக்கல்.

வலியுமையுள்ள கல்லை தூக்கும் ஆண்மகனால் தங்களின் பெண் காலம் முழுவதும் நன்றாக பார்த்துக்கொள்ளும் தகுதி இருப்பதாக கருதினர் அக்காலத்தினர். இது திருமணத்திற்கு மட்டுமல்லாது இளைஞர்களின் உடலை கட்டுக்கோப்பாகவும் வைக்க உதவியது.

ஆனால் காலப்போக்கில் நிலைமகள் மாறினாலும் இன்றைக்கும் தமிழகத்தில் உள்ள சில கிராமங்களில் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அப்படி நடைபெறுகின்ற கிராமங்களில் ஒன்றுதான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அயன்வடமலாபுரம்.
நன்றிகள்.