Tuesday 23 July 2013

தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே..................!

மது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை "உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு.

இவ்வுண்மையைத் "தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு.

தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்' வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது.


த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்.

 தமிழுக்கு "முத்தமிழ்' எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும்.

நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.

சைவ சமய ஆச்சாரியராகிய ஞானசம்பந்தரை, நாம் "திரு' என்ற அடைமொழி சேர்த்து, திருஞானசம்பந்தர் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால் அவரோ, தம் பெயருக்கு முன் "தமிழ்' என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் "தமிழ் ஞானசம்பந்தன்' எனக் குறிப்பிட்டுக் கொண்டார். இது நமக்குத் தமிழையும் சம்பந்தரையும் ஒன்றாகக் காட்டுகிறது.

வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர்.

இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பன ஆகும்.

 நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.

"தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. "தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர்.

இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.

 இனிமைச் சிறப்பு

"தமிழ்' என்பதற்கு "இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை "இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.

"பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது: "போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?

' என்னே தமிழின் சுவை! "அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?

"தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே. என்னே தமிழின் இனிமை!

 தன்னைப் "பித்தன்' என்று சுந்தரமூர்த்தி நாயனார் வைதபொழுது, இறைவன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தாராம். காரணம், "தமிழால் வைதான்'' என்பதே. இதனாலேயே இறைவனுக்குத் "தமிழால் வைதாரையும் வாழவைப்போன்'' என்ற பெயரும் ஏற்பட்டிருக்கிறது.

புதிதாக இல்லறத்தில் வலக்காலை எடுத்து வைக்கும் மணமக்களை நோக்கி, "தமிழும் அதன் இனிமையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள்'' என்று நல்லறிஞர்கள் வாழ்த்துக் கூறி வருவது தமிழகத்தின் வழக்கமாக இருந்து வருகிறது.

 நன்றி என்பதைக் குறிக்கும் "தாங்சு(ஸ்)' என்ற ஆங்கிலச் சொல்லும், நல்லது என்பதைக் குறிக்கும் "அச்சா' என்ற இந்திச் சொல்லும், அதன் வலிய ஒலியால் அச்சுறுத்துவது போலத் தோன்றும். தமிழில் நன்றி, வணக்கம் என்பது மட்டுமல்ல, "இது மக்கள் தன்மைக்கு ஒவ்வாது'' என்று வைவதுகூட அதன் மெல்லோசையால் வாழ்த்துவது போலத் தோன்றும். இது நமது மொழியில் இயல்பாகவே அமைந்துள்ள ஒன்று. என்னே தமிழின் இனிமை!

 கொல்லிமலைக் காட்டிலுள்ள ஓர் ஆளிடம் தேன் கொண்டுவரும்படி சொல்லியிருந்தேன். அவன் அன்று வராமல் மறுநாள் வந்து வெறுங்கையோடு நின்றதால் சிறிது கோபித்தேன். அவன் பேசினான்.

"நேற்றே மலைக்கு நடந்தேன், பலவிடங்களில் அலைந்தேன்; இறுதியில் பெரும் பாறைத்தேன் கண்டு சிறிது மலைத்தேன்; ஒரு கொடியைப் பிடித்தேன்; ஏறிச் சென்று கலைத்தேன்; சட்டியில் பிழிந்தேன்; நன்றாக வடித்தேன்; அதனைக் கண்டு மகிழ்ந்தேன்; அதில் சிறிது குடித்தேன்; களித்தேன்; அயர்ந்தேன்; மறந்தேன்; இன்று காலை எழுந்தேன்; நினைத்தேன்; தேனை அடைத்தேன்; எடுத்தேன்; விரைந்தேன்; நடந்தேன்; வந்தேன்; சேர்ந்தேன்; இப்போதுதான் உங்கள் ஆளிடம் கொடுத்தேன்'' என்று.

 நானும் இதைக்கேட்டு மகிழ்ந்தேன். அவனுக்கு உரியதையும் தந்தேன். அடடா! எப்படி தேன்? எவ்வளவு தேன்? ஒவ்வொரு சொல்லிலும் தேன் சொட்டுகிறதே! இதைப் பார்த்தேன், குடித்தேன் என்று கூறாமல் "படித்தேன்' எனக் கூறுங்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு படி "தேன்' என ருசிக்கும். என்னே தமிழின் இனிமை!

 எளிமைச் சிறப்பு!

 தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண இயலாது.

 தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல, படிக்கவும் எளிது. தமிழ் ஓர் எழுத்துக்கும் ஒரே ஒலியானதால் எவரும் எதையும் படிக்க முடியும். உயிரெழுத்து, மெய்யெழுத்து, கூட்டெழுத்து ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தம் 247 எழுத்துக்களே.

இவைகளை அறியப் பெரியவர்களுக்குச் சில வாரங்களும், சிறியவர்களுக்குச் சில மாதங்களும் போதுமானது. பின் எடுத்த நூல்களையெல்லாம் படிக்கலாம். ஆகவே, தமிழ் படிக்கவும் எளிதானது.

 தமிழ்மொழி பேசவும் எளிது. தமிழ்ச் சொற்களில் 100 சொற்கள் எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லாக ஒலித்துப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் மேல் உதடு, கீழ் உதடு, மேற்பல், கீழ்ப்பல், நுனிநாக்கு, அடிநாக்கு, நடுநாக்கு, அண்ணாக்கு, உண்ணாக்குக் கொண்டே ஒலிப்பதாக இருக்கும்.

தொண்டைக்குக் கீழே வேலையேயிராது. வடமொழிச் சொற்களில் பெரும்பான்மையானவை அடிவயிற்றின் துணையின்றி ஒலிக்க முடியாதவை.

இவ்வாறு வலிந்து ஒலிப்பதால் நாவும் உலர்ந்து, தொண்டையும் வறண்டு குடலும் காய்ந்துவிடுகிறது. ஆகவே, இதுகாறும் கூறியவற்றால், தமிழ் மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் கூட மிகவும் எளிமையானது என நன்கறியலாம்.

தமிழின் சிறப்பு

நண்பர்களே!!! நமது பழம்பெருமை பற்றிய கட்டுரையை உங்களுடன் பகிர நினைத்து உருவானதே இந்த கட்டுரை. என்னதான் தமிழைப் பற்றி எழுதினாலும் இது மிகக் குறைவே. நம் தமிழின் சிறப்பு அப்படிப்பட்டது. நான் அறிந்த விசயங்களில் இருந்து தொகுத்துள்ளேன். இதை அனைவருக்கும் கொண்டு சேர்த்தால் நமது தமிழின் பெருமையும் தமிழரின் சிறப்பும் விளங்கும்.

தமிழராய்ப் பிறந்தோம் ஆனால் டமிளராய்த்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதரில் முதல் மனிதன் ஆதாம் என்பது ஒரு கருத்தென்றாலும் அந்த ஆதமைப் படைத்தவன் எந்த கடவுள் என்பதில் இந்த மனிதன் பிரிந்துதான் இருக்கின்றான். "மனிதன் என்றுமே ஏதோவொரு பிரிவினைக்கு உட்பட்டவன் போலும்". அப்படி ஏதோ ஒரு விளைவின் காரணமாகப் பிறந்து இன்று "தமிழர்" என்று இருக்கும் நம்மைப்பற்றிய நாம் அறிந்து கொள்ளவே இக்கட்டுரை.

நாம்தான் தென்னிந்தியாவின் முதல் மக்கள் ஆனால் நாம் மத்திய ஆசியா, வட ஆசியா போன்ற பகுதிகளில் இருந்து தென்னிந்தியா வந்ததாகவும் கருதப்படுகிறோம். என்பதில் அறியலாம். நம்மையே நாம் அறியமுடியாத பழமைச் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று. மேலும் நாம் திராவிடர்கள் என்று அழைக்கப்படுகின்றோம். அதென்ன திராவிடர்கள்?

நமது தாய்மொழியாம் தமிழுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் துளு இந்த மொழிகள் பேசுபவர்களையே திராவிடர்கள்

என்றும் விளிக்கப்படுகிறது.

மேலும் சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் அல்லது தமிழர்கள்தான் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இக்கருத்து இன்னும் சர்ச்சையில்தான் இருக்கிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

மேலும், இந்த மொழிக்குடும்பத்தில் மட்டும் மொத்தம் 85 மொழிகளாம். இதில் விந்தை என்னவென்றால் ராபர்ட் கார்டுவெல் என்ற அயர்லாந்துக்காரர் இந்த திராவிட மொழிகளின் ஒப்புமையைப் பற்றி ஆராய்ச்சி செய்து "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்ற நூலை 1856 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார்.

இவரே "திராவிட மொழி நூலின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார். நமது மொழியின் சிறப்பை நம்மைவிட மற்றவர்களுக்குத்தான் அதிகம் தெரிந்துள்ளது என்பது வேதனையான செய்தி.

கி.மு.6000 ஆண்டுகள் பழைமையான சிந்து சமவெளி நாகரீகத்தைப் பற்றியேதும் உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும் அங்குள்ள இலிங்க வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் கிடைத்துள்ள சான்றுகளின்படி இன்றைய இந்து சமய வழிபட்டு நாகரீகம் அப்பொழுதே தோன்றியிருப்பது வெளிச்சமாகிறது.

மேலும் க(ஹ)ரப்பா, மொக(ஹ)ஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் உள்ள குறியீடுகள், நமது தமிழ்நாட்டின் காவிரி கழிமுகப் பகுதியில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரியது.

நமது தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்...இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

நாம்தான் இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பதில் அனைவரும் பெருமைபடுதலுடன் ஒற்றுமையுடன் பெருமை சேர்க்கவும் வேண்டியது அவசியம்.

இதைவிட இது நமது மண்தான் என்பதற்கான ஆதாரங்களும் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. கி.மு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மண்ணில் புதைக்கப்பட்ட மண்பாண்டங்களில் உள்ள எழுத்துக்களும் நமது இலக்கிய நூல்களில் உள்ள குறிப்புக்களும் ஒத்துப்போகிறது என்பது இது நமது மண்தான் என்பதை ஆணித்தரமாய் பறைசாற்றுகிறது. ஆனால் நமக்குத்தான் நமது நாடு என்றால் இளக்காரம். 

ஒரு காலத்தில் நமது தமிழ்நாடு மெட்ராசு(ஸ்) என்றே அழைக்கப்பட்டது. இன்றும் சிலர் அப்படித்தான் அழைக்கின்றனர் என்பது கொடுமையானது. இதனை தமிழ் நாடு என்று மாற்றுவதற்காக 1956 ஆடி 27 ல் உண்ணாவிரமிருந்து உயிர்துறந்தவர் தியாகி சங்கரலிங்கனார் என்பவர்.

இவரது கொள்கையை அப்போதைய காங்கிரசும் ஏற்கவில்லை. தொடர்ச்சியாக 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த பின்னரே 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.

ஒரு உயிரை பலிகொடுத்தே நாம் நமது உரிமையை நிலை நாட்டியிருக்கிறோம். ஆனால் இதனை டமிள் நாடு என்று கூறும் தமிழராய்ப் பிறந்த சில தமிழை கெடுக்கும் கோடாரிக்காம்புகளும் இருக்கின்றனர். 

இது நமது நாடு, நமது மண், நமது மொழி என்ற பெருமையைக் கட்டிக்காப்பது நமது கடமையே. கல் தோன்றா காலத்தே முந்தோன்றிய மூத்தகுடி நாம். பலவகை சிறப்புக்கள் வாய்ந்தது நமது மொழி.

தமிழராய் பிறந்த நாம் ஏன் தமிழில் பேசுவதற்கு மட்டும் கூச்சப்படவேண்டும். நாலு பொண்களை பார்த்தால் நாக்கில்  தமிழ் வருவதேயில்லை. நாக்கு சிக்குகிது. அப்படி என்ன கூச்சம்? இந்தப் பைந்தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் பெருமைப்படவேண்டும்

ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே இந்த சமுதாயம் நம்மை மதிக்குமாம். என்ன ஒரு அபத்தமான கருத்து இது. நாம்தான் சமுதாயம் என்பதை ஏன் மறந்துவிடுகிறோம். தோழர்களே, ஒன்று மட்டும் நாம் மறந்துவிடவேண்டாம்.

இது நமது தாய்மொழி. தாயை மதிப்பது போலவே இதனையும் நாம் மதிக்கவேண்டும். இங்கு உள்ளவர் எவர் தம் தாயை பழிப்பர்?!

எவருமில்லை. ஆனால், தாய் மொழியில் பேசுவது மட்டும் கேவலம் என்று நினைக்கிறோம். நம்மை நாம் மாற்றிக்கொள்வோம். தமிழிலேயே பேசுவோம். தமிழராய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம். நமது பெருமையை அனைவருக்கும் எடுத்துச் சொல்வோம்.

தமிழின் தொன்மைச் சிறப்பு

உலகில் முதல் முதல் மக்கள் தோன்றிய நாடு தமி ழகமும், அதனைய டுத்திருந்த கடல் கொண்ட தென் னாடுமே என நில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காவிரிப் பூம்பட்டினத்தில் நிலைத்து நின்று வாழும் தமிழ் மக்களை ‘பதியெழு அறியாப் பழங்குடியினர்’ என இளங்கோவடிகள் கூறுகிறார். இதற்கு உரை கூற வந்த அடியார்க்கு நல்லார்

‘படைப்புக் காலந்தொட்டே வாழுங் குடியினர்’ எனக் கூறியிருக்கிறார்.

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்’

என ஆசிரியர் பரிமேலழகர் கூறுகிறார். இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழியின் காலத்தை எவரும் கணித்துக் கூறுவதற்கில்லை. ஏனெனில் அது ஒரு காலங்கடந்த மொழி, அதற்கு வரலாறு இல்லை. எனவே அதன் தொன்மையை ஆராய்ந்து கூறுவதற்கில்லை. எனினும் காவியமும், ஓவியமும், காவிரியும், வைகையும், கட்டடமும், சிற்பமும், கல்வெட்டும், புதை பொருட்களும் ஒருவாறு தமிழ் மொழியின் தொன்மையை உலகிற்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் ‘தமிழ் மொழியே உலகின் முதல் மொழி’ எனக் கூறுவர். இன்னுஞ் சிலர் ‘இலத்தின்’, ‘கிரீக்’ மொழிகளுக்கு முந்திய மொழி’ எனக் கூறுவர். இவற்றில் எது உண்மையாக விருப்பினும் அது தமிழின் தொன்மைச் சிறப்பைக் காட்டுவதாகவே இருக்கும்.

முற்காலத்திய சீன யாத்திரிகர் யுவாங் சுவாங் முதல் பிற்காலத்திய ஜி. யு. போப், கால்டுவெல் வரையுள்ள வேற்று நாட்டினர், வேற்று மதத்தினர், வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றி பாராட்டப் பட்டிருக்கிறது. இந்த அளவிற்கு பாராட்டைப் பெற்ற ஒரு மொழி உலகின் பழைய மொழிகளில் எதுவுமேயில்லை.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப்பெற்று வந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே அதன் மொழியின் தொன்மைக்கு சான்று.

1700 ஆண்டுகளுககு முன்பு சோழ மன்னர்கள் பலர் மலாயாவை, கெடாவை, சயாமை கைப்பற்றி ஆண்ட செய்திகளும், அவர்களில் முதலாம் குலோத்துங்கன் பர்மாவை ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்களாலும், வரலாறுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்ற உண்மைகளாகும்.

இதனால் தமிழ் மொழியானது அக்காலத்திலுமே உள்நாட்டை ஆட்சி புரிந்தும், வெளிநாட்டை ஆட்சி புரியும் ஒரு வல்லரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கின்றது என்பது தெரிய வருகிறது.

2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன. 2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. 2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் ‘நற்றிணை’ என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.

2800 ஆண்டுகளுக்கு முன்பு உரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமோன் காலத்திலேயே தமிழ் நாட்டிலிருந்து, தமிழ்நாட்டுக் கப்பல்களில், தமிழ் நாட்டுப் பண்டங்களை, தமிழ் நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டு சென்று தமிழ் மொழியிலேயே விலை பேசி விற்று வந்திருக்கின்றனர்.

அப்பொருட்களுக்கு இன்னும் தமிழ்ச் சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன.

அரிசி ‘ரைஸ்’ எனவும், சந்தனம் ‘சண்டல்’ எனவும் தேக்கு ‘டீக்’, எனவும் கட்டுமரம் ‘கட்டமெரன்’ எனவும், இஞ்சி ‘ஜிஞ்சர்’ எனவும், ஓலை ‘ஒல்லா’ எனவும் கயிறு ‘காயர்’ எனவும் ஆயின. காலப் போக்கில் இத் தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்ச், ஆங்கில அகராதிகளிலும் புகுந்து கொண்டு விட்டன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் ‘தொல்காப்பியம்’ ஒன்றே. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் தோன்றி யிருக்கின்றன. இவ்வுண்மையை ‘தோலென மொழிப தொன் மொழிப்புலவர்’ என தொல்காப்பியரே தமது நூலில் கூறியிருப்பதால் நன்கறியலாம்.

3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாக நம்பப்பெறுகிற நூல்களில் ‘அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. இதை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுவோரும் உண்டு.

தமிழகத்தில் மூன்று கடற்கோள்கள் அடுத்தடுத்துத் தோன்றி கடல் நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பை, மக்களை, தமிழ்ச் சுவடிகளை அழித்துவிட்டன என்றும், இது நடந்த காலம் 3000ம், 5000ம், 9000ம் ஆண்டுகளாயின எனவும் கூறப்படுகிறது.

மேலை நாட்டினர் இதை மறுத்து இரண்டே கடற்கோள்கள்தான் எனவும் அவை 5000 ஆண்டுகளுக்கு முன்பும், 7000 ஆண்டுகளுக்கு முன்பும் எனக் கூறுகின்றனர்.

தமிழ் நூல்களின் அழிந்த காலத்தையே நம்மால் அறிய முடியாத போது அது தோன்றிய காலத்தை எவ்வாறு அறிவது? அதற்கு முன்னே இலக்கணம் தோன்றிய காலம்? அதற்கு முன்னே உரைநடை தோன் றிய காலம்? அதற்கு முன்னே எழுத்து தோன்றிய காலம்? அதற்கு முன்னே மொழி தோன்றிய காலம் எப்போது? என்பதை எவர் அறிந்து கூற இயலும்?

ஏதேனும் கூற வேண்டுமானால் தமிழ்மொழி தோன்றிய காலத்தை அறிந்து கூறுவது மனித அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று என்றுதான் கூறியாக வேண்டும்.

மேற்கண்ட சில சான்றுகளே தமிழின் தொன்மைச் சிறப்பை உலகிற்கு உணர்த்துமே!
நன்றிகள்.