Tuesday 15 January 2013

நோயை உமிழ்நீர் சொல்லும்........!


உங்கள் நோயை உமிழ்நீர் சொல்லும்! உமிழ்நீர் மூலம் மரபணு நோய்களைக் கண்டறியும் பரிசோதனை சென்னையில் செய்யப்படுகிறது அப்பாவும், தாத்தாவும், கொள்ளுத் தாத்தாவும், எள்ளுத் தாத்தாவும் நமக்கு சேர்த்து வைத்துவிட்டுப் போவது பரம்பரைச் சொத்து மட்டுமல்ல; அவர்களுடைய தனிப்பட்ட குணாதிசயம், ரசனை, பழக்க வழக்கங்கள் எல்லாமே உங்களை ஏதோ ஒருவிதத்தில் தாக்கத்துக்குள்ளாக்குகிறது.

நமது மரபணுக்களில் பரம்பரை பரம்பரையாக கடத்தப்படும் சமாச்சாரம் இது என்று அறிவியல் சொல்கிறது. உங்கள் தாத்தா நாதசு(ஸ்)வர வித்வானாக இருந்திருக்கும் பட்சத்தில், நீங்கள் அட்டகாசமாக சாக்ச(ஸ)போன் வாசிப்பவராக இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

இவை மட்டுமின்றி, அவர்களுடைய நோய்களையும் நம் மரபணுக்களில் விதையாக ஊன்றிச் செல்கிறார்கள் என்பதுதான் வேதனை. அவர்கள் விட்டுச் செல்லும் சொத்து மட்டும் வேண்டும், நோய்கள் வேண்டாம் என்றால் எப்படி?

கவலைப்படாதீர்கள், இந்தப் பிரச்சினையைத் தவிர்க்கவும் அறிவியல் ஒருவழியை கண்டுபிடித்துத் தந்திருக்கிறது. செர்சி(ஜி) மிகாலோவிச் ப்ரின் என்று பெயர் சொன்னால் உடனே தெரியாது.

ஆனால், ‘கூகுள்’ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் என்று சொன்னால் தெரியுமில்லையா?

இந்த செர்சியின் மனைவி ஓர் உயிரியல் தொழில்நுட்பப் பட்டதாரி. கணனி  விற்பன்னரும், உயிரியல் தொழில்நுட்பம் தெரிந்தவரும் இணைந்தால் என்னாகும்?

ஆராய்ச்சிதான். மனித மரபணுக்கள் தொடர்பாக நிறைய துறை சார்ந்த பேராசிரியர்களிடம் நாட்கணக்கில் பேசிப் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். 

அதாவது நமது மூதாதையர்களிடமிருந்து நமது மரபணுக்களில் கடத்தப்படும் செய்திகள், கணனிகளில் சேமிக்கப்படும் தரவு தளம் (Database) மாதிரி அவற்றை வாசித்துப் புரிந்து கொண்டால், மென்பொருளை திருத்துவது மாதிரி நமக்குத் தேவையான சில திருத்தங்களை செய்துகொள்ளலாம்.

இதெல்லாம் தேவையற்ற வேலை. எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளாத வாழ்க்கையே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்றெல்லாம் நிறைய பேர் செர்சியை விமர்சித்தார்கள். செர்சி மெனக்கெட்டு இவ்வளவு ஆராய்ச்சிகளுக்குள் தன்னை உட்படுத்திக் கொள்ள ஒரு தனிப்பட்ட காரணம் இருந்தது.

அவரது தாயாரை பார்கின்சன் நோய் தாக்கியிருந்தது. இது பரம்பரையாக தாக்கக்கூடிய நோய் என்று அவர் நினைத்தார். இதிலிருந்து தன்னை எப்படி எதிர்காலத்தில் காத்துக்கொள்வது என்கிற தேடலில் மூழ்கியதன் விளைவே இதெல்லாம் (பிற்பாடு அந்த நோய் பரம்பரையாக கடத்தப்படுவதல்ல என்ற முடிவுக்கு அவர் வந்தது வேறு கதை).

இப்படியாகத்தான் 23andMe என்கிற மரபணு பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிற ஒரு நிறுவனத்தை தம்பதி சமேதரரா தொடங்கினார்கள். 23 என்கிற எண் நம்முடைய குரோமோசோம் சோடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. 2007ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மரபுரீதியாக நமக்கு என்ன நோய்கள் வரும் என்பதை அறிந்துகொள்ள ஓர் எளிமையான முறையைக் கண்டறிந்தது.

அதாவது நம் எச்சிலைத் துப்பினால் போதும், அதில் இருக்கும் மரபணுக்களை ஆராய்ந்து, அவர்கள் வாசித்துக்கொள்வார்கள். அதை அடிப்படையாகக் கொண்டு நமக்கு வரக்கூடிய மரபார்ந்த நோய்களை அறிவார்கள். இவற்றைத் தவிர்ப்பதோ, கட்டுப்படுத்துவதோ எப்படி என்று மருத்துவர்கள் மூலமாக ஆலோசனை சொல்வார்கள்.

2008ம் ஆண்டு இந்தச் சோதனை முறையை வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக, ‘டைம்’ பத்திரிகை அறிவித்தது. அமெரிக்கர்கள் பலரும் கடந்த ஐந்தாண்டுகளில் இச்சோதனையை மேற்கொண்டு, எதிர்காலத்தில் தமக்கு விதிக்கப்பட்டிருக்கும் நோய்களின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா..? அவர்களுக்கு மட்டும்தான் பரம்பரை நோய்கள் வருமா..?

இந்த நவீன சோதனைமுறை அவர்களுக்கு மட்டும்தானா என்று அவசரமாக மனம் குமுறாதீர்கள். நமக்கும் இந்த வசதி வந்துவிட்டது. அதிலும் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மரபணு நோய்களை முன்கூட்டியே கண்டறியும் பரிசோதனையை செய்யும் நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கிறது.

எக்சு(ஸ்)கோட் வாழ்க்கை அறிவியல் (Ekskot Life Sciences) என்கிற நிறுவனம் இந்தக் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள மட்டுமே பெரும் முதலீட்டில் களமிறங்கியிருக்கிறது. அதற்காக சோதனைக்கு நம்முடைய சொத்தையே எழுதி வாங்கிவிடுவார்களோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

சோதனைக் கட்டணம் ரொம்பவும் அதிகமல்ல, அதே நேரம் ரொம்பவும் குறைவுமல்ல. இச்சோதனையை மேற்கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது என்ன? www.xcode.in என்கிற இணையதள முகவரிக்குச் சென்று, உங்கள் மரபணுக்களை சேகரிக்க வேண்டியஉபகரனத்தைக் கோரலாம்.

இரண்டு நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்துவிடும். எச்சிலை சிறியகுழாயினுள் துப்பிவிட்டு, அவர்கள் குறிப்பிடுவதைப்போல தயார் செய்துவிட்டு போன் செய்தால் போதும், பொதி (Courier)மூலமாக அவர்களே வீட்டுக்கு வந்து பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

மருத்துவமனைக்கோ, பரிசோதனைக்கூடத்துக்கோ அலைய வேண்டியதில்லை. மொத்தமே அவ்வளவுதான். உங்களுடைய அறிக்கையை  நான்கிலிருந்து ஆறு வாரங்களுக்குள்ளாக உங்கள் வீட்டுக்கே அனுப்பிவிடுவார்கள்.

சர்க்கரை நோய், கொழுப்பு, இதயநோய், வாதம் தொடர்பான நோய்களுக்கான சோதனை முறைகள்தான் இப்போதைக்கு இருக்கின்றன. எதிர்காலத்தில் மரபுரீதியாக வரக்கூடிய மற்ற நோய்களைக் கண்டறிவதற்கான வசதியும் இங்கே கிடைக்கும்.

உங்களுக்கு என்னென்ன நோய்கள் வரக்கூடுமென்று சொல்லுவதோடு, அவற்றைத் தவிர்க்கவோ கட்டுப்படுத்தவோ என்னென்ன மாதிரியான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் ஆகியவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம் என்று மருத்துவ ஆலோசனையும் தருகிறார்கள்.

இப்போது இருக்கும் சோதனை முறைக்கு அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய்வரைதான் செலவாகும். அப்புறமென்ன? என்னென்ன நோய் வருமோ என்று அஞ்சி நடுங்காமல், ஒரு சோதனையை எடுத்துவிட்டு வருமுன் காக்கத் தயாராகுங்கள். 
நன்றிகள்.