Sunday 6 January 2013

தமிழ்க்கலாச்சாரத்தில் வாழை இலை.......!


தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை.

இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் . நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே.

விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு.

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். 

உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் .

குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . 

எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு.வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம்.

வாழை இலையினைக் குப்பையில் எறிந்தாலும் அதனால் பூமி மாசு அடைவதில்லை, தானாகவே மண்ணோடு மண்ணாக உக்கிவிடும். 

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும்.

முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.
நன்றிகள்.