Tuesday 10 September 2013

வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது. இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நோய் உண்டாக்கும் நுண் உயிரிகளைக் (bacteria) கொல்லும் சக்தியை உடையது. வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.

நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.


இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.

இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும். இதனால் ஒளிச்சேர்கையின் போது வெளியாகும். பிராணவாயுவில் வெகு சக்தியுள்ள பிராண வாயுவின் ஒரு வகை (Ozone) (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது. இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால் , வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம் , பூ, இலை , இலையின் ஈர்க்கு , வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த, ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.

இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள். இது அம்மை நோய் இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும்.

இதைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள். அம்மை நோய் இறங்கிய பின் தலைக்குத் தண்ணீர் விடுவார்கள். அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசிப் பின் உடம்பைக் கழுவுவார்கள்.

சமீப காலமாக அறிவியல் ஆய்வுகள் வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விச கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது எனத் தெளிவுபடுத்துகிறது. 

மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பார்கள். இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவர்களிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.

நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதைக் கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை, குடற்புண், பாம்புகடி, வீக்கம், காய்ச்சல் போன்றவைகளையும் இது குணப்படுத்த வல்லது.

வேப்பம்பூ ஆனது நிம்பசு(ஸ்)டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஊக்கிகளில் (On hormones) ஒன்றை ஒத்துப் போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் , வாந்தி, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்துகிறது.

மரங்கள் அனைத்திலும் புனிதமாகவும், பலவகையான நோய்களை குணப்படுத்த வல்லதுமாக இந்த வேப்பமரம் கருதப்படுகிறது. இதனால் நாமும் பாடசாலைகள்,விளையாட்டு மைதானங்களைச் சுற்றி, சாலை ஓரங்களில், குளக்கரை போன்ற அனைத்துப்பொது இடங்களிலும் நட்டு வைத்து பராமரித்தால் விஞ்ஞான ரீதியாகவும், சாத்திர ரீதியாகவும் பல நன்மைகளை பெற்று வாழலாம்.

ஒவ்வொரு கிராமமாக இதற்கான முயற்சி அனைத்துத் தரப்பு மக்களாலும் இணைந்த செயற்பாடே முழுமையான வெற்றிக்கு வழிவகுக்கும்.
நன்றிகள்.