Monday 9 September 2013

கற்கோடரிகள் 15,00,000 ஆண்டுகள் பழமையானவை.....!

“தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் - பழங்கற்கால கற்கோடரிகள் 15,00,000 – (1.51 மில்லியன்) ஆண்டுகள் பழமையானவை ! “

"கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி எம் தமிழ் குடி!"


நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராபர்ட் புரூசு(ஸ்) ஃபூட் என்னும் புவித் தரைத்தோற்ற வியலாளர் பல்லாவரம் அருகே தரையில் கிடந்த ஒரு கல்லாலான கருவியைக் கண்டெடுத்தார். இது பின்னர் வரலாற்றைப் புரட்டிப் போடும் ஆய்வுகளை தொடங்கி வைத்தது. இந்தியாவின் பழங்கால வரலாறுகள் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை இவரையே சாரும்.

சென்னை பல்லாபுரத்தைத் தொடர்ந்து (பல்லாவரம்) பூண்டிக்கருகில் அத்திரம் பாக்கம் குடத்தலை (கொற்றலை/கொசத்தலை) ஆற்றுப் படுகைகளிலும், குடியம் மலைப்பகுதிகளிலும் கிடைத்த பழங்கற்காலக் கற்கோடரிகள், 2,00,000 – ஆண்டுகள் பழமையானவை என (1893-1912 கி.பி.) சர் ராபர்ட் புருசு பூஃட் (Father of Indian Pre-history) அறிவித்தார்.

மைக்கேல் வுட் என்ற உலகப் புகழ் பெற்ற ஆங்கிலேய நாட்டின் வரலாற்றாய்வர் தனது “இந்தியாவின் கதை” (“ The Story Of India ”) (http://www.pbs.org/thestoryofindia) எனும் வலைத்தளத்தில் 70,000 – 50,000 ஆண்டுகட்கு முன்னர் இந்தியாவில் முதல் மனிதன் குடியேறினான் என்று பதிவு செய்தார் !

பிற வரலாற்றாசிரியர்களும் அவ்வாறே குறிக்கின்றனர். இது தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் சூழ்ச்சியாகவே கருதப்படுகிறது.

சென்னையில் இருந்து சுமார் 60 கி.மி தொலைவில் உள்ள திருவள்ளூரில் இருக்கும் இந்த அத்திரம்பாக்கம் என்னும் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்கற்கால கருவிகளை . ஆய்வு செய்ததில் இவை சுமார் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு குறையாத தொன்மை வாய்ந்தவை என்பது தெரிய வந்தது.

மேலும் இவ்வளவு தொன்மை வாய்ந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஆய்வு செய்த சாந்தி பப்பு என்னும் ஆய்வாளர் “Early Pleistocene presence of Acheulian hominins in South India” என்ற ஆய்வு அறிக்கையில் இதை வெளியிட்டார். 

இந்த விடயத்தை அறிந்ததும் இந்த ஆய்வுகள் குறித்த மேலும் பல தகவல்களைப் பெற அங்கு விரைந்தோம். ஆனால் அங்கு விசாரித்ததில் இப்படி ஒரு ஆய்வு நடக்கிறது என்பது அந்த கிராம மக்கள் பலருக்குமே தெரியாதது வருத்தமளித்தது.

மேலும் இரு சக்கர வாகனம் கூட பயனிக்க முடியாத அந்த காட்டிலும் நடந்து சென்று விடயம் தெரிந்த ஓரிருவரிடம் வழி கேட்டுச் சென்றும் அந்த இடத்தை அடைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம். அதன் பிறகு இந்த ஆய்வுகளை எடுத்து நடத்தும் நிறுவனத்திடம் விசாரித்த போது.

இந்த ஆய்வுகள் நடத்துவது நிறுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆனது என்றார். ஆவலுடன் நாங்கள் ஏன் என்று கேட்ட போது மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்று அவர் கூறியது அதிர்ச்சி அளித்தது!

இன்னும் எத்தனை இரகசியங்கள் இப்படி இருளில் மூழ்கியதோ? 

இப்படியே உலகத்தில் தமிழர்களின் வரலாறுகள் இருட்டடிப்புச் செய்யப்படுவதால் தமிழர்களின் சிறப்பு உலகிற்கும் தற்போதைய தமிழ்ச்சந்ததிக்கும் வருங்கால தமிழ்ச்சந்ததிக்கும் மூடிமறைக்கப் பட்டுவிடும். 

இவ்வாறான இழிநிலை மாற்றப்படுவதற்கு தமிழர்களின் தலைமையில் தமிழர்களின் வரலாற்றுத்தேடல் எவ்வித கட்டுப்பாடுகளற்ற சுதந்திர அமைப்பின் ஊடாக தமிழர்களின் பணமுதலீட்டில் நடாத்துவதற்கான முயற்சியினை தமிழ், தமிழ்மக்களுடைய ஆர்வலர்கள் ஒருபோது அமைப்பை ஏற்படுத்தி வரலாற்றுத் தேடலை மேற்கொள்வதே மிகச்சிறந்த வழியாகும்!.

நன்றிகள்.