Wednesday 11 September 2013

சாம்பிராணி இலைகள் அடித்தட்டு மக்களாலும்.....!

முதலில் சாம்பிராணி இலைகளைப் பற்றி இங்கே காணலாம். சாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும். இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும்.

இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும். இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜசுத்(ஸ்)தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது. 


இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது. தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், செரிமானக்கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது.

கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும். மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக் கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.

தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும். தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும். 

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட சாம்பிராணி இலைகளை நீரில் போட்டு ஊறவைத்துக் குளித்தால் சலதோசம், இருமல், சளி, தலைவலி ஆகிய நோய்கள் அண்டாது என்பதுடன் குளித்தபின் நல்ல வாசனையாகவும் இருக்கும்.

மேலும் தேமல் போன்ற தோல் நோய்களும் குணமாகும் என்பதால் தான் அவ்வையார் சாம்பிராணி இலைகளை ஊறப்போட்ட நீரில் நாள்தோறும் குளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். சாம்பிராணி இலைகள் அடித்தட்டு மக்களாலும் வாங்கப் படக்கூடியது என்பது செய்தி.
நன்றிகள்.