Saturday 18 February 2012

இன்றிலிருந்து முயற்சி செய்வோம்........!



நல்லவிடயம் தான். ஆனால், சிரித்த முகம் காட்டி, செல்லமாய் கொஞ்சி, ஆதரவாய் அணைத்து துயில் எழுப்பும் அம்மா... கடவுளுக்கும் மேலானவர். குழந்தைகள் அம்மாவைத் தான் அதிகம் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்குரிய அம்மாவாக, இருக்கிறோமா... என்பதை, நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது தான்.பாலகனாய் இருக்கும் வரை பாசம் காட்டுகிறோம்.


பள்ளிச் சீருடையுடுத்தியதும், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாசத்தை ஒதுக்கி விடுகிறோம். குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகத்திற்குள் எத்தனை போராட்டங்கள்... புத்தக சுமை, பாடச்சுமை, மதிப்பெண் சுமை, சகமாணவர்களுடன் ஒப்பீட்டு சுமை...

இதிலிருந்து மீள்வதற்கு, பள்ளிகளோ, பெற்றோர்களோ கற்றுத் தருவதில்லை. குழந்தைகளின் உலகத்தை புரிந்து கொள்ள... இன்றிலிருந்து முயற்சி செய்வோம். பள்ளியில் நம் குழந்தைகளை திட்டினாலும், பாராட்டினாலும், குழந்தைகளிடம் முகம் மாறாமல் அணுகவேண்டும்.

திட்டியதற்கான காரணத்தை நிதானமாக கேட்க வேண்டும். கோபப்பட்டு பேசினால், மறுமுறை நத்தைக்கூடு போல, உள்ளுக்குள்ளேயே சுருங்கி விடுவர். நம்மிடம் பேசமாட்டார்கள். பள்ளி விட்டு வீட்டிற்கு வந்தால், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், உங்கள் பிள்ளைக்கு, சாதாரண அம்மா தான். ஒரு அம்மாவாக, அன்பு காட்டுங்கள்.

காலை எழுப்பும் போது, மென்மையான சொல்லை கையாள வேண்டும். மென்மையாக அணைத்து முத்தமிட்டால், குழந்தையின் உலகம் இனிமையாகி விடும்.


அந்த இனிமையை அனுபவிக்க விடுங்கள். படிப்பு மட்டுமே குழந்தைகளின் உலகமல்ல... ஓடியாடி உற்சாகப்படுவது தான் அவர்களது வாழ்க்கை. பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி என்பது, ஆசிரியர்களின் இலக்காக இருக்கலாம். அதற்காக மதிப்பெண் பெறவைக்கும் இயந்திரமாக, மாணவர்களை நினைக்கக்கூடாது.

வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தில் தான், மாணவர்களின் ஆர்வம் மாறுபடும். சிறுகதை, பாடல், எளிய செய்முறைகளுடன் பாடம் நடத்தினால், ஈடுபாட்டுடன் படிப்பர்.

கடனுக்காக, பாடத்தை நடத்தி முடிப்பதை விட, ஈடுபாடு, ஆர்வம், கடமை உணர்வுடன் பாடம் நடத்தினால், பள்ளிப்பருவம் கசக்காது. பெற்றோரும், ஆசிரியரும் இணைந்து தான், இளைய சமுதாயத்தை இனிமையாக்க முடியும்.


படிப்பின் முக்கியத்துவத்தை மென்மையாக உணர்த்த வேண்டும். காலையில் குழந்தைகளை எழுப்புவது முதல், இரவில் தூங்கச் செய்வது வரை, அன்பான, ஆதரவான, அரவணைப்பைத் தரும் பெற்றோர்களாக இருக்க வேண்டும்.

சோகமோ, சந்தோச மோ, காதலோ... எதுவாக இருந்தாலும், குழந்தைகள் முதலில் பெற்றோர்களிடம் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப, பெற்றோர்களும் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேச வேண்டும்.

பிள்ளைகள் பேச வந்தால் தடுத்துவிடுவதை நிறுத்தி அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி நல்லவையாக இருப்பின் தட்டிக் கொடுத்தும், கெட்டவையாக இருப்பின் அதன் பின் விளைவுகளை நன்கு புரியும்படி உணர்த்தி மென்மையாகக் கண்டிக்கவும்.


அவர்களின் மனதைப் புண்படுத்தாது பெற்றோரை வெறுக்கும்படியான வார்த்தைப்பிரயோகம், தண்டனைகளையும் தவிர்த்து அன்பினூடே சிறந்த வருங்காலச் சந்ததியை உருவாக்கும் பொறுப்பு பெற்றோரிற்கே.

உங்கள் குழந்தைகளுடன் எப்போதுமே நண்பர்களாக இருங்கள், அவர்ளை விரோதிகளைப் போல் பார்ப்பதையும், நடத்துவதையும் களைந்து அன்பைச் செலுத்துங்கள்.தூய அன்பைச் செலுத்துவதற்கு பொருட்செலவு தேவை என்றில்லை.


குழந்தைகளுடன் எப்போதும் அளவளாவிக்கொள்ளுங்கள் (தொடர்பில்) இதுவே குழந்தைகளிற்கும் உங்களிற்குமான இடைவெளியைக் குறைக்கும்.

இவற்றின் ஊடாகவே இனிமையான இளைய சமுதாயத்தைக் கட்டி எழுப்பலாம் இல்லையேல் அவர்கள் வன்முறையாளர்களாகவும், கல்வி கற்பதில் ஈடுபாடு இல்லாமலும் ஒரு சமுதாயதத்தை உருவாகுவதற்கு பெற்றோர்களே காரணமாகாதீர்கள்.

நன்றிகள்.