Monday 15 October 2012

சுவாசிப்போம் தூய தமிழை...........!


"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த தமிழ் குடி" என்ற பெருமையைக் கொண்ட பெரும் இனத்தவர்கள் தமிழர்கள். அதாவது "உலகில் முதலில் தோன்றியது கல்தான். அப்படி தோன்றிய கல்லானது, காற்றிலும் மழையிலும் கரைந்து மண்ணானது.

அப்படி ஆகும் காலத்திலே, மண் உருவாவதற்கு முன்னரே, வாளோடு வீரத்துடன் தோன்றிய இனம் தமிழ் இனம்" என்பது ஒட்டக்கூத்தரின் விளக்கம். இத்தகைய தமிழ் குடியின் மரபு வழியாக வந்த தமிழை தாய்மொழியாகக் கொண்டு பேசுபவர்கள் நாம். தமிழ் மொழியின் வரலாறு அதற்கு சான்றாக உள்ளது.

கொடிய ஆழிப் பேரலைகளால் உலக வரைபடத்திலிருந்து மூழ்கடிந்த தமிழகத்தின் தென் பகுதியான 'குமரிக் கண்டம் (லெமூரியா கண்டம்)' தமிழர்கள் வாழ்ந்த பகுதி என்று தொல்லியல் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சங்ககால தமிழ் இலக்கியங்கள் இவற்றுக்கு சான்றாக உள்ளது. தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது.

நாம் பேசும் தமிழ் மொழி உலகின் தொன்மை மிக்க பல மொழிகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஒன்று என்பது நாம் பெருமைப்படக்கூடியது.

எழுத்து வடிவத்தை தன்னகத்தே கொண்டில்லாத மொழி வரலாற்றில் சிறப்புத்துவம் அடைந்ததிலை. ஆனால் பிராமி மற்றும் வட்டெழுத்துக்கள் மூலம் தமிழ் எழுத்துக்கள் தோன்றியதன் வரலாறை அறியமுடிகிறது.

ஏற‌த்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பெருமைமிக்க பழந்தமிழ் மொழியை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்றால்(?) சட்டென்று 'பயன்பாட்டின் அளவு குறைவே' என்று சொல்லிவிடும் அளவிற்கு உள்ளது.

நாம் இங்கு பேசும் மொழியில் எவ்வாறு மற்ற மொழிகளின் தாக்கம் உள்ளது என்றால், ஆங்கில மொழியானது அவ்வினத்தவரின் கலாச்சாரக் கவர்ச்சி மோகம் நம்மை எவ்வாறு இழுத்ததோ, அதே போன்றே அவ்வினத்தவரின் மொழியும் நம்மை இழுத்துவிட்டது.

ஆங்கில மொழி சமுதாய மாற்றத்தை உருவாக்கியதென்றால, சம‌ஸ்கிருத மொழி ஆன்மீகத்தின் விளிம்பாக நுழைந்து கொண்டுள்ளது.

இங்கு பேசும் மொழி, தமிழ் மொழியில் இருந்து 40 சதவிகிதமும், சமஸ்கிருத மொழியில் இருந்து 25 சதவிகிதமும், ஆங்கில மொழியில் இருந்து 35 சதவிகிதமும் கலவைகளால் ஆன எழுத்துக்களையும், வார்தைகளையும் கொண்ட ஒரு புது மொழியாக உருவெடுத்துள்ளது.

இதைப் போன்றே தமிழ்மக்கள் தமக்கு இட்டுவழங்கும் பெயர்களும் வடமொழி, ஆங்கிலம் என 90 சதவிகிதம் பிறமொழிச் சொற்களாகவே இருக்கின்றன. இந்த சூழலை நாம் வெகு மதிப்பாகவே இன்று கருதுகிறோம். நம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும்.

தற்பொழுது தமிழர் பயன்படுத்தும் பெயர்களில் இரண்டு சதவிகிதம் பெயர்கள் கூட பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களாக இருப்பதில்லை. பொருள் கொண்ட தமிழ்ப்பெயர்களைச் சூடிக்கொள்ளச் சொன்னால் முகஞ்சுளிப்பவர் அழகானதென எண்ணிச் சூடிக்கொள்ளும் வடமொழிப் பெயர்களின் பொருளை உணர்ந்திலர்.

தமிழர் தமிழ்மொழியிலே தம் பெயர்களைச் சூட்டிக்கொள்வதற்கு வேண்டிய தமிழ்ப்பெயர்களே இல்லை என்ற நிலை இங்கு இல்லை. மாறாக அறியாமையினாலே பிறமொழிப் பெயர்களைத் தமிழ்ப்பெயர்களென மயங்கிச் சூட்டிக்கொள்கின்றனர்.

இன்றைய மேலைநாட்டு நாகரீக கால ஓட்டத்தில் தமிழ்ப்பெயர்களை அடையாளங்காண்பது எளிதான ஒன்றே. மேலும், இதற்கு உதவியாக தமிழ்ப் பெயர்ப்பட்டியலை உருவாக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கு முதலில் நாம் தமிழ் மொழியின் அறுசுவையை ருசித்துப் பார்க்க வேண்டும். சுவை அறிந்துவிட்டால் பின்னர் “ருசி கண்ட பூனையைப் போல்” தமிழையே சுற்றிச் சுற்றி வருவோம்.

உலக மொழிகளில் தமிழ் மொழி 12 உயிரெழுத்துக்களையும், 18 மெய் எழுத்துக்களையும், 216 உயிர்மெய் எழுத்துக்களையும் ஒரு 'ஃ' என்ற ஆய்த எழுத்தையும் கொண்டு மொத்தம் 247 எழுத்துக்களை கொண்டுள்ளது.

"தமிழ் மொழி மனிதனைப் போன்று உயிரையும், மெய்யையும் தன்னகத்தே உடையது. இங்கு எழுத்தானது உயிர் இல்லாமல் மெய்யில்லை, 

மெய்யில்லாமல் உயிரில்லை". இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றாலும் மொழியில்லை. சற்று உள்நோக்கிப் பாருங்கள் தமிழின் சுவையை உணர்வீர். வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்ற எழுத்துகளின் மென்மையை எடுத்துக்கூறும் ஒரே மொழி தமிழ்மொழியே ஆகும்.

ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகள் இன்று நாம் பேசும் மொழியில் எவ்வளவு இணைந்துள்ளது என்பதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். 

ஆங்கிலம் பேசுவதை நாகரிக‌த்தின் விளிம்பாகக் கருதுவதே இதன் மூல காரணம். பிற மொழிகளை அனைவரும் நன்கு கற்க வேண்டும், பேச வேண்டும், அதில் புலமை பெற வேண்டும் என்ற கருத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, மேலும் அதனை முழுமையாக வரவேற்கிறோம். 

நம்மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களும், அயல் நாடுகளிலும் சென்று தொழில் செய்வதற்கு அது மேலும் வலு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு வேற்று கருத்தில்லை.

இன்று நாம் தாய்மொழி தமிழ் அல்லாதவர்களிடம் பேசும்பொழுது, அவர்களின் தாய் மொழியிலோ (தெரிந்திருக்கும் பட்சத்தில்) அல்லது உலக பொது மொழியான ஆங்கிலத்திலோ பேசுகின்றோமே அது எவ்வாறோ, அதே போன்று தாய் மொழி தமிழ் என்பவர்களிடத்தில் நாம் தமிழிலா பேசுகின்றோம் என்று சற்று யோசியுங்கள்(!) நிச்சயம் இல்லை. 

தமிழை நாம் முதன்மை மொழியாகக் கருதாமல் வேரு எவர் கருதமுடியும்(?) தமிழ் வார்த்தைகளை நாம் உபயோகிக்காமல் வேறு எவர் உபயோகிக்க முடியும்(?) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களில் 50 சதவிகித மக்கள் தமிழகத்தில் உள்ளனர். மற்றவர்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ், பர்மா போன்ற பல நாடுகளில் வசிக்கின்றனர்.

இங்கெல்லாம் வாழும் தமிழர்கள் தூய தமிழையும், தமிழ்ப் பெயர்களையும், தமிழ் வார்தைகளையும் நடைமுறையில் கொண்டுள்ளனர். பிற மொழி கலக்காத தூய தமிழ் மொழிக்கு முதன்மை தருகின்றனர்.

சிங்கப்பூர் விமான நிலையத்தின் நுழைவாயிலில் தமிழ்மொழிக்கு சிறப்பு தரும் வகையில் 'நல்வரவு' என்ற தமிழ் வார்த்தை இடம்பெற்றுள்ளது. மொரிசியஸ் நாட்டு உருபா தாள் மற்றும் நாணயங்களிலும் தமிழ் எண்களும், தமிழ் எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன.

நமது தமிழகத்திற்கு வெகு அருகாமையிலுள்ள இலங்கையின் தென் பகுதியில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் மொழிக்கு தரும் முதன்மையைக் கண்டால் நாம் தமிழர்கள்தானா என்ற ஐயம் ஏற்படும் அளவிற்கு உள்ளது. 

அவர்களின் பெயர்களிலும், புழக்கத்தில் சாலைகளின் பெயர்களிலும், அங்காடிகளின் பெயர்களிலும் தூய தமிழ் மட்டும் வாழ்ந்து கொண்டு உள்ளது.

மேலாக இவ்விரு நாட்டு மக்களின் தாய்மொழி தமிழாகினும்(!) அவர்கள் சந்தித்துப் பேசுமாயின் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் நிச்சயம் தேவை. சந்தித்துப் பேசியவர்களுக்கு அது நன்கு தெரியும்.

இங்கு அன்றாட வாழ்க்கையில் நாம் இல்லங்களிலும், பொது இடங்களிலும் உபயோகிக்கும் வார்த்தைகளைப் பாருங்கள்.

காலை முதல். . . குட்மார்னிங், டீ, பேப்பர், பேஸ்ட் பிரஷ், சோப்பு, டிபன், பஸ் ஸ்டாண்டு, டிக்கெட், ஸீட், ஸ்டாப்பிங், ஆபிஸ், லன்ஞ், ஸ்கூல், வாட்டர் பாட்டில், புக்ஸ், ரேஷன், மார்க்கெட், கடைகளின் பெயர்ப் பலகையில் ஆங்கிலம், நிறுவனங்களின் பெயர்கள் என்றெல்லாம் பட்டியல் நீள்கிறது.

ஈவ்னிங், டீ, டிவி, போன், ஃபேன், லைட், இறுதியாக குட் நைட் சொல்லிவிட்டு அத்தோடு குட் நைட்டையோ அல்லது ஆல் அவுட்டையோ பொருத்திக்கொண்டு உறங்குகிறது.

மறுநாள் 'தமிங்கில' வாழ்க்கை விடியலை நோக்கி... இந்த வாழ்க்கை சூழ்நிலையில் தமிழையோ, தமிழ் வார்த்தைகளையோ நினைக்ககூட நேரமில்லை. ஆம் அதுதான் உண்மை.

இத்துணை நிலையிலும் இன்று தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைப்பவர்கள் எண்ணிக்கை சிறிதல்ல. இந்த எந்திர வாழ்க்கைக்கு மத்தியிலும் தமிழ் மொழிக்கு என்று ஒரு தனிச் சிறப்பை உருவாக்க அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் முயன்று வருகின்றனர்.

அவற்றுக்கு சான்றாக இன்றைய கணினித்துறையிலும், அலைபேசிகளிலும் தமிழ் மொழி கோலோச்சி உள்ளதே ஆகும். அவற்றின் மூலம் தமிழ் மொழியினை இன்றைய கணினித்துறையில் உள்ளவர்களும் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் இங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் இணைந்து தமிழ் மொழியின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒன்றிணைந்துள்ளனர். அதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலை தூய தமிழை நம்மிடத்தில் துளிர்விட செய்துள்ளது.

எந்த ஒரு செயலும் நடைமுறையில் பயன்பாட்டிலும் ஈடுபாட்டிலும் கொண்டு வரும் பொழுது அது பழகிப்போன ஒன்றாகவே ஆகிவிடும் என்பது நாம் நன்கு அறிந்த ஒன்றேயாகும். மேலும் எந்த செயலின் துவக்கமும் முதலில் இல்லங்களில் வாயிலாக துவங்குமேயானால் வெற்றியின் விளிம்பை அடைவது உறுதி.

ஆகவே தூய தமிழ் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை முதன்மையாக்க ஒரு ஆழ்ந்த, நீண்ட சுவாசித்தல் மூலம் நிரப்புவோம் தூய தமிழை உள்ளங்களில்... அதே தருணத்தில் ஆழ்ந்து சுவாசித்த தூய தமிழை பேசி மகிழ்வோம் இல்லங்களில்...

நன்றிகள்.