Sunday 7 October 2012

மார்பகப் புற்றுநோயும் வீட்டு வேலையும்......!


`இந்த வீட்டு வேலையில இருந்து ஒருநாளு கூட ஓய்வில்ல…’ என்று அலுத்துக்கொள்வது இல்லத்தரசிகளின் வழக்கம். ஆனால் குடும்பத் தலைவிகள் தொல்லையாகக் கருதும் வீட்டு வேலைகள், அவர்களுக்கு நன்மையே செய்கின்றன.

ஆம், எப்போதும் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்யும் குடும்பப் பெண்மணிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 13 சதவீதம் குறைகிறதாம்.  

வீட்டு வேலை, நடைப்பயிற்சி, தோட்ட வேலை, உடற்பயிற்சி என்று சுறுசுறுப்பாக ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைகிறது என்கிறது, ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று.

இந்த ஆய்வுக்காக, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பெண்கள் ஆராயப்பட்டனர். அவர்களின் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ள தொடர்பு அலசப்பட்டது.

அப்போது, வேலை குறைந்த வாழ்க்கை முறையை வாழ்பவர்களை விட, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் சற்றுக் குறைவு என்று தெரியவந்தது.

அதாவது, 13 சதவீதம். `கொஞ்சம்’ வேலை செய்பவர்கள் அல்லது மிதமாக வேலை செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 8 சதவீதம் குறைகிறதாம்.

இதுதொடர்பாக இங்கிலாந்தின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சாரா வில்லியம்ஸ் கூறுகையில், “தற்போதைய கண்டுபிடிப்பு, முற்றிலும் புதிதல்ல.

ஆனால், சுறுசுறுப்பான செயல்பாடு மார்பகப் புற்றுநோய் வாய்ப்பைக் குறைக்கும் என்ற முந்தைய ஆய்வு முடிவுகளை இது உறுதி செய்கிறது. 

இப்புதிய ஆய்வில் நல்ல விசயம் என்னவென்றால், இது `உடற்பயிற்சி நிலையங்களில் ’ செய்யும் உடற்பயிற்சியை மட்டும் கவனிக்கவில்லை, 

மாறாக, சுவாசத்தை அதிகப்படுத்தும் எந்த வேலையையும் கவனத்தில் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்படும் நன்மையைத் தெரிவித்திருக்கிறது” என்கிறார்.

நன்றிகள்.